Thursday, 12 October 2023

காய் எனத் தொடங்கி இலை என்று முடிக்கும் கவிதை.

 காயென்று தொடங்கி இலையென்று முடிக்கும் பாடல்.


அழகிய சொக்கநாத பிள்ளை என்றழைக்கப்பட்ட புலவர் திருநெல்வேலியில்

வாழந்தவர். இராசவல்லிபுரம் என்ற ஊரில் வாழ்ந்துவந்த முத்துசாமி பிள்ளை

என்ற வள்ளல் புலவரை ஆதரித்துப் புரந்தவர். அவர் மீது பற்பல தனிப்பாடல்களை

இயற்றியுள்ளார். இரட்டுற மொழிதல்(சிலேடை), நடுவெழுத்தலங்காரம், மடக்கு(யமகம்)

முதலான புலமைத்திறம் காட்டும் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார். அவரது

பாடல்களில் அவரை ஆதரித்த வள்ளலைப் பற்றித் தவறாமல் போற்றிப் புகழ்ந்துள்ளார்.

ஒருசமயம் 'காய்' எனத் தொடங்கி 'இலை' என முடிக்குமாறு பாடல் இயற்றச் சொன்ன

பொழுது அவர் பாடியது:

"காய்சினம்இல் லாதான்,  கருணைமுத்து சாமிவள்ளல்

வாய்மையுளான்,; பாடி வருவோர்க்குத்---தாய்நிகர்வான்;

எல்லையில்லா மாண்பொருளை ஈவான்; இவனிடத்தில்

இல்லையென்ற சொல்லே யிலை."

பொருள்:

தன்னை நாடி வருவோரிடம் தகிக்கும் கோபத்தைக் காட்டாது கருணை ததும்பும் இனிய

முகத்தோடு விளங்குபவன். உண்மையாக இருப்பவன்(போலியாக நடிப்பவன் அல்லன்);

தாய்போல் அன்பு காட்டுபவன்; தன்னிடத்தில் உதவி கேட்டு வருபவர்களுக்கு எல்லையற்ற

சிறப்புடைய பொருட்களைக் கொடுப்பவன்; இவனிடத்தில் உதவி கேட்பவர்களுக்கு இல்லை

என்ற சொல்லைச் சொல்லியதே இல்லை. ( உதவி கேட்போர் எல்லார்க்கும்  இல்லையென்று

சொல்லாமல் உதவுவான்).


இன்னொருமுறை 'படித்துறை' என்று தொடங்கி 'குளக்கரை' என்று முடிக்குமாறு பாடக் 

கேட்டபொழுது பாடியது:

"படித்துறையும் வாணரைக்காப் பாற்றிடவும் பொல்லா

மிடித்துயரால் ஏழையரை மேன்மேல்---துடித்துநிதம்

கையவிடா(து) ஆண்டிடவும் நாட்டன்முத்து சாமியெனும்

ஐயவுன்போல் யார்க்குளக்க ரை".

பொருள்:

படித்து வாழ்கின்ற மேதாவிகளைக் காப்பாற்றிடவும், பொல்லாத

வறுமைத்துயரால் ஏழைமக்கள் மேன்மேலும் நித்தம் துடிதுடித்து

வாழ்ந்திடா வண்ணம் அவர்களைக் கைவிடாமல் உதவிசெய்து

கரையேற்றவும் நாட்டமுடைய முத்துசாமியெனும் ஐயனே!

உன்போல் யாருக்கு உள்ளது அக்கரை?

யார்க்குளக்கரை---யார்க்கு+உளது+ அக்கரை= 'து' கெட்டது விகாரம்.


இனி அவரியற்றிய விடுகதைப் பாடலைப் பார்ப்போம்:

"முற்பாதி போய்விட்டால் இருட்டே யாகும்;

        முன்னெழுத்தில் லாவிட்டால் பெண்ணே யாகும்;

பிற்பாதி போய்விட்டால் ஏவற் சொல்லாம்;

         பிற்பாதி யுடன்முனெழுத் திருந்தால் மேகம்;

சொற்பாகக் கடைதலைசின் மிருகத் தீனி!;

          தொடரிரண்டாம் எழுத்துமா தத்தில் ஒன்றாம்;

பொற்பார்திண் புயமுத்து சாமி மன்னா!

           புகலுவாய் இக்கவியின் புதையல் கண்டே!"

பொருள்:

பாடலிலேயே விடையும் உள்ளது. 'புதையல்' என்பதே அச்சொல்.

'புதையல்' சொல்லின் முற்பாதி போய்விட்டால் இருட்டேயாகும்;

'புதையல்' இல் முற்பாதி--'புதை' போய்விட்டால் 'அல்' இருட்டைக் குறிக்கும். 

முன்னெழுத்து இல்லாவிட்டால்--'புதையல்'  --'பு' இல்லாவிட்டால்-- தையல்--பெண்.

பிற்பாதி போய்விட்டால்-- 'புதை' என்னும் ஏவற் சொல் உருவாகும்.

பிற்பாதியுடன் முன்னெழுத்து இருந்தால்--' யல்' லோடு முன்னெழுத்து சேர்ந்தால்

பு+யல்=புயல்= மேகம்.

சொற்பாகக் கடைதலை(சின் அசையாகும்--அர்த்தமில்லாதது)--'பு' வும் 'ல்'உம்

சேர்ந்தால் 'புல்'=மிருகத்தீனி.

தொடரிரண்டாம் எழுத்து 'தை' ---ஒரு மாதம்.

ஆக, புலவர் விடுகதைப் பாட்டுப்பாடி இறுதியில்  'புதையல்' என்ற விடையையும்

தெரிவித்துவிட்டார்.

No comments:

Post a Comment