அரிதரோ நீ உற்ற நோய்க்கு மருந்து.
தமிழ்நாட்டில் பெண்களுக்கான மரபுகளில் பூச்சூடிக் கொள்ளுதல்
குறிப்பிடத்தக்க ஒன்று. சங்க காலத்தில் பெண்கள் முல்லை மலரை
விரும்பிச் சூடிக் கொண்டனர். முல்லை மலர் கற்புக்குரிய மலர்ஆகக்
கருதப்பட்டது. "மௌவலும், தளவமும், கற்பும்" முல்லையைக் குறிக்கும்
சொற்கள் எனத் திவாகர நிகண்டு கூறுகிறது. நற்றிணையில் வினைமுற்றி
மீளும் தலைவன் தேர்ப்பாகனிடம் கூறும் பொழுது தலைவியைப் பற்றி
" முல்லை சான்ற கற்பின் மெல்லியற் குறுமகள்" என்று குறிப்பிடுகிறான்.
(பாடல் எண்:142). அக்காலத்தில் காதலன் காதலிக்கு முல்லையைச் சூட்டிக்
காதலை உறுதிசெய்தல் வழக்கமாய் இருந்தது. முல்லை மணம் கமழ இல்வாழ்வில்
ஈடுபடுவதால் இந்நிகழ்வுக்குத் திருமணம் என்ற பெயர் வந்திருக்கலாம்.
கலித்தொகையில் ஒரு காட்சியைக் காண்போம். முல்லை நிலத்தில் இந்நிகழ்வு
நடந்தது. ஒரு தலைவி காளையொன்றை வீரமூட்டி வளர்த்து வருகிறாள். ஆனால்
ஏறு தழுவும் வீர விளையாட்டில் கலந்துகொள்ளச் செய்யவில்லை. வேலி தாண்டி
விளையாடும் ஆடுகளை மேய்க்கும் ஆயர்களும், இந்தப் பசு
இவ்வளவு குடம் பால் தரும் என்று சுட்டிக் காட்டும் ஆயர்களும், ஏறுதழுவுதல்
நிகழ்ச்சிக்காகக் காளைகளை வளர்க்கும் ஆயர்களும் ஏறுதழுவுதல் நடத்தத் திட்ட
மிட்டனர்.ஒருநாள் காளைகளை வளர்ப்போர் தம் காளைகளைத் தொழுவத்தில் ஒன்றுகூடச்
செய்தனர். தலைவி தன் காளையையும் தொழுவத்தில் நிற்கச் செய்தாள்.
முரட்டுத்தனம் கொண்ட, செவியில் மச்சம் கொண்ட வீறுநடை போடும் காளை அது.
வீரமிக்க ஆயர்கள் இக்காளைகளை அடக்க ஆயத்தமாகத் தொடங்கினர். மாடுபிடி
ஆயர்கள் தத்தம் தலைகளில் முல்லைமலரால் வனையப்பட்ட தலைமாலைகளைச்
சூடியிருந்தனர். நிகழ்ச்சி தொடங்கியது. மாடுபிடி வீரர்கள் ஆளுக்கு ஒரு காளையை
நோக்கி ஓடி அவைகளை அடக்கியாளத் தலைப்பட்டனர். ஆனால் காளைகள்
பிடிபடாமல் துள்ளித் குதித்தன. கூரான கொம்புகளைப் பலவிதத்தில் அசைத்து
வீரர்களைத் தம்மை நெருங்கவிடாமல் மிரட்டின. அப்படியிருந்தும் ஒரு பொதுவன்(ஆயன்)
தலைவியின் காளையைத் தன் பிடிக்குள் அகப்படுத்தி அதனை அடக்கிவிட்டான். உடனே
அக்காளை அவன் பிடியிலிருந்து நழுவி அவன் தலைக்குமேல் துள்ளிக்
குதித்தது. அப்பொழுது அவன் தலைமாலை சிதறுண்டு அதிலிருந்த முல்லை மலர் தலைவி
யின் கூந்தலில் செருகிக்கொண்டது. அவள் அதனை எடுத்து எறிந்திருக்கலாம். ஆனால்
அவ்வாறு செய்யாமல் முல்லை மலர் மேல் தன் கூந்தல் முடிகளை இழுத்துவிட்டு மலர்
வெளியே தெரியாத வண்ணம் முடிகளால் மூடச் செய்தாள். எல்லாம் பருவக் கோளாறால்
நிகழ்ந்த செய்கை. காளையை அடக்க முயன்ற ஆயர்மகன் தோற்றப் பொலிவால் கவரப்பட்ட
அவள் மனம் தடுமாறியது. இதைத்தான் கண்டதும் காதல் என்ற முதுமொழியால் குறிப்பிட்டனர் போலும்.
தன் கூந்தலில் செருகியுள்ள முல்லை மலரால் தலைவி இருவேறு சிந்தனைகளுக்கு
ஆட்பட்டாள். ஒரு சிந்தனை இழந்த ஒன்றை மீட்டது போல மகிழ்ச்சியுணர்வை நெஞ்சில்
பதித்தது.. இன்னொரு சிந்தனை தன் அன்னைக்கு இச்செய்தி தெரிந்தால்
என்னாகும்? என்ற கவலையை உருவாக்கியது.ஏனெனில் வழக்கமாக மலரைச் சூடிக்
கொள்ளும்வழக்கம் அவளுக்கு இல்லை. இப்பொழுது வழக்கத்தை மீறித் தன் கூந்தலில்
இருந்துமணம் எழுந்தால் தன் அன்னை கேள்விக்கணைகளால் துளைத்து விடுவாள்.
அயலான் எவரேனும் தலைவிக்குப் பூச்சூட்டிக் களவுக் காதல் புரிகின்றானோ? என்ற ஐயம்
எழும். தன்னை இற்செறிக்க வாய்ப்பு ஏற்படலாம். தான் மகிழ்வுடன் சுற்றித் திரிவது
பாதிக்கப்படலாம்.
இவ்வாறு இருவேறு பட்ட சிந்தனைகளால் குழம்பித் தவித்த தலைவி தன் தோழியிடம்
அறத்தொடு நிற்க முடிவுசெய்து நிகழ்ந்தவற்றை ஒளிவு மறைவில்லாமல் தோழியிடம்
எடுத்துரைத்தாள். அன்னை தன் களவுக்காதலைக் கண்டுபிடித்துவிடுவாளோ? என்று
அஞ்சுவதாகத் தெரிவித்தாள். "எல்லாத் தவறும் நீங்கும்" என்றாள் தோழி. "எவ்வாறு
நீங்கும்?" என்றாள் தலைவி. "நின் தலைவன் ஆயர்மகன்; நீ ஆயர்மகள்;
நின் தலைவனால் விரும்பப்படுகிறாய்; நீ நின் தலைவனை விரும்புகிறாய்..
அன்னை வருத்தப்பட யாதொன்றும் இல்லை" என்றாள் தோழி. " உன் நெஞ்சமும்
அன்னை நெஞ்சமும் ஒன்றாய் இருப்பின் சிக்கலில்லை. ஆனால்....." என்றாள்
தலைவி. "நீ காதலிக்கவும் செய்கிறாய்; அதேநேரம் அன்னையை எண்ணி
அஞ்சவும் செய்கிறாய். அப்படியிருந்தால், உன் நோய்க்கு மருந்து கிடைப்பது
அரிதரோ." என்றாள் தோழி. "மருந்து கிடைப்பது அரிதென்றால், நான் வருந்த
மாட்டேனா?" என்றாள் தலைவி. "அழுக்கில்லாத உன் கூந்தல் முடியில் அவன்
சூடியிருந்த பூ குடியிருக்கிறதென்றால் அந்தக் கடவுள் திருமாலே இந்த ஆயனை
உனக்குக் காட்டியுள்ளார் என்று பொருள். நீ என்னிடம் அறத்தொடு நின்றாய்;
நான் அன்னையிடம் அறத்தொடு நின்றேன். அதனால் உன் தந்தையோடு
தமையன்மார் ஒன்று சேர்ந்து உன்னை அந்தப் பொய்யில்லாத பொதுவனுக்கு
அடைநேர்ந்துள்ளனர்.(மகட்கொடை ஆகக் கொடுத்துள்ளனர்--பெண் கொடுத்துள்ளனர்).
அனைவரும் வரைவுக்கு(திருமணத்துக்கு)
ஒப்புதல் தெரிவித்துவிட்டனர்.
சங்க காலத்தில் களவியல் வாழ்வு, உடன்போக்கு முதலிய நிகழ்வுகள் சமூகத்தில்
அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும் களவியல் வாழ்வை நீண்டகாலம் கொண்டு செலுத்தச்
சமூகம் அனுமதிக்காது. கூடியவிரைவில் அறத்தொடு நின்று களவியலை வெளிப்
படுத்தி வரைவுக்கு வழிவகுத்தல் வேண்டும். கற்பியல்வாழ்வுக்குப் பெற்றோர், உடன்
பிறந்தோர் மற்றும் உறவினர் முதலான அனைவரின் ஒத்துழைப்பும் தேவையாகும்.
இதுகுறித்த கலித்தொகைப் பாடலைப் பார்ப்போம்(பா.எ.:107):
தலைவி:"எல்லா! இஃது ஒன்று கூறு--- குறும்பிவர்
புல்லினத்தார்க்கும், குடம் சுட்டவர்க்கும், "எம்
கொல்லேறு கோடல் குறை" எனக் கோவினத்தார்
பல்லேறு பெய்தார் தொழூஉ.
தொழுவத்து,
சில்லைச் செவிமறைக் கொண்டவன் சென்னிக் குவிமுல்லைக்
கோட்டம் காழ்கோட்டின் எடுத்துக்கொண்(டு) ஆட்டிய
ஏழை இரும் புகர் பொங்க, அப் பூ வந்தென்
கூழையுள் வீழ்ந்தன்று மன்.
அதனைக் கெடுத்தது பெற்றார்போல், கொண்டியான் முடித்தது
கேட்டனள், என்பவோ, யாய்.
தோழி: கேட்டால் எவன் செய்ய வேண்டுமோ?--மற்(று) இது
அவன்கண்ணி அன்றோ அது.
தலைவி: "பெய்போ(து) அறியாத் தன் கூழையுள் ஏதிலான்
கைபுனை கண்ணி முடித்தான், என்று, யாய் கேட்பின்,
செய்வ(து) இலாகுமோ மற்று?
தோழி: எல்லாத் தவறும் அறும்.
தலைவி: ஓஓ அஃது அறுமாறு?
தோழி தவறு அன்றாமாறு கூறலும் தலைவி பதிலும்.
"ஆயர்மகன் ஆயின், ஆயர்மகள் நீ ஆயின்,
நின் வெய்யன்ஆயின், அவன் வெய்யை நீ ஆயின்
அன்னை நோதக்கதோ இல்லைமன்--நின்நெஞ்சம்
அன்னை நெஞ்சாகப் பெறின்.
தோழி: அன்னையோ?
ஆயர் மகனையும் காதலை, கைம்மிக
ஞாயையும் அஞ்சுதி ஆயின், அரிதரோ---
நீ உற்ற நோய்க்கு மருந்து.
தலைவி: மருந்து இன்று யானுற்ற துயராயின், எல்லா
வருந்துவேன் அல்லனோ யான்.
தோழி: வருந்தாதி,
மண்ணி மாசற்ற நின் கூழையுள் ஏற அவன்
கண்ணி தந்திட்ட தெனக்கேட்டு 'திண்ணிதா
தெய்வமால் காட்டிற்று இவட்கு' என, நின்னையப்
பொய்யில் பொதுவற்(கு) அடைசூழ்ந்தார்-- தந்தையோ(டு)
ஐயன்மார் எல்லாம் ஒருங்கு.
(யாய்=என் தாய்; ஞாய்=உன் தாய்).
No comments:
Post a Comment