Monday, 1 April 2019

குடிப்பதற்கு நீரில்லாக் குறைதீர்வ(து) எக்காலம்?

நதியிணைப்பு காலத்தின் கட்டாயம்; நிகழ்த்திடுதல் எக்காலம்?

விடுதலைநாள் முதலாக வீரமுடன் முழங்கிவந்த
நடுவணநல்  அரசாங்கம்  நதியிணைப்ப(து)  எக்காலம்?

கங்கையையும் பொன்னியையும் கண்டிப்பாய் இணைத்திடவே
சிங்கமெனக்  கர்ச்சித்தோர்  செயல்படுவ(து) எக்காலம்?

அடிமைவிலங்(கு) அறுத்தொழிந்தே ஆண்டுபல கடந்தபின்னும்
குடிப்பதற்கு  நீரில்லாக்  குறைதீர்வ(து)  எக்காலம்?

கருநாடர்  காவிரியில் கணக்காக  நேர்மையுடன்
வரும்நீரைப்  பகிர்ந்தளித்து  வாழ்விப்ப(து) எக்காலம்?

ஆந்திரநன்  னாட்டவர்கள் அமைதியுடன் பாலாற்றைத்
தீந்தமிழ்நன்  னாட்டுக்குத்  திருப்பிவிடல்  எக்காலம்?

கேரளநன் னாட்டவர்கள் கேண்மையுடன் பெரியாற்று
நீரதனைத்  தேக்கிவைக்க  நெறிசெய்தல் எக்காலம்?

காவிரியும் பாலாறும்  கவின்முல்லைப்  பெரியாறும்
தீவிரமாய்ப் பாய்ந்துநிலம் செழிப்பித்தல் எக்காலம்?

பாரதத்தின் நதிகளைநாம்  பாங்காக  இணைத்துவிடின்
சீரனைத்தும்  பெற்றிடலாம்; செய்வதுதான்  எக்காலம்?

தமிழ்நாட்டுச் சமவெளியில்  தடுப்பணைகள்  பலவற்றை
அமைத்திட்டால் நலம்கிட்டும்; அதைச்செய்தல் எக்காலம்?

ஏரி,குளம் தூர்வாரி இயன்றவகை நீர்தேக்கி
வீரியமாய்  வேளாண்மை  மேற்கொள்வ(து) எக்காலம்?

கருநாடர்  திறந்துவிடும்  மிகைத்தண்ணீர் பயனின்றி
விரிகடலிற்  கலப்பதனை  விலக்கிடுதல்  எக்காலம்?

மணற்கொள்ளை  தனைத்தடுத்து மண்வளத்தை, நீர்வளத்தை
இணக்கமுறப்  பெருக்கிமக்கள் ஏற்றம்பெறல் எக்காலம்?

மழைநீரைச் சேகரித்து  வாகாக  நிலத்தடிநீர்
தழைத்திடத்தான்  வழிசெய்து  சாதிப்ப(து) எக்காலம்?

வடநாட்டு  நதிகளெலாம் வற்றாத உயிர்நதிகள்;
திடமான வளம்சேர்க்கும்  சீர்கங்கை, பிரம்மபுத்ரா,

ஏரார்,நர் மதை,கோதா  வரி,தப்தி, மகாநதியால்
நீரார்ந்து வளம்கொழிக்கும்; நீர்ப்பகிர்வில் சிக்கலிலை;

ஓங்குபுகழ்த்  தென்னாட்டில் உயிர்நதி,கா  விரி;கிருஷ்ணா,
தீங்கறுநல் ஆன்பொருநை சிறப்புமிகு ஆறுகளாம்;

பாலாறு,  தென்பெண்ணை, பார்புகழும்  வைகைநதி,
மேலான ஆறுகள்தாம்; வெகுகுறைவாய் நீருண்டு;


தென்னாட்டில் நதிநீரைச் செம்மையுறப் பகிர்ந்திடுதல்
எந்நாளும் தீராத இடர்மிக்க  பெரும்சிக்கல்;

பாரதத்தின்  ஒற்றுமைக்கே  பாதகத்தை  விளைவிக்கும்
நீரதனால் நேர்ந்துவிடும் நெடுங்கால  அறைகூவல்;

மராட்டியரும் கன்னடரும் வம்புசெய்து நற்கோதா
வரிநீரைப்  பகிர்வதிலே மாபெரிய  சிக்கல்செய்வர்;

கருநாடர்- செந்தமிழர் காவிரிநீர்  பகிர்வதிலே
பெரும்பூசல் உருவாக்கிப் பேதலிக்கச் செய்திடுவர்;

கவின்முல்லைப்  பெரியாற்றில் கட்டியுள்ள  அணையதனைத்
தவிடுபொடி ஆக்க,எண்ணும்  கேரளரை  என்சொல்ல?

இத்தகைய  சிக்கல்களுக்(கு) ஏற்றவிடை  நதியையெலாம்
பத்திரமாய் இணைத்துவிடின் பாதகமே  வாராது;

இந்தியநல் திருநாட்டில்  எந்தவொரு பேதமுமே
சிந்தித்தல்  செய்யாதீர்;  தேவைநம(து)  ஒற்றுமைதான்;

ஆறுகளை  இணைத்திடுவோம்; ஆனந்தம் அடைந்திடுவோம்;
வேறுதுயர் உண்டோ? விளம்பு.







1 comment: