Saturday, 4 May 2019

"பத்தினிக் கடவுளைப் பரசல் வேண்டும்".

குன்றக் குரவையும், பத்தினிக் கோட்டமும்.

குற்றமற்ற கோவலன்  அநியாயமாகத் திருட்டுக்
குற்றம் சுமத்தப்பட்டுத் தண்டனையாகக்  கொலை
செய்யப்பட்டதைக் கேள்வியுற்ற கண்ணகி மிகுந்த
சினத்தோடு பாண்டியன்  நெடுஞ்செழியனின் அர
சவைக்குச் சென்று  வேந்தனிடம் வழக்காடித் தன்
கணவன் கோவலன் குற்றமற்றவன்  என நிலைநாட்
டினாள்.  தான் தவறு செய்துவிட்டதை  யுணர்ந்த
பாண்டிய வேந்தன் குற்ற உணர்ச்சியால் உயிர்
துறந்தான். கணவன் இறந்ததை யறிந்த கோப்பெருந்
தேவியும் அவன் காலடியில் உயிர்நீத்தாள். சினத்தின்
உச்சத்தில் இருந்த கண்ணகி, மதுரை நகரை எரியூட்டி
னாள். பின்னர் கால்போன போக்கில்  இரவு பகல் பாராது
கண்ணீர் சிந்தியபடியே வைகையாற்றின் கரையை
அடைந்து மேடென்றும் பள்ளமென்றும் பாராமல் நடந்து
நடந்து திருச்செங்குன்றம் மலையை அடைந்து அதன்
மீது ஏறினாள். மலைமீது பூத்துக் குலுங்கும் ஒரு வேங்கை
மர நிழலின் கீழ்வந்து நின்றாள். கண்ணீர் உகுத்தபடியே
பதினான்கு நாட்களைக் கழித்தாள். பதினான்காம் நாள்
தன் கணவனின் நினைவைப்  போற்றித் தொழுதாள். அப்
பொழுது வான் உலகத்தினர் அங்கு தோன்றிக் கண்ணகி
மீது மலர் மாரி பொழிந்தனர். பின்னர் தங்களுடன் வந்த
கோவலனையும் கண்ணகியையும் ஒருசேர அழைத்துக்
கொண்டு வானுலகுக்குத் திரும்பிச்  சென்றனர்.

இந்த வியத்தகு காட்சியைக் கண்ட மலைவாழ் மக்கள் அப்
பொழுது அப்பகுதிக்கு மலைவளம் காண வந்த சேரவேந்தன்
செங்குட்டுவனிடம்  விரிவாக எடுத்துரைத்தனர். அவ்வமயம்
உடனிருந்து இந்த நிகழ்ச்சியைக் கூர்ந்து கவனித்துக் கொண்
டிருந்த தண்டமிழ்ப் புலவர் சீத்தலைச் சாத்தனார் இது தொடர்
பான எல்லாச்  செய்திகளையும்  விளக்கமாகக் கூறினார்.

உடனே, சேரவேந்தன் செங்குட்டுவன் தன்னுடன் வந்த  தன்
மனைவி இருங்கோ வேண்மாளை நோக்கி
"உயிருடன் சென்ற ஒருமகள் தன்னினும்
செயிருடன் வந்தஇச்  சேயிழை தன்னினும்
நன்னுதல் வியக்கும் நலத்தோர் யார்?"
என வினவ, உடனே இருங்கோ வேண்மாள்
"காதலன் துன்பம் காணாது  கழிந்த
மாதரோ பெருந்திரு  உறுக; வானகத்(து)
அத்திறம் நிற்க;நம்  அகல்நா(டு)  அடைந்தவிப்
பத்தினிக்  கடவுளைப்  பரசல்  வேண்டும்"
என்று மொழிந்தாள். (பரசல்--வணங்கி வழிபடல்).
அரசி இவ்வாறு கூறியவுடன் செங்குட்டுவனும், அமைச்சரும்,
மற்றும் பிற அதிகாரிகளும் கலந்து ஆலோசித்துக் கண்ணகிக்குக்
கோட்டம் எழுப்ப முடிவு செய்தனர். கண்ணகி கோட்டத்துக்குச்
சிலை செய்யத் தோவையான கல்லை  இமயத்திலிருந்து எடுத்து
வரத் தீர்மானித்தனர். அதன்படி செங்குட்டுவன் வடதிசைநோக்கிப்
படையெடுத்துச் சென்றான். வழியில் எதிர்த்துப் போரிட்ட மன்னர்
களைத் தோற்கடித்து இமயமலையிலிருந்து பொருத்தமான கல்லைத்
தேர்ந்தெடுத்து அதனைக் கங்கை நீரில் நீராட்டித் தன்னிடம் தோல்வி
யடைந்த கனக விசயர் என்ற இரு ஆரிய மன்னர்கள் தலையில் ஏற்றிக்
கொண்டுவந்தான். வஞ்சி நகரம் திரும்பிய  செங்குட்டுவன் உடனே
கண்ணகி கோட்டத்தைக் கட்டுவித்தான். அதற்குள்  இமயத்திலிருந்து
கொண்டுவநத கல்லினால்  சிலை வடித்து அதனை நிறுவச்செய்தான்.

