Wednesday, 29 January 2025

வாணனைப் பழிவாங்கிய பாண்டியன்.

 வாணனைப் பழிவாங்கிய பாண்டியன்.


கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் திருக்கோவிலூர் வட்டத்தில் ஆறகழூர்

என்ற ஊர் உண்டு. அது முற்காலத்தில் பெரிய நகராக, ஆறு அகழி

களையும் பெரிய கோட்டையையும் உடையதாக விளங்கியமையால்

ஆறகழூர் என் அழைக்கப்பட்டது. அதனை 'ஆறை' என இலக்கிய வழக்கில்

புலவர்கள் அழைப்பர். ஆறகழூரைத் தலைநகராகக் கொண்ட பகுதி மகத

மண்டலம் என்ற பெயர் பெற்றது. அப்பகுதியை ஆண்டவர்கள் வாணர்கள்

என்று அழைக்கப்பட்டனர். வாண அரசர்கள் தம்மை மகாபலிச் சக்கரவர்த்தி

யின் வழித்தோன்றல்கள் என்று சொல்லிக்கொள்வர். மகதேசன், மாகதர்கோன்

என்ற பெயர்களால் வாண அரசர்கள் புகழப்பட்டனர். (பொன்னியின் செல்வனில்

குறிப்பிடப்படும் வல்லவரையன் வந்தியத்தேவன் இந்த மரபைச் சேர்ந்தவரே).

"வாணன் புகழுரையா வாயுண்டோ? மாகதர்கோன்

வாணன் பெயரெழுதா மார்புண்டோ?---வாணன்

கொடிதாங்கி நில்லாத கொம்புண்டோ?  உண்டோ

அடிதாங்கி நில்லா அரசு?".

என்று புலவர்கள் பாடியுள்ளனர்.


இந்தக்கதை நிகழ்ந்த காலம்  கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டாக இருக்கலாம்.

அந்தக் காலத்தில் இப்பகுதியை ஆண்ட மன்னன் பெருவீரன் வாணகோவரையன்

இராசராச தேவன் ஆவான். மூவேந்தர்களும் வலிமையிழந்து நலிவடைந்து ஆட்சி

புரிந்த காலம். ஒருமுறை ஆறை வாணனுக்கும் பாண்டியனுக்கும் இடையே நிகழ்ந்த

போரில் பாண்டியன் தோற்கடிக்கப்பட்டான். பாண்டிய நாடு வாணன் ஆதிக்கத்தின்

கீழ் வந்தது. ஆண்டு தோறும் திறை(கப்பம்) செலுத்தவேண்டிய இழிநிலைக்கு உள்ளானது.


காலச் சக்கரம் சுழன்றது.  வாணகோவரையன் இராசராச தேவன் மறைந்தான்.

அவனுக்குப் பின் ஆட்சிக்கு வந்த அவன் மகன் தன் தந்தை போல் வீரமுடையவன்

அல்லன். அதேநேரத்தில் பாண்டியன் காலமான பிறகு பதவிக்கு வந்த அவன் மகன்

மிக்க வீரமுடையவனாகவும் படை திரட்டுவதில் வல்லவனாகவும் விளங்கினான்.

பாண்டியர்க்கு நேர்ந்த இழிவைத் துடைத்தெறியத் திட்டம் தீட்டினான். அந்தக் காலக்

கட்டத்தில் கொங்கு நாட்டின் பெரும்பகுதி பாண்டியனின் ஆட்சிக்கீழ் இருந்தது. கொங்கு

இளைஞர்கள் பலர் பாண்டியனின் படையில் பணியாற்றினர். ஒருநாள் பாண்டியன்

தன் படையில் பணிபுரியும் கொங்கு இளைஞர்களிடம் உரையாடிக் கொண்டிருக்கையில்

" உங்களில் யாருக்காவது வாண தேசத்து அரசனைப் பிடித்து வந்து என்முன் நிறுத்தும்

துணிவும் வீரமும்  உள்ளதா?" என்று வினவினான். அப்பொழுது மோரூர் என்னும் ஊரைச்

சேர்ந்த சூரியன் என்ற வீரன் முன்வந்து " என்னால் வாணனைப் பிடித்து வர இயலும்" என்று

கூறினான். அவன் முகத்தைக் கூர்ந்து நோக்கிய பாண்டியன் "சரி; நீயே இப்பணியைச்

செய். மற்றவர்கள் இவன் கோரும் உதவிகளைச் செய்யுங்கள்" என்று ஆணையிட்டான்.


