பொன்னொடு வந்து கறியொடு பெயரும் வளங்கெழு முசிறி.
அகப்பொருள் விவரிக்கும் களவொழுக்கத்திலும், கற்பொழுக்
கத்திலும் தலைவன் தலைவியைப் பிரியும் நிகழ்வு மிக்க
நெகிழ்ச்சி மிக்க காட்சிகளைக் கண்முன் கொண்டுவந்து நிறுத்தி
நம்மை உருகவைத்துவிடும். களவொழுக்கத்தில் ஏற்படும் பிரிவுகள்
இரண்டுவகை: 1. ஒருவழித் தணத்தல் 2.வரைவிடை வைத்துப்
பொருள்வயிற் பிரிதல். கற்பொழுக்கத்தில் ஏற்படும் பிரிவுகள்
ஆறுவகை:1.ஓதற் பிரிவு 2.காவற்பிரிவு 3.தூதிற் பிரிவு 4.துணைவயிற்
பிரிவு 5. பொருள்வயிற் பிரிவு 6.பரத்தையிற் பிரிவு.
பரத்தையிற் பிரிவு சங்க நூல்களில் விளக்கப்பட்டிருந்தாலும், திருக்குறள்
பரத்தை ஒழுக்கத்தைக் கண்டித்தது. சங்கம் மருவிய நூல்களான பிற
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களும்(நாலடியார் போன்றவை) எதிர்த்தன.
தலைவன்-தலைவிக்கு இடையே நிகழும் பிரிவை இருவரும் வெறுத்தனர்.
சில சமயங்களில் தலைவியின் புலம்பல் காரணமாகவோ, தலைவனுக்கே
பிரிய மனமில்லாத காரணத்தாலோ பிரிவுப் பயணம் கைவிடப்படும்.
செலவழுங்குதல் என்று இலக்கியத்தில் குறிப்பிடப்படும். (செலவு=பயணம்;
அழுங்குதல்=தவிர்த்தல்). செலவழுங்கும் நிகழ்ச்சி ஒன்று அகநானூறு
இலக்கியத்தில் காட்சிப் படுத்தப் பட்டுள்ளது. அதனைப் பார்ப்போம்:
அகநானூறு பாடல் எண்:149; திணை: பாலைத் திணை;
புலவர்: எருக்காட்டூர்த் தாயங் கண்ணனார்;
செலவழுங்கிய தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது.
சிறிய, புல்லிய கறையான் முயற்சி செய்து உயரமாக எழுப்பிய
சிவந்த புற்றினுள்ளே இருக்கும் புற்றாம் பழஞ்சோறாகிய தம் இரையைப்
பெரிய கைகளையுடைய கரடிகள் கூட்டம் தின்னும். அந்த இரை வெறுத்துப்
போனால் புல்லின் அரையையுடைய இருப்பையின் துளையையுடைய
வெள்ளிய பூவைப் பறித்துத் தின்னும். இத்தகைய தன்மை வாய்ந்த பாலை
நிலத்தில் நெடுந்தொலைவு பயணம் செய்து அரிதாக ஈட்டத்தக்க பொருளை
எளிதாகப் பெறுவதாக இருந்தாலும், மதுரைக்கு மேற்கிலுள்ள திருப்பரங்
குன்றில் அமைந்துள்ள நெடிய ஆழமான சுனையின் கண் பூத்திருக்கும்
குவளையின் இணையொத்த மலர்களிலான பிணையல் போன்ற என்
தலைவியின் அரிபரந்த மதர்த்த மழைக்கண்கள் கண்ணீர் சொரியும்
வண்ணம் நான் அவளைப் பிரிந்து பொருளீட்ட வரமாட்டேன். நெஞ்சே!
தேவையானால் நீ போய் உன் வினையை முடித்து வாழ்வாயாக!
இவ்வாறாகத் தலைவன் தன் நெஞ்சுக்குக் கூறிப் பயணத்தைக்
கைவிட்டான்(செலவு அழுங்கினான்).
மதுரையைப் பற்றிச் சொல்லும் பொழுது, சேரர்களுக்குச் சொந்தமான
சுள்ளியென்னும் பேரியாற்றின் வெண்மையான நுரை கலங்கும் வண்ணம்
யவனர்கள்(கிரேக்கர்கள்) சிறந்த நல்ல மரக்கலங்களில் முசிறியென்னும்
பட்டினத்துக்கு வணிகம் புரிய வந்ததையும், தங்களோடு உயர்ந்ததரப்
பொன்னைக் கொண்டுவந்து மிளகை வாங்கிச் சென்றதையும் புலவர்
குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த முசிறியைப் பாண்டிய மன்னன் செழியன்
தன் படைவலிமையால் வெற்றிகொண்டதையும், படிமம் ஒன்றைக்
கைப்பற்றியதையும், யானைப்படையைப் பயன்படுத்தியதையும்
குறிப்பிட்டுள்ளார்.
அகப்பொருள் பற்றிய இலக்கியங்களில் சிற்சில போர் குறித்த வரலாற்றுச்
செய்திகளையும் அக்காலப் புலவர்கள் தெரிவித்துள்ளனர். இதில் பயின்று
வரும் "பொன்னொடு வந்து கறி(மிளகு)யொடு பெயரும் வளங்கெழு
முசிறி" என்ற சொற்றொடர் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. தொடர்புடைய
பாடல் பின்வருமாறு:
"சிறுபுன் சிதலை சேண்முயன்(று) எடுத்த
நெடுஞ்செம் புற்றத்(து) ஒடுங்கிரை முனையின்,
புல்லரை இருப்பைத் தொள்ளை வான்பூப்
பெருங்கை எண்கின் இருங்கிளை கவரும்
அத்த நீளிடைப் போகி, நன்றும்
அரிதுசெய் விழுப்பொருள் எளிதினின் பெறினும்
வாரேன், வாழியென் நெஞ்சே, சேரலர்
சுள்ளியம் பேரியாற்று வெண்நுரை கலங்க
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளங்கெழு முசிறி ஆர்ப்பெழ வளைஇ
அருஞ்சமம் கடந்து படிமம் வௌவிய
நெடுநல் யானை அடுபோர்ச் செழியன்
கொடிநுடங்கு மறுகின் கூடல் குடாஅது
பல்பொறி மஞ்ஞை வெல்கொடி உயரிய
ஒடியா விழவின் நெடியோன் குன்றத்து.
வண்டுபட நீடிய குண்டுசுனை நீலத்து
எதிர்மலர்ப் பிணையல் அன்னஇவள்
அரிமதர் மழைக்கண் தெண்பனி கொளவே.'"
அருஞ்சொற் பொருள்:
சிதலை=கறையான்; எண்கு=கரடி; சமம்=போர்; படிமம்=சிலை;
குடா அது=மேற்கில் உள்ள; மஞ்ஞை=மயில்; தெண்பனி=தெளிந்த கண்ணீர்.
மேலே கூறப்பட்டது சங்ககாலப் பாடல். இடைக்காலத்தில் இயற்றப்பட்ட பாடல் பின்வருமாறு:.
"மாதர் துவரிதழ்வாய் வந்தென் உயிர்கவரும்;
சீத முறுவல் அறிவழிக்கும்;----மீதுலவி
நீண்ட மதர்விழியென் நெஞ்சம் கிழித்துலவும்;
யாண்டையதோ மென்மை யிவர்க்கு".
பொருள்:
இவளுடைய அழகிய பவளம் போன்ற வாயானது என்னுடைய உயிரைக்
கவர்கின்றது; குளிர்ந்த சிரிப்பானது அறிவை அழிக்கின்றது; காதின்
மீது உலாவி நீண்ட விழியானது என்னுடைய நெஞ்சத்தைக் கிழித்து
உலாவருகின்றது; ஆதலால் இவளுக்கு மென்மை எங்குளதோ?
ஆதலால் இவளைப் பிரிய மனம் மறுக்கின்றது. நான் இவளைப்
பிரிந்து செல்லேன்.
No comments:
Post a Comment