படுகிளி கடியும் கொடிச்சி புலந்து அழுதாள்.
(தினையைக் கொத்தவரும் கிளியை விரட்டும் குறிஞ்சி நிலத்தவள்
அம்முயற்சி கைகூடாமையால் வருந்தி அழுதாள்)
தலைவன் பாங்கனுக்குக்(தோழனுக்குக்) கூறியது:
"சுடுபுன மருங்கிற் கலித்த ஏனல்
படுகிளி கடியும் கொடிச்சிகைக் குளிரே
இசையின் இசையாய் இன்பா ணித்தே
கிளியவள் விளியென எழல்ஒல் லாவே;
அதுபுலந்(து) அழுத கண்ணே சாரல்
குண்டு நீர்ப் பைஞ்சுனைப் பூத்த குவளை
வண்டு பயில் பல்லிதழ் கலைஇத்
தண்துளிக் தேற்ற மலர்போன் றனவே!"
திணை: குறிஞ்சி; பாடல் எண்: 291; புலவர்:கபிலர்.
(ஏனல்=தினை; குளிர்=கிளி விரட்ட ஓசையெழுப்பும்
கருவி; புலந்து=வருந்தி; இன் பாணி= இனிய தாளம்)
பொருள்:
விளைந்ததினைக் கதிருண்ணவருங்கிளியை
அச்சுறுத்தி விரட்ட வேண்டிக்
களந்தனிலே குளிர்என்னும் கருவியினால்
ஒலியெழுப்பும் கன்னி சோர்ந்து
தளர்ந்தழுதாள், தன்கருவி கிளிகளைஅச்
சுறுத்தாமல், தயவாய் உண்ண
விளிப்பதுபோல் ஒலித்ததனால், நீங்காது
தினைக்கதிரை மேயும் கூடி.
(விளிப்பதுபோல்=அழைப்பது போல்)
கருத்துடனே தினைப்பயிரைக் காவல்செயின்
அன்னையரின். கனிவு மிக்க
பரிவினையும் பற்றினையும் பெற்றிட லாம்
என நினைத்த பாவை நோகக்
கருவியினால் கிளிகடியும் முயற்சியது
வீணாகிக் கதிரைக் கொத்தும்
தருணமதில் மங்கையிவள் மனங்கலங்கி
யழுதனளே, தோழா! காண்க.
(அன்னையர்=நல் தாய் மற்றும் செவிலித்தாய்)
தெளிவுரை:
தோழனே! தினைப்புனத்தில் காவல் செய்யும்(விளைந்த தினைக்
கதிரைக் கிளிகள் கொத்தாமல் பாதுகாப்பது) தலைவி கிளிகளை
விரட்டுவதற்காகக் கையில் வைத்திருக்கும் 'குளிர்' எனப்படும் கருவி
கிளிகளை அச்சுறுத்தும் ஓசையை எழுப்பாமல் இனிய தாளத்தோடு
கூடிய ஓசையை எழுப்புவதால், கிளிகள் அவ்வோசையைக் கேட்டு
மிரண்டு ஓடாமல், தினைக்கதிரை விட்டு அகலாமல், கொத்தும்
பணியையும் நீக்காமல் உள்ளன. அவ்வோசை தம்மைத் தலைவி
அழைப்பது போல்(தினைக் கதிரைக் கொத்தியுண்ண அழைப்பது போல்)
மயங்கச் செய்தது போலும்! " நான் எந்தப் பணிக்கு வந்தேனோ, அது
நிறைவேறவில்லை" என்று மனம் வருந்தித் தலைவி அழுதாள். அவள்
அழுதது மனத்துக்கு நோவளிப்பதாக இருந்த போதும் அவள் செய்கை
நகைப்பையும்(சிரிப்பு) வரவழைக்கிறது. அழுத அவள் கண்கள் மலையருகே
யுள்ள ஆழமான சுனையில் பூத்த குவளை மலர்களைப் போல் விளங்கும்.
பார்வை:
குறுந்தொகை மூலமும் உரையும்: டாக்டர் உ.வே.சா.அவர்கள்.
No comments:
Post a Comment