இதற்கிடையே, கோவலனுக்கும் கண்ணகிக்கும் நேர்ந்த துயரங்களைக்
கேள்விப்பட்ட கோவலன் தந்தைமாசாத்துவான் தன் சொத்தையெல்லாம்
தான  தர்மம் செய்துவிட்டுத் துறவு மேற்கொண்டான். கோவலனுக்குத்
தாய் அதிர்ச்சியில் உயிர்நீத்தாள்.  இந்த நிகழ்வையெல்லாம் கண்டும்
கேட்டும் வருந்திய கண்ணகியின் செவிலித் தாயும், தோழியும், கடவுட்
சாத்தனை மணந்து வாழ்ந்துவரும் தேவந்தி என்பவளும் ஆகிய மூவரும்
ஒன்று கூடிக் கண்ணகியைக் காண மதுரைக்கு வந்தனர். அங்கே அடைக்
கலம் கொடுத்த ஆயர்குலப் பெண் மாதரி துக்க மிகுதியால்  தீக்குளித்து
இறந்த செய்தியை அறிந்து மாதரி மகள் ஐயை என்பவளை அழைத்துக்
கொண்டு திருச்செங்குன்றம் மலைக்கு வந்தனர்.கண்ணகி கோட்டத்துக்
குள் நுழைந்து செங்குட்டுவனிடம் நிகழ்வனைத்தையும் விவரித்தனர்.
"முடிமன்னர் மூவரும் காத்தோம்பும்  தெய்வ
வடபேர்  இமய  மலையிற்  பிறந்து
கடுவரல் கங்கைப் புனலாடிப் போந்த
தொடிவளைத்  தோளிக்குத்  தோழிநான் கண்டீர்;
  சோணாட்டார்  பாவைக்குத்  தோழிநான்  கண்டீர்".
பொருள்:சேர, சோழ, பாண்டியர் என்னும் முடியுடை
மூவேந்தரும்  காத்து வளர்த்த கண்ணகிக்குத் தோழி
நான். சோழவளநாட்டில் பிறந்த பெண்பாவை கண்
ணகிக்குத் தோழி ஐயா, நான் தோழி என அறிக.
இவ்வாறு தோழி தன்னை அறிமுகம் செய்துகொண்டாள்.

"மடம்படு  சாயலாள் மாதவி  தன்னைக்
கடம்படாள் காதல் கணவன்  கைப்பற்றிக்
குடம்புகாக் கூவல்  கொடும்கானம்  போந்த
தடம்பெரும் கண்ணிக்குத்  தாயார்நான் கண்டீர்;
  தண்புகார்ப் பாவைக்குத் தாயார்நான் கண்டீர்". 
பொருள்: மாதவிமேல் பொறாமை, சினம் எதுவும்
கொள்ளாமல் கொண்ட கணவனோடு குடம் நுழை
யாத(நீர் எடுப்பார் இன்றிப் பாழடைந்த) கிணறு
கள் இருக்கும் காட்டு வழியில் நடந்து வந்த கண்
ணகிக்குச் செவிலித் தாய் நான் கண்டீர்; செவிலித்
தாய் ஐயா, இதை அறிவீர்.

"தற்பயந்தாட்(கு) இல்லை; தன்னைப் புறங்காத்த
எற்பயந்தாட்கும்  எனக்கும் ஓர்சொல் இல்லை;
கற்புக் கடம்பூண்டு  காதலன் பின்போந்த
பொற்றொடி  நங்கைக்குத் தோழிநான் கண்டீர்;
   பூம்புகார்ப்  பாவைக்குத்  தோழிநான்  கண்டீர்".
பொருள்:தன்னைப் பெற்ற தாய்க்கும் எதுவும்
கூறாமல், தன்னை வளர்த்துக் காத்த என்தாய்க்கும்
எனக்கும்  எதுவும் கூறாமல், கற்பையே அணிகலன்
என மதித்துக் கணவன் பின்னே புறப்பட்டு வந்த
கண்ணகிக்குத் தோழி நான்; பூம்புகார்ப் பாவைக்
குத் தோழி ஐயா, இதனை யறிக.

இவ்வாறாகச் செவிலித் தாயும், அவள் மகளும்(கண்
ணகிக்குத் தோழி) புலம்பி அரற்றினர். உடனே,
தேவந்தி என்பவள் உரைக்கலானாள்.
"செய்தவம் இல்லாதேன் தீக்கனாக் கேட்டநாள்
எய்த  உணரா(து)  இருந்தேன்;மற் றென்செய்தேன்?
மொய்குழல் மங்கை முலைப்பூசல் கேட்டநாள்
அவ்வை உயிர்வீவும் கேட்டாயோ? தோழி,
    அம்மாமி  தன்வீவும் கேட்டாயோ? தோழி".
பொருள்: நற்றவம் புரியாத பாவி நான். அன்றொரு
நாள் தீக்கனாக் கண்டதாக நீ சொன்ன பொழுதே
அதனைப் பற்றி மேற்கொண்டு விசாரிக்காமல் விட்டு
விட்டேனே. துயர் மிகுதியாலும் சினத்தாலும்  நீ
உன் ஒரு முலையைத்  திருகி எறிந்து மதுரையை எரி
யூட்டிய செய்தி கேட்டவுடன்  உனக்குத் தாயும்,
பிற்பாடு மாமியாரும் இறந்த செய்தியையும் நீ கேள்விப்
பட்டாயோ? தோழி, கேள்விப் பட்டாயோ? மேலும்,
"மாசாத்து வான்துறவும் கேட்டாயோ? அன்னை,
மாநாய்கன் தன்துறவும் கேட்டாயோ? அன்னை".
"மாதவி தன்துறவும் கேட்டாயோ?  தோழீ,
மணிமே  கலைதுறவும்  கேட்டாயோ? தோழீ".
"வையெயிற்(று) ஐயையைக் கண்டாயோ? தோழீ,
மாமி மடமகளைக் கண்டாயோ? தோழீ".

இவ்வாறெல்லாம் பாடிப் புலம்பி அரற்றித் தீர்த்த
வுடன் வானிலே ஒரு பெண் உருவம் தோன்றியது.
சேர வேந்தன் செங்குட்டுவன் உடனே அதிசயப்
பட்டான்."பொன்னாலான சிலம்பையும் இன்னும் பல
அணிகலன்களையும் சூடிய மின்னல் கொடி போல
ஒரு பெண்ணுருவம் விண்ணில் தெரிகிறதே என்று
வியந்து கூறினான். கண்ணகித் தெய்வம் பேசினாள்:
"தென்னவன் தீதிலன்; தேவர்கோன் தன்கோவில்
நல்விருந்(து) ஆயினான்; நானவன் தன்மகள்;
வெல்வேலான் குன்றில் விளையாட்டு யானகலேன்;
என்னோடும் தோழிமீர் எல்லீரும் வம்மெல்லாம்".
கண்ணகி தன்னைப் பாண்டியன் மகளென்று கூறிக்
கொண்டதால் பாண்டியன் மீதிருந்த அவளது சினம்
தணிந்து விட்டதை யறிந்த செங்குட்டுவன் உடபட
அங்கேயிருந்த அனைவரும் கண்ணகியையும் பாண்
டியனையும் வாழ்த்திப் பாடினார்கள். பின்னர் சோழ
வேந்தனையும் சேர வேந்தனையும் ஏற்ற முறையில்
வாழ்த்திப் பாடினர்.
"வீங்குநீர் உலகாண்ட விண்ணவர் கோன்தன்
ஓங்கரணம் காத்த உரவோன்யார் அம்மானை;
ஓங்கரணம் காத்த உரவோன் உயர்விசும்பில்
தூங்கெயில் மூன்றெறிந்த  சோழன்காண் அம்மானை;
 சோழன் புகார்நகரம் பாடேலோர் அம்மானை".
பொருள்:கடலே எல்லையாக உடைய இந்த நிலவுலகை
ஆட்சிசெய்த, வானவர் தலைவன் இந்திரனது கோட்டை
மதிலைக்காத்த கொற்றவன் யார்?  வானில் வலம்
வந்த மூன்று கோட்டைகளையும் அழித்த(தூங்கெயில்
எறிந்த தொடித்தோள் செம்பியன் என்னும்) சோழமன்
னன் அவன். அவனது புகார் நகரை வாழ்த்திப் பாடி
அம்மானை விளையாட்டை ஆடுவாய் பெண்ணே!
"பொன்னி லங்கு பூங்கொடி பொலம்செய் கோதை
வில்லிட
மன்னி லங்கு மேகலை கள்ஆர்ப்ப  ஆர்ப்ப  எங்கணும்
தென்னன் வாழ்க வாழ்க வென்று சென்று பந்த
டித்துமே;
தேவர் ஆர  மார்பன் வாழ்க வென்று  பந்த
     டித்துமே".
பொருள்:பொற்கொடி போன்ற அழகுடையவளே! பொன்
னாலான மாலைகள் ஒளிவீச, மேகலைகள் ஒலியெழுப்ப,
ஞாலமெங்கும் தென்னவன் பாண்டியன் வாழ்க என்று
வாழ்த்திப் பந்தடிப்போம். இந்திரன் அளித்த பூணாரம்
தவழும் மார்பன் வாழ்க என்று பந்தடிப்போம், வா.

