Friday, 23 April 2021

புதையல்

 பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைக்கும்......


புதையல் என்பது மனிதர்களால் மண்ணுக்குள் புதைத்துவைக்கப்பட்ட/

இயற்கைப் பேரிடர்களால் மண்ணுக்குள் புதையுண்ட தங்க, வெள்ளி

நகைகள், நாணயங்கள், காசுகள். மற்றும் மதிப்புமிக்க பொருள்கள்

ஆகும். பிறர் அறியா வண்ணம் செல்வத்தைப் புதைத்துவைத்துப்  பிற்பாடு

எடுத்துக்கொள்ளலாம் என எண்ணிப் புதைத்துவிட்டு மறந்த/மறைந்த

மக்களாலும் புதையல் உருவானது. ஔவையாரின் ஒரு பாடலைப்

பார்ப்போம்:

"பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைக்கும்

கேடுகெட்ட மானிடரே! கேளுங்கள்--கூடுவிட்டிங்(கு)

ஆவிதான் போனபின்(பு) ஆரே அனுபவிப்பார்?

பாவிகாள் அந்தப் பணம்".

இப் பாடலின் மூலம் அக்காலத்தில் பணத்தைப் புதைத்துவைக்கும் வழக்கம்

நிலவியதை அறிகிறோம். சங்ககாலத்தில் மகளிர் ஆற்றிலோ குளத்திலோ

நீராடப் போனால், நீராடுவதற்கு முன்பாகத் தத்தம் அணிகலன்களை

ஆற்றங்கரை/குளத்தங் கரை மணலில் புதைத்துவைத்துவிட்டு நீராடும்

வழக்கத்தைப் பின்பற்றியதாக ஐங்குறுநூறு என்னும் சங்க இலக்கியத்தில்

ஒரு பாடல் காணப்படுகிறது.

"புனலாடு மகளிர் இட்ட ஒள்ளிழை

மணலாடு சிமையத்(து) எருமை கிளைக்கும்"

ஆற்றில் நீராடும் மகளிர் புதைத்துவைத்த ஒளிபொருந்திய அணிகலன்களை

அவ்வழியே திரியும் எருமை கிண்டிக் கிளறி வெளியே கொண்டுவரும். சில

சமயங்களில் சில மகளிர் புதைத்துவைத்ததையே  மறந்து சென்றுவிடுவர்.

அந்த நகைகள் பிற்காலத்தில் புதையல் என அழைக்கப்பட்டன.


சீவக சிந்தாமணி இலக்கியத்தில் ஒரு பாடல் உள்ளது. ஒரு செல்வர்

தம் செல்வத்தை அவ்வப்பொழுது மண்ணுக்குள் புதைத்துவந்தார்.

எதிர்பாராமல் உடல்நலம் குன்றி மரணப் படுக்கையில் விழுந்துவிட்டார்.

பேச முடியவில்லை. அந்நேரம் தாம் அவ்வப்பொழுது புதைத்து வைத்த

செல்வத்தை நினைத்து மனைவியிடம் சைகையால் மண்ணுக்குள்

புதைத்துவைக்கப்பட்ட மண்கலயத்தைக் குறிப்பிட்டார். ஆனால் அவர்

மனைவிக்கு இவ்விடயம் தெரியாததால் அவர் ஆசையாக விளாம்பழம்

கேட்பதாக எண்ணி "இப் பருவத்தில் அப்பழம் கிடைக்காது" என்று கூற,

செல்வர் மனம் நொந்து உயிர் நீத்தார். அப்பாடல் பின்வருமாறு:

"கையால் பொதித்துணையே காட்டக் கயற்கண்ணாள் அதனைக் காட்டாள்;

ஐயா! விளாம்பழமே என்கின்றீர், ஆங்கதற்குப் பருவம் அன்(று)என்

செய்கோ? எனச் சிறந்தாள் போல்சிறவாக் கட்டுரையில் குறித்த எல்லாம்

பொய்யே பொருளுரையாம்; கொடுத்துண்டல் புரிமின் கண்டீர்".


முடியுடை மூவேந்தர் பிறநாடுகளின் மீது படையெடுத்துச் சென்றபோதும்,

வேற்றுநாட்டு மன்னர்கள் தமிழ்நாட்டுக்குப் படையெடுத்து வந்த போதும்

அந்த அந்த நாட்டில் வாழும் மக்கள் தம் செல்வத்தை மண்ணுக்குள் புதைத்து

வைத்துப் பிற்பாடு எடுத்துக்கொண்டிருந்திருக்கலாம். ஒருவேளை,

எடுக்காமல் விடுபட்டிருந்தால் அது புதையலாகியிருக்கும். 


பிற்காலத்தில் இரண்டாம் சரபோஜி மன்னர் புதையலுக்காக முயற்சிசெய்த

தாகச் செவிவழிச் செய்தியுண்டு. அவர் புதையலைக் கண்டுபிடித்தாரா?

இல்லையா? என்பது தெரியவில்லை. அவர் அடைய முயன்ற புதையல்

இருக்குமிடத்தில் நச்சுக்கருவண்டுகள் (கதண்டுகள்) அவ்விடத்தைப் பாது

காத்ததால் அவரால் புதையலை எடுக்கமுடியவில்லை என்று செவிவழிச்

செய்தியுண்டு.  சில இடங்களில் புதையலைப் பூதம் காப்பதாகவும், தெய்வம்

காப்பதாகவும் பேச்சு உலவும். அண்மைக் காலங்களில்

புதையலை எடுக்க முட்டாள்தனமாக நரபலி கொடுக்க

முயல்கின்றனர். போலி மந்திரவாதிகள் அவர்களைத்

தூண்டிவிடுகின்றனர். நரபலி கொடுத்தல்

முற்றிலும் களையப்படல் வேண்டும்.


எத்தனையோ படையெடுப்புகளால் நம்நாட்டுச் செல்வம்

கொள்ளையடிக்கப்பட்டுவிட்டது. புதையல் எதுவும் இருக்க

வாய்ப்பேயில்லை. ஒருவேளை யாரேனும் புதையலைக்

கண்டுபிடிக்க நேரிட்டால் அதனை அரசிடம் ஒப்படைப்பதே

முறையாகும். சட்டமும் இதையே வலியுறுத்துகிறது.

1 comment: