Thursday, 2 September 2021

கூடல் இழைத்தல்

 கூடல் இழைத்தல்.


கூடல் இழைத்தல் என்பது சங்ககாலத்தில் மகளிரிடையே

நிலவிய பழக்கம். திருமணமாகாத மகளிர் தாம் விரும்பிய

காதலர் தம்மை அடைவாரோ? மாட்டாரோ?(கூடுவாரோ?

மாட்டாரோ?) என்று அறிந்து கொள்ளச் செய்த ஒரு விநோதப்

பழக்கம். முற்றத்தில் மணலைக் குவித்து அதன்மேல் கண்களை

மூடிக்கொண்டு ஒரு விரலால் வட்டமாகக் கோடிட்டு அதற்குள்

வளையம் வளையமாக வரைவார்கள். அந்த வளையங்களின்

எண்ணிக்கை இரட்டைப்படையாக வந்தால் தம் காதலர் தம்மைக்

கூடுவர். ஒற்றைப் படையில் வந்தால் காதலர் தம்மைக் கூடார்.

மேலும்,  கண்ணை மூடிக்கொண்டு வட்டம் வரையும் போதில்

தொடங்கிய இடத்தில் சரியாக வட்டத்தை முடித்தல் வேண்டும்.

அதாவது, வட்டத்தின் தொடக்கமும் முடிவும் சரியாகப் பொருந்துதல்

வேண்டும். அவ்வாறானால் தம் காதலர் தம்மைக் கூடுவர். சரி

யாகப் பொருந்தாவிட்டால் காதலர் தம்மைக் கூடார் என்ற

அவநம்பிக்கை அடைவர். இதைத்தான் கூடல் இழைத்தல் என்று

அழைத்தனர். கூடல் இயைதல்,  கோடியைதல், சுழி இடுதல்,

சுழிக்  கணக்கு, மணற்சுழிச் சோதிடம் என்ற பெயர்களும் உள்ளன.

இன்றுவரை இந்தப் பழக்கம் நம்மிடையே  நிலவுதல் கண்கூடு.

ஒற்றையா, இரட்டையா பார்ப்பது கூடல் இழைத்தலின் ஒரு

வடிவம் தானே!


சங்க இலக்கியமான கலித்தொகை ஒரு நிகழ்வை விவரிக்கிறது.

ஒரு தலைவி தன் இல்லத்தில் கூடல் இழைக்கும் பொழுது ஒரு முனை

மற்ற முனையுடன் கூடவில்லை. அதாவது தலைவி வட்டம் வரையும்

பொழுது தொடக்கக் கோடு முடிவுக்கோடோடு பொருந்தவில்லை.

கண்ணை மூடிக்கொண்டு வட்டம் வரைந்ததால் வட்டம் இளம்பிறை

போல வந்து விட்டது. அது முழுநிலவை  நினைவுபடுத்தியதால் அதனைத்

தன் ஆடையினால் மூடுகிறாள். (காதலரைப் பிரிந்திருக்கும் பெண்களுக்கு

முழுநிலவைப் பிடிக்காது.) பின்னர், சிவபெருமான் பிறையைத் தேடு

வாரே என்றெண்ணி மூடுவதை விலக்குகிறாள். பாடல் வரிகள் பின்வருமாறு:

"கோடு வாய் கூடாப் பிறையைப் பிறிதொன்று

நாடுவேன் கண்டனென்; சிற்றிலுள் கண்டாங்கே

ஆடையான் மூஉய் அகப்படுப் பேன்;  சூடிய

காணான் திரிதரும் கொல்லோ மணிமிடற்று

மாண்மலர்க் கொன்றை யவன்."

(கலித்தொகைப் பாடல்:142 வரிகள்24--28)

புலவர்: நல்லந்துவனார்--நெய்தற்கலி.


சங்கம் மருவிய காலத்து நூலான முத்தொள்ளாயிரத்திலும், பக்தி

இலக்கியங்களிலும் கூடல் இழைத்தல்

குறிப்பிடப் பட்டுள்ளது. அதாவது

இம்முறை தொடர்ந்து பின்பற்றப்பட்டுள்ளது..

இப்பொழுதும் கூடக் கிராமப் புறங்களில் இதன் மருவிய வடிவங்கள்

(ஒற்றையா, இரட்டையா எனப் பார்த்தல்) பழக்கத்தில் உள்ளன.


முத்தொள்ளாயிரம் என்னும் நூலில் சுட்டப் படும் ஒரு காட்சியைக்

காண்போம். பருவப் பெண் ஒருத்தி பாண்டியமன்னன் உலா வரும்

பொழுது அவன் தோற்றப் பொலிவைக் கண்டு ஒருதலைக் காதல்

கொண்டனள். பாண்டிய மன்னன் தன்னைக் கூடுவானோ? மாட்டா

னோ? என்று தெரிந்து கொள்ளக் கூடல் இழைத்துப் பார்க்க விரும்பி

னாள். ஆனால், உள்ளூற அவளுக்கு ஏகப்பட்ட தயக்கம். கூடல் இழைக்

கும் பொழுது தொடங்கிய இடமும் முடிந்த இடமும் பொருந்திக் கூடி

விட்டால் மனத்துக்கு மகிழ்ச்சி; இல்லையென்றால் என்னாவது?

என்று சிந்தித்தாள். கூடல் இழைப்பவள்போல் ஒரு விரலால் காற்றில்

வளையம் வரைந்தாள்; பின்னர் அதனை அழிப்பது போல விரலை

அசைத்தாள். கூடல் இழைப்பதுபோல் விரலால் சைகை செய்து பின்னர்

இம் முயற்சியில் தவறு நேர்ந்திடுமோ? என்று அஞ்சிக் கூடல் இழைப்பதைக்

கைவிட்டாள். பாடல் இதோ:

"கூடல் பெருமாளைக் கூடலார் கோமானைக்

கூடப் பெறுவேனல் கூடென்று---கூடல்

இழைப்பாள்போல் காட்டி இழையா திருக்கும்

பிழைப்பில் பிழைபாக்(கு) அறிந்து."

பொருள்:

மதுரை நகருக்கு அதிபதியும் மதுரைவாழ் மக்கள் போற்றிப் பாராட்டும்

வேந்தனும் ஆன பாண்டியனைக் கூடுவேனோ? கூட மாட்டேனோ?

என்று அறியக் கூடல் இழைத்தல் என்னும்  வழக்கத்தைப் பின்பற்ற

நினைத்த ஒருதலைக் காதல்கொண்ட  ஒரு பருவப் பெண் கூடல்

இழைப்பவள்போல் முனைப்புக் காட்டிப் பின்னர் எதிர்மறையாக முடிவு

வரும் என்று அஞ்சிக் கூடல் இழைத்தலைக் கைவிட்டாள். ஒருதலைக்

காதல் என்றாலும் அவள் அளவில் நேர்மையான காதல் என்று கருதிய

பெண் மற்றப்  பெண்களைப் போலவே கூடல் இழைக்க விரும்பிப் பின்னர்

எதிர்மறை முடிவு வந்தால் மனம் வருந்துமே என்றஞ்சி அம்முயற்சியைத்

துறந்தனள்.

அருஞ்சொற் பொருள்:

கூடல் பெருமாள்--மதுரை நகருக்கு அதிபதி

கூடலார் கோமான்--மதுரை மக்களால் போற்றப்படும் பாண்டிய வேந்தன்

பிழைப்பில்--எதிர்மறை முடிவு வந்தால்

பிழைபாக்கு--தவறுதல்.


பிற்காலத்தில்(ஏழாம் நூற்றாண்டில்) திருநாவுக்கரசர்,  எட்டாம் நூற்றாண்டில்

ஆண்டாள் அம்மையார், ஒன்பதாம் நூற்றாண்டில் மாணிக்கவாசகர் தமது

பக்திப் பாடல்களில்  கூடல் இழைத்தலைக் குறிப்பிட்டுள்ளனர். தம்மை

நாயகியாகக் கருதிக் கொண்டு தாம் நாயகனான இறைவனைக் கூட இயலு

மா? என்று ஏக்கத்துடன் பாடியுள்ளனர். ஆண்டாள் நாச்சியார் இதுகுறித்து

ஒரு பதிகமே (பத்துப் பாடல்கள்) பாடியுள்ளார். ஒரு பாடலைப் பார்ப்போம்:

"தெள்ளியார் பலர் கைதொழும் தேவனார்

வள்ளல் மாலிருஞ் சோலை மணாளனார்

பள்ளி கொள்ளும் இடத்தடி கொட்டிடக்

கொள்ளு  மாகில்நீ  கூடிடு  கூடலே!" 

(நாச்சியார் திருமொழி)


மிகப் பிற்காலத்தைச் சேர்ந்த இலக்கியங்களிலும் கூடல் இழைத்தல் குறிப்

பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment