கரணம் தப்பினால் மரணம்.
இக்காலத்தில் இச்சொற்றொடருக்கு, சரக்கஸில்
வித்தை காட்டுபவர் தவறாக வித்தை செய்து மரணம்
அடைவது என்பது போன்ற பொருள் வழங்கி வருகிறது.
உண்மையான பொருள் அகப்பொருள் குறித்தது. இதனை
இங்கு பார்ப்போம்.
நாகரிகம் வளர்ச்சியடையாத காலக்கட்டத்தில் முறையான
குடும்ப நெறிகளைப் பின்பற்றாமல் மக்கள் வாழ்ந்து வந்தனர்.
நாகரிகம் வளர்ச்சியுற்றபிறகு குடும்ப நெறிமுறைகள், கற்பு,
ஒருவனுக்கு ஒருத்தி- ஒருத்திக்கு ஒருவன் போன்ற ஒழுக்கங்கள்
வலியுறுத்தப்பட்டன. தொடக்கத்தில் குடும்ப நெறிகள், இல்லற
ஒழுக்கம் முதலியவை நன்கு பேணப்பட்டாலும் திருமணத்துக்குரிய
சடங்குகள் பின்பற்றப்படவில்லை. ஆங்காங்கே ஒருசிலர் குடும்ப
வாழ்வில் பொய், பித்தலாட்டம், குற்றங்கள் இழைத்ததைக் கண்ட
மற்றும் கேட்ட பெரியோர்கள், பலர் முன்னிலையில் திருமணச்
சடங்குகளை நிகழ்த்தி மணமக்களின் குடும்ப வாழ்வைத் தொடங்கி
வைத்தனர். திருமணம், வதுவை, வரைவு, மன்றல், கரணம் என்ற
பெயர்களில் அழைக்கப்பட்டது. தொல்காப்பியம், கற்பியலில் உள்ள
ஒரு நூற்பா இவ்விவரத்தைத் தெரிவிக்கின்றது. அது பின்வருமாறு:
"பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப".
(ஐயர்=பெரியோர்; யாத்தனர்=உருவாக்கினர்; கரணம்=திருமணம்)
தமிழ்மக்களின் திருமண முறையைப் பற்றிய விவரங்கள் அகநானூறு
86 மற்றும் 136ஆம் பாடல்களில் காணப்படுகின்றன.
சங்க காலம் பொற்காலம்; ஒழுக்கமும் நெறியும் பண்பாடும்
உச்சத்தில் இருந்த காலக் கட்டம் அது. இருப்பினும், அந்தக்
காலத்திலும் ஒருசிலர் ஏமாற்று வேலை செய்துள்ளனர்.
காதலித்த பெண்ணைக் கைவிடுதல், திருமணம் செய்யாமல்
ஏமாற்றுதல் போன்ற செயல்களை ஒருசிலர் செய்துள்ளனர்.
அப்படி ஒரு நிகழ்வு குறுந்தொகை 25ஆம் பாடலில் காட்டப்
பட்டுள்ளது. அந்தப் பாடலைப் பார்ப்போம்:
புலவர் கபிலர். கு.தொ.எண்: 25
"யாரு மில்லைத் தானே கள்வன்
தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ?
தினைத்தாள் அன்ன சிறுபசுங் கால
ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே!"
பொருள்:
சாதலே வந்த போதும் தாய்தந்தை எதிர்த்த போதும்
காதலி உனையெந் நாளும் கைவிடேன் என்று சொன்னான்;
ஆதலின் அவனை நம்பி அன்புடன் கூட லுற்றேன்;
பாதகன் தானோ அன்னான்? வரைவினை
விரும்ப வில்லை.
எவருமே அறியா வண்ணம் என்நலம் துய்த்த பின்பு
கவருநல் மொழிகள் கூறிக் 'கைவிடேன், பிரியேன் என்றும்
தவறிடின் தரியேன் ஆவி; சத்தியம்' என்றும் சொன்னான்;
இவன்உரை நம்பற் பாற்றோ?எய்த்திடு வானோ கள்வன்?
களவினில் நிகழ்ந்த நேர்வைக் கண்டவர் எவரும் இல்லை;
தளர்கிற(து) என்றன் நெஞ்சம்; சாட்சிசொல் வாரும் இல்லை;
குளத்தினில் ஆரல் உண்ணும் குருகிதைப் பார்த்த போதும்
விளம்பிட வாய்ப்பே இல்லை; வேதனை அதிகம் ஆகும்.
ஐயகோ தலைவன் சூளை அணுவள வேனும் நம்பேன்;
பையவென் நலத்தைத் துய்த்துப் பலப்பல உறுதி சொன்னான்;
பொய்யுரை ஆகப் போனால் புகார்செயச் சாட்சி இல்லை;
செய்வது தேர்ந்தி லேனே; செத்தொழிந் திடல்தான் தீர்வோ?
சூள்: உறுதிமொழி
விளக்கவுரை:
சங்க காலத்தில் களவொழுக்கம், கற்பொழுக்கம் இரண்டுமே
நிலவின. களவொழுக்கம் குறைந்த காலமே அனுமதிக்கப்
பட்டது. அந்தக் காலத்திலேயே தலைவி, தோழி முதலானவர்கள்
திருமணத்தை வலியுறுத்த ஆரம்பித்து விடுவார்கள்.
களவொழுக்கத்தில் ஏற்படும் இடையூறுகளைப் பற்றித்
தலைவியோ, தோழியோ விரிவாக எடுத்துரைத்துத் தலைவ
னைச் சம்மதிக்கச் செய்துவிடுவர். பிறகு கற்பொழுக்கம்
நடைமுறைக்கு வந்துவிடும். ஆனால் இந்தப் பாடலில் கூறப்
படும் தலைவன் திருமணத்தைத் தவிர்த்திட
முயல்கின்றான். தலைவிக்கு அச்சவுணர்வு மேலிடுகிறது. களவொழுக்
கம் என்பதால் யாருக்கும் இதைப்பற்றித் தெரியாது. "நேரில்
கண்ட சாட்சிகள் எவரும் இலர். இந்தச் சம்பவத்தைக் குளத்
தின் அருகில் ஆரல்(விலாங்கு) மீன் அகப்படுமா என்று
குளத்து நீரை உற்று நோக்கிக் கொண்டிருந்த நாரை ஒன்று
பார்த்தது; அவன் கூற்றைக் கேட்டது. ஆனால் நாரை வந்து
சாட்சி சொல்லும் வாய்ப்பே இல்லை. காதலன் வாக்குறுதி
பொய்யாகிப் போனால் நான் என்ன செய்வேன்? என்னிடம்
பழகி நலந்துய்த்து விட்டுத் திருமணத்தைத் தவிர்த்திடப் பார்க்கின்றான்.. இவன் கள்வன்தான்."
இவ்வாறு புலம்பித் தவிப்பதாகப் பாடல் மொழிகிறது. ஆக,
ஏமாற்றுக் காரர்கள் எந்தக் காலத்திலும் இருப்பார்கள்
என்ற எண்ணம் ஏற்படுகின்றது. இந்தப் பாடலில் கூறப்
பட்ட தலைவி என்ன ஆனாள்? திருமணம் நிகழ்ந்ததா?
குறுந்தொகை 290ஆம் பாடலில் ஒரு தலைவி இயம்புவது:
"யாம்எம் காதலர்க் காணேம் ஆயின்
செறிதுனி பெருகிய நெஞ்சமொடு பெருநீர்க்
கல்பொரு சிறுநுரை போல
மெல்ல மெல்ல இல்லா குதுமே"
பொருள்:
என் தலைவனைக் காணவில்லை என்றால், செறிந்த
மிகுந்த துயரமுடைய நெஞ்சத்துடன், மிகுந்த வெள்ளத்தில்
பாறையின் மேல் மோதும் சிறு நுரையைப் போல மெல்ல
மெல்ல இல்லையாகிவிடுவேன்(உலகத்திலிருந்து மறைந்து
விடுவேன்--செத்துவிடுவேன்).
இப்பாடல் கற்பனைப் பாடல்தான். ஆனால் இம்மாதிரி
நடந்த ஒருசில நிகழ்வுகளைக் கேள்விப்பட்டுத்தான்
புலவர்கள் இலக்கியம் படைக்கின்றார்கள். ஒருவேளை,
இதில் குறிப்பிடப்பட்ட தலைவன் தலைவியைக் கைவிட்
டிருந்தால் அவள் உயிரை மாய்த்துக் கோண்டிருக்கலாம்.
எனவேதான் 'கரணம் தப்பினால் மரணம்' என்ற பழமொழி
உருவானது. கரணம் என்றால் திருமணம் என்பது
பொருளாகும். இது போல ஒரு சில நிகழ்வுகளே நடந்துள்
ளன. இருந்த போதிலும் இதைக் கேள்விப்பட்ட அக்காலப்
பெரியோர்கள், நெறிமுறைகள், பழக்க வழக்கங்களை
மேலும் கடுமையாக்கி முறைப்படுத்திவிட்டனர். இருப்பினும்
அவ்வப்பொழுது கரணம் தப்பி மரணம்
நிகழ்ந்திருக்கும்.
.
No comments:
Post a Comment