Sunday, 9 May 2021

கலிங்கத்துப் பரணி

 வருவார் கொழுநர் எனத்திறந்தும், வாரார் கொழுநர் என அடைத்தும்...‌‌

                                      (கலிங்கத்துப் பரணி)


பரணி ஒரு விண்மீன்(நட்சத்திரம்). பரணி விண்மீன் போர்க்கடவுளான

கொற்றவைக்குரியது. பரணி நாளில் பேய்கள் கூடி நிணச்சோறு

(இரத்தமும் தசையும் கலந்த உணவு) சமைத்து உண்டு மகிழ்ந்து ஆடிப்

பாடிக் களித்துப் போரில் வென்ற மன்னரது புகழைக் காளிக்குக் கூளிகள்

கூறுவதாக இலக்கியம் படைப்பது பரணி இலக்கியம் என அழைக்கப்படும்.

ஏதோ ஒரு காரணத்தால் போரில் தோற்ற நாட்டின் பெயரைத் தாங்கிப்

பரணி இலக்கியம் படைக்கப் படுவது மரபாகும்.


பரணி இலக்கியம் போரைப் பற்றிப் பாடுவதால் படிப்பவர்க்கு ஒருவித அச்ச

உணர்வும் அருவருப்பும் தோன்றுவது இயல்பே. ஆனால் அதையெல்லாம் மீறி

இலக்கியத்தில் மிளிரும் சந்தநயம், கற்பனை, காதல் காட்சிகள், வீரத்தைப்

பற்றிய விவரிப்பு, பேய்களைப் பற்றிய நகைச்சுவை இழையோடும் காட்சிகள்,

வரலாற்றுச் செய்திகள் எல்லாம் படிப்பவர் மனத்தை ஈர்த்து விடும் என்பது

மறுக்கமுடியாத உண்மை.


சாதாரண அரசர்கள் மீது பரணி இலக்கியம் படைக்கப் படுவதில்லை.

"ஆனை ஆயிரம் அமரிடை வென்ற

மானவ னுக்கு வகுப்பது பரணி"  (இலக்கண விளக்கம்)

என்ற இலக்கணப்படி மிகப் பெரிய பேரரசர் மீது பரணி பாடப்படுவது மரபு. இது

போலவே ,எல்லாப்  புலவர்களாலேயும்  பரணிபாட முடியாது. மிகப் பெரும்  புலவர்

களாலேயே இந்தஇலக்கியத்தைப் படைக்கமுடியும்.  கம்பருக்குச் சமமான தமிழ்ஆளுமை

கொண்ட செயங்கொண்டார் என்னும் புலவர் ஈரடித்  தாழிசை என்னும் யாப்பில் 54 விதமான

சந்த வேறுபாடுகளோடு 599  கண்ணிகள் பயின்று வருமாறு  இக் 'கலிங்கத்துப்

பரணி' என்னும் நூலை வடிவமைத்தார்.


முதலாம் குலோத்துங்க சோழன் ஆட்சிக் காலத்தில் அனந்தவர்மன்

என்னும் வடகலிங்க மன்னன்(இந்நாளைய ஒடிசாவின் பெரும்பகுதி

யும் ஆந்திராவின் சிறு பகுதியும் இணைந்தது கலிங்கம்) முறையாகக்

கப்பம் கட்டாததால் குலோத்துங்கன் தன் படைத்தலைவனும் அமைச்சனும்

ஆன  பல்லவர் வழிவந்த கருணாகரத் தொண்டைமான் என்பவனை

ஏவி வடகலிங்கத்தை அடிமைப்படுத்தினான் என்பது வரலாறு‌. இப் படை

யெடுப்பு 1112 ஆம் ஆண்டில் நிகழ்ந்ததாக வரலாறு பேசுகிறது. இப்பரணி

நூலில் நாட்டுடைத் தலைவன் குலோத்துங்கனின் பெருமையும் பாட்டுடைத்

தலைவன் கருணாகரத் தொண்டைமானின் பெருமையும் பேசப்படுகிறது.


இந்நூலில் கடைதிறப்பு, காடு பாடியது, களம் பாடியது, இந்திரசாலம், குலமுறை

கிளத்துதல், வாழ்த்து முதலிய பல பிரிவுகள் இயற்றப்பட்டிருந்தாலும் 'கடை திறப்பு'

என்னும் பகுதிதான் சுவையான பகுதியாகும். போருக்குச் சென்ற படைவீரர்கள்

தாய்நாட்டுக்குத் திரும்ப வெகு நாட்கள் ஆனமையால் அவ்வீரர்களின் மனைவிமார்கள்

தம் கணவர் வருவர் எனக் கடை(கதவு) திறந்து வைத்தும், வாரார் என எண்ணி மனம்

சோர்வுற்றுக் கடையடைத்தும் நிலைகொள்ளாமல் தவித்ததை அழகாகப் பாடியுள்ளார்.

"வருவார் கொழுநர் எனத்திறந்தும்

வாரார் கொழுநர் எனவடைத்தும்

திருகும் குடுமி விடியளவுந்

          தேயுங் கபாடந் திறமினோ!"

(குடுமி=கதவிலுள்ள குமிழ்; கபாடம்=கதவு) கண்ணி 69.


ஒரு குறும்புக்கார வீரன் முன்னொருநாளில் தானும் தன் மனைவியும் இணைந்திருந்த

காலத்தில் தான் உளறிய மொழிகளை வீட்டுக்கிளி பேசிக்காட்டியதையும் உடனே மனைவி

கிளியின் வாயைப் பொத்தியதையும் தன் மனைவிக்கு நினைவுறுத்திக்

கதவைத் திறக்க வேண்டினான்.

"நேயக் கலவி மயக்கத்தே

நிகழ்ந்த மொழியைக் கிளியுரைப்ப

வாயைப் புதைக்கு மடநல்லீர்!

         மணிப்பொற் கபாடந் திறமினோ!'"  (கண்ணி 67.)


காஞ்சி என்பது பெண்கள் இடையில் அணியும் அணிகலன். கலிங்கம் என்பது அவர்கள்

 உடுத்திக் கொள்ளும் ஆடையாகும்.  கணவன் மனைவி இணையும் நேரங்களில் காஞ்சி

யைக் கழற்றாமல் கலிங்கத்தை(ஆடையை)மட்டும் நெகிழ்த்திவிட்டு நலந்துய்ப்பர். இதனை

எடுத்தாண்டுள்ள புலவர், குலோத்துங்கன் காஞ்சி அரண்மனையில் அலுங்காதிருக்க,

அவன் படைத்தலைவன் கருணாகரத் தொண்டைமானால் கலிங்க நாடு சீர்குலைந்தது

என்று திறமையாகப் பாடியுள்ளார்.

"காஞ்சி யிருக்கக் கலிங்கம் குலைந்த

      கலவி மடவீர்!  கழற்சென்னி

காஞ்சி யிருக்கக் கலிங்கம் குலைந்த

      களப்போர் பாடத் திறமினோ!"  (கண்ணி எண்63)


"செக்கச் சிவந்த கழுநீரும்

       செகத்தில் இளைஞர் ஆருயிரும்

ஒக்கச் செருகும் குழல்மடவீர்!

        உம்பொன் கபாடந் திறமினோ!"  (கண்ணி எண்74)


போர்க்களக் காட்சியைக் காட்டும் ஒரு பாடல்:

"பொருதடக்கை வாளெங்கே?  மணிமார் பெங்கே?

        போர்முகத்தில் எவர்வரினும் புறங்கொடாத

பருவயிரத் தோளெங்கே? எங்கே யென்று

பயிரவியைக் கேட்பாளைக் காண்மின், காண்மின்!"


"கொற்றக் குடையினைப் பாடீரே!

குலோத்துங்க சோழனைப் பாடீரே!". (கண்ணி 533)


"பண்டை மயிலையைப் பாடீரே!

பல்லவர் தோன்றலைப் பாடீரே!"  (கண்ணி 534)


கலிங்கத்துப் பரணியைப்  படித்தின்புறுவோம்.

No comments:

Post a Comment