Friday, 28 June 2024

புலவரின் உதவியாளர் ",சிவ சிதம்பரம்" என்று முழங்கினார்.

 திரை போட்டு நீயிருந்தாய்; சிங்கபூப! சிரோமணியே!


ஏறத்தாழ ஐந்நூறு ஆண்டுகளுக்குமுன் தொண்டைநாட்டிலுள்ள

(காஞ்சிபுரம், செங்கற்பட்டு, சென்னை முதலிய பகுதிகளைக் கொண்டது)

பொன் விளைந்த களத்தூர் என்னும் ஊருக்குப் பக்கத்திலுள்ள பூதூர் என்ற

சிற்றூரில் வீரராகவ முதலியார் என்ற தமிழ்ப்புலவர் வாழ்ந்துவந்தார். அவர்

பிறவியிலேயே கண்பார்வை இல்லாதவர். இருப்பினும் அவர் தந்தையார்

தக்க ஏற்பாடுகளைச் செய்து அவருக்குத் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக்

கற்பித்தார். வீரராகவரும் முறையாகக் கற்றுத் தேர்ந்து புலவரானார். "ஏடாயிரங்

கோடி எழுதாது தன்மனத் தெழுதிப் படித்த விரகன்" என்று அவர் தம்மைச் சீட்டுக்

கவிகளில் அறிமுகம் செய்துகொள்வார். 


அவருக்கு உரிய வயதில் திருமணம் நடந்து முடிந்தது. தமிழ்ப் புலவருக்கு என்ன

வருமானம் கிடைக்கும்? அவ்வப்பொழுது வள்ளல்களைப் புகழ்ந்து பாடி அவர்கள்

கொடுக்கும் பரிசில்கள் மூலம் அவர் வாழ்வை நடத்திக்கொண்டிருந்தார். பெரிய

அளவில் வருமானம் இல்லையே என்ற குறை அவர் மனைவிக்கு இருந்தது. ஒரு

நாள் புலவர் வெளியே கிளம்பு கையில் " வெந்நீர் போட்டு வைத்திரு. நாலைந்து 

நாழிகையில் திரும்பி விடுவேன்" என்று கூறிவிட்டுச் சென்றார். சொன்னபடியே

நாலைந்து நாழிகையில் திரும்பிவிட்டார். உடனே குளிக்க எண்ணி மனைவியிடம்

வெந்நீரை எடுத்துவரப்பணித்தார். மனைவியார் வெந்நீரை எடுத்து வந்தார்.ஆனால்

அது சூடேயில்லாமல் தண்ணீர் போன்றே இருந்தது. உடனே புலவர்" ஏன் வெந்நீர்

சூடாக இல்லை? " என்று வினவினார். அந்த அம்மையாருக்கு ஏற்கெனவே கணவரின்

வருமானம் போதுமான அளவில் இல்லையென்ற மனத்தாங்கல் எப்போதும் இருந்த

காரணத்தால் " வருகின்ற வருமானத்துக்கு இது போதாதா?" என்று வருத்தமாகப்

பதிலளித்தார்.


இதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்த புலவர் மறுநாள் ஒரு மாணவனைத்

துணைக்கு அழைத்துக் கொண்டு" நான் இலங்கைக்குப் போய் வருகிறேன்" என்று

தெரிவித்துவிட்டு வீட்டை விட்டுக் கிளம்பிவிட்டார். இராமேசுவரம் சென்று ஓரிரு

நாட்கள் ஓய்வெடுத்து விட்டு ஒரு மரக்கலத்தில் ஏறி யாழ்ப்பாணம் சென்றடைந்தார்.

அப்பொழுது அப்பகுதியைப் பரராச சிங்கம் என்ற மன்னர் ஆண்டுவந்தார். அவர்

நல்ல தமிழ்ப் பயிற்சி உடையவராய் இருந்தமையால் தமிழ்ப் புலவர்களை ஆதரித்தார்.

புலவர்களுடன் உரையாடுவதையும் அவர்கள் படைத்த கவிதைகளை/நூல்களைப்

படிக்கச் சொல்லிக் கேட்பதையும் அன்றாட வழக்கமாகக் கொண்டிருந்தார். எனவேதான்

நம் வீரராகவ முதலியாரும் தாய்த்தமிழகத்திலிருந்து அவரை நாடி வந்துள்ளார்.


புலவர் மன்னரைப் பார்க்க அரண்மனைக்குச் சென்றார். மன்னரைக் காண விரும்புவ

தாகத் தெரிவித்தார். வீரராகவ முதலியாரின் வருகை மன்னருக்கும் தெரிவிக்கப்பட்டது.

ஏற்கெனவே புலவரைப்பற்றிக் கேள்விப்பட்டிருந்த மன்னர் உடனே அவரை அழைத்து 

வருமாறு ஆணையிட்டார். உடனிருந்த சிலர்" புலவர் உடற் குறை உள்ளவர். எனவே

மன்னர் அவரை நேரில் சந்திக்காமல் பரிசிலைக் கொடுத்து அனுப்புவது நல்லது" 

என்றனர். வேறு சிலர் "திரைபோட்டுத் திரைக்கு அப்பால் புலவரை அமரச் செய்து அவருடன்

உரையாடலாம்" என்றனர். மன்னருக்கு இந்த நடைமுறைகளில் விருப்பமில்லை. எனினும்

அமைச்சர் பெருமக்கள் சொல்வதால் அரை மனத்துடன் சம்மதித்தார். உடனே திரை தொங்க

விடப்பட்டது. புலவரை அழைத்துவர ஊழியர்கள் பணிக்கப்பட்டனர்.


இதற்கிடையில் அரண்மனை முற்றத்தில் இருந்த புலவரிடம் சிலர்" உடற்குறையுள்ளோர்

மன்னரைப் பார்ப்பது வழக்கத்தில் இல்லை. எனவே கவிதையை ஏட்டில் எழுதி மன்னருக்கு

அனுப்பிவையுங்கள்; அவர் படித்துவிட்டுப் பரிசளிப்பார். இதுதான் அரசு சம்பிரதாயம்"

என்றனர். புலவர் மிகவும் குழம்பிய மனநிலையில் இருந்தார். அப்பொழுது அரசுப் 

பணியாளர்கள் அரசர் வரச்சொன்னதாகத் தெரிவித்தார்கள். புலவர் தம் மாணவனின் 

துணையோடு அரண்மனைக்குள் நுழைந்தார்.

உள்ளே நுழைந்ததும் திரை ஒன்று தொங்கவிடப்பட்டிருந்ததை மாணவன் கவனித்தான்.

மன்னர் திரைக்கு அப்பால் இருப்பதை அறிந்துகொண்டான். அவன் கூரிய அறிவுடையவன்.

திரையைப் பற்றிப் புலவரிடம் குறிப்பாகத் தெரிவிக்க எண்ணிச் "சிவ சிதம்பரம்" என்று

முழக்கமிட்டான். மன்னரும் மற்றவர்களும் மாணவன் பக்திப் பரவசத்தால் மனமுருகி

அவ்வாறு முழங்கியதாகக் கருதிக்கொண்டார்கள். புலவருக்கு மட்டும் அவனது செயலுக்கு

ஏதோ மறைவான பொருளிருக்கும் என்ற கருத்து உதித்தது. ஏற்கெனவே வாசலில்

உடற்குறையுள்ளோர் மன்னரைச் சந்திப்பதில் சிக்கலுண்டு என்று கூறியதை நினைத்துக்

கொண்டார். சிதம்பரம் என்ற சிவத்தலத்தில்  இரகசியத்தை மறைக்கத் திரைபோட்டிருப்பர்

என்ற உண்மை அவர் சிந்தையில் நிழலாடியது. உடனே தமக்கும் மன்னருக்கும் இடையே

திரையைத் தொங்க விட்டிருக்கும் தந்திரத்தை அறிந்துகொண்டார். உடனே பாடினார்:

"நரைகோட்(டு) இளங்கன்று நல்வள நாடு நயந்தளிப்பன்

விரையூட்டு தார்ப்புயன் வெற்(பு)ஈழ மன்னனென் றேவிரும்பிக்

கரையோட்ட மீதில் மரக்கலம் போட்டுனைக் காணவந்தால்

திரை போட்டு நீயிருந் தாய்சிங்க பூப! சிரோமணியே!".

பொருள்: நறுமண மாலை தவழும், மலை போன்ற தோள்களை யுடைய ஈழநாட்டு மன்னர்

நம் புலமையை வியந்து பெருமைமிக்க இளம் எருதுக் கன்று,  நல்ல வளமுடைய சிற்றூர்

முதலிய பரிசில் நல்குவார் என்று விரும்பித் தாய்த்மிழகத்திலிருந்து மரக்கலம் ஏறிக் கடல்

கடந்து உம்மைக் காணவந்தால் நீவிர் திரைபோட்டு அமர்ந்துள்ளீர்; இது சரியோ? பரராசசிங்க பூபதியே!


ஈழ மன்னர் பரராசசிங்கம் திகைத்துப் போனார். திரை தொங்கவிட்டிருப்பதைப் பார்வை

யற்ற புலவர் எவ்வாறு தெரிந்துகொண்டார்? ஒருவேளை, தெய்வாம்சம் உடையவரா?

என்று குழம்பிப் போனார். உடனே திரையை நீக்குமாறு ஊழியர்களைப் பணித்தார்.

புலவரோடு ஆர்வத்துடன் உரையாடினார். மேலும் சில நாட்கள் அரண்மனையில் தங்கச்

செய்தார். புலவருடன் பல இலக்கியங்கள் குறித்தும் உரையாடி மகிழ்ந்தார். அமைச்சர்

முதலான மற்றவர்களும் புலவரிடம் தம் ஐயங்களைத் தெரிவித்து விளக்கம் பெற்றுக்

கொண்டார்கள். பின்னர் ஒருநாள் புலவர் தாம் ஊருக்குத் திரும்ப விரும்புவதாகக்

கூற அவருக்கு ஏராளமான பரிசில்களைக் கொடுத்து அனுப்பிவைத்தார்.

நீண்ட காலத்துக்குப் பிறகு ஊருக்குத் திரும்பிய புலவரிடம்  மனைவி மிகுந்த

வாஞ்சையுடன் நடந்துகொண்டார். புலவர் தமக்குக் கிடைத்த பரிசில்களைக்

காட்டி " என்னாலும் பெரிய அளவில் வருமானம் ஈட்ட முடியும் என்பதைத்

தெரிந்துகொண்டாயா?" என்றார். உடனே மனைவி" தங்கள் அருமையையும்

பெருமையையும் அறிந்துகொண்டேன். அன்று பேசிய பேச்சுக்கு மன்னிப்புக்

கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.


பார்வை: நல்லுரைக் கோவை நாலாம் பாகம்-- நூலாசிரியர் டாக்டர்

உ.வே.சாமிநாதனார்.

Tuesday, 11 June 2024

நள்ளிருள் யாமத்து இல்லெலி பார்க்கும் பிள்ளை வெருகிற்(கு) அல்கிரை யாவாய்!

 நள்ளிருள் யாமத்து இல்எலி பார்க்கும்

பிள்ளை வெருகிற்கு அல்குஇரை யாவாய்.


குறுந்தொகை--பாடல் எண் 107--மருதத் திணை--பாடிய

புலவர்: மதுரைக் கண்ணனார்.


பொருள் முற்றி வந்த(செல்வம் தேடிக் கொண்டுவந்த)

தலைவனையுடைய தலைவி காமம் மிக்க கழிபடர் கிளவி

யால் கூறியது. காமம் மிக்க கழிபடர் கிளவி: காம உணர்வு

மிகுதிப் பட்டதால், மிகுந்த துன்புற்று, அஃறிணைப் பொருள்

களை விளித்து(அழைத்து)த் தனக்குத் தானே பேசுவது.


"குவியிணர்த்  தோன்றி  ஒண்பூ  அன்ன

தொகுசெந்  நெற்றிக்  கணம்கொள்  சேவல்!

