நள்ளிருள் யாமத்து இல்எலி பார்க்கும்
பிள்ளை வெருகிற்கு அல்குஇரை யாவாய்.
குறுந்தொகை--பாடல் எண் 107--மருதத் திணை--பாடிய
புலவர்: மதுரைக் கண்ணனார்.
பொருள் முற்றி வந்த(செல்வம் தேடிக் கொண்டுவந்த)
தலைவனையுடைய தலைவி காமம் மிக்க கழிபடர் கிளவி
யால் கூறியது. காமம் மிக்க கழிபடர் கிளவி: காம உணர்வு
மிகுதிப் பட்டதால், மிகுந்த துன்புற்று, அஃறிணைப் பொருள்
களை விளித்து(அழைத்து)த் தனக்குத் தானே பேசுவது.
"குவியிணர்த் தோன்றி ஒண்பூ அன்ன
தொகுசெந் நெற்றிக் கணம்கொள் சேவல்!
நள்ளிருள் யாமத்(து) இல்எலி பார்க்கும்
பிள்ளை வெருகிற்(கு) அல்(கு)இரை யாகிக்
கடுநவைப் படீஇயரோ, நீயே! நெடுநீர்
யாணர் ஊரனொடு வதிந்த
ஏம இன்துயில் எடுப்பி யோயே!"
பொருள்:
தலைவி கூற்று:
அளவிலாக் காதல், பாசம்,
அன்(பு),எழில் ஒருங்கே கொண்ட
இளங்கொடி எனைப்பி ரிந்தே
எட்டாத தொலைவில் உள்ள
வளநகர் சென்று செல்வம்
மாண்புடன் தேடி மீண்டார்;
தளர்வுற்ற மனத்தில் இன்பம்
தழைத்திட இணைந்தோம் யாமே.
குவிந்த,கொத் தாயி லங்கும்
கோலச்செங் காந்தள் பூப்போல்
சிவந்தநற் கொண்டை கொண்ட
தீமைசெய் சேவ லே!நீ
உவப்பொடு துயிலும் எங்கள்
உறக்கத்தைக் கெடுக்கும் வண்ணம்
கவடமாய்க் கூவி யெம்மைக்
காலையில் எழுப்பி னாயே.
எங்களின் துயில்,கு லைத்தே
இன்பத்தைக் குறைத்து விட்டாய்;
மங்கிய இருட்டு வேளை
வலம்வரும், எலியைக் கொல்லும்
வெங்கொடும் காட்டுப் பூனை
விரும்பிடும் இரையாய் உன்னைப்
பங்கமாய் விழுங்கச், சாவாய்;
பாதகம் செய்த சேவல்!
(சேவல் யாதொரு தீங்கும் செய்யவில்லை; பாதகமும் புரியவில்லை. அது இயல்பாய்
அதிகாலையில் கூவியது. வெகுகாலத்துக்
குப்பின் தலைவனொடு கூடிவாழும் தலைவிக்கு வைகறை வேளையில் சேவல்
கூவித் தூக்கத்தைக் கெடுத்ததால் அதனைத்
தீமைசெய் சேவல் என்றும் பாதகம் செய்த
சேவல் என்றும் பிதற்றுகின்றாள்).
விளக்கம்:
பொருள் தேட வேற்று நாட்டுக்குச் சென்ற தலைவன் வெகு நாட்களுக்குப்
பிறகு திரும்பிவந்தான். "பிரிந்தவர் கூடினால் பேசல் வேண்டுமோ?" என்று
கம்பர் இராமாயணத்தில் பாடியதைப் போல வெகுகாலம் பிரிந்திருந்த
இணையர் இணைந்து தூங்குகின்றனர். வைகறை வேளையில் சேவல்
வழக்கம்போல் கூவித் தன் கடமையைச் செய்தது. ஆனால் தலைவிக்கோ
சேவலின் கூவல் தன் இன்பத்தைக் குறைத்துவிட்டதாகத் தோன்றியது.
அதனால் காமவுணர்வால் சேவலைச் சபிக்கின்றாள். எங்களின் இன்பமான
தூக்கத்தைக் கெடுத்த சேவலே! நள்ளிரவில் எலியை வேட்டையாடும்
காட்டுப் பூனை உன்னை விழுங்கட்டும் என்று சாபமிடுகிறாள்.
சேவல் தன் இயல்புப்படி கூவியது. இன்ப மயக்கத்தில் இருந்த தலைவிக்கு
அக் கூவல் இடையூறாகத் தோன்றியது. நல்ல கற்பனை!
பார்வை:
சங்க இலக்கியம்(குறுந்தொகைத் தொகுதி)-- வர்த்தமானன் பதிப்பகம்,
உரையாசிரியர்: முனைவர் தமிழண்ணல்.
(மூன்று கவிதைகளும் என்னால் இயற்றப்பட்டவை.)
No comments:
Post a Comment