எம்மனோரிற் செம்மலும் உடைத்தே.
நூல்: நற்றிணை; திணை: நெய்தல்; புலவர்: பெயர்
தெரியவில்லை; பாடல் எண்: 45
நெய்தல் நிலப் பகுதியில் தலைவன் ஒருவன் தலைவி
ஒருத்தியைக் கண்டு அவள் பால் காதல் கொண்டான்.
தலைவியின் தோழியிடம் தன் உள்ளக் கிடக்கையைத்
தெரிவித்துத் தனக்கும் தலைவிக்கும் இடையே காதல்
தழைக்க உதவுமாறு கோரினான். தோழி அவனுக்கு
விடையிறுக்கலானாள்: " ஐய! இத் தலைவி நீலநிறப்
பெருங்கடலுக்குட்சென்று மீன் பிடிக்கும் தொழிலை
மேற்கொண்டுள்ள பரதவர் ஒருவரின் மகள். நாங்கள்
இந்தக்கடலை அடுத்துள்ள கானல் பகுதியில் அமைந்
துள்ள அழகிய சிறு குடியிருப்பில் வாழ்ந்து வருகிறோம்.
நீரோ பெரிய கொடிகள் அசையும் கடைத்தெருக்களை
யுடைய பழமையான ஊரில் விரைவாகத் தேரில் ஊர்ந்து
செல்லும் செல்வந்தரின் அன்புமகன். சுறாமீன் களைத்
துண்டு துண்டாக அறுத்து அவற்றை வெயிலில் காயவைத்து
அத்துண்டங்களைப் பறவைகள் கொத்தித் தின்னாமல் பாது
காக்கும் எமக்கு உம்மைப் போன்ற செல்வர்களின் தொடர்பு
எதற்கு? இவ்விடத்தைச் சுற்றிப் புலால் நாற்றம் கிளம்புகிறது.
நீர் செல்லாமல் இங்கு நிற்பது எதற்காக? கடல்நீரில் கிடைக்கும்
பொருட்களைக் கொண்டு நாங்கள் எங்களாலியன்ற சிறிய
நல்ல வாழ்க்கையை நடத்துகிறோம். உம்முடைய செல்வச்
செழிப்பு மிக்க வாழ்க்கைக்கு எமது சிறிய வாழ்க்கை நிகராக
முடியாது. ஆனால் எங்கள் கூட்டத்திலும் சிறப்பாக வாழும் செம்
மல்கள் உள்ளனர். அவர்களில் ஒருவரை என் தலைவி தேர்ந்
தெடுத்துக் காதல்செய்வாள். யாம் வாழ்ந்துவரும் வாழ்க்கை
யே எமக்குப் போதுமானதாகும்." என்று கூறினாள். சங்க
காலத்தில் சாதி, குலம் போன்ற சிக்கல்கள் இல்லாவிடினும்
பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் நிலவியிருக்கும். அதனால்
தான் தோழி தலைவியை விரும்பியவனை ஏற்றுக்கொள்ளா
மல் மறுப்புரை கூறியிருப்பாள். இனி, பாடலை நோக்குவோம்:
"இவளே, கானல் நண்ணிய காமர் சிறுகுடி,
நீல் நிறப் பெருங்கடல் கலங்க உள்புக்கு
மீன்எறி பரதவர் மகளே; நீயே
நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர்க்
கடுந்தேர்ச் செல்வன் காதல் மகனே;
நிணச்சுறா அறுத்த உணக்கல் வேண்டி
இனப்புள் ஓப்பும் எமக்கு நலன் எவனோ?
புலவு நாறுதும்; செலநின் றீமோ!
பெருநீர் விளையுளெம் சிறுநல் வாழ்க்கை
நும்மொடு புரைவதோ அன்றே;
எம்ம னோரிற் செம்மலும் உடைத்தே!"
அருஞ்சொற் பொருள்:
நண்ணிய=அடுத்துள்ள; காமர்=அழகிய;
நுடங்கும்=அசையும்; நியமம்=கடைத்தெரு;
நிணம்=புலால்; உணக்குதல்=உலர்த்துதல்;
ஓப்புதல்:=விரட்டுதல்; புரைவது=ஒத்திருப்பது.
No comments:
Post a Comment