புலியைத் தேடிப் புறப்பட்ட வள்ளல்.
இந்தக்கதை எப்பொழுது நிகழ்ந்தது என்று அறுதியிட்டுக் கூற
இயலவில்லை. ஏறத்தாழ இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு
நிகழ்ந்திருக்கலாம். கொங்கு நாட்டில் கோபிச்செட்டிப் பாளையத்
துக்கருகில் பாரியூர் என்ற ஊர் இருக்கிறது. ஊருக்குச் சற்றுத்
தொலைவில் பெருங்காடு ஒன்றும் சிறு குன்று ஒன்றும் இருந்தன.
அந்தப் பக்கங்களில் புலி ஒன்று நடமாடியதாகப் பொதுமக்கள்
பேசிக்கொண்டனர். காட்டுக்குள் மேயப்போன ஓரிரண்டு மாடுகள்
திரும்பி வரவேயில்லை. அதனால்தான் புலி உலவுவதாகப் பேச்சுக்
கிளம்பியது. ஆனால் யாரும் காட்டுக்குள் சென்று புலி நடமாட்டம்
உண்மைதானா என்று அறிய முன்வரவில்லை.
கொங்கு நாட்டில் அவ்வப்பொழுது வள்ளல்கள் பலர் தோன்றி
மக்களுக்குக் குறிப்பாகப் புலவர்களுக்கு உதவியுள்ளனர்.
கம்பனை ஆதரித்த சடையப்ப வள்ளலின் பூர்வீகம் கொங்குநாடு
என்று கொங்கு மண்டல சதகம் என்ற நூல் கூறுகிறது. சம்பந்தச்
சர்க்கரை என்ற வள்ளல் யாது காரணத்தாலோ சங்ககிரிதுருக்கத்தில்
சிறையினில் இருந்தபொழுது தம்மையணுகி உதவி கேட்ட தமிழ்ப்
புலவருக்குச் சிறையிலிருந்து கொண்டே தன் மனைவியின் தாலியைக்
கொடுக்கச் செய்தார் என்று கொங்கு மண்டல சதகம் இயம்புகிறது.
"சங்க கிரிதுருக் கத்திற் சிறையினிற் சார்ந்திடுநாள்
சங்கையி லாதொரு பாவாணர் சென்று தமிழுரைக்க
அங்கண் இருந்துதன் இல்லாள் கழுத்தில் அணிந்திருக்கும்
மங்க லியந்தனைப் பெற்றளித் தான்கொங்கு மண்டலமே".
(பாடல் எண்:66--கொங்குமண்டல சதகம்).
இப்படிப்பட்ட வள்ளல்கள் பல்வேறு காலக்கட்டங்களில் வாழ்ந்துள்
ளனர். இந்தக்கதை நிகழ்ந்த காலத்தில் செட்டிபிள்ளையப்பன்
என்ற வள்ளல் வாழந்துகொணாடிருந்தார். அவரிடம் தமிழ்ப் புலவர்
களும் ஏனைய ஏழை மக்களும் உதவி பெற்றுச் செல்வது வழக்கம்.
அவரின் கொடைத்தன்மைக்குச் சோதனை வந்தது. ஓரிரண்டு
ஆண்டுகளாக மழை பொய்த்தமையால் விளைச்சல் குறைந்தது.
இருப்பினும் அவரின் கொடைத் தன்மை குறையவேயில்லை.
வரவு இல்லாமல் செலவு மட்டுமே செய்து வந்தமையால் அவர்
வறியவர் ஆனார்.
இந்த வறிய நிலையிலும் உதவி கேட்டு வருவோரின் எண்ணிக்கை
குறையவில்லை. ஒருநாள் ஒரு புலவர் உதவி கேட்டு வர, வள்ளல்
கைகளைப் பிசைந்தவாறு இரண்டு நாட்கள் கழித்து வருமாறு கூறி
வந்தவரை வெறுங்கையோடு அனுப்பிவிட்டார். வள்ளலின் மனம்
மிக மிக நொந்த நிலையில் இருந்தது. அப்போழுது வள்ளலைத் தேடிவந்த
நண்பர் ஒருவர் புலியைப் பற்றிப் பேசி "இதை அடக்குவதற்கு நெஞ்சுரம்
கொண்ட ஆடவர் யாரும் இல்லையா?" என்று புலம்பிவிட்டு அகன்றார்.
இரவு முழுவதும் வள்ளல் இதைப் பற்றியே எண்ணியெண்ணி வருந்தினார்.
பிறருக்கு உதவ முடியாத வறுமை நிலையை எண்ணிக் குமைந்தார்.. பொழுது
ஒருவாறு விடிந்தது. வள்ளல் ஒரு முடிவுக்கு வந்தார். " காட்டுக்குள் நானே
சென்று புலியை எதிர்கொள்வேன். ஒன்று புலியைக் கொன்று மக்களுக்கு
நன்மை செய்தல் வேண்டும்; இல்லையேல் புலியால் கொல்லப்பட்டு வாழ்வைத்
தொலைத்தல் வேண்டும். பிறருக்கு உதவமுடியாமல் வறுமையில் உழல்வது
அவமானம்" என்று தமக்குள் கூறிக் கொண்டார். தம் கருத்தைக் குடும்பத்தாரிடம்
கூறிவிட்டுக் கைகளில் வாளையும் வேலையும் ஏந்திக்கொண்டு காட்டை. நோக்கிப்
புறப்பட்டார்.
காட்டையடைந்த வள்ளல் அந்தப் பகுதி முழுவதையும் சுற்றிவந்தார்.
புலியை எங்கும் காணவில்லை. ஏதாவது குகையில் தங்கியிருக்கும்
என்றெண்ணிக் காட்டின் நடுவிலுள்ள குன்றை நோக்கி நடந்தார்.
அங்கே தென்பட்ட காட்சி அவரைத் திகைக்க வைத்தது. புலி அங்கேயும்
தென்படவில்லை. ஆனால் குன்றின் மேல் நாலைந்து ஆட்கள் அமர்ந்து
ஏதோ செய்து கொண்டிருந்தனர். நெருங்கிச் சென்று பார்வையிடலாம்
என்றெண்ணிக் குன்றின் அடிவாரத்தை அடைந்துவிட்டார். வள்ளல்
நடந்து வந்தமையால் காட்டுக்குள் குவிந்து கிடந்த சருகுகள் ஓசை
யெழுப்பின. குன்றின்மேலிருந்த ஆட்கள் தம் வேலையைக் கைவிட்டு
வருபவர் யார் என்று பார்த்தனர். கைகளில் வாளும் வேலும் தாங்கி
நிற்கும் வள்ளலின் வீரத் தோற்றத்தைக் கண்டு பதைபதைப்புக்கு
உள்ளாகி ஓடிவிட்டனர். வள்ளல் குன்றின் மேலேறிப் பார்த்தார்.
அங்கே அவிழ்ந்த நிலையில் மூட்டைமுடிச்சுகள் தென்பட்டன.
அவற்றை முற்றிலும் அவிழ்த்துப் பார்த்தால் நகைகள், அணிகலன்கள்
இருந்தன. "ஓகோ! அந்த ஆட்கள் திருடர்கள் போலும். அதனால்தான்
தம்மைக் கண்டதும் தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓடிவிட்டனர்.
பொதுமக்கள் காட்டுக்குள் வந்து தொல்லை செய்யாமலிருக்கப் புலி
நடமாடுகிறது என்ற புரளியைக் கிளப்பிவிட்டுள்ளனர்" என்றெண்ணினார்..
வள்ளல் அங்கிருந்த நகைகள், அணிகலன்களைத் திரட்டி மூட்டை
கட்டித் தோளில் சுமந்துகொண்டு ஊர்வந்து சேர்ந்தார். நடந்த
நிகழ்வுகள் அனைத்தையும் பொதுமக்களிடம் எடுத்துரைத்துப்
புலியைப் பற்றிய அச்சத்தைப் போக்கினார். இந்த நிகழவுகள்
அமரவிடங்கர் குறவஞ்சி என்னும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன.
"இட்ட மான கவிசொலும் பாவலற்(கு)
இல்லை என்று சொலற்கஞ்சிக் காட்டில்வாழ்
துட்ட வன்புலித் தூரில் புகுந்தநல்
தூய வன்கன வாள குலத்தவன்
செட்டி பிள்ளையப் பன்தினம் தொண்டுசெய்
தேவி மாமலை மாதொரு பங்குள
கட்டு செஞ்சடை அமர விடங்கனார்
கதித்து வாழ்பாரி யூரெங்கள் ஊரே".
(தூர்=புதர்; கனவாள குலம் என்பது கொங்கு வேளாளர்
குடிவகைகளுள் ஒன்று;)
ஆதாரம்: 'நல்ல சேனாபதி' நூல்- இயற்றியவர் கி.வா.
ஜகன்னாதனார்).
No comments:
Post a Comment