சற்றே துவையலரை; தம்பியொரு பச்சடிவை.
1967-68 கல்வியாண்டில் நான் பதினொன்றாம் வகுப்பில் படித்துக்
கொண்டிருந்த காலக் கட்டம். தமிழ்ப் பாட வகுப்பில் யாப்பிலக்கணம்
நடத்தப்பட்டது. ஆசிரியப்பா, வெண்பா முதலியவற்றை இயற்றுவது
குறித்துத் தமிழாசிரியர் நடத்திக் கொணடிருந்தார். என் தந்தையார்
முத்துசாமிப் புலவர் மதுரைத் தூயமரியன்னை உயர்நிலைப் பள்ளியில்
தமிழாசிரியராகப் பணி புரிந்ததால் வீட்டில் அவரிடம் தமிழ் இலக்கணம்
நாள்தோறும் கற்றுவருவது வழக்கம் அதனால் பள்ளியில் நடத்தப்பட்ட
யாப்பிலக்கணம் எளிதாகப் புரிந்தது. ஒருநாள் என் தந்தையார் வெண்பா
வைப்பற்றி எனக்கு விளக்கிக் கொண்டிருந்த பொழுது ஒரு நிகழ்வைப்
பற்றிக் கூறினார். சைவ மடாலயங்களின் ஆதீனகர்த்தர்கள்(தலைவர்கள்)
தம் சீடர்களுக்குச் சைவ சமய வகுப்பும், தமிழ் வகுப்பும் நடத்துவது மரபாகும்.
ஒருநாள் ஆதீனகர்த்தர் பாடம் நடத்திக் கொண்டிருந்த வேளையில் மடத்துச்
சமையல் காரர் ஆதீனகர்த்தரை அணுகி "சுவாமி! நண்பகல் உணவுக்கு என்ன
சமைக்கவேண்டும்?" என்று மெல்லிய குரலில் வினவினார். ஆதீனகர்த்தர்
வெகு ஈடுபாட்டுடன் பாடம் நடத்திக்கொண்டிருந்ததால் பேச்சை நிறுத்தாமல்
"சற்றே துவையலரை;" என்று சொல்லிவிட்டுப் பாடத்தைத் தொடர்ந்தார். சிறிது
நேரம் கழிந்தபிறகு, "தம்பியொரு பச்சடிவை " என்றார். தொடர்ந்து பாடம் நடத்திவிட்டு
"வற்றலே தேனும் வறுத்துவை" என்றார். பாடம் தொடர்ந்தது. இடையில், "குற்றமிலை"
எனச் சொன்னார். பாடம் தொடரப்பட்டது. "காயமிட்டுக் கீரைகடை" என்று சமையற்
காரைப் பார்த்துச் சொல்லிப் பாடத்தைத் தொடர்ந்தார். கொஞ்ச நேரம் கழித்துப்
பாடத்தை முடித்துவிட்டுக் " கம்மெனவே மிளகுக் காயரைத்து வைப்பாய் கறி"
என்று சொல்லி முடித்தார். தமிழ்ப் பாட வகுப்பும் முடிந்தது; அவ்வப்பொழுது
சொல்லிய சமையற் குறிப்பும் முடிந்தது. ஆதீனச் சமையற்காரருக்கும் ஓரளவு
தமிழ் இலக்கண அறிவு உண்டு. ஆதீனகர்த்தர் தமிழ்ப் பாடம் நடத்திக் கொண்டே
இடையிடையே கூறிய சமையற் குறிப்புகளை ஒன்று சேர்த்துச் சொல்லிப் பார்த்தார்;
அழகிய வெண்பா உருவாகியிருந்தது. பாடல் பின்வருமாறு:
"சற்றே துவையலரை; தம்பியொரு பச்சடிவை;
வற்றல்ஏ தேனும் வறுத்துவை;---குற்றமிலை;
காயமிட்டுக் கீரைகடை; கம்மென வேமிளகுக்
காயரைத்து வைப்பாய் கறி."
(காயம்=பெருங்காயம்)
ஆதீனகர்த்தர் தமிழ்ப் பாடம் நடத்திக் கொண்டே இடையிடையே வெண்பா மூலம்
சமையல் குறிப்புகளைத் தெரிவித்தது அவரது புலமையின் ஆழத்தை வெளிப்படுத்து
கின்றது. புலமையுள்ள பெரியோர்கள் சொல்வதே கவிதையாக உருவெடுக்கும்.
இந்தப் பாடலைக் கேட்ட நான் அன்றிரவு முழுவதும் சிந்தித்துச் சமையல் தொடர்பான
கவிதை ஒன்றை எழுதினேன். அது பின்வருமாறு:
"வெங்காயச் சாம்பார்வை; வெண்டைக்காய்ப் பச்சடிவை;
மங்கா மிளகுரசம் வைத்துவிடு;---பங்கமில்பால்
பாயாசம் செய்(து)அப் பளத்தைப் பொரித்து வைத்தால்
ஆயாசம் இல்லை அனாய்!"
(அனாய்=அன்னாய்=அன்னையே!)
கவிதை நன்றாக இயற்றவருகிறதா எனப் பரிசோதிக்க ஈற்றடி கொடுத்து அதனை
ஒட்டிப் பாடி நிறைவு செய்யுமாறு கூறுவது வழக்கம். வெண்பா வுக்கான ஈற்றடி:
''தமிழ்வாழ்க வாழ்கவெனச் சாற்று' என்பது எனக்குக் கொடுக்கப்பட்ட ஈற்றடி.
"எத்திக்கும் போற்றும் எழில்மொழியாம்; பேசுங்கால்
தித்திக்கும்; கேட்டால் செவிகுளிரும்---சொத்தாம்
அமிழ்தனைய நன்மொழியாம்; ஆண்டாண்டாய் நிற்கும்
தமிழ் வாழ்க வாழ்கவெனச் சாற்று")
(பேசுங்கால் தித்திக்கும்---பேசும்போது் வாயினிக்கும்).
வெண்பாவுக்கு ஈற்றடி கொடுத்துப் பாடச் சொல்வது போலக் கட்டளைக்கலித்துறை
என்னும் பாவகைக்கும் ஈற்றடி கொடுத்துப் பாடச் செய்வது வழக்கம். எனக்குக்
கொடுக்கப்பட்ட ஈற்றடி: "போரும் பகையும் அமைதிநல் வாழ்வைப் புதைத்திடுமே".
யான் இயற்றிய பாடல் பின்வருமாறு:
"யாரும் உலகில்தீப் போரை விரும்பிடார்; ஏனெனில்நற்
சீரும் சிறப்பும் செழிப்பும் களிப்பும் சிதைத்துவிடும்;
ஊரும் நகரும் உறையுள் எலாமும் உருக்குலைக்கும்;
போரும் பகையும் அமைதிநல் வாழ்வைப் புதைத்திடுமே."
யான் தமிழிலக்கிய மாணவன் அல்லன். நான் கல்லூரியில் பயின்றது வணிகவியல்.
என் தந்தையார் கற்றுக் கொடுத்ததைக் கொண்டும், நானாகப் பயின்ற இலக்கண
இலக்கியங்களைக் கொண்டும் கவிதை இயற்றி வருகிறேன்.
No comments:
Post a Comment