கொங்கு நாட்டில் நிகழ்ந்த ஏமநாத பாகவதர்- பாணபத்திரர் மாதிரிக் கதை.
மதுரையில் சிவபெருமான் நடத்திய அறுபத்து நான்கு திருவிளையாடல்களில்
ஒன்று ஏமநாத பாகவதரின் செருக்கடக்கித் தன் பக்தன் பாணபத்திரரை உய்வித்தது.
இதே போன்று கொங்கு நாட்டுப் பூந்துறைப் பகுதியில்(திருச்செங்கோட்டில்) நிகழ்ந்த
தாகக் கொங்கு மண்டல சதகம் ஒரு கதையைக் குறிப்பிடுகிறது. அது மதுரையில்
நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் பாணபத்திரர்- ஏமநாதர் கதை போலவே உள்ளது.
அக்கதை:
பாண்டிய நாட்டில் திருக்குருகூரில் பிரதிவாதி பயங்கரன் என்ற பண்டிதன் வாழ்ந்து
வந்தான். அவன் பல கலைகளில் வல்லவானாகத் திகழ்ந்தான். அண்மையிலுள்ள
நாடுகளுக்குச் சென்று அங்கு வாழ்ந்துவரும் புலவர்களுடன் வாதம் செய்து அவர்களை
வென்று அவர்களிடமிருக்கும் பொருட்களையும் நூல்களையும் அபகரித்து அவர்களை
இழிவுபடுத்துவதை வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்டிருந்தான். ஒருமுறை கொங்கு
நாட்டுப் பூந்துறைப் பகுதியான திருச்செங்கோட்டு எல்லையில் வந்து தங்கிக்கொண்டு
திருச்செங்கோட்டு நகரத்தில் வாழ்ந்துவந்த குணசீலன் என்னும் புலவனுக்கு ஓலை
விடுத்தான். அதில் தான் திருச்செங்கோட்டு எல்லையில் தங்கியுள்ளதாகவும் மறுநாள்
தன்னோடு வாதப்போர் புரிதல் வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்திருந்தான்.
பிரதிவாதி பயங்கரன் அனுப்பிய ஓலையைப் பெற்றுப் படித்த குணசீலன் மிகவும் அதிர்ச்சி
அடைந்தான். பிரதிவாதி பயங்கரனைத் தன்னால் வாதப் போரில் வெல்ல இயலுமா?
ஒருவேளை, வாதத்தில் தான் தோற்க நேர்ந்தால் தனக்கும் தன் பூந்துறை நாட்டுக்கும் தீராப்
பழியும் இழிவும் வந்துசேருமே என்ற கவலையால் குமைந்து போனான்.. வெகுநேரம் இந்தச்
சிந்தனையில் மூழ்கியிருந்த குணசீலன் ஒருவழியாக மனந்தேறித் திருச்செங்கோட்டு
வேலவன் திருத்தாளைச் சரணடைவதே உத்தமம் என்ற எண்ணத்தில் செங்கோட்டு வேல
வனைச் சிந்தையில் இருத்தித் தொழுதுகொண்டே உறக்கத்தில் ஆழ்ந்து விட்டான்.. அவன்
கனவில் வேலவன் தோன்றி "அன்பனே! அஞ்சாதே; பிரதிவாதி பயங்கரனை அச்சுறுத்தி
இவ்வூரைவிட்டே ஓட்டி விடுகிறேன்" என்று சொன்னதாக மறுநாள் தமக்கு நெருக்கமான
நண்பர்களிடமும் ஊரிலுள்ள முதன்மையான நபர்களிடமும் தெரிவித்தான்.
மறுநாள் பொழுது புலர்ந்தது. துயில் நீங்கி விழித்தெழுந்த குணசீலன் குளியல் முதலான
கடன்களை முடித்து ஒருவிதமான பதற்ற உணர்வுடன் பிரதிவாதி பயங்கரனிடமிருந்து
ஏதாவது தகவல் வருமோ என்று மனத்தை அலைபாய விட்டுக்கொண்டிருந்தான்.. இதற்
கிடையே எல்லையில் தங்கியிருந்த பிரதிவாதி பயங்கரன் சுறுசுறுப்பாகத் துயிலெழுந்து
காலைக் கடன்களை முடித்துவிட்டுக் குணசீலனோடு வாதப் போர் நிகழ்த்தப் பல்லக்கில்
கிளம்பி ஊருக்குள்ளே நுழைந்தான். பல்லக்கில் இருந்தவாறே செங்கோட்டுக் கோவில்
அமைந்திருக்கும் நாகமலையைப் பார்த்துக் கொண்டே " இது நாகமலை யானால், இந்த
நாகம் படத்தை விரித்து ஆடாமலிருக்கும் காரணமென்ன?" என்னும் பொருள்படப் பாடத்
தொடங்கினான்:
"சமர முகத்திருச் செங்கோடு சர்ப்ப சயிலமென
அமரிற் படம்விரித் தாடாத தென்னை?"
