Sunday, 24 November 2024

இக் குச்சிலை யான் இருப்பிடம் என்று ஆர் சொன்னார்?

 இக்குச் சிலையான் இருப்பிடம் என்று ஆர் சொன்னார்?


பருவ வயதில் ஆண், பெண், ஏழை, பணக்காரன் என்ற

வேறுபாடின்றி அனைவரையும் பாதிக்கும் உணர்வு

காதல் உணர்வு. காதல் வயப்பட்ட தலைவி ஒருத்திக்கு

உரிய பருவ வயதில் காதல் உணர்வு தோன்றிவிட்டது.

அவள் மனத்தை ஈர்த்த தலைவனை அடிக்கடி நினைத்துச்

சோர்வடைகின்றாள். அவனைச் சந்திக்க இயலாத நேரங்

களில் தலைவிக்கு உண்ணும் உணவு பிடிக்கவில்லை.

உறங்க முயன்றால் உறக்கமும் வரவில்லை. காதல் உணர்வு

களுக்குக்  காரணகர்த்தா மன்மதன் என்று இலக்கியங்கள்

இயம்புகின்றன. அவன் பருவப் பெண்களை நோக்கிக் கரும்பு

வில்லை வளைத்து மலர்க் கணைகளை ஏவுவதாக இலக்கியம்

விவரிக்கின்றது.


இங்கு குறிப்பிடப்படும் தலைவி சிறிய இல்லத்தில் வாழ்ந்துவரும்

செல்வச் செழிப்பற்ற தலைவி. அவள் தன் காதலனின் நினைவால்

வாடும் பொழுது "இந்த உலகத்தில் ஓவியங்கள் தீட்டப்பட்ட உயர்ந்த

மாளிகைகள்,  தென்றல் தவழும் பெரிய சாளரங்களைக் கொண்ட

வீடுகள், சுற்றிச் சுற்றிச் செல்லுதற்குரிய பளிங்கினாற் கட்டப்பட்ட

மிகப்பெரிய இல்லங்கள், இன்னும் இவை போன்ற செல்வச் செழிப்புள்ள

இடங்களையெல்லாம் தவிர்த்து இக் குச்சிலை--இந்த சிறிய இல்லத்தை--

தேர்த்தெடுத்து அதில் வாழும் என்னை நோக்கி இக்குச் சிலையான்--

கரும்பு வில்லையுடைய மன்மதன்,(இக்கு=கரும்பு; சிலை=வில்) மலர்க்

கணைகளைத் தொடுக்கின்றானே, அந்த மன்மதனுக்கு யான் வாழுமிடம்

இக் குச்சில்(சிறிய வீடு) என்று யார் சொன்னார்கள்?" என்று நொந்து தனக்குத்

தானே புலம்புகின்றாள்.(இயற்கைக்கு ஏழை, செல்வர் என்ற பாகுபாடு கிடையாது.

உரிய பருவத்தில் அது தன் கடமையைத் தவறாது செய்யும்.)

இந்த நிகழ்வுக்குரிய பாடலைப் பார்ப்போம்:

"சித்திரமா மண்டபங்கள்,  தென்றல்வரு சாளரங்கள்,

பத்தி யுலாவும் பளிக்கறைகள்---இத்தனைவிட்(டு)

இக்குச்  சிலையான் இருப்பிடம்என்(று) ஆர்சொன்னார்?

இக்குச் சிலையானுக்(கு) இன்று".

புலவர்: மதுர கவிராயர்

இக்குச்சிலை--இக் குச்சிலை(இந்தச் சிறிய வீட்டை);

யான்இருப்பிடம்-- எனது இருப்பிடம்;

இக்குச் சிலையானுக்கு--- கரும்பு வில்லுக்காரனுக்கு.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

ஏகம்பவாணன்:- தென்பெண்ணையாற்றங்கரையில்

திருக்கோவலூர்ப் பகுதியில் ஆற்றூர் என்னும் ஊரைத்

தலைநகராகக் கொண்டு ஆண்டவன் ஏகம்பவாணன். இவன்

குறுநில மன்னன் என்ற போதிலும் இவன் காலத்தில் (15ஆம்

நூற்றாண்டு) மூவேந்தர்களும் செல்வாக்கு இழந்து சிற்றரசர்

களாக ஆட்சிசெய்த காலக்கட்டம். பாண்டிய நாட்டில் சிறீவல்லப

மாறன் ஆண்டுவந்தான். இவனுக்கும் ஏகம்பவாணனுக்கும்

இடையே நடந்த போரில் ஏகம்பவாணன் வெற்றிபெற்றான்.

பாண்டியனுடைய தலைநகர் மதுரையை ஒரு பாணனுக்குத்

தானமாக அளித்ததாகத் தனிப்பாடல் திரட்டிலுள்ள பாடல் கூறுகிறது.

