Friday, 1 December 2023

கவைமக நஞ்சுண்டாங்கு அஞ்சுவல்.ல்.

 கவைமக நஞ்சுண்டாங்கு அஞ்சுவல்.


தலைவனும் தலைவியும் பிறர் அறியாமல் சந்தித்துப் பழகி

வந்தாலும் இதுகுறித்த செய்தி அரசல் புரசலாக ஊர்மக்கள்

சிலருக்குத் தெரியவருகிறது. அவர்களில் ஒருவர் தலைவியின்

அன்னையிடம் தெரிவிக்க அன்னை முன்னெச்சரிக்கையாக

இருக்க எண்ணித்தன் மகளை இற்செறிக்க(வீட்டைவிட்டு

வெளியே செல்லத் தடைபோடுதல்) எண்ணி இது தொடர்பாகக்

கணவனிடம் ஆலோசனை செய்து கொண்டிருந்தாள். அவர்கள்

உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த தோழி தலைவியிடம்

அறிவித்துவிட்டாள். 


ஏற்கெனவே தலைவனும் தலைவியும் வரைந்து கொள்ளாமல்

(திருமணம் புரிந்துகொள்ளாமல்) காதலை நீட்டிப்பது குறித்துத்

தோழி வருத்தத்தில் திளைத்துக் கொண்டிருந்தாள்.  தலைவியின்

அன்னை இற்செறிக்கத் திட்டமிடுவதையறிந்த தோழிக்கு வருத்தம்

கூடியது. தலைவனிடம் "வரைந்து கொள்ள ஏற்பாடு செய்" என்று

உறுதிபடக் கூற முடிவெடுத்தாள். 


அன்றிரவு வழக்கம்போல் இரவுக்குறியில்(இரவு நேரத்தில் காதலன்-

காதலி சந்திக்கும் இடம்) தலைவியைச் சந்திக்க வந்தான். ஓரளவு

சீற்றம் காட்டிய தோழி" தலைவியின் அன்னை உங்கள் இருவரைப்

பற்றியும் ஏதோ கேள்விப்பட்டிருப்பாள் என நினைக்கிறேன்; அதனால்

தலைவியை இற்செறிக்கத் திட்டமிடுகின்றாள். அநேகமாக நீ இனி

தலைவியைச் சந்திக்க இயலாது." என்றாள். உடனே தலைவன் சற்றே

செருக்குடன் நான் வழக்கம்போல இரவுக்குறியில் இங்கு வந்து தலைவி

யைச் சந்திப்பது திண்ணம்; கூடிய விரைவில் அவளை வரைந்து கொண்டு

இல்வாழ்க்கை தொடங்குவேன்" என்று மொழிந்தான். உடனே தோழி"ஐய!

உம் வீரத்தை அறிவோம்; நீர்  பெரிய வீரரே. ஆயினும், கடற்கரையை

ஒட்டியமைந்துள்ள சோலையில், ஏராளமான மீன்கள் நீந்தித் திரியும் பெரிய

நீர்த்துறையில் வளைந்த கால்களையுடைய கொலைத் தொழிலில் தேர்ந்த

முதலைகள் வாழ்கின்றன. இது காரணமாக இத்துறையில் நீந்திக் கடக்க

எவரும் அஞ்சுவர்.. நீர் உம் ஆண்மைத் திறத்தால் இவ்விரவில் இத்துறையில்

நீந்தி வருகின்றீர். உமது இந்தச் செயலுக்காகத் தலைவி அஞ்சி வருந்துகிறாள்;

உமக்கு ஏதும் நேர்ந்துவிடுமோ? என்று பதறித் துடிக்கிறாள். உம் இருவரது

இடுக்கண்ணைக் கண்டு நான் நொந்து போகின்றேன்.  இரட்டைப் பிள்ளைகள்

நஞ்சுண்டால்(கவைமக நஞ்சுண்டாங்கு அஞ்சுவல்) இருவர் திறத்திலும் இரங்கும்

தாயைப் போல நான் இருவருக்காகவும் பதறித் துடிக்கிறேன். எனவே நீர் பகற்குறி,

இரவுக்குறி இவைகளைக் கைவிட்டு உடனடியாக வரைந்து கொள்ள ஏற்பாடு

செய்க. அதுவே உங்கள் இருவர்க்கும் நன்மை பயக்கும்" என்றாள். பாடல்

கீழ்க்கண்டவாறு:

"கொடுங்கால் முதலைக் கோள்வல் ஏற்றை

வழிவழக்(கு) அறுக்கும் கானல்அம் பெருந்துறை

இனமீன் இருங்கழி நீந்தி நீநின்

நயனுடை  மையின்  வருதி இவள்தன்

மடனுடை மையின் உயங்கும் யானது

கவைமக நஞ்சுண் டாஆங்(கு)

அஞ்சுவல் பெரும!என் நெஞ்சத் தானே!"

(குறுந்தொகை எண்:324; நெய்தல் திணை;

புலவர்:கவைமகனார்)

புலவர் பெயர் தெரியாததால் அவர் எழுதிய சொற்றொடரால்

அழைக்கப்படுகிறார்.


கவை என்னும் சொல் இருவேறு பட்ட கிளையைக் குறிக்கும். இங்கு

இரட்டைப் பிள்ளைகளைக் குறித்தது. இரட்டைப் பிள்ளைகள் ஒரே

நேரத்தில் நஞ்சுண்டால் பெற்றதாய் எப்படிப் பதறித் துடித்துத் திண்டாடு

வாளோ அந்த நிலையில் உள்ளதாகத் தோழி கூறுகிறாள். இந்த

உவமையால் இருவர்க்கும் நன்மை செய்யும் மருந்து விரைந்து தருதல் தேவை

என்று அறிவுறுத்துகின்றாள். நஞ்சைவிலக்க உடனடியாக மருந்து தருதல்

இன்றியமையாதது. அதுபோல இந்த இடுக்கண்ணை விலக்க வரைவுமேற்

கொள்ளல் உடனடித் தேவையாகும். வரைவு மேற்கொள்ளலே உரிய சிறந்த

மருந்தாகும் என்றாள். "கவை மகவு" என்ற தொடர் படித்து இன்பறத்தக்கது.

அருஞ்சொற் பொருள்:

கோள்வல் ஏற்றை=கொல்லுதல் வல்ல ஆண்(முதலை);

நயன்=அன்பு; உயங்கும்= வருந்தும்; அஞ்சுவல்=அஞ்சுவேன்.

No comments:

Post a Comment