காதலர் நாள்.
காதலி கூற்று:
சுருள்முடிக் குஞ்சி யோடும்
சுடர்விழிப் பார்வை யோடும்
கருகரு மீசை யோடும்
கவின்முத்துப் பற்க ளோடும்
இருபொருந் தோள்க ளோடும்
இதழிற்புன் முறுவ லோடும்
செருக்குறு நடையி னோடும்
திகழ்ந்திடும் அழகுச் செம்மல்.
ஏரார் இளங்காளை; ஈட்டிபோல் கூர்விழிகள்;
சீரார் செருக்குநடை; செங்கழுநீர்த்--- தாரான்;
கள்ள இளமுறுவல் காட்டுகின்ற கட்டழகன்;
உள்ளம் கவர்ந்தான் உவந்து.
காதலன் கூற்று:
கயலொத்த இரண்டு கண்கள்;
காரொத்த அடர்ந்த கூந்தல்;
நயமிக்க முத்துப் பற்கள்;
நாணத்திற் செம்மை காட்டும்
வியத்தக்க கதுப்புக் கன்னம்;
வெண்ணிலா வதனம்; இன்னும்
செயலற்றுத் திகைக்கச் செய்யும்
சிலபிற அழகும் வாட்டும்.
என்னவளே! காதல் இளங்கொடியே! நன்னடையால்
அன்னமெனப் பேர்பெற்ற ஆரணங்கே!---கன்னல்நிகர்
பேச்சுடைய பெண்ணரசீ! பேசாமல் கண்ணம்பைப்
பாய்ச்சுவதால் நொந்தேன் பதைத்து.
தேனோ? செழுங்கனியோ? தீம்பாகோ? கற்கண்டோ?
வானோர் அமுதமோ? வாய்ப்பேச்சு---யானோரேன்;
தென்றல்போல் ஆடிவரும் சீறடியாள் கை,பிடிக்கும்
மன்றல்நாள் என்று வரும்?
(குஞ்சி=தலைமுடி; வதனம்=முகம்;
கன்னல்நிகர்=கரும்பு போன்ற;
யானோரேன்=நானறியேன்;
சீறடியாள்=சிறிய பாதமுடையவள்;
மன்றல்நாள்=திருமணநாள்)