Saturday, 12 March 2022

பாயாத வேங்கை; பூவாத புண்டரிகம்.

 பாயாத வேங்கை; பூவாத புண்டரிகம்.


வேங்கை என்பது புலியையும், வேங்கை மரத்தையும் குறிக்கும் சொல்லாகும்.

புண்டரிகம் என்பது தாமரையையும், புலியையும் குறிக்கும் சொல்லாகும்.

எனவே, வேங்கைமரத்தைக் குறிக்க அடைமொழி சேர்த்துப் 'பாயாத வேங்கை'

என்ற சொற்றொடர் பயன்படுத்தப்படுகின்றது.  அதுபோலவே, புலியைக் குறிக்கப்

'பூவாத புண்டரிகம்' என்ற சொற்றொடர் பயன்படுத்தப்படுகின்றது. இனி, இவை

பயன்படுத்தப்பட்ட பாடலைப் பார்ப்போம்:(தண்டியலங்கார மேற்கோள் செய்யுள்)

"பாயாத வேங்கை மலரப் படுமதமா

பூவாத புண்டரிகம் என்றஞ்சி---மேவும்

பிடிதழுவி மாறதிருங் கானிற் பிழையால்

வடிதவழும் வேலோய் வரவு".

பொருள்:

கூர்மைபெற்ற வேலை ஏந்தியவனே! பாயாத வேங்கை, அதாவது, வேங்கை மரமானது

மலர்ந்துள்ளது. அதனைப் பூவாத புண்டரிகம், அதாவது புலியென்று ,தவறாக நினைத்து

வெருவிய  பெண் யானைகள் பலம்பொருந்திய ஆண்யானைகளின் பக்கம் பாதுகாப்பைத்

தேடிப் புகலடையும். தம் அருகில் அடைக்கலம் தேடி வந்த பிடி யானைகளைக் களிற்று

யானைகள் தழுவிக்கொண்டு புலிகளின் உறுமலுக்கு ஈடுகொடுக்கும் வண்ணம் பிளிறும்.

இத்தன்மை யுடைய கானகத்தில் நீ இடையாமத்தில்(இரவு வேளையில்) தனித்து வருதல்

தவறாகும். இக் கூற்று தலைவனிடம் தலைவி கூறியதாகும். யானைகளின் உளவியல்

மிக மிக நுட்பமானது. பருத்த உடலையும் கூர்மையான கொம்பையும் கொண்டிருந்தாலும்

பிடி யானை புலியைக் கண்டு அச்சம் கொள்ளும். களிற்று யானை புலியைத் துணிவுடன்

எதிர்கொள்ளும். எனவேதான் திருவள்ளுவர் தம் திருக்குறளில் கீழ்க்கண்டவாறு பாடினார்.

"பரியது கூர்ங்கோட்ட(து) ஆயினும் யானை

வெரூஉம் புலிதாக் குறின்".


காதலின் போது காதலர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சந்தித்துக் கொள்வது சங்ககால

வழக்கம்.  பகலில் சந்தித்துக் கொண்டால் அச்சந்திப்பு பகற்குறி எனப்படும். இரவில்

சந்தித்துக் கொண்டால் அச்சந்திப்பு இரவுக்குறி எனப்படும். குறிஞ்சி நிலப்பகுதியில்

பகற்குறியில் சிக்கல் ஏதும் உருவாகாது. ஆனால் இரவுக்குறியில் தலைவன் தலைவி

யைச் சந்திக்க வரும்போது கொடிய புலி, யானை, கரடி போன்ற விலங்குகளாலும், 

பாம்பு போன்ற ஊர்வனவற்றாலும், பேய், காற்று, கருப்பு போன்றவற்றாலும், எதிர்பாராத

மழை, சூறாவளி போன்றவற்றாலும்  இடர் நிகழ வாய்ப்புண்டு. எனவே, தலைவி இது

குறித்துத் தன் கவலையைத் தலைவனிடம் எடுத்துரைக்கின்றாள். ஏற்கெனவே பகற்

குறிக்கு வாய்ப்பில்லாமல் இரவுக்குறியை நாடியுள்ளனர். குறிஞ்சி நிலப்பகுதியில்

தினை கதிரறுத்த பிற்பாடு தினைப்புனம் காக்கும் வேலை தலைவிக்கு வாராது.

