Friday, 4 October 2024

வெளிநாடு சென்றவர் புலம்பும் எக்காலக் கண்ணி.

 பொருள் தேடி வெளிநாடு சென்றவர் புலம்பும் எக்காலக்கண்ணி.


கைநிறைய ஊதியத்தைக் கச்சிதமாய் ஈட்டிடவே

மைவிழியில் லாளை மனம்மறுக---நைதலுடன்

நீங்கிப் பணம்கொழிக்கும் நேரில் துபாய்வந்தேன்;

தீங்கில் தொழிலில் திளைத்து.


(தீங்கில்லாத தொழிலில் திளைத்துக் கைநிறைய ஊதியத்தைக்

கச்சிதமாய் ஈட்டிடவே............என்று பொருள் கொள்ளல் வேண்டும்.)


                  எக்காலக் கண்ணி.


வந்தநாள்  தொட்டு  மனைவியைப் பற்றித்தான்

சிந்தனை சுற்றிவரும்;  தேறிடுதல் எக்காலம்?


கைப்பிடித்த  நங்கை  கரிசனத்தோ(டு) அன்னமிட்டு

மெய்சிலிர்க்கச்  செய்திடுமவ்  வேளைவரல்  எக்காலம்?


அன்புக்(கு)  உரியாள்  அழகுமிகு  தோள்களிலே

இன்பமாய்ச்  சாய்ந்தே  இளைப்பாறல்  எக்காலம்?


கண்ணுக்(கு)  இனியாளின் கைகோர்த்துச் சோலையிலே

பண்ணுடன்  பாடிப்  பரிவடைதல்  எக்காலம்?


ஆரணங்கே!  காரிகையே!  அன்னமே!  பெண்ணரசி!

பேரழகி!  நான்கொண்ட பித்(து)அகல்வ(து)  எக்காலம்?


மொட்டழகு வாய்திறந்து முத்துநகை  சிந்துமுன்றன்

வட்டமுகம்  காணுகின்ற வாய்ப்புவரல்  எக்காலம்?


நாள்காட்டி  பார்த்து  நலிந்து  தவிப்பவளின்

தோள்காட்டும் துன்பம் தொலைவதுதான் எக்காலம்?


பஞசுத் தலையணையில்  பாவைகண் ணீர்சொரிந்து

துஞ்சுதல் கொள்ளாத் துயர்துடைத்தல்  எக்காலம்?


வெம்பித்  திரிபவளின் மேனிமெலி  வைத்தடுத்து

நம்பிக்கை யூட்டி  நலம்சேர்த்தல்  எக்காலம்?


மாமியார்  மாமனார்  மற்றுமுளோர்  சூழ்ந்திருந்தும்

சாமியெனைத்  தேடுமவள்  சாந்தமுறல்  எக்காலம்?


பார்க்கின்ற காட்சியெலாம் பாவையவள் தோன்றுகின்றாள்;

ஓர்மையுடன் வேலையிலே ஊன்றிடுதல்  எக்காலம்?


நீலக்  கடல்தனையும்  நீள்மணல்சேர்  பாலையையும்

காலமெலாம்  காணும்  கலிதீர்தல்  எக்காலம்?


சிந்தனையை நேராக்கிச் செய்தொழிலைச் சீராக்கி

வந்தநோக்  கம்முடிப்பேன்  வாழ்ந்து.


(தோள் காட்டும் துன்பம்=பிரிவுத் துன்பத்தால்  பெண்களின் தோள்கள்

மெலிவடையும் என்று இலக்கியங்கள் கூறுகின்றன.

துஞ்சுதல் கொள்ளாத் துயர்=தூக்கம் வராத துயரம்.)

No comments:

Post a Comment