Saturday, 4 July 2020

பழைய குருடி கதவைத் திறடி

"பழைய குருடி, கதவைத் திறடி".

இந்தச் சொல்லடைவை(முது மொழி) உருவாக்கியவர்
பொய்யா மொழிப் புலவர் ஆவார். இச் சொல் தொடர்
எந்தச் சூழ்நிலையில் சொல்லப்பட்டது? இதன் பொருள்
என்ன? போன்றவற்றை விரிவாகப் பார்ப்போம்.
அதற்குமுன் பொய்யா மொழிப் புலவரின் வரலாற்றை
அறிந்து கொள்வோம்.

காஞ்சிபுரத்தை யடுத்த செங்காட்டுக் கோட்டத்தைச் சேர்ந்த
அதிகத்தூரில் அமண்பாக்கக் கிழார் மரபில் தோன்றியவர்
பொய்யாமொழிப் புலவர். அவரது இயற்பெயர் சாத்தனார்
என்றும் அம்பலத் தரசன் என்றும் சொல்லப்பட்டன. தொண்டை
மண்டலத்தைச் சேர்ந்த வயிரபுரம் என்னும் ஊரில் கல்வி
பயின்றார். கல்வியில் இவரது திறமையைக் கண்ணுற்ற
ஆசான் இவரைப் பொய்யா மொழிப் புலவர் என்று அழைத்த
தாகச் சொல்லப்படுகிறது. இவரது வாக்கு சத்திய வாக்காகப்
பலித்ததால் ஆசான் அவரைப் பொய்யா மொழிப் புலவர் என்று
அழைத்தார்  என்று  தோன்றுகிறது.இவரது காலம் பதின்மூன்
றாம் நூற்றாண்டாகும்.

குருகுலத்தில் கல்வி கற்கும் பொழுது ஆசானின் சோளக் கொல்லை
யைக் காவல் காக்கும்  கடமை சுழற்சி  முறையில் ஒவ்வொரு மாணவருக்
கும் வரும். அன்றைய முறை அம்பலத்தரசனுக்குரியது. காவல் காத்துக்
கொண்டிருக்கும் போது அங்கே வீசிய இதமான காற்றால் அயர்ந்து உறங்கி
விட்டார். விழித்த பொழுது சோளக் கொல்லையைச் சில குதிரைகள் மேயக்
கண்டார். அவைகளை விரட்ட முயன்றார். முரட்டுக்  குதிரைகளை  அடக்க
முடியாமல் தவித்தார். அருகிலுள்ள காளிகோவூலுக்குச் சென்று மாகாளி
யிடம் முறையிட்டார். அம்மை அவர்மீது பரிவுகொண்டு அவர் சொல்வது
பலிக்குமாறு ஆசீர்வாதம் செய்ததாகச் சொல்வர். கோவிலிலிருந்து
வெளியே வந்த அம்பலத்தரசன் உடனே பாடினார்.
"வாய்த்த  வயிரபுர  மாகாளி  அம்மையே!
ஆய்த்த  மணலில்  அணிவரையிற்---காய்த்த
கதிரைமா ளத்தின்னும்  காளிங்கன்  ஏறும்
குதிரைமா  ளக்கொண்டு  போ"
என்று பாடியவுடனே மேய்ந்து கொண்டிருந்த குதிரை தடாலென்று கீழே
விழுந்து இறந்ததாகச் சொல்லப்படுகிறது. காளிங்கன் அந்த நாட்டுச்
சேனாபதி. அவர் குதிரை மாண்டதால் ஆசான் முதல் மாணவர்கள் வரை
அனைவரும் அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்தனர். பின்னர் அனைவரும்
வேண்டிக் கொண்டதால் அம்பலத்தரசன் கடைசி அடியை மாற்றிக்
"குதிரைமீ  ளக்கொண்டு  வா" என்று பாடிக் குதிரையின் உயிரை மீட்டுக்
கொண்டு வந்ததாகச் சொல்லப்படுகிறது. அன்றிலிருந்து  அம்பலத்தரசன்
பொய்யா மொழிப் புலவராக உருமாறினார். காளிங்கன் தன் மகள் அமிர்தத்
தைப் பொய்யா மொழிப் புலவருக்கு மணம் செய்து கொடுத்தார். சிறிது காலம்
அமைதியாக நடந்த இல்லறம் நாள் செல்லச் செல்லப் பிணக்கும் பூசலுமாகத்
தள்ளாடியது.காரணம், புலவர்களுக்கே உரிய வறுமைதான். ஒருநாள் பொய்யா
மொழிப் புலவர் சினங்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார்.

புலவர்களுக்குச் செல்வச் செழிப்பு  வாய்ப்பது அரிதே; ஆனால் சிறப்புக்கும் பெரு
மைக்கும் எப்போதும் குறை வாராது. பொய்யா மொழிப் புலவர் கால் நடையாக
வந்தாலும் வழிநெடுகிலும் உண்ண உணவும் அருந்தக் குடிநீரும் உறங்கத் திண்ணை
யும் கிடைத்தன. அவர் மனத்தில் பேரவா ஒன்று தோன்றியது. மூன்றாம் தமிழ்ச் சங்கம்
மறைந்த பிறகு நான்காம் தமிழ்ச் சங்கத்தை மீண்டும் மதுரையில் தோற்றுவிக்க விரும்பி
னார். அதற்குப் பொருள் தேடல் வேண்டும். இப்படியான சிந்தனைகளோடு காளை
யார்கோவில் வந்தடைந்தார். அங்கு ஒரு வீட்டின் கதவைத் தட்டினார். வெளியே வந்த
பெண் "ஐயா! நான் கண் பார்வையற்றவள். என் தமக்கையும், தாயும், தாய்வழிப் பாட்டி
யும் அரைக்குருடர்கள். எங்களை ஏன் தொந்தரவு செய்கின்றீர்கள்?" என்று கூறினாள்.
புலவர்" பெண்ணே! உன் பெயர் என்ன?" என்று வினவினார்."என் பெயர் கூத்தாள்"
எனப்  பதிலிறுத்தாள். உடனே புலவர் பாடத் தொடங்கினார்.
"கூத்தாள் விழிகளிரு கூர்வேலாம்; கூத்தாள்தன்
மூத்தாள் விழிகள் முழுநீலம்; மூத்தாள்தன்
ஆத்தாள் விழிகள் அரவிந்தம்; ஆத்தாள்தன்
ஆத்தாள் விழிகளிரண்(டு) அம்பு."
அவர் பாடியவுடன் கூத்தாளுக்கும் அவள் தமக்கை,
தாய், தாய்வழிப் பாட்டிக்கும் கண்பார்வை கிடைத்த
தாகச் சொல்லப்படுகிறது. கூத்தாள் முதலியவர்கள்
தேவரடியார் தொண்டு செய்பவர்கள். அவர்களும்
அவர்களைப் போலத் தேவரடியார்களும் நான்காம்
தமிழ்ச்சங்கம்  தோற்றுவிக்கப் பொருள் தந்தார்கள்.
எல்லாப் பொருளையும் ஒன்று சேர்த்துக் கூத்தாளிடமே
ஒப்படைத்து "நான் மதுரைக்குச் சென்றுவரும் வரை
நீயே பத்திரமாக வைத்திரு" என்று சொல்லிவிட்டுச்
சென்றார்.

பாண்டி மண்டல மாறை நாட்டுத் தஞ்சாக்கூரை அடைந்து
அங்கு மாறவர்மன் குலசேகரபாண்டியனிடம் அமைச்சராக
வும் படைத் தலைவராகவும் விளங்கிய மாவலி வாணர்
குலத்தைச் சேர்ந்த சந்திரவாணன் என்பவரின் நட்பைப்
பெற்றார். அவர்மீது தஞ்சை வாணன் கோவை என்ற நூலைப்
பாடி அரங்கேற்றினார். சந்திரவாணன் மனைவி
யார் ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு பொன்னாலான தேங்காயைப்
பரிசாகத் தந்தார். ஏனெனில் அந்த அம்மையும் சிறந்த
புலமையும் இரசனையும் உடையவர். சந்திர வாணன்
ஒவ்வொரு தேங்காயின் மூன்று கண்களுக்கும் மூன்று
இரத்தினங்களைப் பொதிந்து புலவர்க்குப் பரிசளித்தார்.
பொய்யா மொழிப் புலவர்க்குக் கிடைத்த அருமையான
அன்பளிப்பு!

