கள்ளின் சாடியன்ன எம் இளநலம் ஒழிய முதிர்கம் யாமே!
சங்க இலக்கியமான நற்றிணையில் ஒரு நற்றாய்
தலைவியை இற்செறிப்பு செய்து விட்டாள். அத்தலைவி
யின் எண்ணங்களையும் இன்னல்களையும் பார்ப்போம்:
பாடல் எண்:295; திணை: நெய்தல்; துறை: தோழி செறிப்பு
அறிவுறீஇ வரைவு கடாயது; புலவர்: ஔவையார்.
"முரிந்த சிலம்பின் நெரிந்த வள்ளியின்,
புறன்அழிந்(து) ஒலிவரும் தாழிருங் கூந்தல்
ஆயமும் அழுங்கின்று; யாயும்அஃ தறிந்தனள்,
அருங்கடி அயர்ந்தனள், காப்பே; எந்தை,
வேறுபல் நாட்டுக் கால்தர வந்த,
பலவினை நாவாய் தோன்றும் பெருந்துறை,
கலிமடைக் கள்ளின் சாடி யன்ன, எம்
இளநலம் இற்கடை ஒழியச்
சேறும்; வாழியோ! முதிர்கம் யாமே."
பொருளுரை:
வளம்நலிந்த மலைக்கொடிபோல் வதங்கி, வாடி
வண்ணத்தை இழந்ததென்றன் தாழும் கூந்தல்;
இளமைமிகு தோழியரும் எனைப்போல் உள்ளார்;
இதயத்தில் துயர்கொண்டார்; அன்னை எற்குத்
தளர்வறியாக் கடிகாவல் போட்டு விட்டாள்;
தந்தையவர் கடல்கடந்து மீண்டு வந்து
மிளிருமெழில் நாவாயில் உளச ரக்கை
விரைவாகத் தரையிறக்க ஆணை யிட்டார்.
பருகுநர்க்குக் களிப்புநல்கும் கள்ளின் சாடி
பரிதாப மாய்க்கொல்லை தனிலே வீழ்ந்து
பெருமையெலாம் இழந்ததுபோல், இளமை நீங்கிப்
பேரழகும் அழிந்துமுதிர்(வு) அடைவேன்; தோழி!
உருக்கமுறத் தலைவியவள், தலைவன் கேட்டே
உளம்பதறத், தோழியிடம் உரைத்தாள்; அன்னான்,
இருவருடைக் காதலது வெற்றி கொள்ள
இல்லறத்தை விரும்பியுடன் வரைவு கொள்வான்.
விளக்கவுரை:
தலைவி தோழியிடம் கூறியவேளை தலைவன் சிறைப்
புறத்தான் ஆக, இவ்விருவரது உரையாடலைக்
கேட்டுக் கொண்டிருக்கின்றான். சிறைப்புறத்தான்
என்பதற்குப் பொருள் வேலிக்கப்புறமாயுள்ளவன்.
தோழியும் தலைவியும் உரையாடும்பொழுது அவ்விரு
வர் பரிமாறும் செய்திகளை மறைந்து நின்று அறிவ
தற்கு வசதியான காவல் மனைப்புறமாயுள்ள இடம்.
வேலிக்கு அப்புறமுள்ள இடம்.
பருவம் எய்திய பெண்ணைக் கண்ணும் கருத்துமாகப்
பாதுகாப்பது அப்பெண்ணைப் பெற்ற தாயின் கடமை.
வயதுப் பெண்கள் இருக்கும் வீட்டில் தெரியாத/அறி
யாத ஆடவர் நுழைய முடியாது. கட்டுக் காவல் பலமாக
இருக்கும். இற்செறித்தல் என இலக்கியத்தில் வழங்கப்
படும். தலைவியின் வயது முதிர்ச்சியைக் கருத்தில்
கொண்டு பெற்றோர் வெளியே செல்ல அனுமதிக்காமல்
வீட்டுக்குள்ளேயே தங்கியிருக்கச் செய்தல். இப்பாடலில்
வரும் தலைவியும் இற்செறிக்கப்பட்டவளே. ஊருக்குள்,
தலைவி யாரோ ஒருவனுடன் சந்திப்பு நிகழ்த்திப்
பேசுவதாக அலர் கிளம்பியிருக்கும். அதனால் இற்செறிப்பு
நடத்தப்பட்டிருக்கும். தலைவியின் தந்தையார் அண்மையில்
கடல் கடந்து வெளிநாடுகளில் வாணிகம் செய்து விட்டு
மீண்டுவந்துளார். நாவாய்களைத் துறையில் நிறுத்துவதற்குரிய
ஏற்பாடுகளைக் கவனிக்கின்றார். தலைவி தன் தோழியிடம்
தன் இற்செறிப்பு குறித்துப் புலம்புகின்றாள். அவளின் நோக்கம்
சிறைப்புறத்தானாக உள்ள தலைவன் தன் நிலைமையை அறிந்து
மேலும் காலதாமதம் புரியாமல் வரைவு(திருமணம்) நிகழ்த்த ஏற்பாடு
செய்தல் மிகமிக இன்றியமையாததாகும் என்பதை உணர்த்துவதே.
இப்பாடலில் கடல்கடந்து தமிழர் நிகழ்த்திய வாணிகம் பற்றி அறிய
முடிகிறது. வேலைப்பாடமைந்த வெளிநாட்டுக் கட்சாடி(கள் நிரப்பும்
சாடி) இங்கு கொண்டுவரப்பட்ட செய்தியையும் அறிய முடிகிறது.
No comments:
Post a Comment