Sunday, 24 November 2024

இக் குச்சிலை யான் இருப்பிடம் என்று ஆர் சொன்னார்?

 இக்குச் சிலையான் இருப்பிடம் என்று ஆர் சொன்னார்?


பருவ வயதில் ஆண், பெண், ஏழை, பணக்காரன் என்ற

வேறுபாடின்றி அனைவரையும் பாதிக்கும் உணர்வு

காதல் உணர்வு. காதல் வயப்பட்ட தலைவி ஒருத்திக்கு

உரிய பருவ வயதில் காதல் உணர்வு தோன்றிவிட்டது.

அவள் மனத்தை ஈர்த்த தலைவனை அடிக்கடி நினைத்துச்

சோர்வடைகின்றாள். அவனைச் சந்திக்க இயலாத நேரங்

களில் தலைவிக்கு உண்ணும் உணவு பிடிக்கவில்லை.

உறங்க முயன்றால் உறக்கமும் வரவில்லை. காதல் உணர்வு

களுக்குக்  காரணகர்த்தா மன்மதன் என்று இலக்கியங்கள்

இயம்புகின்றன. அவன் பருவப் பெண்களை நோக்கிக் கரும்பு

வில்லை வளைத்து மலர்க் கணைகளை ஏவுவதாக இலக்கியம்

விவரிக்கின்றது.


இங்கு குறிப்பிடப்படும் தலைவி சிறிய இல்லத்தில் வாழ்ந்துவரும்

செல்வச் செழிப்பற்ற தலைவி. அவள் தன் காதலனின் நினைவால்

வாடும் பொழுது "இந்த உலகத்தில் ஓவியங்கள் தீட்டப்பட்ட உயர்ந்த

மாளிகைகள்,  தென்றல் தவழும் பெரிய சாளரங்களைக் கொண்ட

வீடுகள், சுற்றிச் சுற்றிச் செல்லுதற்குரிய பளிங்கினாற் கட்டப்பட்ட

மிகப்பெரிய இல்லங்கள், இன்னும் இவை போன்ற செல்வச் செழிப்புள்ள

இடங்களையெல்லாம் தவிர்த்து இக் குச்சிலை--இந்த சிறிய இல்லத்தை--

தேர்த்தெடுத்து அதில் வாழும் என்னை நோக்கி இக்குச் சிலையான்--

கரும்பு வில்லையுடைய மன்மதன்,(இக்கு=கரும்பு; சிலை=வில்) மலர்க்

கணைகளைத் தொடுக்கின்றானே, அந்த மன்மதனுக்கு யான் வாழுமிடம்

இக் குச்சில்(சிறிய வீடு) என்று யார் சொன்னார்கள்?" என்று நொந்து தனக்குத்

தானே புலம்புகின்றாள்.(இயற்கைக்கு ஏழை, செல்வர் என்ற பாகுபாடு கிடையாது.

உரிய பருவத்தில் அது தன் கடமையைத் தவறாது செய்யும்.)

இந்த நிகழ்வுக்குரிய பாடலைப் பார்ப்போம்:

"சித்திரமா மண்டபங்கள்,  தென்றல்வரு சாளரங்கள்,

பத்தி யுலாவும் பளிக்கறைகள்---இத்தனைவிட்(டு)

இக்குச்  சிலையான் இருப்பிடம்என்(று) ஆர்சொன்னார்?

இக்குச் சிலையானுக்(கு) இன்று".

புலவர்: மதுர கவிராயர்

இக்குச்சிலை--இக் குச்சிலை(இந்தச் சிறிய வீட்டை);

யான்இருப்பிடம்-- எனது இருப்பிடம்;

இக்குச் சிலையானுக்கு--- கரும்பு வில்லுக்காரனுக்கு.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

ஏகம்பவாணன்:- தென்பெண்ணையாற்றங்கரையில்

திருக்கோவலூர்ப் பகுதியில் ஆற்றூர் என்னும் ஊரைத்

தலைநகராகக் கொண்டு ஆண்டவன் ஏகம்பவாணன். இவன்

குறுநில மன்னன் என்ற போதிலும் இவன் காலத்தில் (15ஆம்

நூற்றாண்டு) மூவேந்தர்களும் செல்வாக்கு இழந்து சிற்றரசர்

களாக ஆட்சிசெய்த காலக்கட்டம். பாண்டிய நாட்டில் சிறீவல்லப

மாறன் ஆண்டுவந்தான். இவனுக்கும் ஏகம்பவாணனுக்கும்

இடையே நடந்த போரில் ஏகம்பவாணன் வெற்றிபெற்றான்.

பாண்டியனுடைய தலைநகர் மதுரையை ஒரு பாணனுக்குத்

தானமாக அளித்ததாகத் தனிப்பாடல் திரட்டிலுள்ள பாடல் கூறுகிறது.

இந்த ஏகம்பவாணன் மேல் காதல் கொண்ட பெண்ணொருத்தி

ஏகம்பவாணனை வணங்க வாய்ப்புக்கிடைக்காமல் அவன் யானையை

வணங்க எண்ணியதாக ஒரு பாடல் உண்டு. அது பின்வருமாறு:

"பாணன் மதுரைப் பதியாள வைத்தபிரான்

வாணர் புகழவரும் ஏகம்ப---வாணன்

கரும்போ தகமேநின் கால்பணிவேன், மீண்டு

வரும்போ தகமே வரின்".

பொருள்:

பாணனுக்கு மதுரையைத் தானமளித்து அதனை அவன் ஆளச்செய்த

ஏகம்பவாணனின் கரிய/பெரிய யானையே! நீ பொய்கையில் நீராடிவிட்டு

அரண்மனைக்குத்திரும்பும் பொழுது என் இல்லத்தின் அருகில் வந்தால்

உன் காலில் விழுந்து வணங்குவேன்.

இதில் பாடலின் பின் இரண்டு வரிகளும் சுவையானவை. கரும்போதகமே!

என்னும் சொல் கரிய யானையே என்று பொருள்படும். (போதகம்=யானை).

மீண்டு வரும்போதகமே வரின்= மீண்டு வரும் போது அகமே வரின்= அரண்

மனைக்குத் திரும்பும் வேளையில், என் அகமே வரின்= மீண்டு வரும் போது

என் வீட்டருகே வந்தால்; நின் கால்பணிவேன்=நின் காலில் விழுந்து வணங்குவேன்.


பார்வை:

தனிப்பாடல் திரட்டு(முதல் பாகம்) மூலமும் உரையும்;

ஆசிரியர்: கா.சுப்பிரமணிய பிள்ளை(கா.சு.பிள்ளை).

No comments:

Post a Comment