பரிவட்டம்--விடாக்கண்டரும் கொடாக்கண்டரும்.
பொருநை(தாமிரவருணி)யாறு பாயும் திருநெல்வேலிச் சீமை
சங்க காலத்திலிருந்தே சிறப்புப் பெற்றுத் திகழ்கிறது. பொருநை
யாறு இந்த மாவட்டத்துக்கு மட்டுமே உரித்தான ஆறாகும். ஆண்டு
முழுவதும் நீர் வற்றாமல் ஓடும் இந்த ஆறு கடலோடு கலக்குமிடத்தில்
முத்து விளைகிறது. பொருநையாற்றில் பல துறைகள் அமைந்துள்ளன.
இவ்வாற்றின் மேல் கரையில் குறுக்குத்துறையமைந்துள்ளது. இதற்கு
வடபால் உள்ள மற்றொரு துறை சிந்துபூந்துறை யாகும். இத்துறையில்
ஆற்றின் இடையில் திருவுருமா என்ற முருகன் தலம் அமைந்துள்ளது.
அங்கே உயரமான பாறையொன்றில் முருகக் கடவுளின் திருவுருவம்
உள்ளது. அப்பாறையே திருவுருமாமலை யாகும். அவ்வாலயத்தைச்
சார்ந்து ஒரு பெரிய மண்டபம் உள்ளது. நாடோறும் உள்ளூர் மக்களும்
வெளியூர் மக்களும் அங்கு வந்து ஆற்றில் நீராடி அம்மண்டபத்தில்
பார்த்திப பூசை, உடையவர் பூசை, ஏட்டருச்சனை முதலியன நிகழ்த்தி
விட்டுத் தத்தம் இடங்களுக்குத் திரும்பிச் செல்வது வழக்கம்.
ஏறத்தாழ நூறு/நூற்றிருபது ஆண்டுகளுக்கு முன்பு சைவப்பிரபுவாகிய
செட்டியார் ஒருவர் குறுக்குத்துறைக்குவந்து நீராடிவிட்டு மண்டபத்தில்
பூசை நிகழ்த்தத் தொடங்கினார். வேலைப்பாடமைந்த ஒரு பெட்டியிலிருந்து
மூர்த்திகளையும் வெள்ளியினால் உருவாக்கப்பட்ட பூசைப் பாத்திரங்களையும்
சரிகைக்கரையிட்ட பட்டுப் பரிவட்டங்களையும் வெளியே எடுத்து வைத்தார்.
வேறொரு பிரம்புக் கூடையிலிருந்து பலவிதமான பழவகைகள், தேன், பன்னீர்,
பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ, கலவைச் சந்தனம், மலர்மாலைகள் முதலானவற்றை
எடுத்து வைத்தார். அவர் பரப்பிவைத்த பொருட்களெல்லாம் அருகிலிருந்தோர்
கண்ணையும் கருத்தையும் கவர்ந்தன. நறுமணம் அவர்கள் மூக்கைத் துளைத்தது.
சற்று நேரத்தில் சைவகுரு ஒருவரும் அங்கே வந்து சேர்ந்தார். அவர் ஏழ்மை நிலை
யில்உள்ளவர் போலும். அவர் தம்முடைய பழைய பிரப்பம் பெட்டியைத் திறந்து சில மூர்த்தி
களையும் கந்தல் பரிவட்டங்களையும் சில பூசைப் பாத்திரங்களையும் வெளியே எடுத்து
வைத்தார். கந்தல் பரிவட்டத்தை நீரில் நனைத்துப் பிழிந்து உலர்த்தினார். அவரும்
பூசையைத் தொடங்கினார். அவர் மனத்தில் தாழ்வு மனப்பான்மை பீறிட்டெழுந்தது.
அருகிலிருந்த செல்வந்தரான செட்டியார்பால் காரணமில்லாமல் பொறாமை உருவானது.
செட்டியார் தம் பரிவட்டம் ஒன்றை நமக்குத்தந்தால் குறைந்தா போய்விடுவார்? நாமும்
கடவுளுக்குச் சாத்தி மகிழலாமே என்று எண்ணினார். நேரடியாக அவரிடம் கேட்பதற்கு
வெட்கப்பட்டுத் தயங்கினார். அவர் நல்ல தமிழ்ப் புலமை கொண்டவராதலால் உடனடியாகப்
பாடல் ஒன்றை இயற்றினார். வழக்கம்போல் தேவாரம், திருவாசகம் போன்ற பழமையான
பாடல்களைப் பாடிய பின்னர் உரத்த குரலில் தாம் புதிதாக இயற்றிய பரிவட்டம் வேண்டும்
பாடலைப் பாடத் தொடங்கினார். அப்பாடல் பின்வருமாறு:
"நரிவட்டம் இருங்களத்தில் அந்தகா சுரனைவென்ற
நம்பா! செம்பொற்
கிரிவட்டத் தனத்(து)உமையாள் பங்காளா! எளியன்மொழி
கேளா(து) ஏனோ?
கரிவட்டத்(து) உரிபுனைந்த குறையோ?நம் செட்டியார்
கையில் மேவும்
பரிவட்டம் தனில்நினைவோ? வேண்டுமென்றால் அவரதனைப்
பாலிப் பாரே."
பொருள்: நரி வட்டமிடும் போர்க்களத்தில் அந்தகாசுரனை வென்ற
சிவபெருமானே! உமையம்மையை இடப்பக்கத்தில் உடையவனே!
எளியேனின் சொல் கேளாதது ஏனோ? யானையின் தோலைப்
போர்த்தியிருக்கும் மனக்குறையோ?(தாருகாவனத்து முனிவர்கள்
ஏவிவிட்ட யானையைக் கொன்று அதன் தோலை உரித்துப் போர்த்திக்
கொண்டதாகப் புராணம் கூறும்.) அருகிலிருக்கும் செல்வந்தரான
செட்டியார் கையிலுள்ள பரிவட்டம் பற்றிய நினைவா? வேண்டுமென்று
நீ தெரிவித்தால் செட்டியார் பரிவட்டம் ஒன்றைக் கொடுப்பாரே.
சைவகுரு தமது உள்ளக்கிடக்கையைச் சிவபெருமான் கோரிக்கையாக
எடுத்துரைத்த தந்திரத்தை மெச்சத்தான் வேண்டும்.
செல்வச் செட்டியார் சைவகுருவைவிடவும் கெட்டிக்காரர். பரிவட்டம்
வேண்டுமென்று தம்மிடம் நேரடியாகக் கேட்கத் தயங்கிச் சிவபெரு
மான் வேண்டுவது போலப் பாடுகின்றாரோ? என்று
சிந்தித்துத் தாமும் சைவகுருவைப் போலவே பாட்டால் விடையளித்து
விடுதலே நன்று என்ற முடிவெடுத்துப் பாடல் இயற்றத் தொடங்கினார்.
சைவகுருவைப் போலச் செட்டியார் பெரும் புலவர் அல்லர். ஓரளவே
புலமையுடையவர். எனவே தியானத்தில் இருப்பதுபோல் கண்களை
மூடிக்கொண்டு வெகுநேரம் சிந்தித்து இறுதியில் பாடலை இயற்றி
முடித்தார். உடனே கண்களைத் திறந்து சைவகுருவைவிடவும் உரத்த
குரலில் பாடத் தொடங்கினார்:
"கொத்தாரும் குழலுமையாள் வாழும் பங்கிற்
கோமானே! எளியன்மொழி கொள்ளா தேனோ?
அத்தார்கள் ஆணை;யென(து) ஐயன் ஆணை;
அம்மைமேல் ஆணை;யுயர் அண்டர் ஆணை;
பத்தார்கள் ஆணை; யுன்றன் பாதத்(து) ஆணை;
பண்டாரம் தொண்டைகட்டப் பாடிப் பாடிச்
செத்தாலும் எலும்பெலும்பாய்த் தேய்ந்திட் டாலும்
தேவரீர் உடைமையொன்றும் செலவி டேனே".
பொருள்:
உமையம்மையை இடப் பக்கத்தில் கொண்ட கோமானே!
எளியேனின் பேச்சைக் கேளாதது ஏனோ? பெரிய சமயத்
தலைவர்கள்மேல் ஆணை; என் ஐயன் சிவபெருமான்மேல் ஆணை;
உமையம்மைமேல் ஆணை; முப்பத்து முக்கோடி தேவர்கள்மேல்
ஆணை; பக்தகோடிகள்மேல் ஆணை; ஈசனே! உன் பாதத்தின்மேல்
ஆணை; சைவகுரு தொண்டைகட்டும்படி பாடிப் பாடிச் செத்தாலும்
எலும்புகள் வெளியே தெரியும்படி உடல் தேய்ந்திட்டாலும்
தேவரீர்! உமக்காக நான் வைத்துள்ள பொருள் எதனையும் செலவு
செய்யமாட்டேன், அதாவது, உமக்குரிய பொருளை நான் பிறருக்குத் தரமாட்டேன்."
சைவகுரு விடாக்கண்டர்; செல்வந்தரான செட்டியார் கொடாக்கண்டர்.
பார்வை:
'நான் கண்டதும் கேட்டதும்' நூல் ஆசிரியர் டாக்டர் உ.வே.சாமிநாதையர்.
No comments:
Post a Comment