Saturday, 19 December 2020

பனிக்காலம் மிக நன்று.

 பனிக் காலம் மிக நன்று.


இச்சொற்றொடர் பனிக்காலத்தின் கொடுமையை விளக்குகின்றது.

பனிக்கு+ஆலம் எனப் பிரித்தால் பனி, ஆலம்(நஞ்சு) என்ற இரண்டில்,

பனியை விடவும் நஞ்சின் துயரம் குறைவான கொடுமை உடையதே;

அதாவது பனியை விடவும் நஞ்சு நன்று என்று பொருள்படும்.ஏனெனில்,

பனியால் மேனி நடுநடுங்கும். கை, கால் விறைத்துப்போகும். வாய்

உளறும். வார்த்தை குழறும்.எனவே பனியினால் ஏற்படும் பாதிப்பைச்

சொல்லி மாளாது. .பனிக் கொடுமையை வலியுறுத்தப் பனிக்காலம்

மிக நன்று என்று வேடிக்கையாகச் சொன்னார்கள். உண்மையில்

இரண்டுமே மனித குலத்துக்கு ஆபத்தானதே.


.பனிக் கொடுமையைத் தாங்குவதற்கு மேனி முழுவதும் போர்த்துக் கொள்

வது  உடனடி பயன் கொடுக்கும். கைவசம் போர்வை இல்லாவிடில் தத்தம்

கைகளைக் கொண்டு மேனியைப் போர்த்துக் கொண்டால் உடலுக்குக் குளிரைத்

தாங்கும் தெம்பு கிட்டும்; உடல் கதகதப்பை  உணரும். இனி, இலக்கியத்தில் பனி

யைப் பற்றிய குறிப்புகளைப் பார்ப்போம்:


முத்தொள்ளாயிரம் எனும் தெவிட்டாத இலக்கியத்தில் ஒரு பாடல் பயின்று வரு

கிறது. கடும் பனி பொழியும் முன்னிரவு நேரத்தில் சேர 

வேந்தன் உலா வருகின்

றான். அவனைக் காணும்ஆவலுடன் தெருவில் இருமருங்கும் மக்கள் நின்று

கொண்டிருக்கின்றனர். அம்மக்கள் தத்தம் கைகளையே போர்வையாகப் பயன்

படுத்திக் குளிரைத் தாங்கிக் கொள்கின்றனர். அக்கூட்டத்தில் ஒரு பருவப் பெண்

ணும் சேர மன்னனைக் காணும் ஆவலில் தன் கைகளினால் தன் உடலைப் போர்த்

திக் கொண்டு ஆவலினால் நெஞ்சம் படபடக்க, கடும் பனியால் மேனி நடுநடுங்க

நிற்கின்றாள். பாடலைப் பார்ப்போம்:

"கடும் பனித் திங்கள்தன் கைபோர்வை யாக

நெடுங்கடை நின்றதுகொல் தோழி!--நெடும்சினவேல்

ஆய்மணிப் பைம்பொன் அலங்குதார்க் கோதையைக்

காணிய சென்றவென் நெஞ்சு."


சக்திமுற்றப் புலவர் மதுரையில் பாண்டிய வேந்தனைச்

சந்தித்து அவர்முன் பாடிப் பரிசில் பெற எண்ணி வந்தார்.

ஆனால் வேந்தரைச் சந்திக்க இயலவில்லை. அவருக்குத்

தெரிந்தவர்கள் மதுரையில் யாரும் இல்லாததால் ஒரு

வீட்டுத் திண்ணையில் தங்கினார். கடுமையான பனிக்

காலம். அவர் கைவசம் போர்வை ஏதும் இல்லை. தம் பரி

தாப  நிலையைப் பற்றிப் பாடத் தொடங்கினார்:

"நாராய்! நாராய்! செங்கால் நாராய்!

பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன

பவளக் கூர்வாய்ச் செங்கால் நாராய்!

நீயும் நின் பெடையும் தென்திசைக் குமரியாடி

வடதிசைக்  கேகு  வீரே யாயின்

எம்மூர்ச் சக்திமுத்த வாவியுள் தங்கி

நனைசுவர்க் கூரை கனைகுரல் பல்லி

பாடுபார்த் திருக்குமெம் மனைவியைக் கண்டு

எங்கோன்  மாறன் வழுதி கூடலில்

ஆடை யின்றி வாடையின் மெலிந்து

கையது கொண்டு மெய்யது போர்த்திக்

காலது  கொண்டு மேலது தழீஇப்

பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்

ஏழை யாளனைக் கண்டனம் எனுமே".


சீவக சிந்தாமணி நூலில்திருத்தக்க தேவர் மக்கள்

பனியால் ஏற்படும் நடுக்கத்தைத் தடுக்க எலிமயிரால்

ஆகிய போர்வையை விரும்பிப் போர்த்திக் கொண்டனர்

என்று பாடியுள்ளார். அது பின்வருமாறு:

"கொங்கு விம்முபூங் கோதை மாதரார்

பங்க  யப்பகைப் பருவம் வந்தென

எங்கும் இல்லன  எலிம யிர்த்தொழிற்

பொங்கு பூம்புகைப் போர்வை மேயினார்".


அந்நாளில் முன்பனிக் காலத்தில் குளிரின் கொடுமையை

விலக்க இளநிலா முன்றிலில் அமர்ந்து இளவெயில் நுகர்ந்

தனர் என்று தெரிவிக்கின்றார் இளங்கோவடிகளார். அச்

சிலப்பதிகார வரிகள் பின்வருமாறு:

"வளமனை மகளிரும் மைந்தரும் விரும்பி

இளநிலா முன்றிலின் இளவெயில் நுகர

விரிகதிர் மண்டிலத் தெற்கேர்பு வெண்மழை

அரிதில் தோனறும் அச்சிரக்  காலை'.

பனிக் காலத்துக் குளிரைத் தாங்கிக் கொள்ள மக்கள் இளநிலா

முன்றிலில் இளவெயிலில் குளிர்காய்ந்தனர்.


பனிக் காலத்துக் குளிருக்கு இதமாக‌ இஞ்சி சேர்ந்த நீரும் நன்கு

விளைந்த அரிசிப் பொரியும் மக்கள் அருந்தினர் எனச் சீவகசிந்தா

மணி நூலில் திருத்தக்க தேவர் குறிப்பிடுகின்றார்.

"அளித்த தீம்பழம் இஞ்சி யார்ந்தநீர்

விளைந்த வல்விளை வரிசி வேரியும்

வளைந்த மின்னனார் மகிழ்ந்து சண்பகம்

உளைந்து மல்லிகை பொலியச் சூடினார்".


திருப்பாவை, திருவெம்பாவைப் பாடல்களிலும் பனியின் கொடுமை

விவரிக்கப்பட்டுள்ளது. சங்க இலக்கிய நூல்களிலும் பனியைப்பற்றி

விரிவாகக் கூறப்பட்டுள்ளது. மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில்

பனியின் கொடுமை  மிக அதிகம்.எனவேதான் பனிக்கு ஆலம்(நஞ்சு)

மிக நன்று என்று வேடிக்கையாகவும் ‌வேதனையாகவும் சொல்லிப்

புலம்பினர்.

1 comment: