Monday, 23 September 2024

அசுணம் கொல்பவர் கை போல் நன்றும் இன்பமும் துன்பமும் உடைத்தே.ற..

 "அசுணம் கொல்பவர் கைபோல் நன்றும்  இன்பமும் துன்பமும் உடைத்தே".


அசுணம் என்பது சங்க இலக்கியங்களில் பரவலாகச் சொல்லப்பட்ட ஓர்

உயிரினம். அது விலங்கா பறவையா என  ஐயத்திற்கிடமின்றி விவரிக்கப்

படவில்லை. மேலும் அது உண்மையில் வாழ்ந்த உயிரினமா கற்பனையில்

வாழ்ந்த உயிரினமா என்றும் தெளிவுபடுத்தப்படவில்லை. ஆனால், சங்க

இலக்கிய நூல்களில் சொல்லப்பட்ட ஓர் உயிரினம். நாம் அதனை ஒரு

விலங்கு என்று கருதிக் கொள்வோம். அது வலிமை மிக்க விலங்கு; அதனை

வேட்டையாடுதல் எளிதன்று. ஆனால் அது ஒரு இசையறி விலங்கு என்று

கருதப்பட்டது. நல்ல மனங்கவர் இசையைக் கேட்டால் மயங்கி அருகில் வரும்.

அப்பொழுது அதனைப் பிடித்து அடக்கித் தம் வசப்படுத்திக் கொள்வர்/கொல்வர்.

கடுமையான பறையொலி போன்ற ஓசை கேட்கநேர்ந்தால் அவ்விலங்கு பாறையி

லி‌ருந்து வீழ்ந்து உயிர்துறக்கும் என்பது சங்க இலக்கியத்தில் சொல்லப்பட்டுள்ளது.

பிற்காலக் கம்பராமாயணம் போன்ற இலக்கியங்களும் இவ்விலங்கைப் பற்றிப்

பேசியுள்ளன. நற்றிணையில் ஒரு பாடலைப் பார்ப்போம்.


பல நாட்களாகத் தலைவன் ஒருவன் தலைவியைச் சந்தித்து அளவளாவிவிட்டுப்

பிரிந்து செல்லும் வழக்கத்தைக் கொண்டுள்ளான். இரவுக் குறியில்(சந்திக்கும் இடம்)

அவன் பல இன்னல்களை எதிர்கொண்டு சமாளித்து வருவதால் தலைவி அச்சமயங்களில்

பதற்றத்தோடு மன உளைச்சலுக்கு ஆளாகின்றாள். மேலும் அவன் அடிக்கடி வந்து

போகிறானே தவிர வரைவு(திருமணம்) செய்து கொள்வதைப் பற்றி யாதொரு வார்த்தை

யும் சொல்லாமல் தவிர்க்கின்றான். இதனால் தலைவி  மனம்நோகின்றாள். ஒருநாள்

தலைவன் வழக்கம்போல் வந்து சிறைப்புறமாக நிற்கின்றான்(இல்லத்து வேலியருகில்

மறைவாக நிற்கின்றான்). அவன் வந்ததையறிந்த தலைவி தோழியிடம் வன்புறை

எதிர் மொழிகின்றாள்(வற்புறுத்தி/வலியுறுத்திப் பேசுகின்றாள்)."தோழி தினைக்கதிர்

களைத் தின்ற கிளிகள் அங்குள்ள பாறைகளின் மீது அமர்ந்துகொண்டு ஒலியெழுப்பும்;

ஒன்றையொன்று கூவியழைக்கும். அத்தகைய மலையைஉடைய நாட்டில் வாழ்பவன் நம்

தலைவன். அவன் என்னருகிலிருந்து பழகும் பொழுது நல் அழகு என் உடலில் மிளிரும்.

அவன் என்னைவிட்டு நீங்கினால் என் மேனி பொலிவு இழக்கும். அதனால் நம் தலைவனது

மார்பானது அசுணமாவைக் கொல்பவர் கைபோல் உள்ளது. முதலில் இனிய இசையை

எழுப்பி அசுணமாவை வரவழைத்துப் பின்னர் காதுக்குக் கொடுமையான ஓசையால் 

அதனை மிரட்டிச் சாகடித்தல் போலாகும். அஃதாவது, கிளிகள் தினைக்கதிர்களைச் சுற்றத்

துடன் கூடித் தின்ற பின்னர் தம்  துணையோடு இணைந்து குலவுதல்போல் தலைவன்

தன் சுற்றத்தாருடன் தலைவி இல்லத்துக்கு வந்து வரைவு(திருமணம்) முடித்து அவளொடு

கூடிக் குலவி மகிழ்தலை எதிர்பார்க்கும் செய்தியை வற்புறுத்தி/வலியுறுத்திச் சொன்னாள்.

தொடர்புடைய பாடல் பின்வருமாறு:

நற்றிணை பாடல் எண்:304; திணை: குறிஞ்சி; புலவர்: மாறோக்கத்து  நப்பசலையார்.

"வாரல் மென்தினைப் புலவுக் குரல்மாந்தி

சாரல் வரைய கிளையுடன் குழீஇ

வளியெறி வயிரின் கிளிவிளி பயிற்றும்

நளியிரும் சிலம்பின் நல்மலை நாடன்

புணரின், புணருமார் எழிலே; பிரியின்

மணிமிடைப் பொன்னின் மாமை சாய,என்

அணிநலம் சிதைக்குமார் பசலை; அதனால்

அசுணம் கொல்பவர் கைபோல், நன்றும்

இன்பமும் துன்பமும் உடைத்தே

தண்கமழ் நறுந்தார் விறலோன் மார்பே.

 அருஞ்சொற் பொருள்:

புலவு=வயல்; குரல்=கதிர்; வயிர்=ஊதுகொம்பு;

விளிபயிற்றல்=ஒன்றையொன்று கூப்பிடுதல்.

பார்வை:நற்றிணை--வர்த்தமானன் பதிப்பகம்;

                 உரையாசிரியர்=முனைவர் கதிர் மகாதேவன்.

Friday, 6 September 2024

கள்ளின் சாடியன்ன எம் இளநலம் ஒழிய முதிர்கம் யாமே!

 கள்ளின் சாடியன்ன எம் இளநலம் ஒழிய முதிர்கம் யாமே!


சங்க இலக்கியமான நற்றிணையில் ஒரு நற்றாய்

தலைவியை இற்செறிப்பு செய்து விட்டாள். அத்தலைவி

யின் எண்ணங்களையும் இன்னல்களையும் பார்ப்போம்:


பாடல் எண்:295; திணை: நெய்தல்; துறை: தோழி செறிப்பு

அறிவுறீஇ வரைவு கடாயது; புலவர்: ஔவையார்.

"முரிந்த சிலம்பின் நெரிந்த  வள்ளியின்,

புறன்அழிந்(து)  ஒலிவரும் தாழிருங் கூந்தல்

ஆயமும் அழுங்கின்று; யாயும்அஃ  தறிந்தனள்,

அருங்கடி அயர்ந்தனள், காப்பே; எந்தை,

வேறுபல் நாட்டுக் கால்தர வந்த,

பலவினை நாவாய்  தோன்றும் பெருந்துறை,

கலிமடைக் கள்ளின் சாடி யன்ன, எம்

இளநலம் இற்கடை ஒழியச்

சேறும்; வாழியோ! முதிர்கம் யாமே."


பொருளுரை:

வளம்நலிந்த மலைக்கொடிபோல்  வதங்கி, வாடி

  வண்ணத்தை இழந்ததென்றன்  தாழும் கூந்தல்;

இளமைமிகு  தோழியரும்  எனைப்போல் உள்ளார்;

  இதயத்தில்  துயர்கொண்டார்; அன்னை  எற்குத்

தளர்வறியாக் கடிகாவல்  போட்டு  விட்டாள்;

  தந்தையவர் கடல்கடந்து  மீண்டு வந்து

மிளிருமெழில்  நாவாயில் உளச  ரக்கை

  விரைவாகத்  தரையிறக்க ஆணை யிட்டார்.


