Saturday, 8 June 2019

கோதாவரி தமிழர்களின் குறை தீர்க்குமா?+

தென்னிந்திய நதிகள் இணைப்புத் திட்டம்
(கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணையாறு, காவேரி)
கங்கையையும் பொன்னியையும் இணைத்திடலாம் என்றபகற்
  கனவு கண்டோம்;
"மங்கலமாம் இப்பணியை நிறைவேற்ற எந்தவொரு
   வழியும் இல்லை;
வெங்கொடுமை; மிகுந்தபொருட் செலவாகும்; மாநிலங்கள்
    விரும்ப வில்லை;"
பங்கமுற இவ்வாறு கூறியதால் கைவிட்டோம்;
    பரிதா பம்தான்.

எப்பொழுதும் பசுமைதவழ் நெற்பயிர்கள் அசைந்தாடி
   இனிய தென்றல்
வெப்பமதை விலக்கிநல்ல குளிர்ச்சிதரும் நன்செய்நிலம்
   மிக்க நாட்டில்
தப்பியது பருவமழை; வறட்சிமிக உருவாகித்
   தண்ணீர்ப் பஞ்சம்
துய்ப்பவரைத்  துன்புறுத்தி வாட்டமுறச்  செய்கிறது;
   சோகம்  தானே!

தமிழகத்தின் களஞ்சியமாய்த் தஞ்சைநிலப் பகுதியெலாம்
   தழைத்த காலம்;
அமிழ்தமன்ன பொற்காலம்; அக்காலம் இனிவருமோ?
   ஆறே, பொன்னி!
இமிழ்திரைவங்  கக்கடலில் கலந்திடும்நற் கழிமுகத்துக்
    கேற்றம் சேர்த்தாய்;
துமிதமது காணாமல் கழனியெலாம் பாலையெனத்
    தோன்றும் அம்மா!
(துமிதம்--மழைத்துளி; கழனி--வயல்)

பருவமழை பொய்த்துநமை வாட்டுவது போதாதோ?
    பங்கு கேட்கும்
கருநாடர் அணைகளிலே நீர்தேக்கிப் பயனடைவர்;
    கபட மாக
அருமைமிகு காவிரியை அடைத்துவைத்து வஞ்சித்தல்
    அறமோ? சொல்வீர்;
பெருமைமிகு மையத்துப் பேரரசே! தலையிட்டுப்
    பிணக்கைத் தீர்ப்பீர்!

இந்நிலையில் நதிகோதா வரியினையும் பொன்னியையும்
    இணைப்போம் என்னும்
பொன்னிகர்த்த முன்மொழிவைப் பலர்சொல்லி மகிழ்கின்றார்;
    புகல்வோம் நன்றி;
மின்னிகர்த்த வேகத்தில் திட்டத்தை நிறைவேற்ற
    வேண்டிக் கொள்வோம்;
என்னவொரு தடைவரினும் எதிர்கொண்டு முறியடிப்போம்;
    ஏற்றுக் கொள்வோம்.

நிதிநிலையைக் காரணமாய்ச் சொல்லாதீர்; சூழல்கெடும்
    நினைப்பும் வேண்டா;
சதிபுரிந்து தடைசெய்ய எண்ணிடுவோர் தயைகூர்ந்து
    தள்ளி நிற்பீர்;
மதிமிகுந்த தென்னகத்து முதல்வரெலாம் ஒருங்கிணைந்து
   வழியைத் தேடிக்
கதியெனவே நம்புகின்ற இத்திட்டம் நிறைவேறக்
   கைகள் தாரீர்!

மையத்துப் பேரரசை ஆட்சிசெய்வோர் அக்கறையாய்
   மனது வைத்தால்
உய்யும்வகை நதிகோதா வரியினையும் பொன்னியையும்
   ஒருங்கே சேர்த்து
நையவைக்கும் தணீர்ப்பஞ்சம் நீக்கிடலாம்;வறட்சியினை
    நாட்டை விட்டே
ஐயமற விரட்டிடலாம்; வளமனைத்தும் மீட்டிடலாம்;
    அனைத்தும் உண்மை.
(தணீர்ப் பஞ்சம்--தண்ணீர்ப் பஞ்சம்--இடைக்குறை)

தென்னகத்து மக்களெலாம் இப்பெரிய காரியத்தில்
    சேர்ந்து நின்று
தன்னலத்தைத் துறந்து,பொது நலமெண்ணி நன்முறையில்
    தம்மால் ஆன
சின்னவொரு பணியெனினும் சிறப்பாகச் செய்திடுவோம்;
    தீர்க்க  மாகப்
பன்னரிய சாதனையாய் நிறைவேற்றி முடித்திடுவோம்;
   பாங்காய் வெல்வோம்.

சீர்மிகுமித் திட்டத்தை  மையத்தில்  ஆள்வோர்கள்
   செம்மை யாக
நேர்மைமிக  நிறைவேற்றிச் செயல்படுத்தி விட்டாலே
    நீங்கும்  துன்பம்;
நீர்மிகுந்து வளம்மிகுந்து  தென்னகத்து மாநிலங்கள்
    நெருடல் இன்றிப்
பார்புகழப் பிணக்கின்றி ஒற்றுமையாய் வாழ்ந்திடுமே,
    பாசத் தோடு.

ஆண்டவனே! மாபெருமிச் செயலுக்கு நின்கருணை,
    அளவில் ஆசி
வேண்டிடுவோம், தட்டாமல் நல்கிடுவாய்; பருவமழை
    விரைந்து பெய்து
மீண்டுமிந்தத் தென்பகுதி செழிப்படைய வழிசெய்வாய்;
    வேண்டும் நீரை
யாண்டுந்தென்  னகமக்கள் பெற, வரந்தா; பங்கீட்டை
    எளிதாய் ஆக்கே!
(ஆக்கு + ஏ = ஆக்கே; 'ஏ' அசையாகும்)











1 comment: