Tuesday, 5 February 2019

பேரறிஞர் அண்ணாவை நினைவு கூர்வோம்.

அறிவுலக மேதை அறிஞர் அண்ணாவின் நினைவு நாள்
பிப்ரவரி 3ஆம்நாள். அன்னாரின் அறிவையும், ஆற்றலை
யும், சாதனைகளையும் நினைவு கூரும் விதமாகப் பாடலை
இயற்றியுள்ளேன்.

சீரமரும் காஞ்சிநகர்  நடராசன்  பங்காரு
செய்த  வத்தால்
பாரகமெல்  லாமகிழப்  பைந்தமிழ்த்தாய்  நடம்புரியப்
பாங்காய்த்  தோன்றி
ஏரமருந்  தமிழகத்தின்  முதலமைச்சாய் அரசோச்சி,
       எண்ணில்  தொண்டர்
பேரறிஞர் அண்ணாவென்(று) அழைத்திடவே  வாழ்ந்த,அவர்
       பெருமை  வாழ்க!

நடிகரெலாம்  வியப்படைய  நாடகத்தில் திறம்படவே
       நடித்த  நல்லோர்;
குடிகெடுக்கும்  மதுவரக்கன்  கொட்டத்தை  ஒடுக்கிடும்நல்
      குறிக்கோள்  கொண்டோர்;
படியரிசித்  திட்டத்தைப்  பரப்புவதில்  பேரார்வம்
      படைத்த  செம்மல்;
விடிவேள்ளி; தமிழகத்தின்  முடிசூடா  மன்னரென
     விளம்பத்  தக்கார்.

செந்தமிழின்  இனிமையினைத்  திகழுமிலக்  கியநயத்தைச்,
     சிறந்த  பண்பை,
முந்துமதன்  பழமையினை, வரலாற்றை  வெளிநாட்டார்
    முழுதும்  கண்டு
விந்தையுறும்  படியுலகத்  தமிழ்மகா  நாட்டினை,நல்
    விறுவி  றுப்பாய்ச்
சந்தமிகு  சென்னைநகர் நடத்திக்காட்  டியதிறமை
    சார்ந்த  வீரர்.

சீர்திருத்தத்  திருமணமும்  செல்லுமென  அறிவித்துத்
   தேவை  யான
பார்புகழும்  சட்டத்தைப்   பேரவையில் நிறைவேற்றப்
    பணிகள்  செய்தார்;
சீர்மைமிகு  அமெரிக்க  யேலென்னும்  பல்கலையில்
    சிறப்பாய்ப்  பேசிப்
பேர்,புகழைப் பெற்றனரே, ஆங்கிலத்தில் தடையின்றிப்
   பேசும்  அண்ணா.

மிடுக்கான  தமிழ்மொழியில் சொல்வளமும் பொருள்வளமும்
   மிடைந்து  துள்ள
அடுக்குமொழி  படப்பேசி அனைவரையும் மயக்குகின்ற
   ஆற்றல்  சான்றோர்;
தொடக்கமுதல்  இறுதிவரை  சுவைசிறிதும் குன்றாது
   தொடர்ந்து  செல்ல
எடுப்பான  தமிழ்நடையில்  எண்ணிறந்த உரைநூல்கள்
   எழுதும்  ஏந்தல்.

வாழவழி  யில்லாத  ஏழைகளின்  துயர்துடைத்த
   வள்ளல், தீயால்
பாழடைந்த  குடிசைகளை  நன்முறையில்  புதுப்பித்த
    பண்பு  மிக்கோர்;
ஆழமாம்  புலமையினை  ஆங்கிலத்தில், செந்தமிழில்
    அடைந்த  செல்வர்;
ஊழலையும்  கண்மூடிப்  பழக்கவழக்  கங்களையும்
    ஒழித்த  தோன்றல்.

தெள்ளுதமிழ்க் குறட்பாவில் அறங்களெலாம் விரித்துரைத்த
    சீர்சால் தெய்வ
வள்ளுவனார்  அடிச்சுவட்டைப் பின்பற்றி  நடக்கின்ற
   வாய்மை  யாளர்;
கள்ளமிலா வுள்ளத்தார்; கனிந்தமொழி நவின்றிடுவார்;
  கருணை  யுள்ளார்;
எள்ளளவும்  பிறருக்குத் தீங்குசெய  எண்ணாத
  இயல்பு  கொண்டோர்.

தூயதமிழ் நாட்டினுக்குத் தொடர்பின்றி ஆங்கிலத்தில்
  சொல்லி வந்த
தீயபெயர்  தனைநீக்கிச் சீர்த்த'தமிழ் நா(டு)'எனும்பேர்
  திகழச்  செய்தோர்;
தாயகத்தின் வளர்ச்சிதனில்  பேரார்வம்  கொண்டுழைத்த
  தலைவர்; சற்றே
வாயசைத்தால்  நாடசையும்  எனப்புவியோர் புகலும்செல்
  வாக்குப்  பெற்றோர்.

முற்றுமுணர்  பேரறிஞர், மாநிலங்கள் அவையினிலே
 மொழிந்த  பேச்சால்
கற்றுணர்ந்த  கல்விவல்லார் நேருவெனும்  பிரதமரின்
  கவனந்  தன்னைப்
பற்றிமிகத்  தம்பாலே  கவர்ந்திழுத்த  பேச்சாளர்;
  பாழாய்ப்  போன
புற்(று)எனுந்தீப்  பிணியாலே மடிந்தனரே; மக்களெலாம்
  புலம்பி  நொந்தார்.

இத்தகைய  புகழுரைகட்(கு) இருப்பிடமாய்க்  குணக்குன்றாய்
   இருந்த  எங்கள்
உத்தமராம்  அறிஞரண்ணா உயிர்துறந்த அதிர்ச்சியினால்
   உளமு  டைந்து
மெத்தவுங்கண்  ணீர்வடித்து மக்களெலாம் அடைந்ததுயர்
   விளம்பற்  பாற்றோ?
எத்தனைநாள்  அழுதாலும் மாண்டவர்கள் மீண்டுவரல்
   என்றும்  இல்லை.

எத்தனையோ சாதனைகள் நிகழ்த்திவிட்ட  பேரறிஞர்
   இறந்த  போதில்
இத்தரையோர் வியந்திடவே  இறுதிஊர்  வலந்தன்னில்
   இணைந்து  கொண்டோர்
மொத்தமொன்ற ரைக்கோடிப் பேராவார், அன்னவர்கள்
   மூண்ட  அன்பால்
பித்தரைப்போல் பிதற்றினரே உடல்குலுங்கி அழுதனரே,
    பெரிதும்  நைந்தே.




















No comments:

Post a Comment