அழியா வாழையும் ஒழியாக் கிணறும்.
இடைக்காலத்தில் வாழ்ந்த ஔவையார் செங்கற்பட்டு நாட்டில்
உள்ள புல்வேளூர்ப் பூதன் என்ற வள்ளலின் கொடையால் நலம்
பெற்றவர். புல்வேளூர் இப்போது புல்லலூரென அழைக்கப்படுகிறது.
ஆயினும் கல்வெட்டுக்கள் அவ்வூரை எயிற்கோட்டத்துப் புல்வேளூர்
என்றே கூறுகின்றன. ஔவையாரைப் போற்றிய பூதன் வாழ்ந்த
புல்வேளூர் பெண்ணையாற்றின் வடகரையில் பல்குன்றக் கோட்டத்து
மீகொன்றை நாட்டில் உள்ளது. அங்குள்ள நடுகல் ஒன்றைப் பூதங்கோவில்
என அவ்வூரார் கூறுகின்றனர். அதிலுள்ள கல்வெட்டு "மீ கொன்றை நாட்டு
மேல்வேளூர்ப் பொங்காலத் தொண்டைமான் மகன் வேம்படி என்பவன்"
வெட்சிப் போர் செய்து ஆநிரை கவர்ந்துசென்றவரிடமிருந்து கரந்தைப்
போர் செய்து பசுக்கூட்டத்தை மீட்டு அப்போரில் உயிர்நீத்ததன் பொருட்டு
நடப்பட்டதெனக் கூறுகிறது. அக்கல் நிற்குமிடம் பூதங்கோவில் என வழிவழியாக
வழங்கப் படுவதால், ஔவையாரைப் புரந்த வள்ளல் பூதனின் அரண்மனை
அவ்விடத்தில் இருந்திருக்கலாம் என்று எண்ணுவதில் தவறில்லை.
ஒருமுறை ஔவையார் புல்வேளூர்ப் பூதன் தன் நிலங்களுக்குக் கிணற்றுநீரைப்
பாய்ச்சுவதை மேற்பார்வை செய்து வருகையில், அவனைக் கண்டு தாம் நெடுந்
தொலைவிலுள்ள ஊரிலிருந்து வருவதாகவும் வெய்யிலின் கொடுமையாலும்
பசிவருத்தத்தாலும் வாடுவதாகவும் தெரிவித்தார். பூதனுக்கு நண்பகல் உணவாக
வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும் மிகப் புளித்த மோரும் வந்திருந்தது.
அவ்வுணவை ஔவைக்களித்து மனம் மகிழ்ந்தான். ஔவையார்க்கு அவ்வுணவு
அமிர்தமாயிருந்தது. ஔவையார் பசிதீர்ந்து மனங்களித்துப் பின்வரும் பாடலைப்
பாடினார்:
"வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்
முரமுரவென் றேபுளித்த மோரும்---பரிவுடனே
புல்வேளூர்ப் பூதன் புகழ்புரிந்(து) இட்டசோ(று)
எல்லா வுலகும் பெறும்."
வழுதுணங்காய்=கத்தரிக்காய்.
ஔவையார் அவ்விடத்தை விட்டுக் கிளம்பிய வேளையில் பூதன் வாழைத்
தோட்டத்துக்கு நீர்பாய்ச்சிக் கொண்டிருந்தான். "அழியா வாழையும் ஒழியாக்
கிணறும் ஆகுக" என்று வாழ்த்தினார் எனத் தொண்டை மண்டல சதகம் என்ற
நூல் தெரிவிக்கிறது. அவ்விவரம் பின்வருமாறு:
"சொல்லாயும் ஔவை பரிவாய்த் தனக்கிட்ட சோறுலகம்
எல்லாம் பெறுமென்று பாட்டோதப் பெற்றவள் இன்னருளால்
கல்லாரல் சுற்றிக் கிணறேறிப் பாயும் கழனிபெற்றான்
வல்லாளன் பூத மகிபால னுந்தொண்டை மண்டலமே".
இந்நூலுக்கு உரையும் வரலாற்றுக் குறிப்பும் எழுதிய அறிஞர்
சி.கு.நாராயணசாமி முதலியார், புல்வேளூர் என்று இப்பாடலில்
குறிப்பிடப்பட்டது காஞ்சிபுரத்துக்கு வடக்கிலுள்ள எயிற்கோட்டத்துப்
புல்வேளூரேயாம் எனக்கருதி, அவ்வூரில் ஔவையார் குறிப்பிட்ட
கிணறும் நன்செய்நிலமும் இன்றும் உள்ளனவென்றும், மழையில்லாக்
கடுங்கோடையிலும் இக்கிணற்றுநீர் வற்றாது சுரந்து அருகிலுள்ள
வாழைக்கொல்லைக்குப் பயன்தருகிறது என்றும் எழுதியுள்ளார்.
இஃது உண்மையாயின், ஔவையாரின் வாக்குப் பலித்துள்ளதோ?
என்று வியப்படைகின்றோம்.
பார்வை: ஆராய்ச்சிப் பேரறிஞர் ஔவை சு.துரைசாமி பிள்ளை
உரையெழுதிய தமிழ் நாவலர் சரிதை நூல்.
No comments:
Post a Comment