Sunday, 25 June 2023

கண்ணீரின் வலிமை.

 கண்ணீரின் வலிமை.


மனிதர்கள் இயல்பே பிறர் கண்ணீர் உகுக்கும் பொழுது மனம்

இளகுவதும் இரக்கம் காட்டுவதும் ஆகும்.  பெண்கள் கண்ணீர்

சிந்தினால் எப்படிப்பட்ட கல் நெஞ்சமும் கரைந்துவிடும். அதிலும்,

அழகும் அன்பும் ஒருங்கியைந்த காதல் தலைவி கண்ணீர் வடித்தால்

தலைவனால் தாங்க இயலுமோ? இப்படியொரு காட்சிதான் குறுந்தொகையில்

தீட்டப்பட்டுள்ளது. அதனைப் பார்ப்போம்.


தலைவனுக்கும் தலைவிக்கும் அண்மையில்தான் வரைவு(திருமணம்)

நடந்து முடிந்தது. குடும்பத்தைச் செவ்வனே நடத்தத் தேவையான பொருள்

தேடிவர வேற்றூருக்குச் செல்ல முடிவுசெய்து தன் தலைவியிடம்

உரையாடத் தொடங்குகின்றான்."பூங்குழையை அணிந்தவளே! நீலமணி

ஒழுகினாற் போன்ற கரிய நிற அறுகம்புல்லின் பிடிப்பு நீங்கிய மெல்லிய

தண்டைப் பிணையோடும் இணைந்து வயிறு நிரம்ப உண்ட ஆண்மான்

துள்ளி விளையாடும் காட்டைக் கடந்து நான் வேற்றூர்சென்று குடும்பத்துக்குத்

தேவையான பொருள் தேடிக்கொண்டு மீண்டுவர எண்ணியுள்ளேன். அதுவரையில்

உன்னால் பொறுத்திருத்தல் இயலுமோ?" என்று சொல்லி முடிக்குமுன்

அவள் கண்கள் கலங்கி முத்து முத்தாகக் கண்ணீர் சிந்தத் தொடங்கின.

அவள் கண்ணீரைக் கண்டதும் அவன் உடல் முழுவதும் பதற அவளைத்

தேற்றத் தொடங்கினான். 'நீர் விலங்கு அழுதல்' எனக் குறுந்தொகையில்

குறிப்பிடப் பட்டுள்ளது. நீர் கண்ணில்உள்ள பாவையை மறைக்கின்ற

அழுதல் எனக் கொள்ளலாம். காதல் மனையாள் கதறி அழுத பின்னர்

அவனால் அவளைப் பிரிந்து பயணம் மேற்கொள்ளுதல் இயலுமோ?

இதே போல ஒரு காட்சி அகநானூறு 5ஆம் பாடலிலும் காட்டப்பட்டுள்ளது.

"பாவை மாய்த்த பனிநீர் நோக்கமொடு"(21ஆம் வரி) என்று குறிப்பிடப்

பட்டுள்ளது. கண்ணிலுள்ள பாவையை மறைக்கும் நடுக்கத்தைத் தரும்

கண்ணீர் என்று உரையாசிரியர்கள் கூறுகின்றனர். அன்பிற்கினிய

தலைவி கண்ணீர் சொரிந்தால் அவன் நடுங்கமாட்டானா?  சிலப்பதிகாரத்தில்

இளங்கோவடிகள் "காவி உகுநீரும் கையில் தனிச்சிலம்பும் கண்டு"

"கூடலான் கூடாயினான்" என்று கண்ணகியைக் கண்ணீருடன் பார்த்த அளவிலேயே

பாண்டியன் நெடுஞ்செழியன் பாதிஉயிர் துறந்ததாக விவரித்தார். எனவே,

கண்ணீரை எளிதாக மதிப்பிட்டு விட முடியாது.


ஆகவே, பெண்களின் கண்ணீருக்கு மிக்க வலிமையுண்டு எனப் புலவர்கள்

இயம்புவது முற்றிலும் மெய்யே. நம் தலைவனும் பணிந்து பயணத்திலிருந்து

பின்வாங்கியதில் வியப்பேதும் இல்லை. தலைவியின் கண்ணீரோட்டம்

தலைவனின் கவின்தேரோட்டத்தைத் தடைசெய்தது. பாடல் பின்வருமாறு:

"மணிவார்ந் தன்ன மாக்கொடி யறுகை

பிணிகான் மென்கொம்பு பிணையொடு  மார்ந்த

மானே(று) உகளும் கானம் பிற்பட

வினைநலம் படீஇ வருதும் அவ்வரைத்

தாங்க வொல்லுமோ பூங்குழை யோயெனச்

சொல்லா முன்னம் நில்லா வாகி

நீர்விலங்(கு) அழுதல் ஆனா

தேர்விலங் கினவால் தெரிவை கண்ணே.

குறுந்தொகை பாடல் எண்:256;

புலவர் பெயர்: தெரியவில்லை.

அரும்பொருள்:

மணி=நீலமணி; பிணி=அறுகம் புல்லின் இலை இளையதாக உள்ள நிலை.

மானேறு= ஆண்மான்; உகளும்= துள்ளிக்குதிக்கும்;

வினைநலம் படுதல்=பொருள் முயற்சி முற்றுப் பெறுதல்

நீர்விலங்கு அழுதல்=நீர் கண்ணிலுள்ள பாவையை மறக்கச் செய்யும்

அழுகை; தேர்விலங்கியது=தேரோட்டத்தைத் தடைசெய்தது.

தெரிவை=பெண்(இங்கு தலைவி)


பார்வை:

குறுந்தொகை மூலமும் உரையும்: தமிழ்த் தாத்தா உ. வே.சாமிநாத ஐயர்.

No comments:

Post a Comment