Tuesday, 12 February 2019

ஐங்குறுநூறு காட்டும் அழகுறு காட்சிகள்.

ஐங்குறுநூறு காட்டும் அழகுறு காட்சிகள்.

சங்க கால நூல்களான எட்டுத்தொகை நூல்களுள்
ஐங்குறுநூறும் ஒன்று. சங்க நூல்களிற் பெரும்பா
லானவை அகப்பொருள் குறித்துப் பாடப்பட்டவை.
ஐங்குறுநூறும் அத்தகைய அகப்பொருள் நூலே.
3அடிச் சிற்றெல்லையும் 6அடிப்  பேரெல்லையும்
கொண்ட அகவற்பாவால் பாடப்பட்ட 500 பாடல்களைக்
கொண்ட நூல். திணை  ஒன்றுக்கு 100 பாடல்கள் வீதம்
குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய
ஐந்திணைகளுக்கும் சேர்த்து 500 பாடல்கள் கொண்டு
உருவாக்கப்பட்ட நூல். ஒவ்வொரு திணைக்குரிய 100
பாடல்களை ஒவ்வொரு புலவர் இயற்றினார். அவர்கள்
விவரம் வருமாறு:
மருதம்--ஓரம் போகியார்; நெய்தல்--அம்மூவனார்;
குறிஞ்சி--கபிலர்; பாலை--ஓதல் ஆந்தையார்;
முல்லை--பேயனார்.
இனி, ஒவ்வொரு திணையிலிருந்தும் ஓவ்வொரு பாடலைத்
தேர்வு செய்து, அப்பாடல் காட்டும் அழகுறு காட்சியைக்
 காண்போம்:

திணை: மருதம்; கிழத்தி கூற்றுப் பத்து, பாடல் எண:70
"பழனப் பல்மீன்  அருந்த  நாரை
கழனி  மருதின்  சென்னிச்  சேக்கும்
மாநீர்ப்  பொய்கை  யாணர்  ஊர!
தூயர்; நறியர்;நின்  பெண்டிர்;
பேஎய் அனையம்; யாம்,சேய் பயந்தனமே!"
பொருளுரை:
வயலில் துள்ளிக் குதிக்கும் மீன்களை உண்
பதற்காக நாரை வயலோரம் நின்றிருக்கும்
மருதமர உச்சியில் அமர்ந்து உற்றுப்பார்த்துக்
கொண்டிருக்கும் வளமான வயலும் அதற்கு நீர்
தரும் பொய்கையும் கொண்ட வளப்பமான ஊரை
உடையவனாகிய தலைவனே! நீ வைத்துக்கொண்
டிருக்கும் காதற் பரத்தையர் தூய்மையானவர்கள்;
நல்லவர்களும் ஆவர். உன் மனைவியாகிய நான்
பேய் போன்றவள். உன் மகனைப் பெற்றெடுத்த
பேய் ஆவேன். இவ்வாறு மனைவி தன் தலைவனிடம்
சொல்லி ஊடுகின்றாள். மருதத் திணைக்குரிய உரிப்
பொருள் ஊடுதலும் ஊடுதல் நிமித்தமும் ஆகும். எனவே
இப்பாடலில் ஊடல் முன்னிறுத்தப் படுகிறது. அந்தக்
காலக் கட்டத்தில் உலகெங்கிலும் பரத்தமைத் தொழில்
உச்சத்தில் இருந்தது.  குடும்பத்தில் உள்ள ஆடவர் பரத்தை
யரிடம் செல்வது இயல்பாக  நடைபெற்றுள்ளது. சான்றோ
ரும் ஆன்றோரும் பெரிய அளவில் இதனை எதிர்க்கவில்லை
என்றே தோன்றுகின்றது.  முதன்முதலில் பரத்தமைத்
தொழிலை முனைப்புடன் கடிந்தவர் திருவள்ளுவர் ஆவார்.
அவரைத் தொடர்ந்து நாலடியார் மற்றும் ஏனைய நல்லற
நூல்களைப் பாடியோரும் கடிந்தனர். இதில் குறிப்பிட்டுச்
சொல்லப்பட வேண்டியவர் திருவள்ளுவர் மட்டுமே. ஏனென்
றால்ஏனைய புலவர் பெருமக்கள் ஊடலுக்கு முதன்மைக்  கா
ரணமாகப் பரத்தையிடம் செல்வதை ஏற்றுக்கொண்டு நூல்
படைத்த பொழுது திருவள்ளுவர் பரத்தையிடம் செல்வதை
ஏற்றுக் கொள்ளாமல் வேறு பிற காரணங்களைக் காட்டி
ஊடலை விவரித்துள்ளார்.  ஆக, இந்த மருதத் திணைப் பாடலில்  தலைவி தலைவனிடம் ஊடுகின்ற காட்சியைப்
புலவர் விவரித்துள்ளார்.. "உன்னோடு நெறிபட வாழ்ந்து உனக்கு மகனைப்  பெற்றுக் கொடுத்த நான் பேய்; உன்
னிடம்  மட்டுமல்லாமல் பிற பலரிடமும் உறவுகொள்ளும்
பரத்தையர் தூய்மையானவர்கள் மற்றும் நல்லவர்கள் "என
இகழ்ச்சிக் குறிப்புத் தோன்ற பரத்தையரை உயர்த்திப் பேசி
னாள். போரும் சண்டையும் அடிக்கடி நடைபெற்று  அதனால்
 ஆண்கள் பெருமளவில் மரணமடைந்தனர்; ஆண்களை விட
வும் பெண்களின் எண்ணிக்கை  அதிகரித்ததும் பரத்தையர்
உருவாக வழிவகுத்தது. உலகம் முழுவதிலும் இந்தத் துயரம்
நிலவியது. எனவே, அந்தக் காலத்தில் உருவான  நூல்கள்
பரத்தமைத் தொழிலைப் பெரிய அளவில் கடியவில்லை.

பாடல் எண்:181-நெய்தற் பத்து; திணை: நெய்தல் திணை
"நெய்தல்  உண்கண்  நேர்இறைப்  பணைத்தோள்
பொய்தல்  ஆடிய  பொய்யா  மகளிர்
குப்பை வெண்மணல் குரவை நிறூஉம்
துறைகெழு கொண்கன்  நல்கின்
உறைவினிது அம்ம,இவ்  அழுங்கல் ஊரே!"
தலைவனும் தலைவியும் பிறர் அறியாமல் சந்தித்துப்
பழகிக் கொண்டிருக்கின்றனர்.  இக்களவு ஒழுக்கம்
நீடித்தால் ஊரார் பழிதூற்றுவரே என்று தலைவி அஞ்சிப்
புலம்பிக் கொணாடிருக்கும் பொழுது தோழியானவள்
தலைவன் வரைவுக்கு(திருமணத்துக்கு)ச் சம்மதித்து
விட்டான் என்று தெரிவித்தாள்.  இதனைக் கேட்ட தலைவி
"நெய்தல் மலரை ஒத்த கண்களையும், நேராக வளைந்து
பருத்திருக்கும் தோள்களையும் கொண்ட மகளிர் 'பொய்தல்'
என்னும் ஒருவகை விளையாட்டை விளையாடிய பிறகு,
குவிந்து கிடக்கும் வெண்மணலில் குரவையாட்டம் ஆடும்
அத்தகைய செழிப்பான மற்றும் நல்ல துறையையுடையவன்
என் தலைவன். அவன் என்னை மணம் செய்து கொண்டு
வாழ்வான் ஆயின், எனக்கும் பழிதூற்றும் இந்த ஊருக்கும்
நல்லது. அன்றைய வழக்கப்படி, களவு ஒழுக்கம் மிகக்
குறுகிய காலமே பெரியோரால் அனுமதிக்கப்பட்டது.
கூடிய விரைவில் வரைவு நிகழ்தல் வேண்டும். வரைவுக்குப்
பின்னர் கற்பு ஒழுக்கம் தொடங்கிவிடும். காதலர் அஞ்சி
ஒளிந்து வாழ வேண்டியதில்லை. ஊர்மக்களும் பழிதூற்ற
மாட்டார்கள்.

பாடல் எண்: 236; தெய்யோப் பத்து; திணை: குறிஞ்சித்திணை
"அன்னையும் அறிந்தனள்; அலரும் ஆயின்று;
நன்மனை நெடுநகர் புலம்புகொள உறுதரும்
இன்னா  வாடையும் மலையும்
நும் ஊர்ச்  செல்கம்; எழுகமோ? தெய்யோ!"
தலைவி சொல்வதாகத் தோழி தலைவனிடம் சொல்கிறாள்:
நீவிர் பின்பற்றும் களவு ஒழுக்கம் தாய்க்கும் தெரிந்து
விட்டது. ஊராரும் பழிதூற்றத் தொடங்கிவிட்டனர். வீட்டில்
உள்ள எல்லோரும் புலம்பித் துன்புறுகின்றனர். துயரம் தரும்
வாடைக் காற்றும் அடிக்கிறது. உம்  ஊருக்குச் செல்லலாமா?
புறப்படலாமா? உடன் போக்கு மேற்கொள்ளத் தூண்டியது
போலத் தெரிந்தாலும், சமுதாயத்தில் நிலவும் கட்டுப்
பாட்டைக் காரணமாகக் காட்டி நெருக்கடியை உருவாக்கி
வரைவு(திருமணம்)க்குச் சம்மதிக்க வைக்கும் நோக்கத்
தோடு தோழி தலைவி சார்பாகப் பேசுகின்றாள். 'ஐயோ'
என்பது துயரத்தைக் குறிக்கும் ஒலிக் குறிப்பு; அதுபோல,
'தெய்யோ' மகிழ்ச்சியைக் குறிக்கும் ஒலிக் குறிப்பு.

பாடல் எண்:380; மகட்போக்கிய வழித் தாய் இரங்கு பத்து; திணை:பாலைத் திணை.
"அத்த நீளிடை. அவனொடு  போகிய
முத்தேர் வெண்பல் முகிழ்நகை  மடவரல்
தாயர் என்னும் பெயரே வல்லா(று)
எடுத்தேன்  மன்ற  யானே;
கொடுத்தோர் மன்ற அவள்ஆயத் தோரே!"
தலைவி தலைவனோடு உடன்போக்குச் சென்று விட்டாள். இதையறிந்த நற்றாய் புலம்புகின்றாள்:
"என்மகள் காட்டு வழியில் அவனோடு சென்று விட்டாள்.
வெண்முத்தை  நிகர்த்து  அரும்பும் புன்முறுவலைக் காட்டிக்
கொண்டு  தன் தலைவனோடு போய்விட்டாள். நான் அவள்
தாய்  என்னும் பெயரைத் தாங்கியபடி வலம் வருகின்றேன்.
இது ஒன்றுதான் அவளைப் பெற்றமைக்கு எனக்குக் கிடைத்
த வலிமை.  அவளை மணந்து கொண்டவரின் ஆயத்தோர்
(உற்றார், உறவினர்கள்) கொடுத்துவைத்தவர்கள். பாக்கியம்
படைத்தவர்கள்.

பாடல் எண்:428; விரவுப் பத்து; திணை:முல்லைத் திணை
"தேர்செல(வு)  அழுங்க, திருவில்  கோலி,
ஆர்கலி, எழிலி சோர்தொடங்  கின்றே;
வேந்துவிடு. விழுத்தொழில்  ஒழிய
யான்தொடங் கினனால்  நிற்புரந்  தரவே!"
தலைவன் தலைவியிடம்  உரைத்தது:
"தேர்ப்படை  செல்வது  நின்றுவிட்டது. வானவில் தோன்று
கிறது.  மேகம்  பொழியத்  தொடங்கியுள்ளது. வேந்தனின்
போர்த்தொழில்  நின்றுவிட்டது. இனிமேல் என்பணி உன்
னைக் கண்ணும் கருத்தும் ஆகப் பாதுகாப்பது மட்டுமே.
இவ்வாறு தலைவியின் உள்ளங் குளிர  உறுதிபடச் சூள்
உரைத்தான் தலைவன்.

ஐங்குறுநூற்றில் உள்ள அத்தனை பாடல்களும்  சுவைபட
இயற்றப்பட்டவை.  படித்து மகிழ்வோமாக.














1 comment: