நெற்கொண்டு போமளவும் நில்லாய் நெடுஞ்சுவரே!
கவிச்சக்கரவர்த்தி கம்பரைப் பற்றிய கதைகள் தமிழ்நாட்டில்
ஏராளமாக உலாவருகின்றன. எது உண்மை? எது கற்பனை?
என்று பிரித்தறிய இயலாதவண்ணம் உண்மையும் கற்பனையும்
விரவிக் கிடக்கின்றன. இது தொடர்பான பாடல்கள் தனிப்பாடல்
திரட்டு நூல்களில் கிடைக்கின்றன. ஆனால் அவற்றுக்கு ஆதாரம்
ஏதுமில்லை; கல்வெட்டுச் சான்றோ இலக்கியச் சான்றோ வேறு
வரலாற்றுச் சான்றோ இல்லாமல் மக்களிடையே உலவும் இக்
கதைகளை அவர்கள் இரசிக்கத்தான் செய்கின்றனர். மாபெரும்
புலவர்களான கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்திப் புலவர், இடைக்
கால ஔவையார் முதலான புலவர்கள் வெவ்வேறு காலக்கட்டத்தில்
வாழ்ந்தவர்கள் என்று வரலாற்றுத்துறை அறிஞர்கள் கருத்துச்
சொன்னாலும் பொதுமக்கள், நால்வரும் ஒரே காலத்தில் வாழ்ந்ததாகக்
கருதியே இக்கதைகளை இரசித்தனர். இக்கட்டுரையில் வரும் ஒரு
நிகழ்வும் பொதுமக்களால் விரும்பி இரசிக்கப்பட்ட கதையே.
கவிச்சக்கரவர்த்தி கம்பருக்கும் குலோத்துங்க சோழச் சக்கர
வர்த்திக்கும் ஏதோ ஒரு காரணம் பற்றி மனவருத்தம் உண்டானது.
குலோத்துங்கன் கம்பரைச் சோழநாட்டைவிட்டு வெளியேறுமாறு
பணித்ததாகக் கதை உலவுகிறது. உடனே கம்பர் கீழ்க்கண்ட பாடலைப்
பாடிவிட்டு வெளியேறியதாய்ச் சொல்லப்படுகிறது:
"மன்னவனும் நீயோ? வளநாடும் உன்னதோ?
உன்னையறிந் தோ,தமிழை ஓதினேன்---என்னை
விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோ? உண்டோ,"
குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு?"
"நீ கொடுத்த சிறப்புகள் அனைத்தையும் துறந்துவிட்டு
உன் நாட்டிலிருந்து வெளியேறும் நான் திரும்பிவரும்
பொழுது பல சிறப்புகளோடு உன்போன்ற மன்னன்
அடைப்பைக் காரனாக(வெற்றிலை மடித்துக்கொடுக்கும்
ஊழியனாக) உடன்வர உன் நாட்டுக்குள் நுழைவேன்"
என்று சூளுரைத்துச் சென்றார். சோழநாட்டைவிட்டு
வெளியேறிய கம்பர் பல இடங்களுக்கும் அலைந்து
திரிந்து ஒரு நகரத்தை அடைந்தார். அந்நகரத்தை
ஆட்சி செய்தவர் அண்மையில் இறந்த காரணத்தால்
அவரின் மனைவி வேலி என்பவள் ஆட்சியைக் கவனித்தாள்.
ஏனென்றால் பிள்ளைகள் உரிய வயதை அடையவில்லை.
வேலி தன் மனையைச் சுற்றி நாற்புறமும் பாதுகாப்புச்
சுவர் எழுப்ப ஏற்பாடு செய்தாள். எல்லாப் பக்கமும் சுவர்
எழுப்பும் பணி நன்கு நிறைவேறியது. ஒரு பக்கச்சுவர்
மட்டும் பணி முழுமை பெறாமல் குறையாகத் தென்பட்டது.
கட்டிடப் பணியாளர்களை அழைத்து அந்தக் குறிப்பிட்ட
பக்கச்சுவர் முற்றுப் பெறாமல் குறையாகக் காட்சியளிக்கும்
காரணம் குறித்து வினவினாள். "அம்மையே அச்சுவரின்
மூலையில் பத்தடி அளவுச் சுவரை எத்தனைமுறை கட்டினாலும்
நிற்காமல் இடிந்து விழுந்து விடுகிறது. என்ன காரணம் எனத்
தெரியவில்லை" என்றனர். வேலி, உடனடியாகக் கொத்து
வேலையிற் சிறந்த விற்பன்னரை அழைத்து இதுகுறித்து
விசாரித்தாள். அவரும் சுவர் முழுவதும் ஆய்வுசெய்துவிட்டு
அந்த மூலையில் ஏதேனும் பிரம்ம ராட்சசு இருக்கலாம்.
அது அந்தப் பகுதியைக் கட்டவிடாமல் தடுத்திருக்கலாம்"
என்று கருத்துத் தெரிவித்தார்.(அகால மரணமடைந்த
பிராமண அறிஞர் ஆன்மா பிரம்ம ராட்சசு எனக் கருதப்
பட்டது. அது கோவில் உட்பட ஏதாவது ஓரிடத்தை ஆக்கிர
மித்துத் தங்கிவிடும். அது யாருக்கும் கட்டுப்படாது. அதனை
வெளியேற்றுவது எளிதன்று என்பது மக்களிடையே நிலவும்
நம்பிக்கை).
வேலியும் பல கொத்து வேலை செய்பவரை அழைத்துவந்து
குறைச் சுவரைக் கட்டி யெழுப்பப் பலப்பல முயற்சி எடுத்தாள். எல்லா
முயற்சியும் தோல்வியிலேயே முடிந்தது. சுவரைக் கட்டி முடித்தால்
குறுணி நெல் தருவதாக அறிவிப்பும் வெளியிட்டனள்.. ஆனால்
விளைவு ஏதும் நிகழவில்லை. சுவரைக் கட்டி முடித்துக் கூலி
வாங்கும் முன் சுவர் இடிந்து விழுந்துவிடும். வேலி சோர்ந்து
போனாள்.
இந்நிலைமையில் கம்பர் அந்நகருள் நுழைந்து வேலை ஏதாவது
கிடைக்குமா என்று மக்களிடம் விசாரித்தார். மக்கள் வேலியின்
அறிவிப்பைப் பற்றி எடுத்துரைத்தார்கள். குறுணிநெல் கிடைக்கும்;
உணவுப் பிரச்சினையைச் சமாளித்து விடலாம் என்றெண்ணிய
கம்பர் வேலியின் வீட்டையடைந்தார். வேலியும் அனைத்து நிகழ்வைப்
பற்றியும் எடுத்துரைத்தாள். கம்பர் கொத்து வேலையைத் தொடங்கி
முடித்தார். கட்டி முடிக்கப்பட்ட சுவர் ஆடுவது போலத் தோன்றியது.
கம்பர் உடனே சரசுவதி தேவியை வணங்கிப் பாடத் தொடங்கினார்:
"மற்கொண்ட திண்புயத்தான் மாநகர்விட்(டு) இங்கு வந்தேன்;
சொற்கொண்ட பாவின் சுவையறிவார் ஈங்கிலையே;
விற்கொண்ட பிறைநுதலாள் வேலி தருங்கூலி
நெற்கொண்டு போமளவும் நில்லாய் நெடுஞ்சுவரே!"
பாடலைக் கேட்ட பிரம்மராட்சசு "பாடியவர் நம்மைவிடப் பெரிய
அறிஞர் போல் தோன்றுகின்றது என்று அஞ்சி அவ்விடத்தை விட்டு
நீங்கியது. சுவர் இடிந்து விழாமல் நிலைத்து நின்றது. வேலியும்
குறுணி நெல்லை யளந்து கம்பருக்குக் கொடுத்தாள்.
(நம்புகிறோமோ இல்லையோ, பல கோவில்களில் பிரம்ம ராட்சசு
வுக்குத் தனியிடமோ, சந்நிதியோ உள்ளது). பிரம்மராட்சசுவை
நம்பத் தயங்குபவர்கள் ஏதோ காரணத்தால் சுவர் இடிந்து விழுந்தது;
கம்பர் கைராசியால் சுவர் இடியாமல் நிலைத்துநின்றது என்று
எண்ணிக் கொள்ளலாம்.
பிற்பாடு கம்பர் பல இடங்களுக்கு அலைந்து திரிந்து ஓரங்கல்
(ஆந்திரர்கள் வாரங்கல் என அழைக்கின்றனர்) நாட்டை அடைந்து
காகதீய வமிசத்தைச் சேர்ந்த முதலாம் பிரதாபருத்திரன் நட்பைப்
பெற்றதாகவும், அவ்வேந்தன் கம்பர் புலமையை மதித்து அடைப்பைக்
காரனாகக் கம்பருடன் சோழன் அரண்மனைக்குள் வந்ததாகவும் சிலர்
கூறுகின்றனர். எந்த அளவுக்கு உண்மை? என்பது தெரியவில்லை.
கம்பர் வரலாறும் புகழேந்திப் புலவர் வரலாறும் ஒட்டக்கூத்தர் வரலாற்
றைப் போன்று ஆதாரத்துடன் அமையவில்லை. இவர்கள் பெரும்
புலவர்கள் என்பதைத்தவிர மற்ற விவரங்கள் ஆதாரங்களின்றிக்
கதைகளாகவே உள்ளன. இதற்குக் காரணம் தனிப்பாடல் திரட்டு
நூல்களில் காணப்படும் ஏராளமான கவிதைகள். சுமாராகக் கவிதை
புனைவோரும் தங்கள் பாடல்களை இந்நூல்களில் இடம்பெறச் செய்து
விடுகின்றனர். "தூங்கினவன் தொடையில் திரித்தமட்டும் கயிறு" என்னும்
பழமொழிக்கேற்பத் தம் பாடல்களைப் பெரும் புலவர்கள் பாடல்களோடு
உலவ விட்டுவிடுகின்றனர். இவ்விதப் பாடல்களும் சுவைபட அமைந்திருப்பதால்
படிப்பவர்களால் எவை பெரும்புலவர் இயற்றியவை எவை அவர்கள் இயற்றாதவை
எனக் கண்டுபிடிக்க இயலாமல் போகிறது. தனிப்பாடல் திரட்டு நூல்களில்
காணப்படும் பாடல்களைப் படித்து இரசிக்கலாம் என்பதைத் தவிர அவற்றில்
சொல்லப்படும் செய்திகள் வரலாற்றுத் தொடர்பு கொண்டவை என்று உறுதியாக
நம்ப இயலாது. ஏனென்றால் இலக்கண நூலான தொல்காப்பியத்திலும், பெரும்
இலக்கியமான கம்பராமாயணத்திலும் இடைச் செருகல்கள் நுழைந்துள்ளதாகப்
பேரறிஞர்கள் தெரிவிக்கும் பொழுது, தனிப்பாடல் திரட்டு நூல்களைப் பற்றி
என்ன சொல்வது?
பார்வை: விநோத ரச மஞ்சரி - தொகுத்தோர் தமிழறிஞர் வீராசாமிச் செட்டியார்.
No comments:
Post a Comment