திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா......
(அருணகிரிநாதர் பாடிய 'த'வருக்கப் போட்டிப் பாடல்)
அருணகிரிநாதரைப் பற்றிப் பற்பல செவிவழிச் செய்திகள்
உலவிவருகின்றன. ஆனால் அவருடைய பாடலியற்றும்
திறமை பற்றி எந்தவிதமான எதிர்க்கருத்தும் கிடையாது.
எளிமையான பாடல்கள், சந்தப் பாடல்கள், வண்ணப்பாடல்கள்,
ஓரெழுத்து வருக்கப் பாடல்கள் என விதவிதமாகத் தமிழிற்
பாடியுள்ளார். இவைகளில் மிகச் சிறப்பாகப் பாடப்பட்ட ஒரு
வருக்கப் பாடலைப் பார்ப்போம்.
பெரும்புலமை கொண்டவரும், அரைகுறைப் புலமையுடையவரைக்
குறடு என்னும் கருவியால் காதைக் குடைந்து தோண்டும் வழக்கம்
உடையவரும், தமிழில் மகாபாரதம் என்னும் காவியம் படைத்தவரும்
ஆன வில்லிபுத்தூரார் ஒருமுறை திருவண்ணாமலைக்கு வருகை
புரிந்த பொழுது அவருக்கும் அருணகிரிநாதருக்கும் தருக்கம்(வாதம்)
உண்டாயிற்று. தாம் ஆசுகவியாகப் பாடிவரும் பாடல்களுக்கு வில்லி
புத்தூரார் பொருள் கூறல் வேண்டும் என்றும் பொருள் கூறத் தெரியா
விட்டால் தோற்றதாக ஒப்புக்கொள்ளல் வேண்டும் என்று அருணகிரி
நாதர் வில்லிபுத்தூரார்க்கு நிபந்தனை விதிக்க, அவர் ஏற்க, போட்டி
தொடங்கியது.
ஆசுகவியாகத் தடையின்றி 53 பாடல்கள் வரை அருணகிரிநாதர் பாட,
உடனுக்குடன் வில்லிபுத்தாரார் பொருள் கூறிவந்தார். 54ஆம் பாடல்
தொடங்கப்பட்டது. அதனைத் 'த' வருக்கத்தில் அருணகிரிநாதர் பாடத்
தொடங்கினார். பாடல் பின்வருமாறு:
"திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே".
பொருள்:
திதத்தத் தத்தித்த, திதத்தத் தத்தித்த என்னும் தாளமானங்களை;
திதி தாதை= திருநடனத்தாற் காக்கின்ற பரமசிவனும்;
தாத=பிரமனும்; துத்தி தத்தி=படங்கொண்ட பாம்பினையுடைய;
தா திதி=இடத்தையும் நிலைபெற்று; தத்து அத்தி=ததும்புகின்ற
கடலை(பாற்கடல்)ப் பாயலாகச் கொண்டு; ததி தித்ததே து=
தயிர் தித்திக்கின்றதென்று உண்ட கண்ணனும்; துதித்து=
துதி செய்து தொழுகின்ற; இதத்தாதி(இதத்து +ஆதி)= பேரின்ப
சொரூபியான முதல்வனே!; தத்தத்து அத்தி தத்தை= தந்தத்தை
யுடைய அயிராவதம் என்ற யானையால் வளர்க்கப்பட்ட கிளிபோன்ற
தெய்வயானைக்கு; தாத=தொண்டனே! திதே துதை= தீமையே
நெருங்கிய; தாது= ஏழு தாதுக்களால் உருவானதும்; அதத்து உதி=
மரணத்தோடும் பிறப்போடும்; தத்து அத்து= பல தத்துவங்களோடு
பொருந்தியதுமான; அத்தி தித்தி= எலும்புகளால் மூடப்பட்ட இவ்
வுடலாகிய பை(மெய்ப்பை); தீ தீ திதி=தீயினால் தகிக்கப்படுகின்ற
அந்நாளிலே; துதி தீ தொத்தது= உன்னைத் துதிக்கும் சிந்தனை
உனக்கே அடிமையாக வேண்டும்.
குறு விளக்கம்:
திதத்தத் தத்தித்த என்னும் தாளத்தால் நடிக்கும் பரமசிவனும்,
பிரம்மாவும், தயிரையுண்டு பாற்கடலையும் ஆதிசேடனையும்
பாயலாகச் கொண்ட திருமாலும் வணங்குகின்ற முதல்வனே!
(முருகனே!) தெய்வயானைக்குத் தொண்டனே!! பிறப்பு இறப்பு
இரண்டையும் தவிர்க்க இயலாத,, எலும்பு முதலிய தாதுக்கள்
நிறைந்த பொல்லாத இந்த உடம்பைத் தீயினால் வேகவைக்கும் அந்த
நாளிலே உன்னைத் தொழும் சிந்தனையை உனது இணையடிக்கு
ஆட்படுத்தல் வேண்டும்.
இப்பாடலுக்குப் பொருள்சொல்லத் தெரியாத வில்லிப்புத்தூரார்
தோல்வியை ஒப்புக்கொண்டார். "என் காதை இந்தக் குறடால்
குடைந்து தோண்டுங்கள்" என்று அருணகிரி நாதரிடம் உரைத்தார்.
கருணையே உருவான அருணகிரிநாதர் அவ்வாறு செய்ய மறுத்து
"நான் அக்கொடுமையைப் புரியமாட்டேன்; நீங்களும் இதுபோல்
இனிப் புரியாதீர்" என்று கேட்டுக்கொண்டார்.
மேற்கொண்டு 46 பாடல்களை ஆசுகவியாகப் பாடி அந்நூலை
அருணகிரியார் நிறைவு செய்தார். நூலுக்கு உரை வகுத்தவர்
வில்லிபுத்தூராரே. அந்நூல் 'கந்தரந்தாதி' எனப் பெயர் பெற்றது.
அருணகிரிநாதர் என்னும் தமிழ்த் திரைப்படத்திலும் இப்பாடல்
இடம்பெற்றுள்ளது. போட்டிக்காக இயற்றப் பட்டதால் இந்நூலின்
பாடல்கள் பொருள் எளிதில் விளங்கிக் கொள்ள முடியாத கடும்
நடையில் உள்ளன.எனினும் தமிழ் இலக்கியத்தில் அருணகிரிநாதர்
பெயர் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
பார்வை:
திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக
வெளியீடான "கந்தரலங்காரம் & கந்தரந்தாதி" நூல்(டாக்டர் வ.சு.
செங்கல்வராயபிள்ளை உரையுடன்).
.
ReplyDelete