நள்ளிருள் யாமத்(து) இல்எலி  பார்க்கும்

பிள்ளை  வெருகிற்(கு) அல்(கு)இரை யாகிக்

கடுநவைப்  படீஇயரோ, நீயே! நெடுநீர்

யாணர்  ஊரனொடு வதிந்த

ஏம  இன்துயில் எடுப்பி யோயே!"


பொருள்:


தலைவி கூற்று:


அளவிலாக்  காதல்,  பாசம், 

         அன்(பு),எழில்  ஒருங்கே  கொண்ட

இளங்கொடி  எனைப்பி  ரிந்தே

        எட்டாத  தொலைவில்  உள்ள

வளநகர்  சென்று  செல்வம்

        மாண்புடன்  தேடி  மீண்டார்;

தளர்வுற்ற  மனத்தில்  இன்பம்

        தழைத்திட  இணைந்தோம்  யாமே.


குவிந்த,கொத்  தாயி  லங்கும்

        கோலச்செங்  காந்தள்  பூப்போல்

சிவந்தநற்  கொண்டை  கொண்ட

         தீமைசெய்  சேவ  லே!நீ

உவப்பொடு  துயிலும்  எங்கள்

        உறக்கத்தைக்  கெடுக்கும்  வண்ணம்

கவடமாய்க்  கூவி  யெம்மைக்

        காலையில்  எழுப்பி  னாயே.


எங்களின்  துயில்,கு  லைத்தே

        இன்பத்தைக்  குறைத்து  விட்டாய்;

மங்கிய  இருட்டு  வேளை

         வலம்வரும், எலியைக் கொல்லும்

வெங்கொடும்  காட்டுப்  பூனை

          விரும்பிடும்  இரையாய்  உன்னைப்

பங்கமாய்  விழுங்கச்,  சாவாய்;

           பாதகம்  செய்த  சேவல்!


(சேவல் யாதொரு தீங்கும் செய்யவில்லை; பாதகமும் புரியவில்லை. அது இயல்பாய்

அதிகாலையில் கூவியது. வெகுகாலத்துக்

குப்பின் தலைவனொடு கூடிவாழும் தலைவிக்கு வைகறை வேளையில் சேவல்

கூவித் தூக்கத்தைக் கெடுத்ததால் அதனைத்

தீமைசெய் சேவல் என்றும் பாதகம் செய்த

சேவல் என்றும் பிதற்றுகின்றாள்).


விளக்கம்:

 பொருள் தேட வேற்று நாட்டுக்குச் சென்ற தலைவன் வெகு நாட்களுக்குப்

பிறகு திரும்பிவந்தான். "பிரிந்தவர் கூடினால் பேசல் வேண்டுமோ?" என்று

கம்பர் இராமாயணத்தில் பாடியதைப் போல வெகுகாலம் பிரிந்திருந்த

இணையர் இணைந்து தூங்குகின்றனர்.  வைகறை வேளையில் சேவல்

வழக்கம்போல் கூவித் தன் கடமையைச் செய்தது. ஆனால் தலைவிக்கோ

சேவலின் கூவல் தன் இன்பத்தைக் குறைத்துவிட்டதாகத் தோன்றியது.

அதனால் காமவுணர்வால் சேவலைச் சபிக்கின்றாள். எங்களின் இன்பமான

தூக்கத்தைக் கெடுத்த சேவலே! நள்ளிரவில் எலியை வேட்டையாடும்

காட்டுப் பூனை உன்னை விழுங்கட்டும் என்று சாபமிடுகிறாள்.

சேவல் தன் இயல்புப்படி  கூவியது. இன்ப மயக்கத்தில் இருந்த தலைவிக்கு

அக் கூவல் இடையூறாகத் தோன்றியது. நல்ல கற்பனை!


பார்வை:

சங்க இலக்கியம்(குறுந்தொகைத் தொகுதி)-- வர்த்தமானன் பதிப்பகம்,

உரையாசிரியர்: முனைவர் தமிழண்ணல்.

(மூன்று கவிதைகளும் என்னால் இயற்றப்பட்டவை.)