அன்னை பாதுகாப்பாக இற்செறித்துவிடுவது வழக்கம்( தலைவிக்கு நேரும் வீட்டுச்

சிறை அனுபவம்). இற்செறிப்புக் காரணமாகப் பகற்குறி வாய்ப்பு பறிபோகிறது. இரவுக்

குறியில் தலைவனுக்குப் பலவிதமான அச்சுறுத்தல்கள் நேரிடும். பிறகு, காதலர்கள்

எவ்வாறு சந்தித்துக் கொள்வது? இதற்குத் தீர்வு வரைவு கடாவுதல் ஒன்றே. அதாவது,

தலைவன் தன் தமரோடு(சுற்றத்தாரோடு) தலைவியின் வீட்டுக்குச் சென்று அவளின்

தந்தையிடம் மகட்கொடை(பெண் கேட்டல்) வேண்டித் திருமணம் புரிதல் வேண்டும்.

ஏனென்றால் களவு வாழ்வை இரு திங்களுக்குமேல் அனுமதித்தல் மரபில்லை.


இதே கருத்தை எடுத்தியம்பும் குறுந்தொகை 141ஆம் பாடலை நோக்குவோம்:

"வளைவாய்ச் சிறுகிளி விளைதினைக் கடீஇயர்

செல்கென் றோளே யன்னை யெனநீ

சொல்லின் எவனோ? தோழி! கொல்லை

நெடுங்கை வன்மான் கடும்பகை உழந்த

குறுங்கை யிரும்புலிக் கொலைவல் ஏற்றை

பைங்கட் செந்நாய் படுபதம் பார்க்கும்

ஆரிருள் நடுநாள் வருதி

சாரல் நாட! வாரலோ வெனவே"

பொருள்:

இரவுக் குறியில் தலைவியைச் சந்திக்கும் தலைவன் வழக்கம்போல் அன்றும்

வந்துள்ளான். அவன்வரும் வழியில் அவன் எதிர்கொள்ள இருக்கும் இடர்களை

எண்ணி அஞ்சிய தலைவி தோழியிடம் " நீ தலைவனிடம் இனி இரவில் வாராதே;

எம் தாய் எம்மைத் தினைப்புனத்தைக் காவல் காக்கும்படி ஆணையிட்டனள்.

ஆதலின் பகற்குறியில் தினைப்புனத்திற்கு வருவீரேல் தலைவியைச் சந்திக்க

வாய்ப்புள்ளது என்று கூறு. அதனால் என்ன குற்றம் உருவாகும்?" என்று நவின்றாள்.

விளக்கவுரை:

தோழி! மலைப்பக்கத்தை யுடைய நாட! கொல்லையில் உள்ள நீண்ட தும்பிக்கையை

யுடைய யானையினது கடுமையான பகையினால்  வருந்திய, குறுங்காலையுடைய,

கொலைசெய்வதில் தேர்ச்சி பெற்ற பெரிய ஆண்புலியானது தன் இரைக்காக ஏதாவது

விலங்கு(பசிய கண்ணையுடைய செந்நாய் போன்றவை) அந்த வழியில் வருகின்றதா?

என்று  கண்ணை விழித்துப் பார்த்திருக்கும். இப்படிப்பட்ட ஆபத்து நிறைந்த வழியில்

இருள் சூழ்ந்த நள்ளிரவில் வருகின்றாய். அங்ஙனம் வருதல் எனக்கு அச்சத்தையும்

மனவுளைச்சலையும்  கொடுக்கிறது. அவ்வாறு வாராதே. வளைந்த அலகையுடைய

சிறு கிளிகள் விளைந்த தினைப் பயிரைக் கொத்திச் சேதப்படுத்துகின்றன. அக்

கிளிகள் அவ்வாறு தினைப் பயிருக்கு ஊறு விளைவிக்கா வண்ணம்  காவல் புரிய

அன்னை ஆணையிட்டனள். தலைவ! நீ பகற்குறியில் அங்கு வந்து சந்திப்பாயாக!

என்று தலைவனிடம் கூறுவதில் என்ன

குற்றம் ஏற்படும்? என்றாள் தலைவி.

புலவர்: மதுரைப் பெருங் கொல்லனார்.

அருஞ்சொற் பொருள்:

நெடுங்கை வன்மான்=நீண்ட துதிக்கையுடைய யானை;

குறுங்கை யிரும்புலி=குறுகிய முன்னங்காலையுடைய புலி.

ஏற்றை=ஆண்புலி; நடுநாள்=நள்ளிரவு.

No comments:

Post a Comment