Wednesday, 14 July 2021

கொரனாவுக்குத் தடுப்பூசி மட்டுமே தீர்வு

 கொரனாவுக்குத் தடுப்பூசி மட்டுமே தீர்வாகும்.


1)சீனத்து  மண்ணில்  தோன்றித்

திக்கெட்டும்  பரவி  நிற்கும்

ஈனக்கொ  ரானா  நோயால்

        ஏற்பட்ட  துயரம்  கண்டும்

வானத்துத்  தெய்வ  மே!உன்

மனம் சற்றும்  இரங்கி  டாதோ?

ஏனிந்தப்  புறக்க  ணிப்பு,

        எங்கள் மேல்  கோபம்  ஏனோ?


2)ஈராண்டாய்ப்  பட்ட  பாட்டை

       இயம்பிடல்  இயலா(து)  அய்யா!

பாராண்ட  மன்னர்  தொட்டுப்

பாமர  மக்கள்  ஈறாச்

சூராதி  சூரர்  எல்லாம்

தொற்றுக்குத்  தோற்றே  போனார்;

சீரான வாழ்வி  ழந்து

         சிந்தையும்  உடலும்  நொந்தார்.


3)காய்ச்சலால்,  இருமல்  தன்னால்,

         கம்மிடும்  தொண்டைக்  கட்டால்,

பாய்ச்சிடும்  மூக்கு  நீரால்,

         பம்மிடும்  இரைப்பு  நோயால்,

பீய்ச்சிடும்  கழிச்சல்  நோயால்,

         பிழிந்திடும்  மேனி  நோவால்,

வாய்த்திடும்  உயிர்ப்புக்  காற்று

        குறைவதால்  அறிய லாமே.


4)பள்ளிகள்  திறக்க  வில்லை;

         படிப்பினில்  தேக்கம்;  மக்கள்

அள்ளிடும்  பொருளை  விற்கும்

         அத்தனை  கடையும்  மூடல்;

துள்ளியே  சுறுசு  றுப்பாய்த்

         தொழில்புரி  வாரும்  இல்லை;

விள்ளுதல்  இயலா  தய்யா,

          வீழ்ந்ததே  பொருளா  தாரம்.


5)முதல் அலைத்  தாக்கத்  நாலே

          முற்றிலும்  உருக்கு  லைந்தோம்;

இதமுறும்  இடைக்கா  லத்தில்

          மெத்தனம்  காட்டி  விட்டோம்;

மதங்கொண்ட  யானை  போல

          வந்ததே  இரண்டாம்  தாக்கம்;

சிதைந்ததே  அமைதி  வாழ்வு;

          சீர்செய்தல்  அரிதே  ஆகும்.


6)ஆதர  வற்ற  மாந்தர்,

          அன்றாடம்  காய்ச்சும்  ஏழை,

நாதியில்  மனிதர்,  மாற்றுத்

          திறனுடை  மக்கள்  போன்றோர்

சோதனைக்(கு)  ஆளா  கின்றார்;

         சுத்தமாய்  வாழ்வா  தாரம்

ஏதுமே  இலாமல்  வாழும்

         இன்னலைச்  சந்திக்  கின்றார்.


7)அரசுகள்  வருவாய்  இன்றி

          அரும்பொருள்  தட்டுப்  பாட்டால்

"தருகவே  நிதியை"  என்று

          தமதுமக்  களையே  வேண்டி

அருநிதி  திரட்டி, நல்லோர்,

          ஆன்றவர், கற்றோர் தங்கள்

புரையிலாக்  கருத்தை  ஏற்றுப்

          பொருத்தமாய்ச்  சேவை  செய்யும்.


8)ஊரடங்  கிடத்தான்  ஆணை

          உறுதியாய்  விடுத்துள்  ளாரே;

சீருறும்  அரசின்  சொல்லைச்

          சிந்தையில்  இருத்தி  வைத்து

யாரொடும்  நெருங்கி  டாமல்

          இடைவெளி  காப்போம்;  நோயை

வேரொடும்  வீழ்த்தும்  வண்ணம்

          வீட்டினில்  தங்கு  வோமே.


9)அடிக்கடி  கையி  ரண்டை

           அரசுகள்  நவின்ற  வாறே

மடியின்றி  வழலை  கொண்டு

            மறுவறக்  கழுவல்  நன்றாம்;

இடியினைப்  போலும்  துன்பம்

             இழைத்திடும்  கொரனா,  இல்லப்

படியினை  மிதியா  வண்ணம்

              பாங்குறத்  தூய்மை  காப்போம்.


10)மண்ணுக்குள்  கொத்துக்  கொத்தாய்

              மாண்டவர்  உடல்பு  தைத்தல்

கண்ணுக்குள்  கண்ணீர்  சிந்தக்

              காரணம்  ஆகும்  அய்யா!

விண்ணுக்குள்  ஆளும்  தெய்வம்

              மீட்டிட  அனுப்பி  வைத்த

தண்மைகொள்  தடுக்கும்  ஊசி

             தவறாமல்  போட்டுக்  கொள்க.


11)தடுத்திடும்  ஊசி  தன்னைத்

             தாமதம்  இன்றிப்  போட்டு

மிடுக்குடன்  கவசம்  மாட்டி

             வெளியினிற்  செல்ல  நேர்ந்தால்

அடுத்தவர்  தம்மை  நீங்கி

              ஆறடி  கடந்து  நிற்பீர்;

எடுத்திடும்  முயற்சி  யாலே

               இன்னல் செய்  கொரனா  ஓயும்.

அருஞ்சொற் பொருள்:

உயிர்ப்புக்  காற்று=ஆக்சிஜன்.

மடியின்றி=சோம்பலின்றி

வழலை=சோப்புக் கட்டி

No comments:

Post a Comment