சூரியன் அடுத்து வந்த நாட்களில் மளமளவென்று பல செயல்களைச் செய்தான். ஆறகழூர்

கொங்கு நாட்டின் எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது. சூரியன் அந்த எல்லையில் பாண்டி

யனின் படைப்பிரிவு ஒன்றை நிலைநிறுத்த ஏற்பாடு செய்தான். சங்ககிரி என்ற ஊரில் ஒரு

மலையும் அதன்மேல் ஒரு கோட்டையும் இருந்தன. பாண்டியன் அங்கு வந்து தங்கியிருந்

தால் தான் வாணனைப் பிடித்து அக்கோட்டைக்குள் அழைத்து வரும் வாய்ப்பு மிக அதிகம்

என்ற கருத்தைப் பாண்டியனிடம் தெரிவித்தான். பாண்டியனும் அவ்வாறே சங்ககிரிக்

கோட்டைக்கு வந்து தங்கியிருந்தான்.


சூரியன் நம்பிக்கைக்குரிய நாலைந்து வீரர்களுடன் ஆறகழூர் ஊருக்குள் நுழைந்தான்.

தனக்கும் தன்னுடன் வந்துள்ள நண்பர்களுக்கும் ஏற்ற வேலை ஏதாவது கிடைக்குமா?

என்று ஊர் மக்களிடம் விசாரித்தான். "உங்கள் ஊரில் வேலை கிடைக்கவில்லையா?"

என்று மக்கள் கேட்க" நாங்கள் பெரிய செல்வந்தரிடம் பல்லக்குத் தூக்கியாகப் பணி

புரிந்தோம். அண்மையில் அவர் காலமாகிவிட்டார். எனவே பிழைப்புக்காக இந்த ஊருக்கு

வந்துள்ளோம். பல்லக்குத் தூக்குவதைத் தவிர வேறு வேலை எங்களுக்குத் தெரியாது.

உங்கள் மன்னரின் அரண்மனையில் எங்களுக்கு வேலை கிட்டுமா?" என்று வினவினர்.

இந்தச் செய்தி வாணன் காதுகளுக்கு எட்டியது. அண்மையில் ஒரு புதிய பல்லக்கை

உருவாக்கி அதனைச் சுமக்க வலிமை கொண்ட ஆட்களைத் தேடிக் கொண்டிருந்தான்.

எனவே, அரண்மனை ஊழியர்களை அனுப்பிச் சூரியனையும் அவன் பணியாட்களை

யும் அழைத்து வரச் செய்து பல்லக்கை அவர்கள் பொறுப்பில் ஒப்படைத்தான். ஒரு

வாரம் சூரியனும் அவன் ஆட்களும் வாணன் திருப்தியடையும் வண்ணம் பணி செய்தனர்.

அரண்மனைப் பெண்டிரைப் பாதுகாப்பாக அழைத்துச்சென்று அரண்மனைக்குத்

திரும்பினர். வாணனுக்கு அவர்கள்மேல் நம்பிக்கை அதிகரித்தது.


ஒருநாள் நள்ளிரவு வரை ஆடல் பாடல் நிகழ்ச்சியைக் கண்டு களித்த வாணன் மிகச்

சோர்வடைந்தான். அரண்மனை  அந்தப்புரத்தில் எழிலான கட்டிலில் தூங்கிவிட்டான.

காலையில் அருகிலுள்ள ஒரு ஊருக்குச் செல்லவேண்டிய கட்டாயம் இருந்தது.

மன்னர்கள் எங்கு சென்றாலும் குதிரையேறிச் செல்வதுதான் வழக்கம். ஆனால்

முதல்நாள் சரியாக உறங்காததால்  அலுப்பும் களைப்பும் ஆட்கொண்டன. எனவே,

வழக்கத்துக்கு மாறாகப் பல்லக்கில் பயணம் மேற்கொள்ள முடிவெடுத்தான். அதன்படி

பல்லக்கில் ஏறிப் படுத்துவிட்டான். உடனேயே ஆழ்ந்த உறக்கம் அவனை ஆட்கொண்டது.


இந்த நல்வாய்ப்புக்காகக் காத்திருந்த சூரியன் தன் ஆட்களுடன் பல்லக்கைச்

சுமந்துகொண்டு ஆறகழூரைக்

கடந்து சங்ககிரிக் கோட்டைக்குள் நுழைந்து பாண்டியன் அரண்மனையில் நிறுத்தினான்.

உடனே, ஆயுதம் தாங்கிய பாண்டிய வீரர்கள் பல்லக்கைச் சூழ்ந்துகொண்டனர். உறக்கம் 

கலைந்து எழுந்த வாணன் தான் இக்கட்டில் மாட்டியிருப்பதை யறிந்து நிலைகுலைந்து

போனான். சிறிது நேரத்தில் பாண்டியன் அரண்மனை முற்றத்துக்கு வந்து "வாணரே!

நீர் எம்வசம் சிக்கியுள்ளீர். ஆண்டுதோறும் திறை செலுத்தி எம் ஆட்சிக்கீழ் அரசு நடத்த

ஒப்புக் கொண்டால் உம்மை விடுவிக்கலாம்" என்றான். " பாண்டியரே! இச்செயல் அறமன்று;

வேறுவழியென்ன? திறை செலுத்த ஒப்புக் கொள்கிறேன்" என்றான் வாணன்.


பாண்டியன் சூரியனுக்குப் பல பரிசில்கள் நல்கினான். ஆகவராமன் என்ற பட்டத்தை

அளித்தான். சூரியன் என்ற பெயரை மாற்றிச் சூரிய காங்கேயன் என்று அழைக்கச்

செய்தான். வேளாளர்களைக் கங்காபுத்திரர்கள் என அழைப்பது வழக்கம். சூரியன்

வேளாளர் தலைவனாதலின் அவனைக் காங்கேயன் என்றழைக்கச் செய்தான்.

எழுகரைநாடு என்ற பகுதியை அரசாளுமாறு வழங்கினான்.

"மிண்டாறை வாணனைமுன் வெட்டாமல் பாண்டியன்நேர்

கொண்டுவந்து நிற்கவிட்ட கொற்றவனும் நீயலையோ?

தெண்டிரைசேர் மோரூரில் தென்னன்மகு டாசலனே!

மண்டலிகர் தேர்ந்துமெச்ச வாழ்சூர்ய காங்கெயனே!"

(,மிண்டு=செருக்குற்று நின்ற; தென்னன் மகுடாசலனே=

பாண்டியன் சூட்டிய மகுடத்தை உடைய தளராத உறுதி

யுள்ளவனே; மண்டலிகர்=மணடலங்களுக்கு நாயகராகிய

அரசர்கள்)


ஆதாரம்: நல்ல சேனாபதி நூல்; ஆசிரியர்: கி.வா.ஜ.அவர்கள்.

Thursday, 9 January 2025

புலியைத் தேடிப் புறப்பட்ட வள்ளல்.

புலியைத் தேடிப் புறப்பட்ட வள்ளல்.


இந்தக்கதை எப்பொழுது நிகழ்ந்தது என்று அறுதியிட்டுக் கூற

இயலவில்லை. ஏறத்தாழ இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு

நிகழ்ந்திருக்கலாம். கொங்கு நாட்டில் கோபிச்செட்டிப் பாளையத்

துக்கருகில் பாரியூர் என்ற ஊர் இருக்கிறது. ஊருக்குச் சற்றுத்

தொலைவில் பெருங்காடு ஒன்றும் சிறு குன்று ஒன்றும் இருந்தன.

அந்தப் பக்கங்களில் புலி ஒன்று நடமாடியதாகப் பொதுமக்கள்

பேசிக்கொண்டனர். காட்டுக்குள் மேயப்போன ஓரிரண்டு மாடுகள்

திரும்பி வரவேயில்லை. அதனால்தான் புலி உலவுவதாகப் பேச்சுக்

கிளம்பியது. ஆனால் யாரும் காட்டுக்குள் சென்று புலி நடமாட்டம்

உண்மைதானா என்று அறிய முன்வரவில்லை.


கொங்கு நாட்டில் அவ்வப்பொழுது வள்ளல்கள் பலர் தோன்றி

மக்களுக்குக் குறிப்பாகப் புலவர்களுக்கு உதவியுள்ளனர்.

கம்பனை ஆதரித்த சடையப்ப வள்ளலின் பூர்வீகம் கொங்குநாடு

என்று கொங்கு மண்டல சதகம் என்ற நூல் கூறுகிறது. சம்பந்தச்

சர்க்கரை என்ற வள்ளல் யாது காரணத்தாலோ சங்ககிரிதுருக்கத்தில்

சிறையினில் இருந்தபொழுது தம்மையணுகி உதவி கேட்ட தமிழ்ப்

புலவருக்குச் சிறையிலிருந்து கொண்டே தன் மனைவியின் தாலியைக்

கொடுக்கச் செய்தார் என்று கொங்கு மண்டல சதகம் இயம்புகிறது.

"சங்க கிரிதுருக் கத்திற் சிறையினிற் சார்ந்திடுநாள்

சங்கையி லாதொரு பாவாணர் சென்று தமிழுரைக்க

அங்கண் இருந்துதன் இல்லாள் கழுத்தில் அணிந்திருக்கும்

மங்க லியந்தனைப் பெற்றளித் தான்கொங்கு மண்டலமே".

(பாடல் எண்:66--கொங்குமண்டல சதகம்).

இப்படிப்பட்ட வள்ளல்கள் பல்வேறு காலக்கட்டங்களில் வாழ்ந்துள்

ளனர். இந்தக்கதை நிகழ்ந்த காலத்தில் செட்டிபிள்ளையப்பன்

என்ற வள்ளல் வாழந்துகொணாடிருந்தார். அவரிடம் தமிழ்ப் புலவர்

களும் ஏனைய ஏழை மக்களும் உதவி பெற்றுச் செல்வது வழக்கம்.

அவரின் கொடைத்தன்மைக்குச் சோதனை வந்தது. ஓரிரண்டு

ஆண்டுகளாக மழை பொய்த்தமையால் விளைச்சல் குறைந்தது.

இருப்பினும் அவரின் கொடைத் தன்மை குறையவேயில்லை.

வரவு இல்லாமல் செலவு மட்டுமே செய்து வந்தமையால் அவர்

வறியவர் ஆனார்.


இந்த வறிய நிலையிலும் உதவி கேட்டு வருவோரின்  எண்ணிக்கை

குறையவில்லை. ஒருநாள் ஒரு புலவர் உதவி கேட்டு வர, வள்ளல்

கைகளைப் பிசைந்தவாறு இரண்டு நாட்கள் கழித்து வருமாறு கூறி

வந்தவரை வெறுங்கையோடு அனுப்பிவிட்டார். வள்ளலின் மனம்

மிக மிக நொந்த நிலையில் இருந்தது. அப்போழுது வள்ளலைத் தேடிவந்த

நண்பர் ஒருவர் புலியைப் பற்றிப் பேசி "இதை அடக்குவதற்கு நெஞ்சுரம்

கொண்ட ஆடவர் யாரும் இல்லையா?" என்று புலம்பிவிட்டு அகன்றார்.

இரவு முழுவதும் வள்ளல் இதைப் பற்றியே எண்ணியெண்ணி வருந்தினார்.

பிறருக்கு உதவ முடியாத வறுமை நிலையை எண்ணிக் குமைந்தார்.. பொழுது

ஒருவாறு விடிந்தது. வள்ளல் ஒரு முடிவுக்கு வந்தார். " காட்டுக்குள் நானே

சென்று புலியை எதிர்கொள்வேன். ஒன்று புலியைக் கொன்று மக்களுக்கு

நன்மை செய்தல் வேண்டும்; இல்லையேல் புலியால் கொல்லப்பட்டு வாழ்வைத்

தொலைத்தல் வேண்டும். பிறருக்கு உதவமுடியாமல் வறுமையில் உழல்வது

அவமானம்" என்று தமக்குள் கூறிக் கொண்டார். தம் கருத்தைக் குடும்பத்தாரிடம்

கூறிவிட்டுக் கைகளில் வாளையும் வேலையும் ஏந்திக்கொண்டு காட்டை. நோக்கிப்

புறப்பட்டார்.


காட்டையடைந்த வள்ளல் அந்தப் பகுதி முழுவதையும் சுற்றிவந்தார்.

புலியை எங்கும் காணவில்லை. ஏதாவது குகையில் தங்கியிருக்கும்

என்றெண்ணிக் காட்டின் நடுவிலுள்ள குன்றை நோக்கி நடந்தார்.

அங்கே தென்பட்ட காட்சி அவரைத் திகைக்க வைத்தது. புலி அங்கேயும்

தென்படவில்லை. ஆனால் குன்றின் மேல் நாலைந்து ஆட்கள் அமர்ந்து

ஏதோ செய்து கொண்டிருந்தனர். நெருங்கிச் சென்று பார்வையிடலாம்

என்றெண்ணிக் குன்றின் அடிவாரத்தை அடைந்துவிட்டார். வ‌ள்ளல்

நடந்து வந்தமையால் காட்டுக்குள் குவிந்து கிடந்த சருகுகள் ஓசை

யெழுப்பின. குன்றின்மேலிருந்த ஆட்கள் தம் வேலையைக் கைவிட்டு 

வருபவர் யார் என்று பார்த்தனர். கைகளில் வாளும் வேலும் தாங்கி

நிற்கும் வள்ளலின் வீரத் தோற்றத்தைக் கண்டு பதைபதைப்புக்கு

உள்ளாகி ஓடிவிட்டனர். வள்ளல் குன்றின் மேலேறிப் பார்த்தார்.

அங்கே அவிழ்ந்த நிலையில் மூட்டைமுடிச்சுகள் தென்பட்டன.

அவற்றை முற்றிலும் அவிழ்த்துப் பார்த்தால் நகைகள், அணிகலன்கள்

இருந்தன. "ஓகோ! அந்த ஆட்கள் திருடர்கள் போலும். அதனால்தான்

தம்மைக் கண்டதும் தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓடிவிட்டனர்.

பொதுமக்கள் காட்டுக்குள் வந்து தொல்லை செய்யாமலிருக்கப் புலி

நடமாடுகிறது என்ற புரளியைக் கிளப்பிவிட்டுள்ளனர்" என்றெண்ணினார்..


வள்ளல் அங்கிருந்த நகைகள், அணிகலன்களைத் திரட்டி மூட்டை

கட்டித் தோளில் சுமந்துகொண்டு ஊர்வந்து சேர்ந்தார். நடந்த

நிகழ்வுகள் அனைத்தையும் பொதுமக்களிடம் எடுத்துரைத்துப்

புலியைப் பற்றிய அச்சத்தைப் போக்கினார். இந்த நிகழவுகள்

அமரவிடங்கர் குறவஞ்சி என்னும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன.

"இட்ட மான கவிசொலும் பாவலற்(கு)

       இல்லை என்று சொலற்கஞ்சிக் காட்டில்வாழ்

துட்ட வன்புலித் தூரில் புகுந்தநல்

         தூய வன்கன வாள குலத்தவன்

செட்டி பிள்ளையப் பன்தினம் தொண்டுசெய்

         தேவி மாமலை மாதொரு பங்குள

கட்டு செஞ்சடை அமர விடங்கனார்

          கதித்து வாழ்பாரி யூரெங்கள் ஊரே".

(தூர்=புதர்; கனவாள குலம் என்பது கொங்கு வேளாளர்

குடிவகைகளுள் ஒன்று;)

ஆதாரம்: 'நல்ல சேனாபதி' நூல்- இயற்றியவர் கி.வா.

ஜகன்னாதனார்).