Tuesday, 25 March 2025

புதுமைப்பெண்.

புதுமைப் பெண்  விதித்த நிபந்தனை


ஓர் அழகிய நகரத்தில்  ஓவியக் கண்

காட்சி நடைபெறுகின்றது.  அக்காட்சிக்கு

மனைவியை  அழைத்துச்  செல்ல  எண்ணு

கின்றார், அக்குடும்பத்தின் தலைவர். கணவன்

மனைவிக்கிடையே கீழ்க்கண்டவாறு

உரையாடல் நடைபெறுகின்றது.:

கணவர்: நகரில் நடைபெறும்  ஓவியக்

                 கண்காட்சிக்குச் சென்று

                 வருவோமா?

மனைவி: போய் வருவோம்; ஆனால்

                   ஒரு நிபந்தனை.

கண.: என்ன நிபந்தனை?

மனை:ஆண்கள் படங்களை நான்

              பார்க்கமாட்டேன்.

கண.: அப்படியா? ஏன் இந்தப் பழக்கம?

மனை: தமிழ்ப்பண்பாடு அது தானே!

கண.: அதுசரி; அதுசரி; நீ அப்படியே

             செய்துகொள்.

மனை: இன்னொரு நிபந்தனையும்

               உண்டு்.

கண.:இன்னொரு நிபந்தனை என்ன?

மனை:பெண்கள் படங்களை  நீங்கள்

              பார்வையிட்டால் நான் மனம்

              பொறுக்கமாட்டேன்.

இந்த விநோதமான நிபந்தனைகளை

ஏற்றுக் கொண்டால் கண்காட்சிக்குச்

சென்று பார்வையிடுவதால் எந்த

மகிழ்ச்சியும் ஏற்படாது. இதைத்தான்

கீழ்க்கண்ட கவிதை  மறைமுகமாக

எடுத்துரைக்கிறது.

பாடல்:

ஓவியர்நீள் சுவரெழுதும்  ஓவியத்தைக்

கண்ணுறுவான்

தேவியையான்  அழைத்திடஆண்

        சித்திரமேல்  நான்பாரேன்;

பாவையர்தம்  உருவெனில்நீர்  பார்க்க

மனம்  பொறேனென்றாள்;

காவிவிழி  மங்கையிவள்  கற்புவெற்பின்

        வற்புளதால்.

இந்தக்  கவிதையை  என் பள்ளிநாட்க

ளில்  படித்திருக்கிறேன்.  ஆசிரியர்

யாரென்று  நினைவுக்கு வரவில்லை.

அநேகமாக, இயற்றியவர்  பாரதிதாசன்

அவர்களாக  இருக்கலாம்.ஏனென்றால்,

"கற்பு  நிலையென்று சொல்லவந்தால்

இரு கட்சிக்கும் அஃதைப்  பொதுவில்

வைப்போம்" (ஆண்,பெண்  இருவருக்கும்

கற்பு  பொதுவானது) என்று  முழங்கிய

மகாகவி பாரதியாரின்  சீடர்  தானே

பாரதிதாசன்.  என் கருத்துப்படி விளை

யாட்டாகப்  பாடப்பட்ட  கவிதை போலத்

தோன்றினாலும், அதன் கருப்பொருளாக

ஆண்,பெண்  இருவரும்  கற்பு  உட்பட

அனைத்து  விடயங்களிலும்  சரிநிகர்

சமானம்  என்பது வலியுறுத்தப்  பட்டுள்

ளது.  இனி,  வேறு ஒரு  சுவையான கவிதையைப்

பார்ப்போம்:

இரண்டு தமிழ் அறிஞர்கள்  பலதரப்பட்ட

விடயங்கள்  குறித்துத்  தங்களுக்குள்

உரையாடிக்கொண்டிருக்கின்றனர்.  வெகு

நேரம்  கடந்த  காரணத்தால்  ஒருவர்  மற்ற

வரிடம்  விடைபெற்றுக்  கொண்டு  தமது

இல்லத்துக்கு  வந்து  சேர்கிறார்.  வீட்டுக்கு

வந்த போதும்  அவர்  மனம்  அன்று  நிகழ்ந்த

சந்திப்பு  குறித்தும்,  நடைபெற்ற  உரையாடல்

குறித்தும்  திரும்பத் திரும்ப  எண்ணி மகிழ்ந்

தது.  உடனே ஒரு  கவிதை  உருவாயிற்று.:

"சூர்வந்து  வணங்கும்  மேன்மைச்

     சுப்பிர  மணிய  தேவே!

நேர்வந்து  நின்னைக்  கண்டு

    நேற்றிராத்  திரியே  மீண்டேன்;

ஊர்வந்து  சேர்ந்தேன்; என்றன்

   உளம்வந்து  சேரக்  காணேன்;

ஆர்வந்து  சொலினும்  கேளேன்;

  அதனையிங்(கு)  அனுப்பு  வாயே!'

என்ன  அருமையான  கவிதை!

" ஊர்வந்து  சேர்ந்தேன்; என்றன்

     உளம்வந்து  சேரக்  காணேன்;"

சொற்கட்டு, ஓசைநயம், கருத்துச்  செறிவு

மிக  மிக  நேர்த்தியாக  அமைந்துள்ளன.

கவிதையைப்  பாடியவர்  மாயூரம்(தற்போது

மயிலாடுதுறை) முன்சீஃப்  வேதநாயகம்பிள்ளை

அவர்கள்.  பாடப்பட்டவர்: திருவாவடுதுறை

ஆதீனகர்த்தர்  அவர்கள்.  இருபெரும்  தமிழ்

அறிஞர்களும்  மறைந்துவிட்டனர்.  ஆனால்

இந்தக்  கவிதை  என்றென்றும்  நினைவில்

நிற்கும்.

   




No comments:

Post a Comment