Friday, 17 May 2019

மாதவியின் கானல் பாணி கனகர்--விசயர் முடித்தலை நெரித்தது.

மாதவி மடந்தை கானல் பாணி கனக,விசயர் தம்
முடித்தலை நெரித்தது.
(சிலப்பதிகாரம் வஞ்சிக் காண்டம்; நீர்ப்படைக் காதை)
Ui
சிலப்பதிகாரத்தின் மிகச் சுவையாக வடிவமைக்கப்
பட்ட பகுதி புகார்க் காண்டத்தில் பயின்று வரும் கானல்
வரிப் பகுதி. தித்திக்கும் தீந்தமிழ்ப் பாடல்களைக் கொண்ட
பகுதி. சிலப்பதிகாரக் கதையையே நகர்த்திச் செல்லும்
பகுதி என்று இளங்கோவடிகள் கருதியதால்தான் வஞ்சிக்
காண்டத்தில் மாடலன் என்ற அந்தணன் சேரவேந்தன் செங்
குட்டுவனைச் சந்தித்த பொழுது "மாதவிப் பெண் பாடிய
கானல்வரிப் பாட்டு, வடநாட்டு அரசர்கள் கனகர் மற்றும் விசயர்
பத்தினித் தெய்வம் கண்ணகிக்குச் சிலை வடிப்பதற்குத்
தேவையான கல்லைத்தலையில் சுமக்கும்படி நேரிட்டது"
என்று அம்மறையவன்  கூறியதாக இளங்கோ தெரிவிக்கின்றார்.
அடிகளின் ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும் என்ற சிந்தனை
கானல்வரிப் பாட்டால் வலுப்பெறுகிறது.

கானல் என்பது கடற்கரைச் சோலையைக் குறிக்கும். வரி என்பது
இசை, இசைப்பாட்டு, கூத்து வடிவம் ஆகியவற்றைக் குறிக்கும்.
கடற்கரைச் சூழலில் பாடப்படும் இசைப் பாடல்  வரிப்பாடல் எனப்
படும். வரிப்பாடல்களில் பலவகைகள் உள்ளன. அவை வருமாறு:
1.ஆற்றை வருணிப்பது---ஆற்றுவரி
2.தலைவனின்  ஊர் மற்றும் பெயர் குறிப்பிட்டு வருணித்துப்
பாடுவது சார்த்துவரி அல்லது சாற்றுவரி.
3.யாப்புப் பாடலால் ஆகிய வரி மயங்கிசை கொச்சகக் கலிப்பா

4.பாடும் முறையால் பெயர் பெற்றவரி---முரிவரி; யாழ்முரிவரி;
வாய்முரிவரி.
5.கானலை வருணிப்பது கானல்வரி.
6.தலைவன் மற்றும் தலைவியின் உள்ள நிலையை(காதல்)
வருணிப்பது திணை நிலைவரி.
இன்னும் பலவகையான வரிப்பாடல்கள் உள்ளன.

கோவலனும் மாதவியும் இந்திரவிழா நிறைவு நாளன்று
காவிரிப்பூம்பட்டினத்து மக்களோடு கடலாடிவிட்டு ஒரு
கடற்கரைச் சோலையில்(கானலில்) இளைப்பாறிக்
கொண்டிருக்கும் பொழுது யாழை மீட்டிக் கோவலன்
கையில் கொடுத்த மாதவி அவனைப் பாடுமாறு குறிப்புக்
காட்டினாள். கோவலன் நல்ல கலையுள்ளம் கொண்டவன்.
வித்தை தெரிந்தவன். எனவே, உற்சாகமாகப் பாடத் தொடங்
கினான்.
"மன்னும் மாலை வெண்குடையான்
வளையாச்  செங்கோல் அதுவோச்சிக்
கன்னி தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய்  வாழி!  காவேரி!
கன்னி தன்னைப்  புணர்ந்தாலும்
         புலவா தொழிதல் கயற்கண்ணாய்!
மன்னும் மாதர் பெருங்கற்பென்(று)
         அறிந்தேன் வாழி! காவேரி!
பொருள்:வளையாத செங்கோல் ஆட்சி செலுத்தும்
சோழன் தெற்கே கன்னியாகுமரிவரை படைநடத்திச்
சென்று குமரியோடு சேர்ந்தாலும் அவனைவிட்டு நீங்காத
நினைவுடைய  காவிரியே! நீ வாழ்க! சோழன் குமரியோடு
சேர்ந்தாலும் அவனை விட்டு நீங்காமல் இருப்பதற்குக்
காரணம் உன் கற்புநிலை தவறாமையே ஆகும் என்பதை
அறிந்துகொண்டேன். காவிரியே, நீ வாழ்க.(காவிரியும்
குமரியும் பெண்களாக உருவகப் படுத்தப்பட்டு இப்பாடலில்
வருணிக்கப்பட்டன). இது ஆற்றுவரியாகும். வரிப்பாடல்கள்
ஒருபொருள குறித்து மூன்றடுக்கி வருவன.

புகார் நகரைப் பற்றிய வரிப்பாடல்:
"காதலர் ஆகிக்  கழிக்கானல்
     கையுறைகொண்(டு) எம்பின் வந்தார்;
ஏதிலர் தாமாகி யாமிரப்ப
     நிற்பதை யாங்(கு) அறிகோம் ஐய!
மாதரார் கண்ணும் மதிநிழல்நீர்
     இணைகொண்டு  மலர்ந்த  நீலப்
போதும் அறியாது வண்டூசல்
     ஆடும் புகாரே எம் ஊர்".
பொருள்:எம்மேல் காதல்கொண்டு கானலுக்கு எம்பின்னே
வந்தவர் இன்று அயலார் போலாகிவிட்டார். அவர் அன்பை
இரந்துகேட்கும் நிலைக்கு நாங்கள் வந்துவிட்டோம். இப்படிச்
செய்வார் என்று எப்படி நாங்கள் அறிவோம்? மடந்தையரின்
கண்களையும் நிலவைக் கண்டு மலர்ந்த குவளை மலர்களை
யும் நோக்கும் மக்கள் எது கண்? எது குவளை? எனக் குழம்பும்
பூம்புகார் நகரம் எங்கள் ஊராகும்.

"நிணம்கொள் புலால் உணங்கல் நின்றுபுள்
ஓப்புதல் தலைக்கீ  டாக
கணம்கொள் வண்டார்த்(து) உலாம்கன்னி
நறு ஞாழல் கையிலேந்தி
மணம்கமழ் பூங்கானல் மன்னி
        மற்(று) ஆண்டோர்
அணங்குறையும் என்ப தறியேன் அறிவேனேல்
அடையேன் மன்னோ!
பொருள்: கடற்கரையில் காயப்போட்டிருக்கும் கருவாட்டி
னைத் தின்னவரும் பறவைகளை ஓட்டுவதற்காக ஒரு
பூங்கொத்தைக் கையில்கொண்டு பெண் ஒருத்தி நிற்கின்
றாள். இப்படி மணம் வீசும் கானலில் ஆளைக் கொல்லும்
தெய்வ அணங்கு இருக்கும் என்று தெரிந்திருந்தால் அங்கு
போயிருப்பேனா? அவள் காதலில் வீழ்ந்திருப்பேனா?

"ஓடும் திமில்கொண்  டுயிர்கொள்வர்  நின்ஐயர்;
கோடும் புருவத்(து)  உயிர்கொல்வை மன்நீயும்;
பீடும் பிறர்எவ்வம் பாராய் முலைசுமந்து
வாடும் சிறுமென் மருங்கு இழவல் கண்டாய்!
பொருள்:உன்னைப் பெற்ற பரதவர் மீன் பிடி படகு
களைக் கொண்டு கடல்மீது உயிர்கொல்வர்.ஆனால்
நீயோ வளைந்த உன் புருவ வில்கொண்டே பார்ப்பவர்
உயிரைக் கவர்கிறாய். இதனால் பிறர்படும் துயரை
நீ எண்ணுவதில்லை.உன் பெருமையையும் உணர்வ
தில்லை.உன் மார்பின் சுமையாலே துன்பப்படும் உன்
சிற்றிடையை இழந்துவிடாதே.
"கயல்எழுதி வில்எழுதிக் காரெழுதிக் காமன்
செயல்எழுதித் தீர்ந்தமுகம் திங்களோ காணீர்;
திங்களோ காணீர் திமில்வாழ்நர் சீறூர்க்கே
அங்கணேர் வானத்(து) அரவஞ்சி வாழ்வதுவே."
பொருள்:கண்ணுக்காக மீனையும், புருவத்துக்காக வில்
லையும்  கூந்தலுக்காக மேகத்தையும் எழுதிய  இவள்
காமனின் (காதலில் ஈடுபட்டோரைக் கொல்லும்) கொலைத்
தொழிலையும் சேர்த்து எழுதிய இவள் முகம் முழு நிலவோ?
வானத்தில் இருந்தால் இராகு, கேது எனும்கோள்களால்
விழுங்கப்படலாம்என்று அஞ்சிப் பூமிக்கு வந்து வாழும் முழு
நிலவு தானோ?

கோவலன் பாடிய பாடல்கள் காதல் சுவை சொட்டச் சொட்ட
தேனில் தோய்த்தெடுத்த பலாச்சுளை போலத் தித்தித்தன.
ஆனால் அவன் வேறு ஒரு பெண்மேல் நாட்டமுடையவன்
போன்ற கருத்துத் தோன்றுமாறு பாடினமையால் அவன்
மீது ஐயம் கொண்ட மாதவி எதிர்வினையாற்ற எண்ணினாள்.
மனம், வாக்கு, காயத்தால் பரிசுத்தமானவள் என்ற போதும்,
ஊழ்வினை பிடர்பிடித்து உந்தியதன் விளைவாகத் தானும்
வேறு ஒரு  ஆடவன்மேல் காதல் கொண்டவள் போன்ற குறிப்புத்
தோன்று மாறு காமம் மிக்க கழிபடர் கிளவி என்னும் துறை
சார்ந்த காமச்சுவை சொட்டும் எதிர்ப்பாடல்களைப் பாடலானாள்.

"மருங்கு வண்டு சிறந்தார்ப்ப
       மணிப்பூ  வாடை அதுபோர்த்துக்
கருங்க யற்கண்  விழித்தொல்கி
       நடந்தாய்  வாழி, காவேரி!
கருங்க யற்கண்  விழித்தொல்கி
நடந்த வெல்லாம்  நின்கணவன்
திருந்து  செங்கோல்  வளையாமை
அறிந்தேன் வாழி, காவேரி!
பொருள்: ஆற்றின் இருகரையிலும்  பூக்களில் மொய்த்
துள்ள வண்டுகள் இன்னிசை பாட அழகிய பூக்களாகிய
ஆடையைப் போர்த்துக்  கொண்டு  மீன்போலும் அழகிய
கண்கள் விழித்தபடி ஓடித்திரிகின்ற  காவிரிப் பெண்ணே!
நீ இப்படி விழித்த விழி திறந்தபடி அசைந்தாடிப் பாய்வது,
உன்தலைவனாகிய சோழ வேந்தனின் நீதிதவறாத செங்
கோல் ஆட்சியினால்தான் என்பதை நான் அறிவேன்.
காவிரிப் பெண்ணே! நீ வாழ்க.  கோவலன்  பாடிய பாட்டில்
காவிரியோடு கங்கை, கன்னியாகுமரி முதலியவற்றையும்
சோழன் சேர்த்துக்  கொண்டாலும்  காவிரிப் பெண்ணே! நீ ஊடல்
கொள்ளமாட்டாய். ஏனென்றால் அதுவே நின் கற்புநிலை
தவறாமைக்குச் சான்றாகும், என்ற கருத்து வெளிப்பட்டது.
இதற்கு நேர்மாறாக மாதவி பாடிய பாட்டில் சோழமன்னன்
நீதி நெறி தவற மாட்டான் என்ற கருத்து வெளிப்பட்டது.
கோவலன் ஆடவர் எத்தனை பெண்டிரை மணந்தாலும்,
பெண்டிர் இச்செய்கையைப் பொறுத்துக்கொள்ளல் வேண்
டும் என்ற கருத்தைவலியுறுத்தினான். மாறாக, மாதவி
சோழமன்னன் நீதி, நெறி தவற மாட்டான் என்று உறுதிபடத்
தெரிவித்தாள்.

"மறையின் மணந்தாரை வன்பரதர் பாக்கத்து மடவார் செங்கை
இறைவளைகள் தூற்றுவதை ஏழையம் எங்ஙனம் யாங்(கு)
   அறிகோம் ஐய?
நிறைமதியும்  மீனும் என அன்னம் ரண நீள்புன்னை அரும்பிப்
    பூத்த
பொறைமலி பூங்கொம் பேற வண்(டு) ஆம்பல் ஊதும்
    புகாரே எம்ஊர்."
பொருள்: வலிமைமிகு பரதர்கள் பிறர் அறியாமல் களவு
முறையில் கூடிய, பாக்கத்தில் உள்ள வளமிகு  பெண்டிரின்
அழகியகை வளையல்கள் கழன்று விழுந்து அவர்களின் களவு
ஒழுக்கத்தை ஊர் அறியச் செய்துவிடுவதை ஏழைகளாகிய
நாங்கள் எப்படி அறியாதிருப்போம்? அறிவோம்! அன்னப் பறவை
நீண்ட புன்னை மரக்கிளையிலே ஏறியிருக்க அன்னத்தையும்,
புன்னை மரத்தில் பூத்த பூக்களையும், வெண்மதியும் விண்மீனும்
என நினைத்து ஆம்பல் பூ மலரும்; அதனை வண்டுகள் மொய்க்கும்
புகார் எங்கள் ஊராகும்.

"தம்முடைய  தண்ணளியும் தாமும்தம் மான்தேரும்
எம்மை நினையாது விட்டாரோ? விட்டகல்க;
அம்மென் இணர அடும்புகாள் அன்னங்காள்
நம்மை மறந்தாரை நாம்மறக்க மாட்டேமால்."
பொருள்: என்னை நினைக்காமல் தனது இயல்பான அன்பு உளத்
தையும் தனது குதிரை பூட்டிய தேரையும் கூட அவர் விட்டுவிட்டுப்
போய்விட்டாரோ? இவைகளை விட்டுவிட்டார் என்றால் அவர் எம்
மையும் விட்டுவிட்டுப்  போகட்டும்!  அழகிய மெல்லிய பூங்கொத்து
களே! அன்னப் பறவைகளே! அவர் நம்மை ரண மறந்தாலும்,  நாம்
அவரை மறக்க மாட்டோமே!
"வாரித் தரள நகைசெய்து வண்செம் பவள வாய்மலர்ந்து
சேரிப் பரதர் வலைமுன்றில் திரை உலாவு கடல்சேர்ப்ப!
மாரிப் பீரத்(து) அலர்வண்ணம் மடவாள் கொள்ளக்
   கடவுள்வரைந்(து)
ஆரிக் கொடுமை செய்தார்என்  றன்னை அறியின்
   என்செய்கோ?
பொருள்: வீடுகளின் முன்பாக வலைகள் காயப் போட்டிருப
பர். கடல்முத்து நகையோடு செம்பவள வாய்திறந்து பேசும்
பரதவர் வாழும் சேரிக் குடியிருப்புகள் மிகவுடைய கடற்
கரையின் நெய்தல் நிலத் தலைவனே! என்மேனியானது
கார்காலத்தில் மலர்கின்ற பீர்க்கம்பூ நிறம் கொண்டால்
(பசலை நிறம்) ஐயோ! யாரால் வந்ததித் தீமை என்று ஊரில்
உள்ள கடவுளரை யெல்லாம் என் அன்னைவேண்டி வருந்து
வாள். என் அன்னைக்குத் தெரிந்தால் ஊர் முழுக்கத் தெரியத்
தொடங்கும். கட்டுவிச்சி மூலம் கட்டுப் பார்ப்பாள்(குறி
சொல்பவளிடம் குறி கேட்பாள்;) முருகனுக்கு ஆட்டையோ
கோழியையோ பலி கொடுப்பாள். என் களவு ஒழுக்கம் தெரிந்து
விட்டால் இற்செறித்து விரைவில் வரைவு கடாவ வழி மேற்
கொள்வாள். நான் என்ன செய்வேன்?

"கதிரவன் மறைந்தனனே; காரிருள் பரந்ததுவே;
எதிர்மலர் புரைஉண்கண் எவ்வநீர்  உகுத்தனவே;
புதுமதி புரைமுகத்தாய்! போனார்நாட் டுளதாம்கொல்?
மதிஉமிழ்ந்து கதிர்விழுங்கி வந்தவிம் மருள்மாலை"
பொரூள்:பகலவன் மறைந்துவிட்டான். காரிருளும்
வந்து விட்டது. குவளைமலர் போலும் கண்கள் வருந்திக்
கண்ணீர்  சிந்தியபடி யுள்ளன.முழுநிலாப் போலும்
முகமுடைய பெண்ணே!  முழு நிலவை வெளியே
அனுப்பிவிட்டுப் பகலவனை விழுங்கும் இந்த மயக்
கும் மாலைப் பொழுது நமைப் பிரிந்து போன தலை
வர் நாட்டிலும் இருக்கும் அல்லவா?

"அடையல் குருகே! அடையலெம்  கானல்;
அடையல் குருகே! அடையலெம் கானல்;
உடைதிரைநீர்ச் சேர்ப்பற்(கு) உறுநோய் உரையாய்;
அடையல் குருகே! அடையலெம் கானல்".
பொருள்: செங்கால் நாராய்! செங்கால் நூராய்! இனி
எங்களது குளிர்மரச்  சோலையில்வந்து தங்காதே.
சிதறிவிழும் அலைகடல் தவழும் நெய்தல்நிலத்
தலைவனாகிய என் காதலனிடம் போய், நான் படும்
துயரம், அவரால் வந்த பிரிவுத் துன்பம் என்னும் நோயை
எடுத்துச் சொல்ல முடியாத நீ இங்கெதற்கு வருகிறாய்?
நாரையே! இங்கு நீ இனி வர வேண்டா."

இப்படியாகக் காமம் மிக்க கழிபடர் கிளவியைப் பாடிய
மாதவி கோவலனுக்குச் சந்தேகத்தைக் கிளப்பும்
வகையில் கானல்வரி எதிர்ப்பாட்டுகளைப் பாடி முடித்
தாள். வினை விளையும் காலம் நெருங்கிய  தாலும்,
ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டியதாலும், கோவலன்
"கானல்வரி யான்பாடத் தான்ஒன்றின்மேல் மனம்வைத்து
மாயப்பொய் பலகூட்டும் மாயத்தாள் பாடினாள்" என்று
சொல்லித் தன் பணியாட்களோடு அவ்விடத்தை விட்டு
அகன்றான். இதனைத் தொடர்ந்து பல நிகழ்வுகள்
நடந்தன. கண்ணகியை அடைந்து அவளோடு மது
ரைக்குச் சென்றான். தன் மனைவியின் சிலம்பை
விற்க முயலும்போது களவுக் குற்றம் சுமத்தப்பட்டுத்
தண்டிக்கப்  பட்டான். கணவன் கொலையுண்ட பிறகு
கண்ணகி பாண்டியனோடு வாதாடித்தன் கணவன்
கள்வன் அல்லன் என நிரூபித்தாள். பின்னர் மதுரை
நகரத்தை எரியூட்டினாள். நடைப் பிணம் போல வைகைக்
கரையோரமாக நடந்தே சென்று திருச்செங்குன்றம்
மலையுச்சியை அடைந்தாள். அங்கிருந்து விண்ணுலகம்
சென்றாள் என இளங்கோவடிகள் தெரிவிக்கின்றார்.

சேரவேந்தன் கண்ணகிக்குச் சிலை எழுப்ப முடிவு
செய்து வடதிசை நோக்கிப் படையெடுத்துச் சென்
றான். ஆங்குள்ள ஆரிய மன்னர்களை வென்று
கனகர் மற்றும் விசயர் தலைமீது கண்ணகி சிலைக்
கான கல்லை ஏற்றிக் கொண்டுவந்தான். கண்ணகிக்கு
கோட்டம் எழுப்பி அதனுள்ளே இமயமலையிலிருந்து
எடுத்து வந்த கல்லால் வடித்த கண்ணகி சிலையை
நாட்டினான். இவ்வாறாக மாதவி பாடிய கானல்வரிப்
பாடல் கனக விசயர் முடித்தலை நெரித்தது. வாழ்க
கண்ணகி புகழ்! வளர்க சிலப்பதிகாரப் பெருமை!











"





.




1 comment: