Monday, 5 February 2024

இருவர்கண் குற்றமும் இல்லையால் என்று

 இருவர்கண் குற்றமும் இல்லையால் என்று தெருமந்து சாய்த்தார் தலை.


கலித்தொகையில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு காட்சியைக் காண்போம்:

தோழி கூற்று: (செவிலித் தாயிடம் உரைத்தது).

அன்னையே!  ஆற்று வெள்ள அழகால் கவரப்பட்ட தலைவி எங்களுடன்

நீராடினாள். எதிர்பாராமல் உடல் தளர்ந்து தனது தாமரை போன்ற

கண்களை மூடிக்கொண்டு  நீந்தாமல் கைசோர்ந்து நின்றவளை ஆற்று

வெள்ளம் அடித்துச் சென்றது. தீடீரென்று அவ்விடத்துக்கு வந்த ஒருவன்

தான் சூடி யிருந்த சுரபுன்னை மாலை அசைய அவ்வெள்ளத்தில் பாய்ந்து

நகையணிந்த தலைவியை மார்போடு அணைத்துக் கரைசேர்த்தான்.

கரையில் குழுமியிருந்தவர் "அவன் அவளைத் தழுவினான்" என்று அலர்

(பழி) தூற்றினர். இதில் யாரையும் குறை சொல்ல வாய்ப்பில்லை. தேவைப்

பட்டால் தன் கற்பின் திண்மையை அவள் மழையை வரவழைப்பதன் மூலம்

நிரூபிக்க இயலும். (கற்புடைப் பெண்டிர் பெய்யென்று சொன்னால் மழை

பெய்யும் என்பது மக்களிடையே நிலவிய நம்பிக்கை. "தெய்வம் தொழாள்,

கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை--திருக்குறள்)


அவளைக் காப்பாற்றிய தலைவன் அந்த மலைநாட்டுக்குத் தலைவன்.

தினைப்புனத்தைக் காவல்காப்போர் எழுப்பும் அகிற் புகையினால் நிலவு

மறைக்கப்பட்டுத் தேன்கூடு போலத் தோன்றும். அதிலிருக்கும் தேனை

எடுப்பதற்கு ஏணி அமைப்பர். ( புலவரின் மிகையான கற்பனை). அத்தகைய

வளமான குறிஞ்சி மலைக்குத் தலைவனவன். சிறுகுடியில் வாழும் மக்களே!

அவள் உயிரைக் காத்த தலைவனுக்குத் தலைவியைப் பெண்கொடுக்காமல்

அயலானுக்குக் கொடுக்க எண்ணுதல் தவறு அன்றோ?  இம்மலையில்

உள்ளோர் இத்தகைய அறம் இல்லாத செயல் செய்தால் இனி நிலத்தில்

வள்ளிக்கிழங்கு விளையாது; மலைச்சாரலில் தேன்கூடு கட்டப்படாது; புனத்தில்

தினைப்பயிர் கதிர்விடாது.


காந்தள் மலர் மணம் வீசும் இந்த மலையில், மூங்கில் போன்ற தோள்களை

உடைய குன்றவர் மகளிர் நாளும் தவறாமல் தம் கணவரைத் தொழுது

எழுவதால் அந்த ஆடவர்கள் அம்பு எய்தால் அது குறிதப்புவதில்லை. தற்போது

தலைவியைப் பற்றி அலர் தூற்றினால் விளைச்சல் பொய்க்கும்; வேட்டைக்குச்

செல்வோர் எய்யும் அம்பு குறிதவறும்.(,அக்காலத்தில் நிலவிய நம்பிக்கை)."


இவ்வாறெல்லாம் கூறித் தோழி செவிலித் தாய்க்கு அறத்தொடு நின்றாள். அவள்

தோழியின் கருத்தை உணர்ந்துகொண்டு நற்றாய்க்கு(தலைவியைப் பெற்ற

தாய்க்கு) அறத்தொடு நின்றாள். நற்றாய், தலைவியின் தந்தைக்கும் தமையனுக்கும்

அவர்கள் உண்மையை உணரும் வகையிலும் சினம் கொள்ளாத வகையிலும் கூறி

அறத்தொடு நின்றாள். (அறத்தொடு நிற்பது என்பது தலைவிக்கும்  தோழிக்கும் மட்டும்

தெரிந்த உண்மையை/களவுக்காதலை வெளிப்படுத்துவது). இதனைக் கேட்ட தலைவியின்

தந்தையும் தமையனும் சினமடைந்து அம்பையும் வில்லையும் கையிலெடுத்து வெளியே

கிளம்ப எழுவதும் பின்னர்ச் சினமடங்கி அமர்வதுமாக நிலைகொள்ளாமல் தவித்தனர்.

இவ்வாறு அன்றைய பகற்பொழுது முழுவதும் புரியாத மனநிலையில் இருந்தனர்.

மனம் குழம்பிச் சுழன்று கொதித்த அவர்கள் ஒருவாறு முற்றாகச் சினமடங்கி "இருவர் மீதும்

யாதொரு தவறும் இல்லை" என்று கூறிச் சமாதானம் அடைந்தனர்.  "தெருமந்து தலைசாய்த்

தார்" என்று பாடலில் கூறப்பட்டுள்ளது. அவர்கள் தலையைச் சாய்த்துத் திருமணத்துக்கு

ஒப்புதல் தெரிவித்ததாகக் கொள்ளலாம். தொடர்புடைய பாடற்பகுதி பின்வருமாறு:

"அறத்தொடு நின்றேனைக் கண்டு திறம்பட

என்னையர்க்(கு) உய்த்துரைத்தாள் யாய். 

அவரும் தெரிகணை நோக்கிச் சிலைநோக்கிக் கண்சேந்து

ஒரு பகல் எல்லாம் உருத்தெழுந்(து) ஆறி

இருவர்கண் குற்றமும் இல்லையால் என்று

தெருமந்து சாய்த்தார் தலை".

தெருமரல்=மனச் சுழற்சி; சந்தேகப்படுதல்.

முதலில் மனங்குழம்பிப் பின்னர்த் தெளிவடைந்து திருமணத்துக்கு உடன்பட்டனர்.

(பாடல் நெடியது--51அடிகளையுடையது).பாடல் எண்: 39; திணை: குறிஞ்சி;புலவர்: கபிலர்.)


தோழி தலைவியிடம் கூறியது:" உனக்கும் தலைவனுக்கும்  இனிதே திருமணம்

நடக்கும் பொருட்டு மலைத்தெய்வம்(முருகன்) மனம் மகிழ நாம் குரவை ஆடுவோம்.

கொண்டு நிலைப் பாடலைப் பாடு(,ஒருவகைப் பாட்டு)".

தலைவி: "தினைப் புனத்தின் அருகில், இங்குள்ள வேங்கைப் பூவின் மகரந்தப்

பொடி உதிர்ந்து பொன்னால் இழைக்கப்பட்ட மணவறையாகப் பொலியும் பாறையில்

அனைவரும் காண மணமக்களாக நாங்கள் ஒன்றாக அமர்வோமன்றோ? உடனே

தலைவனுடன் இணைவதாகக் கனவு காண்பதை விட்டுவிடுவேன்(நனவாகப்

போவதால் கனவு தேவையில்லை).

தலைவியும் தோழியும் உவகையுடன் மென்மேலும் உரையாடி மகிழ்ந்தனர். பின்னர்த்

தலைவன் திருமணச் சடங்கைப் பற்றி நன்கு தெரிந்த அறிவனை(நல்ல நேரம்

கணிப்போன்) முதலில் அனுப்பி வாழ்வின் தகுதிமிக்க பொதுக் குறிக்கோளையும்

அதனை அடையும் வகையில் வாழும் முறையையும் அறிந்த இல்லறம் சான்றோர்

புடைசூழத் திருமணம் புரிந்துகொள்ள வருகின்றான். இப்பொழுது மையுண்ட

பூப்போன்ற உன்கண் பொலிவு பெறுவதாகுக!


பார்வை:சங்க இலக்கியம்(கலித்தொகை)--வர்த்தமானன் பதிப்பகம்; உரையாசிரியர்:

பெருந்தமிழறிஞர் சுப.அண்ணாமலை.

No comments:

Post a Comment