இந்த ஏகம்பவாணன் மேல் காதல் கொண்ட பெண்ணொருத்தி

ஏகம்பவாணனை வணங்க வாய்ப்புக்கிடைக்காமல் அவன் யானையை

வணங்க எண்ணியதாக ஒரு பாடல் உண்டு. அது பின்வருமாறு:

"பாணன் மதுரைப் பதியாள வைத்தபிரான்

வாணர் புகழவரும் ஏகம்ப---வாணன்

கரும்போ தகமேநின் கால்பணிவேன், மீண்டு

வரும்போ தகமே வரின்".

பொருள்:

பாணனுக்கு மதுரையைத் தானமளித்து அதனை அவன் ஆளச்செய்த

ஏகம்பவாணனின் கரிய/பெரிய யானையே! நீ பொய்கையில் நீராடிவிட்டு

அரண்மனைக்குத்திரும்பும் பொழுது என் இல்லத்தின் அருகில் வந்தால்

உன் காலில் விழுந்து வணங்குவேன்.

இதில் பாடலின் பின் இரண்டு வரிகளும் சுவையானவை. கரும்போதகமே!

என்னும் சொல் கரிய யானையே என்று பொருள்படும். (போதகம்=யானை).

மீண்டு வரும்போதகமே வரின்= மீண்டு வரும் போது அகமே வரின்= அரண்

மனைக்குத் திரும்பும் வேளையில், என் அகமே வரின்= மீண்டு வரும் போது

என் வீட்டருகே வந்தால்; நின் கால்பணிவேன்=நின் காலில் விழுந்து வணங்குவேன்.


பார்வை:

தனிப்பாடல் திரட்டு(முதல் பாகம்) மூலமும் உரையும்;

ஆசிரியர்: கா.சுப்பிரமணிய பிள்ளை(கா.சு.பிள்ளை).

Sunday, 10 November 2024

சேற்றூர்ச் சமீனும் சொக்கம்பட்டி சமீனும்..

 சேற்றூர்ச் சமீனுக்குதவிய சொக்கம்பட்டி சமீன்.


ஏறத்தாழ  இருநூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன், திருநெல்வேலி

மாவட்டத்தில் வடகரையாதிக்கம் என்னும் பெயருடைய சொக்கம்பட்டி

சமீனில்  சமஸ்தானாதிபதியாக இருந்தவர் பெரியசாமிச் சின்னணைஞ்சாத்

தேவர் ஆவார். அவர்க்கு அமைச்சராகவும் படைத்தலைவர் ஆகவும் பணி 

புரிந்தவர் பொன்னம்பலம் பிள்ளை என்பவர் ஆவார். இருவருமே தமிழ்ப்

புலமை மிக்கவர்கள். சமீன்தார் சின்னணைஞ்சாத் தேவர் தம் அமைச்சரான

பொன்னம்பலம் பிள்ளையின் அறிவையும் சிறப்பையும் நன்குணர்ந்து அவர்பால்

மிக்க பேரன்பும் மதிப்பும் கொண்டிருந்தார். இருவரிடையேயும் அவ்வளவு

நட்பும் மனவொற்றுமையும் நிலவியது சமீனில் வாழ்ந்துவந்த அனைவரையும்

வியப்புக்குள்ளாக்கியது.


அக்காலத்தில் சேற்றூரில்(திருவில்லிபுத்தூர் மற்றும் இராசபாளையம் என்னும்

ஊர்களுக்குஅருகில் அமைந்துள்ளது) சிவப்பிரகாசத் திருவணாதத்துரை என்பவர்

சமீன்தார் ஆகத் திகழ்ந்தார். இவர் சொக்கம்பட்டி சமீன்தார் மற்றும் அவர் அமைச்சர்

பொன்னம்பலம் பிள்ளை யாகிய இருவர் மீதும் பெருமதிப்புக்கொண்டிருந்தார்.

ஆனால் கெடுவாய்ப்பாக அருகிலுள்ள சிவகிரி(தென்மலை என்ற பெயரும் உண்டு)

சமீன்தாரிடம் எப்பொழுதும் பகைமை பாராட்டினார். தென்மலை சமீன் சேற்றூரை

விடவும் வலிமை கொண்ட சமீனாகும். அதனால் சேற்றூர்ச் சமீன்தார் மிகுந்த மன

உளைச்சலுக்கும் துன்பத்துக்கும் ஆளானார். போதாக் குறைக்கு, ஊற்று மலை சமீனின்

ஆதரவும் தென்மலைக்கு இருந்தது.


இத்தகைய சூழ்நிலையில், வலுவான ஒரு துணை கிடைத்தால் தம் சமீன் யாதொரு

அச்சமும் இன்றி மக்களைப் பாதுகாக்க இயலும் என்று சேற்றூர்ச் சமீன்தார் எண்ணினார்.

இந்த எண்ணத்துடன் சேற்றூர்ச் சமீன்தார் சிவப்பிரகாசத் திருவணாதத்துரை தம்

பரிவாரங்கள் புடைசூழத் தக்க காணிக்கைகளுடன் சொக்கம்பட்டி சமீனுக்கு

வருகை புரிந்தார். சொக்கம்பட்டி சமீன்தார் சின்னணைஞ்சாத் தேவரையும் அவர்

புதல்வர் இராசகோபாலத் தேவரையும் மரியாதை நிமித்தமாகச் சந்தித்துத் தமது

சேற்றூர்ச் சமீனுக்கு அவர்களது ஆதரவு தேவை என்பதை விளக்கமாக எடுத்துச்

சொன்னார். அமைச்சர் பொன்னம்பலம் பிள்ளையையும் சந்தித்துத் தம் சமீன்

சந்திக்கும் இடர்களைப் பற்றி எடுத்துரைத்தார். சேற்றூர்ச் சமீன்தார் தமிழ்ப் புலமை

மிக்கவர். இந்நிகழ்வை ஒரு பாடலில் வடித்தார்; அது பின்வருமாறு:

"கரைகாணா  திருந்த,துன்பக் கடல்கடந்து

        வடகரையுங் கண்டேன்; கல்விக்(கு)

உரைகாணும் துரை, பெரிய சாமியைக்கண்

        டேன்;மழைக்கார்  ஓங்கக் கண்டேன்;

நிரைகாணக் குன்றெடுத்த ராசகோ

        பாலனையும்  நேரே கண்டேன்;

வரைகாணும்  படிபுயமும்  பூரித்தேன்;

        நிலைமைபெற்றேன்;  வாழ்வுற் றேனே!"

(மழைக்கார்=கருமேகம்; நிரை=பசுக்கூட்டம்;

நிரை காணக் குன்றெடுத்த ராஜகோபாலன்=

கோவர்த்தனகிரியைத் தூக்கிய கிருட்டிணனை

ஒத்தவரான இளவரசர் இராசகோபாலத் தேவர்).


ஆனால், சொக்கம்பட்டி சமீன்தார் பற்பல சமீன்பணிகளுக் கிடையே

சேற்றூர்ச் சமீன்தாரின் கோரிக்கையை மறந்துவிட்டார். எந்த உதவி

யையும் புரியவில்லை. சிவப்பிரகாசத் திருவணாதத்துரை சளைக்காமல்

பல மடல்களையும் அனுப்பினார். ஆனால் சொக்கம்பட்டி சமீனின் உதவி

வரவேயில்லை. சேற்றூர்ச் சமீன் உடனே சொக்கம்பட்டி சமீனின் அமைச்சர்

பொன்னம்பலம் பிள்ளைக்கு ஓலை அனுப்பி அதில் தாம் பல சமயங்களில்

சொக்கம்பட்டி சமீன்தாருக்கு அனுப்பிய மடல்களைப் பற்றி எடுத்துரைத்து

உடனடியாகத் தமது சமீனுக்கு ஆதரவுக்கரம் நீட்டக் கோரிக்கை விடுத்தார்.

பொன்னம்பலம் பிள்ளை தாமதமின்றிச் சொக்கம்பட்டி சமீன்தாரிடம் எல்லாச்

செய்தியையும் விரிவாக விளக்கிச் சேற்றூராருக்குத் தேவையான உதவி

செய்தல் இன்றியமையாதது எனக் கூறினார். சமீன்தார்" ஆமாம், சேற்றூரார்

நல்ல தமிழ்க் கவிதைகள் வாயிலாகத் தம் துன்பத்தை எடுத்துரைத்து உதவி

கோரினார். பல அரசுப் பணிகளுக்கிடையே நான் மறந்துவிட்டேன். நீரே

படையைத் திரட்டிச் சேற்றூராருக்கு உதவி புரியும்" என்று ஆணையிட்டார்.


அந்த உத்தரவுக்கு இணங்கப் பொன்னம்பலம் பிள்ளை  படையுடன் சேற்றூர்

சென்றார். சொக்கம்பட்டிப் படையும் சேற்றூர்ப் படையும் இணைந்து தென்மலை

என்ற சிவகிரிச் சமீன் படையுடன் மோதினர். தென்மலைச் சமீனுக்கு ஊற்று மலை

சமீன் ஆதரவு இருந்த போதிலும்  போரில் தோற்க நேர்ந்தது. சேற்றூர் சமீன்தார்

சிவப்பிரகாசத் திருவணாதத்துரை பொன்னம்பலம் பிள்ளைக்கும் சொக்கம்பட்டி

சமீன்தார் சின்னணைஞ்சாத் தேவருக்கும் உளமார்ந்த நன்றி நவின்றார். அவர்

பாடல் பின்வருமாறு:

"சேற்றூரார் நெஞ்சம் திடப்பட்டார்; தென்மலையார்

தோற்றோமென் றோடித் துயருற்றார்--மாற்றலர்கள்

தெண்டனிடுஞ் சின்னணைஞ்சான் சேனா பதிபொன்னன்

தண்டிகையைக் கண்டவுடன் தான்."

(தண்டிகை= ஒரு பல்லக்குவகை)


தமிழ்ப் புலமை மிக்கவர்கள் கூடினால் அவர்களுடைய மகிழ்ச்சியும் துக்கமும்

பாடல்களாகவே வெளிப்படுகின்றன.


ஆதாரம்:

டாக்டர் உ.வே.சாமிநாதையரின் " நினைவு மஞ்சரி" நூல்.