Saturday, 19 October 2024

அபய நிருபம்.

 மருதுபாண்டியர் திருப்பூவணக் கோவில் குருக்களுக்கு அனுப்பிய

அபய நிருபம்.


அபய நிருபம் என்பது அரசர்கள் தமது ஆட்சிப் பகுதியில் வாழும்

குற்றவாளிகளுக்கேனும், ஓடி ஒளிந்திருக்கும் பகைவர்களுக்கேனும்

 "நீங்கள் சிறிதும் அஞ்ச வேண்டா; உங்களுக்கு எத்துன்பமும் நேராது.

அடைக்கலம் தருவோம். இந்தப் பகுதிக்கு யாதொரு அச்சமும்

இல்லாமல் வரலாம்" என்ற உறுதிமொழியுடன் அனுப்பப்படும் கடிதம்.

இங்கே யாருக்கு அனுப்பப்பட்டது; அதன் விவரம் என்ன? என்று

பார்ப்போம்.


கி.பி1772இல்  கிழக்கிந்தியக் கம்பெனியார். இராமநாதபுரத்தைக்

கைப்பற்றிய பின்னர் சிவகங்கை மீது படையெடுத்தனர். அரசர்

முத்து வடுகநாதர் அந்தப் போரில் கொல்லப்பட்டார். அரசி வேலு

நாச்சியாரும், அவர் மகள் வெள்ளச்சியும், அமைச்சர் தாண்டவ

ராயன் பிள்ளையும், படைத் தலைவர்கள் மருதுபாண்டியர்களும்

திண்டுக்கல் அருகையுள்ள விருப்பாட்சிக் காட்டுக்குத் தப்பிச்

சென்று தங்கினர். பின்னர் 1779இல் தொடங்கி 1780 வாக்கில்

சிவகங்கையை மீட்டனர். வேலுநாச்சியாரை அரியணையில்

அமரச் செய்தனர். அவர் ஆட்சி நடத்திக் காலமான பிறகு மருது

பாண்டியர்கள் ஆட்சிக்கு வந்தனர். 


மருதுபாண்டியர்களை மக்கள் தங்கள் உயிரைப் போலப்

போற்றிக் கொண்டாடினர். அவர்கள் நெடுங்காலம்

நலமாக வாழுதல் வேண்டும் என்று அல்லும் பகலும்

இறைவனை வேண்டிக் கொண்டனர். காளையார் கோவில்

கோபுரம் கட்டி முடித்த பிற்பாடு பெரிய மருதுவும், சின்ன

மருதுவும் இக்கோவிலுக்குப் பெரிய தேர்செய்யும் ஏற்பாட்டைத்

தொடங்கினர். மிகப் பெரிய தேருக்கு உறுதியான அச்சுமரம்

வேண்டுமல்லவா? உறுதியான மரம் தம் ஆட்சிப் பகுதியில்

எங்கே கிடைக்கும் என்று எண்ணிக்கொண்டிருந்தனர். அப்பொழுது

பெரிய மருதுவுக்குத் திருப்பூவணச் சிவன் கோவிலுக்கு எதிரேயுள்ள

பழமையான மற்றும் உறுதியான மருதமரம் நினைவுக்கு வந்தது.

சின்ன மருதுவிடம் அதைப் பற்றித் தெரிவித்துவிட்டு அதிகாரிகளை

அழைத்து அந்த மருத மரத்தை வெட்டி எடுத்துவர உடனடியாக

ஏற்பாடு செய்ய உத்தரவிட்டார்.


மன்னர் உத்தரவுப்படியே அதிகாரிகள் திருப்பூவணத்துக்குச் சென்று

மரத்தைக் கண்டுபிடித்து அதை வெட்டுவதற்குப் பணியாட்களுக்கு

ஆணையிட்டனர். இந்தச் செய்தி திருப்பூவண  ஊர் முழுவதும் பரவியது.

கோவிலில் பூசைக் கைங்கர்யம் ஆற்றிவரும் புஷ்பவனக் குருக்கள்

இச்செய்தியைக் கேட்டவுடன் மரமிருக்கும் இடத்துக்கு வந்து மரத்தை

இரு கைகளாலும் கட்டிப் பிடித்துக்கொண்டு " இம் மரத்தை வெட்ட

வேண்டா; வெட்டுவதற்கு நான் சம்மதிக்க மாட்டேன்" என்று முழக்க

மிட்டார். அதிகாரிகளும் பணியாட்களும் அதிர்ச்சியடைந்தனர்.

அரசர் உத்தரவைச் சாதாரண குருக்கள் தடுப்பதா? என்று சினத்தின்

உச்சிக்கே சென்றுவிட்டனர். செய்தி அரசருக்குப் பறந்தது.


பெரிய மருது இச்செய்தியைக் கேட்டவுடன் வியப்படைந்தார். தாம்

போட்ட உத்தரவைப் புஷ்பவனக் குருக்கள் தடுப்பதற்குக் காரணம்

என்னவாயிருக்கும்? என்று அறிந்துகொள்ள உடனே கிளம்பித்

திருப்பூவணத்துக்கு வந்து தங்கினார். சிறிது நேர ஓய்வுக்குப்பின்

கோவிலுக்குச் சென்று முகப்பில் உள்ள மண்டபத்தில் அமர்ந்தார்.

அரசர் வந்திருக்கும் செய்தியறிந்த புஷ்பவனக் குருக்கள் கோவில்

பிரசாதத்தைக் கோவில் அதிகாரிகள் மூலமாக அரசர்க்கு அனுப்பி

வைத்துவிட்டுத் தாம் ஏற்கெனவே ஏற்பாடு செய்து வைத்திருந்த

குதிரை வண்டி மூலமாக மதுரைக்குச் சென்று தங்கிக்கொண்டார்.

ஏனென்றால், அரசர் உத்தரவைத் தடுத்ததால் என்ன தண்டனை

கிட்டுமோ? என்ற அச்சம் அவரை வாட்டி வதைத்தது.


மண்டபத்தில் அமர்ந்திருந்த அரசர் "புஷ்பவனக் குருக்கள் எங்கே?"

என்று விசாரித்தார். அவர் மதுரைக்குச் தப்பிச் சென்ற விவரத்தைத்

தெரிவித்தனர். உடனே 'அபய நிருபம்' எழுதி நான்கு காவலர்களிடம்

கொடுத்துக் குருக்களிடம் "அஞ்ச வேண்டா; அரசர் அடைக்கலம்

தந்துள்ளார்" என்று தெரிவித்துக் கையோடு அழைத்து வருமாறு

ஆணையிட்டார். காவலர்களும் அம்மாதிரியே செய்தனர்.


பெரிய மருது குருக்களிடம் விசாரணையைத் தொடங்கினார்.

தொடக்கத்தில் அவர் மிக்க சினத்தோடுதான் பேசினார். ஆனால்,

குருக்களின் பணிவான பதில் உரையால் அவர் சினம் சிறிது

சிறிதாகத் தணியத் தொடங்கியது. குருக்கள் கூறியது:-

"மருத மரம் வையை ஆற்றின் தென்பகுதியில் அமைந்துள்ள

சிவன் கோவிலுக்கு எதிரே விரிந்து பரந்து நிலை கொண்டுள்ளது.

கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு நிழல் தந்து வெயிலின்

கொடுமையிலிருந்து பாதுகாக்கிறது. குறிப்பாக, கோடையில்

வையை ஆற்றில் நீர் சிறிதளவே வரும். ஆற்றின் வடபகுதிக்

கரையை ஒட்டி இத்தண்ணீர் இருக்கும். பக்தர்கள் நீராடி விட்டுத்

தென் பகுதியிலுள்ள கோவிலுக்குச் சுடுமணலைக் கடந்து வரல்

வேண்டும். அப்பொழுது முதியோர், கருவுற்ற பெண்டிர், குழந்தைகள்

என் அனைவர்க்கும் நிழல் தந்து வெயிலின் கொடுமையிலிருந்து

பாதுகாக்கிறது. பக்தர்கள் வருகை அதிகரித்து வருவதால் மரத்தின்

நிழல் மிகத் தேவையான ஒன்றாகும்." என்று சொல்லி வந்த குருக்கள்

இக்கட்டான நேரத்துக்குத் தக்கவாறு மனத்தைத் தொடும் வகையில் 

மிக உருக்கமாகப் பேசத் தொடங்கினார். அதன் விவரம் வருமாறு:-

" மகாராசா! இவையெல்லாவற்றையும் விட இன்றியமையாத செய்தி

என்னவென்றால் இம்மரம் தங்கள் பெயரைத் தாங்கி நிற்கிறது(மருத மரம்).

சிவகங்கை மக்கள் அனைவரும் நீங்கள் இருவரும்(பெரிய மருது மற்றும்

சின்ன மருது) நீண்ட நெடுங்காலம் நலமாக வாழ்ந்து சிவகங்கை மக்களைக்

காத்தல் வேண்டும் என்று விரும்புகின்றனர். இப்படி இருக்கையில் இந்த

மரத்தை வெட்ட யாருக்கும் எண்ணமே வராது; இது சத்தியம்" என்று

உருக்கமாக முழங்கினார். அருகிலிருந்த அதிகாரிகள், பணியாட்கள்,

பொதுமக்கள் என அனைவரும் " ஆமாம். இது சத்தியமான பேச்சு" என்றனர்.

பெரிய மருதுவின் கோபம் இருந்த இடம் தெரியாமல் பறந்து போனது.

"குருக்களே! நீர் நம்மிடம் காட்டிவரும் விசுவாசம் மெச்சத் தக்கது; பக்தர்களின்

நன்மைக்காகச் சிந்தித்தது  எமக்கு மிகவும் மகிழ்ச்சி தருகிறது. நீர் கருதிய

படியே இம்மரம் வெட்டப்படாமல் இங்கேயே நிலைத்து நிற்கட்டும். இது நமது

ஆணை" என்று உறுதி கூறினார். குருக்களின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

அங்கிருந்த அனைவரும் களிப்புக் கடலில் மூழ்கினர்.


பார்வை: கண்டதும்  கேட்டதும்--நூலாசிரியர் டாக்டர் உ.வே.சாமிநாதையர்.

Friday, 4 October 2024

வெளிநாடு சென்றவர் புலம்பும் எக்காலக் கண்ணி.

 பொருள் தேடி வெளிநாடு சென்றவர் புலம்பும் எக்காலக்கண்ணி.


கைநிறைய ஊதியத்தைக் கச்சிதமாய் ஈட்டிடவே

மைவிழியில் லாளை மனம்மறுக---நைதலுடன்

நீங்கிப் பணம்கொழிக்கும் நேரில் துபாய்வந்தேன்;

தீங்கில் தொழிலில் திளைத்து.


(தீங்கில்லாத தொழிலில் திளைத்துக் கைநிறைய ஊதியத்தைக்

கச்சிதமாய் ஈட்டிடவே............என்று பொருள் கொள்ளல் வேண்டும்.)


                  எக்காலக் கண்ணி.


வந்தநாள்  தொட்டு  மனைவியைப் பற்றித்தான்

சிந்தனை சுற்றிவரும்;  தேறிடுதல் எக்காலம்?


கைப்பிடித்த  நங்கை  கரிசனத்தோ(டு) அன்னமிட்டு

மெய்சிலிர்க்கச்  செய்திடுமவ்  வேளைவரல்  எக்காலம்?


அன்புக்(கு)  உரியாள்  அழகுமிகு  தோள்களிலே

இன்பமாய்ச்  சாய்ந்தே  இளைப்பாறல்  எக்காலம்?


கண்ணுக்(கு)  இனியாளின் கைகோர்த்துச் சோலையிலே

பண்ணுடன்  பாடிப்  பரிவடைதல்  எக்காலம்?


ஆரணங்கே!  காரிகையே!  அன்னமே!  பெண்ணரசி!

பேரழகி!  நான்கொண்ட பித்(து)அகல்வ(து)  எக்காலம்?


மொட்டழகு வாய்திறந்து முத்துநகை  சிந்துமுன்றன்

வட்டமுகம்  காணுகின்ற வாய்ப்புவரல்  எக்காலம்?


நாள்காட்டி  பார்த்து  நலிந்து  தவிப்பவளின்

தோள்காட்டும் துன்பம் தொலைவதுதான் எக்காலம்?


பஞசுத் தலையணையில்  பாவைகண் ணீர்சொரிந்து

துஞ்சுதல் கொள்ளாத் துயர்துடைத்தல்  எக்காலம்?


வெம்பித்  திரிபவளின் மேனிமெலி  வைத்தடுத்து

நம்பிக்கை யூட்டி  நலம்சேர்த்தல்  எக்காலம்?


மாமியார்  மாமனார்  மற்றுமுளோர்  சூழ்ந்திருந்தும்

சாமியெனைத்  தேடுமவள்  சாந்தமுறல்  எக்காலம்?


பார்க்கின்ற காட்சியெலாம் பாவையவள் தோன்றுகின்றாள்;

ஓர்மையுடன் வேலையிலே ஊன்றிடுதல்  எக்காலம்?


நீலக்  கடல்தனையும்  நீள்மணல்சேர்  பாலையையும்

காலமெலாம்  காணும்  கலிதீர்தல்  எக்காலம்?


சிந்தனையை நேராக்கிச் செய்தொழிலைச் சீராக்கி

வந்தநோக்  கம்முடிப்பேன்  வாழ்ந்து.


(தோள் காட்டும் துன்பம்=பிரிவுத் துன்பத்தால்  பெண்களின் தோள்கள்

மெலிவடையும் என்று இலக்கியங்கள் கூறுகின்றன.

துஞ்சுதல் கொள்ளாத் துயர்=தூக்கம் வராத துயரம்.)