தென்மாவட்ட மக்களின் இயல்பு வாழக்கை திரும்புதல் எக்காலம்?
செம்மாந்து திகழ்கின்ற தமிழ்நாட்டின் தென்பகுதி
சிதைந்து வீழ
அம்மா!எம் இயற்கையன்னாய்! அடைமழையைப் பொழிவித்தாய்,
அரண்டு போனோம்;
விம்மாத்தல் செய்துநெஞ்சம் துடிதுடித்தோம்; கணீருகுத்தோம்;
வெந்தோம், நொந்தோம்;
இம்,மாதுன் பத்தைவெல்ல வழியின்றித் தவிக்கின்றோம்,
என்செய் வோமே?
முத்துக் குளிப்பதிலே முன்னின்றோம்; வான்பரப்பில்
பொத்துக்கொண் டாற்போல் பொழிந்த பெருமழையால்
எத்திக்கும் வெள்ளம்; இடுப்பு, கழுத்துமட்டம்
சொத்து பொருளையெல்லாம் சூழ்ந்திழுத்து வந்ததுவே;
கத்தும் உயிரினங்கள் கண்ணிமைக்கும் நேரத்தில்
செத்து மிதந்தனவே; சிற்றில்லம் அத்தனையும்
பொத்துப்பொத் தென்று பொருத்துவிட்டு வீழ்ந்தனவே;
மொத்த இழப்பை மொழிந்தால் மனம்நோகும்.
நன்செய் நிலமெல்லாம் நாசமுற்றுப் போயினவே;
அன்பாய் வளர்த்தபயிர் அய்யோ,வீண் ஆனதுவே;
தென்பாய் நடந்த சிறுகுறு வாணிகமும்
பொன்போற் பொலிந்த பெருங்கொண்ட வாணிகமும்
தின்பண்ட வாணிகமும் சேதாரம் உற்றனவே;
தன்னம்பிக் கைகெட்டுத் தள்ளாட நேர்ந்ததுவே;
மன்னவர்போல் வாழ்ந்த வளமான வாழ்விழந்(து)
இன்னலுக்கா ளானோரின் எண்ணிக்கை ஏராளம்.
வெள்ளமது சிதைத்துவிட்ட. தென்மா வட்டம்
மீண்டுவர வெகுகாலம் தேவை யாகும்;
கள்ளமற்ற பொதுமக்கள் வாழ்வா தாரம்
கடும்வேக வெள்ளத்தால் பறிபோ யிற்றே;
உள்ளபடி மாந்தர்களின் உள்ளச் சோர்வை
உடனடியாய் நீக்குதற்கும், வாழ்வா தாரம்
விள்ளரிய முறையினிலே உயர்த்து தற்கும்
விரைவாக நிதிதேவை; திரட்டு வோமே.
பொருள்நிறைந்தார் மனதார அள்ளித் தந்தார்;
பொருள்குறைந்தார் உவகையுடன் கிள்ளித் தந்தார்;
இருள்நிறைந்த மழைவெள்ளச் சேதந் தன்னை
எப்படியும் முறியடித்துத் துயருற் றோரின்
மருள்நிறைந்த வாழ்வினிலே தெளிவுண் டாக்கி
வருங்கால வாழ்வையெதிர் கொள்ளச் செய்ய
அருள்நிறைந்த மையப்பே ரரசில் உள்ளோர்
அரசுநிதி சாலவுமே கொட்டித் தாரீர்.
(மையப் பேரரசு=நடுவண் அரசு)
மாநில அரசும் சீரார் மையப்பே ரரசும் கூடி
ஊனெலாம் ஒடுங்கி யுள்ளம் உருக்குலை வுற்று வாடும்
நானில மக்க ளெல்லாம் நலம்பெறத் திட்டம் தீட்டி
மேனிலை அடையும் வண்ணம் விரைவினில் சேவை செய்க.
(நானில மக்கள்=தூத்துக்குடி,திருநெல்வேலி,கன்னியாகுமரி,
தென்காசி முதலிய நான்கு மாவட்ட மக்கள்)
இருகரம் கூப்பி இந்த இரண்டுபே ரரசு தம்மை
உரிமையாய்க் கேட்டுக் கொள்வோம், உடனடிச் செய்கை வேண்டும்
தருணமி தனைநீர் ஓர்ந்து தள்ளுக பயனில் வாதம்;
ஒருமையாம் கருத்தைப் பற்றி ஓம்புக மக்கள் தம்மை.
(ஒருமை=ஒற்றுமை; ஓம்புவோம்=பாதுகாப்போம்)
No comments:
Post a Comment