Tuesday, 18 February 2025

காதலர் நாள்.

 காதலர் நாள்.


காதலி கூற்று:


சுருள்முடிக் குஞ்சி யோடும்

    சுடர்விழிப் பார்வை  யோடும்

கருகரு மீசை யோடும்

    கவின்முத்துப்  பற்க ளோடும்

இருபொருந் தோள்க ளோடும்

    இதழிற்புன் முறுவ லோடும்

செருக்குறு  நடையி னோடும்

    திகழ்ந்திடும்  அழகுச்  செம்மல்.


ஏரார் இளங்காளை; ஈட்டிபோல் கூர்விழிகள்;

சீரார் செருக்குநடை;  செங்கழுநீர்த்--- தாரான்;

கள்ள இளமுறுவல் காட்டுகின்ற கட்டழகன்;

உள்ளம் கவர்ந்தான் உவந்து.


காதலன் கூற்று:


கயலொத்த  இரண்டு  கண்கள்;

    காரொத்த அடர்ந்த கூந்தல்;

நயமிக்க முத்துப் பற்கள்;

    நாணத்திற் செம்மை காட்டும்

வியத்தக்க கதுப்புக் கன்னம்;

    வெண்ணிலா வதனம்; இன்னும்

செயலற்றுத் திகைக்கச் செய்யும்

    சிலபிற அழகும் வாட்டும்.


என்னவளே! காதல் இளங்கொடியே! நன்னடையால்

அன்னமெனப் பேர்பெற்ற ஆரணங்கே!---கன்னல்நிகர்

பேச்சுடைய பெண்ணரசீ! பேசாமல் கண்ணம்பைப்

பாய்ச்சுவதால் நொந்தேன் பதைத்து.


தேனோ? செழுங்கனியோ? தீம்பாகோ? கற்கண்டோ?

வானோர் அமுதமோ? வாய்ப்பேச்சு---யானோரேன்;

தென்றல்போல் ஆடிவரும் சீறடியாள்  கை,பிடிக்கும்

மன்றல்நாள் என்று வரும்?

(குஞ்சி=தலைமுடி; வதனம்=முகம்; 

கன்னல்நிகர்=கரும்பு போன்ற;

யானோரேன்=நானறியேன்;

சீறடியாள்=சிறிய பாதமுடையவள்;

மன்றல்நாள்=திருமணநாள்)