இம்மாதிரி தமக்குக் கிடைத்த எல்லா அன்பளிப்பையும்
காளையார் கோவில் கூத்தாளுக்கு அனுப்பி வைத்துப்
பத்திரமாக வைத்திருக்கும்படி கூறினார். இடையில்
மதுரைக்குச் சென்று பாண்டிய மன்னரைச் சந்தித்து
நாலாம் தமிழ்ச்சங்கம் தொடங்கப் போதிய உதவிகள்
செய்தல் வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அப்
பொழுது சோழர்கள் படையெடுத்து வரலாம் என்ற
பேச்சு அடிபட்டதால் தமிழ்ச் சங்க வேலை சுணங்கியது.

பொய்யா மொழிப் புலவர் காளையார்கோவிலை
நோக்கிப் பயணப்பட்டார். ஒருநாள் மாலை வேளை
யில் அவ்வூரை வந்தடைந்தார். கூத்தாள் வீட்டை
நெருங்கிக் கதவைத் தட்டினார். இடையில் கூத்தாள்
மற்றும் அவள் தமக்கை, தாய், தாய்வழிப் பாட்டி
ஆகியோரரின்  நல்ல மனம் திரிந்து கபடச் சிந்தனை
குடிபுகுந்தது. பொய்யா மொழிப் புலவர் அனுப்பி
வைத்த பணமும் பொருளும் பலமடங்கு அதிகரித்
திருந்தன.. எப்படியாவது அதை மோசடி செய்யத்
திட்டமிட்டனர். பொய்யா மொழியார் கதவைத் தட்டி
யதும் "இதற்கு முன்பு இவ்வீட்டில் குடியிருந்தவர்கள்
காலி செய்து வெளியேறிவிட்டனர். நாங்கள்  புதிதாகக்
குடிவந்துள்ளோம்" என்று வீட்டுக்குள் இருந்தவாறே
கதவைத் திறக்காமலேயே சொன்னார்கள்.

புலவர் மிகவும் சினமடைந்தார். பேராசையினால்
தமிழ்ச்சங்கத்துக்காகத் திரட்டிய பணத்தையும் பொருளை
யும் அபகரிக்கத் திட்டமிடுவதை உணர்ந்து கொண்டார்.
,கோபத்தோடு "பழைய குருடி, கதவைத் திறடி" என்று  உரத்துக் குரல்
கொடுத்தார். அவர் வாக்குப் பலித்ததோ இல்லை கூத்தாள்
வகையறாக்கள் மிதமிஞ்சிய அச்சத்தில் இருந்ததாலோ
அந்த நாலு நபர்களுக்கும்  கண்பார்வை தெரியாமற் போயிற்று.
நால்வரும் புலவரின் கால்களில் விழுந்து வணங்கி
"பேராசையினால் கபட வேலை செய்தோம். மன்னித்து விடுக"
என்று கண்களில் நீர்வழியக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டனர்.
புலவரின் பணத்தையும் பொருளையும் அவரிடமே ஒப்படைத்தனர்.

புலவர் அவர்களை மன்னித்து விட்டுத் தமக்குரிய பணத்தையும்
பொருளையும் எடுத்துக் கொண்டு தமது ஊரான அதிகத்தூர்
வந்தடைந்தார். ஆர்க்காட்டுக் கோட்டம் அரசூரைச் சேர்ந்த சீநக்கன்
என்னும் வள்ளலோடு புலவர் நெருங்கிய நட்புக் கொண்டிருந்தார்.
சீநக்கன் இறந்தபொழுது நம் பொய்யாமொழியார் அவர் சிதையில்
பாய்ந்து  உடன்கட்டை ஏறினார் எனச் சொல்லப்படுகிறது. கோப்
பெருஞ் சோழனுக்காகப் பிசிராந்தையார் என்ற புலவர், வேள்
பாரிக்காகப் புலவர் கபிலர் உடன்உயிர் துறந்தது போலவே
சீநக்கன் என்னும் வள்ளலுக்காக நம் பொய்யா மொழியாரும்
உடன் உயிர்துறந்தார்.

No comments:

Post a Comment