"ஓரைவர் ஈரைம்  பதின்மர் உடன்றெழுந்த
போரில் பெருஞ்சோறு  போற்றாது தானளித்த
சேரன் பொறையன் மலையன் திறம்பாடிக்
கார்செய் குழலாட ஆடாமோ ஊசல்;
 கடம்பெறிந்த  வாபாடி  ஆடாமோ  ஊசல்."
பொருள்: பாண்டவர் ஐவரும்  கௌரவர் நூற்று
வரும்  உக்கிரமாகப் போர்புரிந்த பொழுது இரண்டு
பக்கத்துப் படைகளுக்கும் அளவின்றிப் பெருஞ்சோறு
படைத்த சேரன்-பொறையன்-மலையன் புகழ்பாடிக்
கருங்கூந்தல் விரிந்தாட ஊஞ்சல் ஆடுவோம்; கடலிற்
கடம்பை அழிந்த கொற்றவன் புகழ்பாடி ஊஞ்சல் ஆடு
வோம்.

கண்ணகிக்குக் கோவில் கட்டுவித்த செங்குட்டுவன்,
கோவிலில் அன்றாடம் பூசை மற்றும் விழா நடக்க
இறையிலியாக நிலம் வழங்கி நாடோறும் விழாச்
சிறப்பு விளங்கல் வேண்டும் என்ற ஆணை பிறப்
பித்தான். பூவும் அகில் புகையும் நறுமணப் பொருள்
களும் கொண்டு கண்ணகி தெய்வத்துக்குப் பூசை
செய்க என்று தேவந்திகைக்குக் கட்டளையிட்டான்.
கண்ணகி கோட்டத்தை வலமாக மூன்று முறை சுற்றி
வந்து தேவியை வணங்கிப் பணிந்து நின்றான். அங்கு
குழுமியிருந்த சிறையிலிருந்து விழாவை முன்னிட்டு
விடுவிக்கப்பட்ட மன்னர்களும், குடகு நாட்டவரும்,மாளுவ
மன்னனும், இலங்கையரசன் கயவாகுவும் "எங்கள் நாட்
டில் செங்குட்டுவன் பிறந்தநாள் விழா எடுக்கும் போது,
கண்ணகித் தெய்வமே! நீ தவறாமல் காட்சி தந்து அருளல்
வேண்டும்" என்று வணங்கி வேண்டினர். அப்பொழுது,
"நீங்கள் கேட்ட வரம் தந்தேன்" என்று வானில் ஒரு குரல்
ஒலித்தது. இப்படியாகக் கண்ணகி வழிபாடு பல இடங்
களுக்கும் பரவியது. மதுரையை எரியூட்டிய கண்ணகி
கோபத்தின் உச்சத்தில் இருந்தாள். பிற்பாடு கணவனுடன்
விண்ணுலகம் சென்ற நாளிலிருந்து சினந்தணிந்து அன்பும்,
அமைதியும் கொண்டவளாக மாறினாள். தன்னை நாடிவரும்
பக்தர்களுக்கு வேண்டியவரம் நல்கும் தெய்வமாக மாறிவிட்
டாள். கண்ணகி தெய்வத்தின் புகழ் ஓங்குக! பத்தினிக்
கோட்டத்தைப்  போற்றிடுவோம்.






























1 comment: