Wednesday, 17 July 2019

கல்விக்கண் திறந்த காமராசர் புகழ் ஓங்குக!

செயல் வீரர் காமராசர் புகழ் ஓங்குக!

சீர்மிகுந்த விருதுநகர்ப் பதிவாழ்ந்த தம்பதிகள்
குமார  சாமி
ஏர்மிகுந்த சிவகாமி எனுமிவர்கள் பெற்றெடுத்த
         இனிய பிள்ளை;
கார்மிகுந்த வண்ணத்தர்; வெள்ளைநிற உள்ளத்தர்;
          காம ராசர்
பேர்மிகுந்த தமிழினத்தின் பெட்புமிக்க அடையாளம்;
          பீடு தானே!

தீரர்சத்ய மூர்த்திக்குச் சீர்த்திமிகு மாணாக்கர்;
பாரதத்தாய் கைவிலங்கைப் பட்டென்(று) அறுத்தெறிய
வீரமிகப் போராடி வெஞ்சிறையில் வாடியவர்;
ஈரநெஞ்சில் வாஞ்சையுடன் ஏழையர்க்கு நன்மைசெய்தார்.

தீமை  யிலாத  விருதுநகர்ச்
சேர்வில்  தோன்றி  அரசியலில்
ஏமம்  மிக்க  காங்கிரசாம்
இயக்கம்  தனிலே  படிப்படியாய்க்
காம  ராசர்  தொண்டியற்றிக்
கண்ய  மிக்க  முதலமைச்சாய்
பூம  டந்தை  உளங்களிக்கப்
பொறுப்பு  மிக்க  ஆட்சிதந்தார்.

நன்மைமிகு உழவுசெய்ய  அணைகள்பல எடுத்தார்;
 நல்லதொழிற் சாலைபல நிறுவிவளம் கொடுத்தார்;
உன்னதமாம் கல்விகற்கப் பள்ளிபல திறந்தார்;
  ஓயாத தொண்டாற்றி ஊண்,உறக்கம் துறந்தார்;
இன்மைமிகு மாணவர்க்காய் அழுதுகண்ணிர் உகுத்தார்;
  ஏற்றமிகு பகலுணவுத் திட்டந்தான் வகுத்தார்;
பன்னரிய சீருடைத்திட் டந்தனையே கொணர்ந்தார்;
  பாங்கான அவர்தொண்டை மக்களெலாம் உணர்ந்தார்.

கரும வீர! காம ராச! கல்வி கற்க உதவினீர்;
தரும மிக்க ஊழ லற்ற தக்க ஆட்சி தந்ததால்
அருமை யென்று சகல மக்கள் ஆத ரித்து வந்தனர்;
திருமி குந்த நல்ல கால மென்று சொல்லி வாழ்த்தினர்.

நேர்மையாய் எளிமை யாக
நித்தமும் தொண்டு  செய்தார்;
கூர்மையாம் அறிவு  கொண்டே
கொடுமைகள் களைந்து  மக்கள்
ஓர்மையாய்த்  துணிவாய்  வாழ
         ஊழலே இலாமல்  ஆண்டார்;
சீர்மையாய்  நாட்டை  யாண்ட
          செம்மலை  வாழ்த்து  வோமே!

வாழி! பெருந்தலைவர்; வாழி! அவர்திருப்பேர்;
வாழி! அவர்புகழும் மக்கள்தொண்டும்--வாழி!
உலகில்  கதிரும்  ஒளிரும்  மதியும்
நிலவும்  வரையளவும்  நின்று.

அருஞ்சொற் பொருள்:

கார்--கருமை; பெட்பு--பெருமை; பீடு--சிறப்பு; சேர்வு--வாழிடம்; ஏமம்--வலிமை;
பூமடந்தை--நிலமகள்; கண்ணீர் உகுத்தார்--கண்ணீர் சிந்தினார்;
கொணர்ந்தார்--கொண்டுவந்தார்;
திருமிகுந்த காலம்--பொற்காலம்;
ஓர்மை--உறுதி, துணிவு;கதிர்--சூரியன்;
மதி--சந்திரன்.






2 comments: