செல்வர் மாளிகைக்குத் திருடச் சென்ற புலவர்; இருவரும் இணைந்து
இயற்றிய பாடல்
பதினெட்டாம் நூற்றாண்டில் நம் தமிழ்நாட்டில் வாழ்ந்தவர் தலைமலை
கண்ட தேவர் என அழைக்கப்பட்ட புலவர். அவர் போர்க்குடியில் உதித்தமையால்
மலைபோல் தலைகளைக் கண்டவர் என்னும் பொருள்பட தலைமலைகண்டர்
என்று பெயர்சூட்டப் பட்டிருப்பார் போலும். ஆயின், அவரது இயல்பு நேர்மாறாக
இருந்தது. அக்காலக் கட்டத்தில் அவர்தம் உற்றார், உறவினர் பிழைப்புக்காகத்
திருடும் தொழிலை மேற்கொண்டிருந்தார்கள். நம் புலவர்க்கோ அடிதடி, சண்டை,
திருட்டு, கொள்ளை, கொலை போன்ற தீச்செயல்கள் அறவே பிடிக்கவில்லை.
எந்நேரமும் சிவசிந்தனையில் மூழ்கியிருந்தார். ஐந்தெழுத்து மந்திரத்தை
ஓதிக்கொண்டேயிருந்தார். ஈசன் அவருக்குக் கல்விச் செல்வத்தை அள்ளியள்ளி
வழங்கினார். ஆனால், பொருட்செல்வத்தைத் தர மறந்துவிட்டார்.
",பாலியந் தொட்டு நல்லோர் பழக்கமும் தூய பண்பும்
ஆலிலைத் துயின்றோன் காணா அரவிந்தப் பதத்தில் அன்பும்
நாலியல் புடைய பாவும் நவின்று,நா வலனாம் ஆசை
மேவிடுந் தகவும் தோய்ந்தான்; வெஞ்சமர்த் தொழில்கற் றில்லான்"
என்று புலவர் புராணம் பாடிய முருகதாச சுவாமிகள் குறிப்பிட்டுள்ளார்.
முடியுடை மூவேந்தர்கள் இல்லாத காலம். நம் புலவர்க்குச் சரியான வருமானம்
கிட்டவில்லை. வறுமை நிலையிலும் ஒரு மாதரசியின் கரம் பற்றினார்.
அவர் மனைவிக்கு ஏழு அண்ணன்மார் இருந்தனர். அவர்கள் திருட்டுத்
தொழிலை மேற்கொண்டு ஓரளவு வசதியாகக் குடும்பத்தை நடத்திக் கொண்டிருந்
தனர். புலவர் மனைவி கல்வியறிவு இல்லாதவர். அவர் புலவரிடம் "என்
அண்ணன்மார் ஏழு பேரும் தத்தம் மனைவியரோடு ஓரளவு வசதியாக
வாழ்ந்துவருகின்றனர். அவர்கள் செய்யும் தொழிலில் தாங்களும்
பங்கெடுத்துக் கொண்டால் நாமும் வறுமை நிலையிலிருந்து தப்பிப்
பிழைக்கலாம்" எனச் சொன்னார். புலவர் உடனே " உன் அண்ணன்மார்
செய்வது திருட்டுத் தொழில். அது பாவச் செயலாகும். கொஞ்ச காலம்
பொறுத்திரு. மருதூர் ஈசன் நம் வறுமையைப் போக்கிடுவார். நம்பு"
என் நவின்றார். அம்மையார் உடனே "திருமங்கை ஆழ்வார் வழிப்பறிக்
கொள்ளை நடத்தவில்லையா?" என வினவினார். நம் புலவர் உடனே
"அவர் வழிப்பறிக் கொள்ளை நடத்தி நாராயணனுக்குத் தொண்டு
செய்தார். அப்பணத்தால் பிழைக்கவில்லை." என்று செப்பினார்.
காலம் உருண்டது. ஒவ்வொரு நாளும் வறுமைத் துயரம் கூடிக்கொண்டே
வந்தது.
தலைமலைகண்ட தேவர் சோர்வடைந்தார். இனி வறுமைப் பிணியைத் தாள
முடியாது. மனைவியை அழைத்து " உன் விருப்பப்படியே உன் அண்ணன்மார்
தொழிலில் பங்கெடுத்துக் கொள்ள முடிவு செய்துள்ளேன். அவர்களிடம்
தெரிவித்துவிடு. ஆனால் இரு நிபந்தனைகள்; எக்காரணத்தை முன்னிட்டும்
கொலைக் குற்றம் மேற்கொள்ளக் கூடாது. மகளிரிடம் தவறாக நடக்கக்
கூடாது." என்று பகர்ந்தார். அம்மையாருக்கு மிக்க மகிழ்ச்சி. ஓடிச் சென்று
தன் அண்ணன்மாரிடம் தகவலைத் தெரிவித்தார்.
அமாவாசை நாள் நெருங்கியது. புலவர் வேண்டா வெறுப்பாகக் கன்னமிடப்
புறப்பட்டார். அவருடன் மைத்துனர்கள் எழுவரும் சென்றனர். திருப்பூவணத்
தில் வாழும் செல்வர் ஒருவர் மாளிகையில் கன்னமிடத் திட்டம் தீற்றியிருந்
தனர். அவ்வாறே அம்மாளிகைக்குள் மைத்துனர் எழுவரும் கன்னமிட
நுழைந்தனர். புலவர் செல்வரது அறைவாசலில் நின்றுகொண்டு நோட்டம்
இட்டுக் கொண்டிருந்தார். உள்ளே சென்ற மைத்துனர் எழுவரும் நகைகள்,
பாத்திரங்கள் போன்றவற்றைத் திருடி மூட்டையாகக் கட்டிக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது சில வெண்கலப் பாத்திரங்கள் தரையில் விழுந்து பெருத்த
ஓசையை எழுப்பின. பெரிய மாளிகையாதலால் காவற்காரர்கள் வேற்
கம்புகள், அரிவாள்களோடு அவ்விடத்துக்கு ஓடிவரத் தொடங்கினர். இக்
காட்சியைக் கண்ட மைத்துனர்கள் எழுவரும் மாளிகைக்கு வெளியே
தப்பியோடிவிட்டனர். புலவர் மட்டும் என்ன செய்வது என்று தெரியாமல்
செல்வர் அறை வாசலில் நின்றுகொண்டிருந்தார்.
இவ்வளவு கலவரத்துக்கு இடையிலும் செல்வர் நிதானமாக ஏதோ
புலம்பிக் கொண்டிருந்தார். அவருக்கு ஒரு நல்ல பழக்கம்
இருந்தது. அன்றாடம் ஈசன் மேல் ஒரு வெண்பாப் பாடி முடித்துவிட்டுத்
தூங்கச் செல்வது வழக்கம். அன்றும் பாடத் தொடங்கினார்.
"தலையில் இரந்துண்பான்; தன்னுடலிற் பாதி
மலைமகட்(கு) ஈந்து மகிழ்வான்---உலையில்"
பிட்சாடனராக மண்டை ஓட்டில் பிச்சையெடுத்துண்பான்;
தன்னுடலிற் சரி பாதியை உமையம்மைக்குக் கொடுத்து மகிழ்வான்.
இரண்டு வரிகளுக்கு மேல் அவர் கற்பனை நகர மறுத்தது. சொற்கள்
வரத் தயங்கின. முதலிரண்டு வரிகளையே திரும்பத் திரும்பப் பாடிப்
புலம்பினார். அறை வாசலில் நின்றுகொண்டிருந்த தலைமலைகண்ட தேவர்
பாடலின் முதலிரண்டு வரிகளையே ஏன் பாடிக்கொண்டிருக்கின்றார்?
என்று சிந்தித்தார். அடக் கடவுளே! இரண்டு வரிதளுக்குமேல் அவர்க்குப்
பாட வரவில்லை போலும் என்றெண்ணி உலையில் என்ற தனிச்சொல்லைப்
பாடித் தொடர்ந்து
"இருப்புவண மேனியனார் என்றாலோ ஆமாம்
திரும்புவண நாதன் திறம்".
என்று நிறைவு செய்தார்.
வெண்பா நிறைவடையக் கேட்ட செல்வர் ஓடோடி வந்து அறை வாசலில்
நின்றுகொண்டிருந்த புலவரைக் கட்டிப் பிடித்து "ஐயா! தாங்கள் யார்? புலவரோ?
நீண்ட நேரமாக வெண்பாவின் முதலிரண்டு அடிகளுக்குமேல் பாடத் தோன்றாமல்
திணறிக் கொண்டிருந்தேன்; நீர் தக்க சமயத்தில் உதவினீர்; மிக்க நன்றி. தாங்கள்
இங்கு நின்றுகொண்டிருக்கக் காரணம் என்ன?" என்று வினவினார். புலவர்
உள்ளத்தில் கபடம் ஏதுமில்லாததால் மடைதிறந்த வெள்ளம்போல் உள்ளதை
உள்ளபடி உரைத்தார். எதனையும் மறைக்கவில்லை. இறுதியாக "வறுமையின்
கொடுமை தாளாது திருட வந்தேன்; வருந்துகிறேன்; பொறுத்தருள்க" என்றார்.
செல்வர் உடனே" பத்தாண்டுகளுக்கு மேலாக ஈசன் மேல் நாள்தோறும் ஒரு வெண்பாப்
பாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். இன்று அந்த வழக்கம் முறிந்து விடுமோ?
என்று கவலையடைந்தேன்.. தாங்கள் என்னைக் காத்தருளுனீர். நான் உமக்குக்
கடப்பாடுடையேன்" என மொழிந்தார். பின்னர் இருவரும் இணைந்து ஒருசில
பாடல்கள் இயற்றினர். பிற்பாடு புலவர்க்கு விருந்து படைத்து மகிழ்ந்தார். அன்றிரவு
புலவர் செல்வர் மாளிகையிலேயே தங்கினார். இடையிடையே, புலவரைப் பற்றிய
சில விவரங்களையும் கேட்டறிந்த செல்வர் புலவர் மனைவிக்கு ஆட்கள் மூலமாகத்
தகவல் தெரிவித்தார். மறுநாள் காலையில் மைத்துனர் எழுவரையும் தம் மாளிகைக்கு
வரச் சொல்லியிருந்தார்.
மறுநாள் காலையில் புலவரின் மைத்துனர் எழுவரும் வந்து சேர்ந்தனர்.
செல்வர் அவர்களைத் தம் பண்ணையில் பணிக்கு அமர்த்திக்கொண்டார்.
திருட்டை விட்டொழிக்கு மாறு அன்புடன் வேண்டுகோள்விடுத்தார்.
புலவர்க்குத் தக்க வெகுமதி கொடுத்து அனுப்பிவைத்தார்.
பார்வை:
தலைமலைகண்ட தேவர் இயற்றிய மருதூர் அந்தாதி நூல்.
தஞ்சை சரசுவதி மகால் நூலக வெளியீடு, 1968.
This comment has been removed by the author.
ReplyDelete