Tuesday, 27 May 2025

மன்மதன் தன் ஐந்து கணையால் வாடினாள்.

 மன்மதன்தன் ஐந்துகணையால் வாடினாள்.


இரண்டாம் குலோத்துங்க சோழரின் அரசவையில் புலவர் பெருமக்களின்

ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. சக்கரவர்த்தியின் குரு

நாதரும் தலைமைப் புலவருமான கவிச்சக்கரவர்த்தி ஒட்டக் கூத்தர்,

சோழ நாட்டின் ஏனைய புலவர்கள், சேர, பாண்டிய நாடுகளிலிருந்து வந்த

புலவர்கள் குழுமியிருந்தனர். வெகு தொலைவிலுள்ள ஊரிலிருந்து அப்

பொழுதுதான் வந்தடைந்த ஔவைப் பிராட்டியார்(இவர் இடைக் காலத்து

ஔவையார்--அதியமானிடம் நெல்லிக்கனி பெற்றவர் அல்லர்) தாமும் அக்

கூட்டத்தில் கலந்துகொள்ள விரும்புவதாகத் தெரிவித்ததால் குலோத்துங்கர்

கூத்தருக்கு எதிர்வரிசையில் நல்லதொரு இருக்கையில் அமரச் செய்தார்.


அவையிலிருந்த அனைவரும் ஔவையாரிடம் நலம் விசாரித்தனர். ஔவை

யாரும் தமது சுற்றுப் பயணத்தில் கண்ட மற்றும் கேட்டறிந்த செய்திகளைச்

சொல்லிக்கொண்டிருந்தார். சிறிது காலம் கடந்தபின் குலோத்துங்கர்"புலவர்

பெருமக்களே! தமிழாய்வைத் தொடங்குங்கள்'  என்று கூறினார். ஒவ்வொரு

புலவரும் தாங்கள் அண்மையில் இயற்றிய பாடலைச் சொல்லி அதன் பொரு

ளையும் நயத்தையும் கூறினர். இது முடிந்தவுடன் ஔவையார் கூத்தரை நோக்கி

'கவிச் சக்கரவர்த்திகளே! நான் சில முத்திரைகளைக் கைவிரல்களால் செய்து

காட்டுகிறேன். தாங்கள் அவற்றின் மெய்ப்பொருள் யாவையென விளக்குதல்

வேண்டும்" என்றார். ஒட்டக் கூத்தர் முதிய வயதினர்; எனவே செவிப் புலன்(காது)

சிறிது  வேலை செய்யாது. ஔவையார் நிபந்தனையாகச் சொன்ன மெய்ப்

பொருள் என்னும் சொல் அவருக்குக்  கேட்கவில்லை. அவையிலுள்ள அனைவரும்

ஔவையாரையே பார்த்துக் கொண்டிருந்தனர்.


ஔவையார் தமது விரல்களால் ஐந்து முத்திரைகளைச் செய்து காட்டினார்.

பிறகு கூத்தரிடம் "ஐயா! பாடுக" என்றார். கூத்தர் கீழ்க்கண்ட பாடலைப் பாடினார்:

"இவ்வளவு கண்ணினாள்; இவ்வளவு சிற்றிடையாள்;

இவ்வளவு போன்ற இளமுலையாள்--இவ்வளவு

நைந்த உடலாள்; நலம்மேவ மன்மதன்தன்

ஐந்துகணை  யால்வாடி னாள்'.

குலோத்துங்கர் உட்பட  அவையிலுள்ளோர் அனைவரும்(ஔவையார் நீங்கலாக)

கைகளைத் தட்டி மகிழ்ச்சியைக் கொண்டாடினர். உண்மையிலையே அப்பாடல்

கருத்துச் செறிவுள்ள அகப்பொருட் பாடலாகும்.

"இவ்வளவு (முட்டைக் கண்ணும் அல்லாது இடுங்கிய கண்ணும் அல்லாது) அளவான

கண்ணையுடையவள்; இவ்வளவு சிறுத்த இடையையுடையவள்; இவ்வளவு பெருத்த

மார்பகங்களையுடையவள்; தலைவனப் பிரிந்திருக்கும் விளைவாக இவ்வளவு நைந்த

உடலையுடையவள்; தனிமையில் இருப்பதால் மன்மதனின் ஐந்து மலர் அம்புகளால்

(தாமரை, அசோகம், மாம்பூ, முல்லை,நீலோற்பலம்) மேனி நொந்து வாடினாள்."

ஔவையார் குறுக்கிட்டுச் சக்கரவர்த்திகளை நோக்கி "பேரரசே! கூத்தர் பெருமான்

நான் கூறிய நிபந்தனையைக் கவனிக்கத் தவறிவிட்டார். நான் சில முத்திரைகளைச்

செய்து காட்டி அவற்றின் மெய்ப்பொருள்(அறம் மற்றும் கடவுள் பற்றிய சிந்தனை)

யாவை? எனக் கேட்டிருந்தேன். அவர் சிற்றின்பப் பொருள்தரும் காதற் பாடலைப்

பாடியுள்ளார். பாடல் மிக மிக அருமை; ஆனால் மெய்ப்பொருளை  விளக்கவில்லை"

என நவின்றார். குலோத்துங்கர் தமது குருநாதரைக் கூறை கூறாமல்(குலோத்துங்கருக்கு

மட்டுமல்லாமல்  அவர் தந்தை விக்கிரம சோழருக்கும்  மகன் இரண்டாம் இராசராசனுக்கும்

கூத்தரே ஆசான் ஆவார்) ஔவையாரை விளித்து "அம்மையே! உமது முத்திரைக்கு நீவிரே

மெய்ப்பொருள் உரைத்திடுவீர்" என்று கேட்டுக் கொண்டார். ஔவையார் பாடலானார்:

"ஐயம் இடுமின்;  அறநெறியைக் கைப்பிடிமின்;

இவ்வளவே னும்மனத்தை இட்டுண்மின்--தெய்வம்

ஒருவனே யென்ன உணரவல்  லீரேல்

அருவினைகள் ஐந்தும் அறும்".

பொருள்:

ஏழையெளியவர்க்குப் பிச்சை இடுங்கள்;  நீதி, நேர்மை போன்ற அறநெறிகளைக்

கைக்கொள்ளுங்கள்; நீவிர் உண்பதற்குமுன் இவ்வளவேனும் அன்னத்தைப்

பிறருக்குக் கொடுத்துவிட்டு உண்ணுங்கள்;  கடவுள் ஒருவரே என்ற உண்மையை

உணருங்கள். உணர்ந்தால் ஐந்து புலன்களால் உருவாகும் வினைகள் அனைத்தும்

அற்றுவிடும்.

இந்த மெய்ப்பொருளைக் கேட்டவுடன் குலோத்துங்கர், கூத்தர் உட்பட அவையோர்

அனைவரும் வரவேற்று உவகைக் கடலில் மூழ்கினர் என்பதைச் சொல்லவும்

வேண்டுமோ? ஔவையார் தமிழர்க்குக் கிடைத்த மகா அறிஞர்.



 




Sunday, 4 May 2025

"காய்ச்சிய பாலைக் குடி போ"

 "காய்ச்சிய பாலைக் குடி, போ" என்றேன்; உடன்போக்கில் சென்றனளே.


இடைக்காலப் புலவர் ஒருவர் தனிப்பாடல் ஒன்று இயற்றியுள்ளார்.

அதில் ஒரு நாடகத்தை அரங்கேற்றுகின்றார். ஒரு குடும்பத்தில் ஓர்

அன்னையும் அவள் மகளும் வாழ்ந்து வருகின்றனர். மகள் வயது

பதினான்கு அல்லது பதினாறு இருக்கலாம். பருவச் செழிப்போடு

மகள் திகழ்கின்றாள். அன்னை தன் மகளை மிகவும் வாஞ்சையுடன்

பேணிப்பேணி வளர்த்துவருகின்றாள். அவள் தந்தையார் பொருளீட்ட

வெளியூர் சென்றிருக்கின்றார். எனவே, கூடுதல் அக்கறையோடும்

கவனத்தோடும் அன்னை மகளைப் பாதுகாப்புடன் வளர்த்து வருகிறாள்.

அன்றாடம் காலையும் மாலையும் மகளுக்குப் பாலைக் காய்ச்சிக்

குடிக்கக் கொடுப்பது அன்னையின் வழக்கம்.


அண்மைக் காலமாக மகளுடைய நடவடிக்கைகளில் சிற்சில மாற்றங்கள்

தெரிகின்றன. வேளாவேளைக்கு உண்பதில் நாட்டமில்லை. அடிக்கடி

தட்டொளி(உலோகக் கண்ணாடி)யில் முகத்தைப் பார்த்துத் திருத்திக்கொள்

கின்றாள். தோழியுடன் நெடுநேரம் எதைப்பற்றியோ உரையாடல் நிகழ்த்து

கின்றாள். பாவைகளை வைத்து விளையாடும் நேரம் சுருங்கிவிட்டது.

அன்னை இம்மாற்றங்களைக் கவனித்துக்கொண்டுதான் இருந்தாள். ஆனாலும்

மகள் மீது யாதொரு ஐயமும் ஏற்படவேயில்லை. நியாயமாக மகள் உரிய பருவம்

எய்தியதும் அன்னையின் கவனமும் கண்காணிப்பும் அதிகரித்திருத்தல் வேண்டும்.

ஆனால் மகளை இன்னும் சிறுமியாகவே அன்னை நோக்கினாள்; வளர்ந்துவரும்

பருவக் குமரி என்பதனை மறந்து விட்டாள்.


விளைவு என்னவென்றால், மகள் ஒரு தலைவனைக் கண்டு அவன்பால் மனத்தைப்

பறிகொடுத்துவிட்டாள். களவியல் காதல் என்பதனால் அன்னைக்கோ, அருகிருக்கும்

ஏனையோருக்கோ தெரிய வாய்ப்பில்லாமல் போயிற்று. தோழிக்குத் தெரிந்திருக்கும்.

ஆனால், தலைவியோ அவளின் தோழியோ அறத்தொடு நின்று(களவுக் காதலை வெளிப்பட

உரைத்தல்) வெளிப்பட உரைத்தால் மட்டுமே மற்றவர்களுக்குத் தெரியவரும். கடந்த ஓரிரு

நாட்களாகத் தலைவியும் தோழியும் அடிக்கடி சந்தித்து உரையாடிவந்தனர். அரவம்(சத்தம்)

வெளியே கேட்காத வகையினில் கமுக்கமாகப் பேசிக் கொண்டனர். அன்னை யாதொன்றும்

அறியாமல் தன் இயல்புப் படி வீட்டுப் பணிகளைச் செய்துவந்தாள். வழக்கம்போல, மகளிடம்

காலை மாலை பாலைக் காய்ச்சிக் குடிக்கக் கொடுத்துவந்தாள். குறிப்பிட்ட நாளும் வந்தது.

அன்று முழுவதுமே தலைவியும் தோழியும் ஒருவிதப் பதற்றத்துடன் காணப்பட்டனர். அன்று

மாலை(முன் இரவு) அன்னை மகளிடம் "காய்ச்சிய பாலைக் குடி போ" என்று கூறினாள்.

காய்ச்சிய பாலை ஒரு கலத்தில் வைத்துள்ளேன். அங்குபோய் அதனைக் குடி" என்னும்

பொருள்படக் கூறினாள். சிறிது நேரம் நகர்ந்தது. அனைவரும் உறங்கத் தொடங்கிவிட்டனர்.


மறுநாள் பொழுது புலர்ந்தது. அன்னை தன் அருகில் படுத்திருந்த மகளைக் காணாமல்

துடித்துப் போய்விட்டாள்.  எங்கே போயிருப்பாள்? என்ன நேர்ந்தது? என்று அறியாமல்

குழம்பினாள். தோழியின் வீட்டுக்குச் சென்று அவளிடம் தன்மகளைப்பற்றிய விவரம்

கேட்டாள். தோழி மென்று விழுங்கினாள். பின் தனக்குத் தெரிந்த தகவல் அனைத்தையும்

வெளிப்படுத்தி விட்டாள். அன்னைக்கு மகள் தன் தலைவனுடன் உடன்போக்கு 

மேற்கொண்டு சென்றுவிட்டாள் என்னும் உண்மை  புரிந்தது. " காய்ச்சிய பாலைக் குடி போ"

என்று அவள் உடல் நலத்தைப் பேணும் வழி சொன்னேன். அவள் வேறு விதமாகப் பொருள்

கொண்டுவிட்டாள். "பாலை நிலத்துக்கு உடன்போக்கில் தலைவனுடன் குடி போ" என்று

தவறான அர்த்தம் கொண்டு அதற்கேற்ற நடவடிக்கை மேற்கொண்டுவிட்டாள்" என்று

புலம்பினாள். அவள் புலம்பிய பாடல் வருமாறு:

"பூச்சிலைக் கன்னல்கைச் சேடா சலேந்த்ரன் பொருப்பிடத்தே

காய்ச்சிய பாலைக் குடிபோவென் றேனந்தக் காரிகையும்

பேச்சிலெத் துக்கள்ளி பின்கைகை ராமற்கு முன்சொன்னதா

வாய்ச்சுதென் றேநடந் தாள்பாலை யான வனந்தனிலே!".

பொருள்:

கரும்பாகிய வில்லையும் கை நிறைந்த பூவையுமுடைய மன்மதன் போன்ற

சேடாசலேந்திரனுடைய(சேஷாசலேந்திரனுடைய) மலையிடத்தே, காய்ச்சிய

பாலைக் குடிக்கும்படி போகச் சொன்னேன்; அந்தப் பெண்ணாகிய என்மகளும்,

சொல்லுகின்ற சொல்லுக்குப் பொருள் வேறு கொண்டு ஏமாற்றுகின்ற திருட்டுக்

குணமுடையவளாதலால், கைகேசி இராமனுக்குக் காட்டுக்குப் போகும்படி

சொன்னதுபோலத் தனக்கும் என் பேச்சு பொருத்தமானது என்றெண்ணிப் பாலை யான

வனந்தனிலே தலைவன் பின் சென்றுவிட்டாள்.


சங்ககாலத்தில் உடன்போக்கு செல்வது காதலில் நடைபெறும் சாதாரண நிகழ்ச்சி.

சமுகம் இதனைக் காதலில் ஒரு பகுதியாக ஏற்றுக்கொண்டது. தொல்காப்பியர்

இதனைக் "கொண்டுதலைக் கழிதல்" என்ற பெயரில் குறிப்பிடுகின்றார். தலைவன்

தலைவியை அவளது பெற்றோர் அவனுக்கு மணம் செய்துதர மறுக்கும் பொழுது

தோழியின் உதவியால் தலைவியை மணந்துகொள்வதற்காகத் தன்னூருக்குக்

கொண்டு செல்லல். இதில் தலைக் கழிவு என்பது தலைமையாகிய  செலவு எனப்

பொருள்படும். சுருங்கக் கூறின், கொண்டுதலைக் கழிதலாவது, உடன் கொண்டு

பெயர்தலாகும். தற்காலத்தில், உடன்போக்கு சமுக அங்கீகாரத்தை இழந்துவிட்டதோ?

என்று எண்ணத் தூண்டுகிறது. ஒருவித வெறுப்புடன் கொச்சையாக. "ஓடிப்   போனவள்/

ஓடி வந்தவள் என்ற கொச்சையான பெயர்களால் அழைக்கப்படுகின்றனர்.

தொல்காப்பியர்க்கும்  முன்பே  பெரியோர்களால் கட்டமைக்கப்பட்ட இந்த நிகழ்வு இன்று

சிறப்பிழந்து நோக்கப்படுகிறது.


பார்வை: தனிப்பாடல் திரட்டு 2 ஆம் பாகம்-- உரையாசிரியர் கா.சு.பிள்ளை,

                  வர்த்தமானன் பதிப்பகம்.