Tuesday, 24 January 2023

செம்புலப் பெயல்நீர் போல்....

 செம்புலப்  பெயல்நீர் போல அன்புடை  நெஞ்சம்...


குறுந்தொகை  இலக்கியத்தில் பயின்றுவரும் ஒரு சொல்லோவியத்

தைக் காண்போம்.  விதியின்  வலிமையால் ஒரு தலைவனும்

ஒரு தலைவியும்  சந்தித்துத்  தம் இதயங்களைப் பரிமாறிக்

கொள்கின்றனர். இந்த இயற்கைப் புணர்ச்சி(தலைவனும்

தலைவியும்  முதன்முதலில்  சந்தித்து அளவளாவுதல் இயற்

கைப் புணர்ச்சி எனச் சொல்லப்பட்டுள்ளது) நிகழ்வுக்குப்

பின்னர் தலைவன்  தன்னைப்  பிரிந்து சென்று விடுவான்

என அஞ்சிய  தலைவி குறிப்பு வேறுபாட்டை(எண்ணத்தின்

வேறுபாட்டை) வெளிப்படுத்தினாள். அதனைக் கண்ட

தலைவன் கூறியது:

புலவர்:செம்புலப் பெயல்நீரார்(இவரது உண்மைப் பெயர்

இலக்கியத்தில் குறிப்பிடப் படவில்லை. அதனால்அவரது

பாடலில்  பயிலும் ஒரு சொல்லையோ, சொற்றொடரையோ

அவர் பெயராகக் குறிப்பது சங்க இலக்கிய வழக்கம்)

"யாயும்  ஞாயும்  யாரா  கியரோ?

எந்தையும்  நுந்தையும்  எம்முறைக்  கேளிர்?

யானும்  நீயும்  எவ்வழி  அறிதும்?

செம்புலப்  பெயல்நீர்  போல

அன்புடை  நெஞ்சம்  தாம்கலந்  தனவே!"

பொருள்:(இக் கவிதை என்னால் இயற்றப் பட்டது)

உன்தாயும்  என்தாயும்  உறவினர்கள்  அல்லர்;

  உன்தந்தை  என்தந்தை  எவ்வகையில்  கேளிர்?

உன்தனையான்  என்தனைநீ  எவ்விதத்தில்  அறிவோம்?

  ஊழ்தானே  நமையொன்றாய்  இணைத்ததென ஓர்வோம்;

பன்னரும்நல்  செம்மண்சேர் நிலத்தனிலே பெய்த

  பாங்கான  மழைநீர்போல் நம்மனங்கள்  அன்பால்

ஒன்றிணைந்தே  ஐக்கியமாய்  ஆனதிதை  யாரும்

  ஒருபோதும்  பிரித்திடவே  இயலாது, மெய்யே!


தெளிவுரை:

என்னுடைய  தாயும், உன் தாயும் ஒருவருக்கொருவர்

உறவினர் அல்லர்; என் தந்தையும் உன் தந்தையும்

எந்த வகையில் உறவினர் ஆவர்?  உறவினர் அல்லர்;

இப்போது  விதியால் சந்தித்துச் சேர்ந்திருக்கும்

யானும்  நீயும்இதற்கு முன்பு  அறிமுகமானவர் அல்லர்;

இவ்வாறு நாம் இருவரும்  ஒருவரையொருவர் அறியாத

நிலையில் , செம்மண் நிலத்தின் மீது  பொழிந்த மழை

நீர் அம்மண்ணோடு  இரண்டறக் கலந்து அதன் நிறத்தை

அடைவது. போல,  அன்புடைய  நம் இருவரது நெஞ்சங்

களும் தாமாகவே ஒன்றுபட்டுப் பிரிக்க முடியாதபடி

கலந்து விட்டன.  (இனி யாராலும் நம்மைப் பிரிக்கவே

இயலாது என்னும் குறிப்புத் தோன்றப் பாடப்பட்டுள்ளது.)

புலவரின்  உவமைநயம்  பாராட்டுக் குரியது.

No comments:

Post a Comment