என்று பாடியவன் இரண்டாம் அடியை முடிக்கச் சிறிதுநேரம் தடுமாறினான். அந்நேரம்
அப்பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஒருவன் அவன் பாடலைக் கேட்டுக்கொண்
டிருந்ததாகக் கூறி இரண்டாம் அடியை நிறைவு செய்தது மட்டுமல்லாமல் மேலிரண்டு
அடிகளையும் பாடிப் பாடலை நிறைவுசெய்தான்.
"................................................................அஃ(து) ஆய்ந்திலையோ,
நமரின் குறவள்ளி பங்கன் எழுகரை நாட்டுயர்ந்த
குமரன் திருமரு கன்மயில் வாகனம் கொத்துமென்றே". எனப் பாடி முடித்தான்.
இது நாகமலை யானால், படம் விரித்து ஆடாததற்கு என்ன காரணம்? என்று பிரதிவாதி
பயங்கரன் எழுப்பிய வினாவுக்கு மாடு மேய்த்துக் கொண்டிருந்தவன், முருகனின் வாகனம்
ஆகிய மயில் கொத்துமென்ற அச்சத்தால் நாகம் படமெடுத் தாடவில்லை" என்று விடை
யிறுத்தவிதம் பிரதிவாதி பயங்கரனைக் குழப்பியது. சரி, விசாரிப்போம் என்று நினைத்து
மாடு மேய்ப்பவனிடம் " ஐயா! நீரோ மாடு மேய்க்கும் தொழில் செய்பவர்; யான் பாடியது
கட்டளைக் கலித்துறை எனப்படும் கடுமையான யாப்பாகும். நீர் யாப்பறிந்தவரா? கூறும்."
என்றார். உடனே, அவர் " ஐயா! நான் தொடக்கத்தில் சிலகாலம் குணசீலரிடம் கல்வி
கற்றேன். என்னால் மற்ற மாணவர்களுக்கு இணையாகப் பின்தொடர இயலவில்லை.
அவர் கற்பித்தவற்றைப் புரிந்துகொள்ள இயலாமல் விழித்ததனைக் கவனித்த அவர்
"இனி மேற்கொண்டு கற்பதற்கு வர வேண்டா" என்று கூறிவிட்டார். ஏதோ, நான் கற்ற
அளவில் தாங்கள் கேட்ட வினாவுக்கு விடையளித்துவிட்டேன். மேற்கொண்டு ஏதாவது
விளக்கம் தேவைப்பட்டால் மற்ற மாணவர்களை அணுகுங்கள் என்று கூறி முடித்தான்..
பிரதிவாதி பயங்கரன் சிந்திக்கத் தொடங்கினான். ஏதோ கொஞ்சம் கல்விகற்ற மாடு
மேய்ப்பவரே இவ்வளவு சரியாக யாப்பிலக்கண முறைப்படி விரைந்து கவிதை பாட
இயலுமென்றால், முற்றாகக் கல்வி கற்ற குணசீலரோடு மோதுவது சரியாகுமா?
என்றெண்ணி ஊரைவிட்டே ஓடியதாகக் கொங்கு மண்டல சதகம் கூறுகிறது.
பாடல் பின்வருமாறு:(50)
"பெருமை மிகும்அர வச்சிலம் பாமெனிற் பெட்புறுமவ்
வரவு படம்விரித் தாடாத தென்னென் றகத்துனுமோர்
கருவி வெருக்கொள ஆமேய்ப் பவனாக் கனிந்து திரு
மருகன் மயில்கொத்தும் என்றெனச் சொல்கொங்கு மண்டலமே".
மாடு மேய்ப்பவராக வந்தவர் முருகக் கடவுளே என்பது மக்கள் நம்பிக்கை.
முருகனுக்கும் கொங்கு மக்களுக்கும் நெருங்கிய பக்திப் பிணைப்பு காலம்காலமாக
நிலவி வருகிறது. "குக்குடத்தான் கோயிலொடு குழைக்காதன் கோயில்கொளும்
கொங்கு நாடு" என்று திரு.வி.க. பாடியுள்ளார்.(குக்குடத்தான்=சேவற்கொடியோன்=
முருகன்).
No comments:
Post a Comment