Friday, 5 January 2024

தென்மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்புதல் எக்காலம்?

 தென்மாவட்ட மக்களின் இயல்பு வாழக்கை திரும்புதல் எக்காலம்?


செம்மாந்து  திகழ்கின்ற   தமிழ்நாட்டின்  தென்பகுதி

       சிதைந்து வீழ

அம்மா!எம்  இயற்கையன்னாய்!  அடைமழையைப் பொழிவித்தாய்,

       அரண்டு  போனோம்;

விம்மாத்தல் செய்துநெஞ்சம் துடிதுடித்தோம்; கணீருகுத்தோம்;

       வெந்தோம், நொந்தோம்;

இம்,மாதுன் பத்தைவெல்ல வழியின்றித் தவிக்கின்றோம்,

        என்செய் வோமே?


முத்துக்  குளிப்பதிலே  முன்னின்றோம்; வான்பரப்பில்

பொத்துக்கொண்  டாற்போல்  பொழிந்த  பெருமழையால்

எத்திக்கும் வெள்ளம்;  இடுப்பு,  கழுத்துமட்டம்

சொத்து பொருளையெல்லாம் சூழ்ந்திழுத்து வந்ததுவே;

கத்தும் உயிரினங்கள் கண்ணிமைக்கும் நேரத்தில்

செத்து மிதந்தனவே; சிற்றில்லம் அத்தனையும்

பொத்துப்பொத் தென்று பொருத்துவிட்டு வீழ்ந்தனவே;

மொத்த இழப்பை மொழிந்தால்  மனம்நோகும்.


நன்செய் நிலமெல்லாம் நாசமுற்றுப் போயினவே;

அன்பாய் வளர்த்தபயிர் அய்யோ,வீண் ஆனதுவே;

தென்பாய் நடந்த சிறுகுறு வாணிகமும்

பொன்போற்  பொலிந்த பெருங்கொண்ட வாணிகமும்

தின்பண்ட வாணிகமும் சேதாரம் உற்றனவே;

தன்னம்பிக்  கைகெட்டுத் தள்ளாட நேர்ந்ததுவே;

மன்னவர்போல்  வாழ்ந்த  வளமான  வாழ்விழந்(து)

இன்னலுக்கா  ளானோரின்  எண்ணிக்கை  ஏராளம்.


வெள்ளமது  சிதைத்துவிட்ட. தென்மா வட்டம்

        மீண்டுவர  வெகுகாலம்  தேவை  யாகும்;

கள்ளமற்ற  பொதுமக்கள்  வாழ்வா  தாரம்

        கடும்வேக  வெள்ளத்தால்  பறிபோ யிற்றே;

உள்ளபடி மாந்தர்களின்  உள்ளச்  சோர்வை

        உடனடியாய் நீக்குதற்கும், வாழ்வா  தாரம்

விள்ளரிய  முறையினிலே  உயர்த்து  தற்கும்

       விரைவாக  நிதிதேவை;  திரட்டு  வோமே.


பொருள்நிறைந்தார் மனதார அள்ளித் தந்தார்;

        பொருள்குறைந்தார் உவகையுடன் கிள்ளித் தந்தார்;

இருள்நிறைந்த மழைவெள்ளச்  சேதந்  தன்னை

         எப்படியும்  முறியடித்துத்  துயருற்  றோரின்

மருள்நிறைந்த வாழ்வினிலே தெளிவுண்  டாக்கி

         வருங்கால வாழ்வையெதிர்  கொள்ளச்  செய்ய

அருள்நிறைந்த மையப்பே  ரரசில்  உள்ளோர்

         அரசுநிதி சாலவுமே  கொட்டித் தாரீர்.

(மையப் பேரரசு=நடுவண் அரசு)


மாநில  அரசும்  சீரார்  மையப்பே  ரரசும்  கூடி

ஊனெலாம் ஒடுங்கி யுள்ளம்  உருக்குலை வுற்று வாடும்

நானில மக்க ளெல்லாம் நலம்பெறத் திட்டம் தீட்டி

மேனிலை அடையும் வண்ணம் விரைவினில் சேவை செய்க.

(நானில மக்கள்=தூத்துக்குடி,திருநெல்வேலி,கன்னியாகுமரி,

தென்காசி முதலிய நான்கு மாவட்ட மக்கள்)


இருகரம் கூப்பி இந்த இரண்டுபே ரரசு தம்மை

உரிமையாய்க் கேட்டுக் கொள்வோம், உடனடிச் செய்கை வேண்டும்

தருணமி தனைநீர் ஓர்ந்து  தள்ளுக பயனில் வாதம்;

ஒருமையாம் கருத்தைப் பற்றி ஓம்புக மக்கள் தம்மை.

(ஒருமை=ஒற்றுமை; ஓம்புவோம்=பாதுகாப்போம்)

No comments:

Post a Comment