பருகுநர்க்குக் களிப்புநல்கும் கள்ளின் சாடி

   பரிதாப  மாய்க்கொல்லை  தனிலே  வீழ்ந்து

பெருமையெலாம் இழந்ததுபோல், இளமை நீங்கிப்

  பேரழகும் அழிந்துமுதிர்(வு) அடைவேன்;  தோழி!

உருக்கமுறத் தலைவியவள், தலைவன் கேட்டே

  உளம்பதறத், தோழியிடம் உரைத்தாள்; அன்னான்,

இருவருடைக் காதலது வெற்றி கொள்ள

  இல்லறத்தை விரும்பியுடன்  வரைவு  கொள்வான்.


 விளக்கவுரை:

தலைவி தோழியிடம் கூறியவேளை தலைவன் சிறைப்

புறத்தான் ஆக, இவ்விருவரது உரையாடலைக்

கேட்டுக் கொண்டிருக்கின்றான். சிறைப்புறத்தான்

என்பதற்குப் பொருள் வேலிக்கப்புறமாயுள்ளவன்.

தோழியும் தலைவியும் உரையாடும்பொழுது  அவ்விரு

வர் பரிமாறும் செய்திகளை மறைந்து நின்று அறிவ

தற்கு வசதியான காவல் மனைப்புறமாயுள்ள இடம்.

வேலிக்கு அப்புறமுள்ள இடம்.


பருவம் எய்திய பெண்ணைக் கண்ணும் கருத்துமாகப்

பாதுகாப்பது அப்பெண்ணைப் பெற்ற தாயின் கடமை.

வயதுப் பெண்கள் இருக்கும் வீட்டில் தெரியாத/அறி

யாத ஆடவர் நுழைய முடியாது. கட்டுக் காவல் பலமாக

இருக்கும். இற்செறித்தல்  என இலக்கியத்தில் வழங்கப்

படும். தலைவியின் வயது முதிர்ச்சியைக் கருத்தில்

கொண்டு பெற்றோர் வெளியே செல்ல அனுமதிக்காமல்

வீட்டுக்குள்ளேயே தங்கியிருக்கச் செய்தல். இப்பாடலில்

வரும் தலைவியும் இற்செறிக்கப்பட்டவளே.  ஊருக்குள்,

தலைவி யாரோ ஒருவனுடன் சந்திப்பு நிகழ்த்திப்

பேசுவதாக அலர் கிளம்பியிருக்கும். அதனால் இற்செறிப்பு

நடத்தப்பட்டிருக்கும். தலைவியின் தந்தையார் அண்மையில்

கடல் கடந்து வெளிநாடுகளில் வாணிகம் செய்து விட்டு

மீண்டுவந்துளார்.  நாவாய்களைத் துறையில் நிறுத்துவதற்குரிய

ஏற்பாடுகளைக் கவனிக்கின்றார். தலைவி தன் தோழியிடம்

தன் இற்செறிப்பு குறித்துப் புலம்புகின்றாள். அவளின் நோக்கம்

சிறைப்புறத்தானாக உள்ள தலைவன் தன் நிலைமையை அறிந்து

மேலும் காலதாமதம் புரியாமல் வரைவு(திருமணம்) நிகழ்த்த ஏற்பாடு

செய்தல் மிகமிக இன்றியமையாததாகும் என்பதை உணர்த்துவதே.


இப்பாடலில் கடல்கடந்து தமிழர் நிகழ்த்திய வாணிகம் பற்றி அறிய

முடிகிறது. வேலைப்பாடமைந்த வெளிநாட்டுக் கட்சாடி(கள் நிரப்பும்

சாடி) இங்கு கொண்டுவரப்பட்ட செய்தியையும் அறிய முடிகிறது.