சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை.
தமிழ் இலக்கியத்தில் மனிதர்களைப்பற்றி மட்டும்
அல்லாமல் விலங்குகள், பறவைகள், தாவரங்கள்
போன்றவற்றைப் பற்றியும் பாடல்கள் பாடப்பட்டு
வருகின்றன. பறவைகளில் கிளிகள் சிறப்பாகப்
போற்றப்படுகின்றன. அழகாலும், ஏறத்தாழ மனிதரைப்
போன்ற பேச்சுத்திறத்தாலும், நேர்த்தியான நடத்தை
யாலும் கிளிகள் நம் மனத்தைக் கவர்ந்து விடுகின்றன.
சங்க இலக்கியங்களில் அகப்பொருள் பேசும் காதற்
பாடல்களில் கிளிகள் அடிக்கடி குறிப்பிடப்பட்டுள்ளன.
தலைவி கிளிகளைத் தூது அனுப்புவதும், தலைவன்
பிரிய நேர்ந்தால் கிளிகளிடம் புலம்புவதும் குறிப்பிடப்
பட்டுள்ளன. ஐங்குறுநூறு என்னும் இலக்கியத்தில்
குறிஞ்சித்திணைப் பாடல்களில் 'கிள்ளைப் பத்து'
என்னும் தலைப்பில் பத்துப் பாடல்களைக் கபிலர் பாடி
யுள்ளார். 'அழகர் கிள்ளை விடு தூது' என்னும் நூலைப்
பலபட்டடைச் சொக்கநாதர் என்னும் புலவர் இருநூற்றைம்பது
ஆண்டுகட்கு முன்னர் இயற்றினார். அதில் திருமாலிருஞ்
சோலை அழகர் பெருமான் மீது ஒருதலைக் காதல் கொண்ட
பெண்ணொருத்தி கிளியொன்றை அவர்பால் தூதனுப்பியதாக
இயற்றியுள்ளார்.
மனிதர்களுக்குக் கிளிகள் பால் ஈர்ப்பு ஏற்படக் காரணம்
என்ன? கிளிகளை நன்கு பழக்கினால் கிட்டத்தட்ட மனிதரைப்
போன்றே தெளிவாகப் பேசும் திறமை கிளிகளுக்கு உள்ளது.
அதனால்தான் 'சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை' என்ற
முதுமொழி பழக்கத்தில் உள்ளது.
கலிங்கத்துப் பரணி என்னும் இலக்கியத்தில் 'கடை திறப்பு'
என்னும் தலைப்பில் செயங்கொண்டார் பாடிய கண்ணி(67)
பின்வருமாறு:
"நேயக் கலவி மயக்கத்தே நிகழ்ந்த மொழியைக் கிளியுரைப்ப
வாயைப் புதைக்கு மடநல்லீர்! மணிப்பொற் கபாடம் திறமினோ".
பொருள்: கலிங்கப் போர் முடிந்த பிறகு சோழநாட்டுக்குத் திரும்பும்
வீரன் ஒருவன் தன் வீட்டுக் கதவைத் தட்டும் போது முன்னொரு
நாளில் தானும் தன் மனைவியும் பிறர் அறியாமல் காதல் உரை
யாடல் நிகழ்த்திய பொழுது தான் உளறியவற்றைக் கூர்ந்து கவனித்துக்
கேட்ட வீட்டுக் கிளி அப்படியே எழுத்துப் பிசகாமல் பேசியதையும்
உடனே தன் மனைவி பதறிப்போய் அதன் வாயை மூடியதையும்
நினைத்துக் கொண்டு "பெண்ணே! கதவைத் திற" என நவின்றான்.
கிளிகளை நன்கு பழக்கினால் அவை ஏறத்தாழ நம்மைப் போன்றே
பேசும் என்பதை எடுத்துக் காட்டும் மற்றொரு நிகழ்ச்சி பின்வருமாறு:
பதினாறாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் விசயநகர
ஆட்சி நடந்த பொழுது திருவாரூர்ச் சிவன் கோவிலில்
நாகராச நம்பி என்பவர் சிறீகாரியம் பார்த்துவந்தார்.
ஒருநாள் பணத்தாசைகொண்டு அறுபத்து மூன்று நாயன்
மார் ஐம்பொன் சிலைகளிலே இரண்டை ஒரு கன்னாருக்கு
விற்று விட்டார். எவ்வளவோ கமுக்கமாக நடைபெற்ற போதி
லும் ஏனைய கோவில் ஊழியர்களுக்கு இந்தச் செய்தி தெரிந்து
விட்டது. அவர்கள் மூலமாக ஊரார்க்கும் இவ்விடயம் தெரிய வர,
எல்லாரும் கூடி ஆலோசனை செய்தனர். இந்தச் செய்தியை
நாடாளும் கிருட்டிண தேவராயருக்குத் தெரிவித்து விடத் தீர்மா
னித்தனர்.
ஆனால், இந்தத் திட்டத்தை எப்படிச் செயல் படுத்துவது? யார்
இராயரிடம் தெரிவிப்பது? என்று சிந்தித்துக் குழம்பிக்கொண்
டிருந்தனர். அவர்களுடைய நல்லகாலம், கிருட்டிண தேவராயர்
திருவாரூர்ச் சிவபெருமானை வணங்க வர இருப்பதாகத் தக
வல் வந்தது. இச் செய்தியைக் கேள்வியுற்ற ஊர்மக்கள் பெரும்
மகிழ்வுற்றனர். யார் அரசரைச் சந்தித்து இந்த விடயத்தைப்
பற்றி அவரிடம் எடுத்துரைப்பது? என விவாதித்தனர். நெடுநேர
ஆலோசனைக்குப்பின் யாரும் அரசரைச் சந்தித்து இது தொடர்
பாகப் பேசவேண்டியதில்லை என்று முடிவுசெய்தனர். மாறாக,
இரண்டு கிளிப்பிள்ளைகளைப் பழக்கி அவை வாயிலாகச் சிலைத்
திருட்டை இராயருக்குத் தெரிவித்துவிடலாம் என்று முடிவுசெய்தனர்.
அதன்படி கீழ்க்கண்ட பாடல் இயற்றப்பட்டது:
"முன்னாள் அறுபத்து மூவரிருந் தாரவரில்
இந்நாள் இரண்டுபேர் ஏகினார்--கன்னான்
நறுக்கின்றான், விற்றுவிட்ட நாகரச நம்பி
இருக்கின்றான் கிட்டினரா யா".
பொருள்:
இதற்கு முன்பு அறுபத்து மூன்று நாயன்மார் பஞ்சலோகச் சிலைகளாக
இருந்தனர். அச்சிலைகளில் இரண்டு நாயன்மார் சிலைகள் வெளியே
போய்விட்டன. அதாலது இரண்டு பஞ்ச லோகச் சிலைகளும் விற்கப்பட்டு
விட்டன. வாங்கிய கன்னான் சிலைகளைத் துண்டுதுண்டாக நறுக்கி உரு
மாற்றம் செய்கின்றான். சிலைகளைத் திருடி விற்ற சிறீகாரியம் பார்க்கும்
நாகராச நம்பி என்பவன் இன்னும் அதே பணியில் இருக்கின்றான். விசய
நகர வேந்தராம் கிருட்டிண தேவராயரே! (இதனை யறிந்து தக்க முறையில்
விசாரணை மேற்கொண்டு குற்றம் செய்த நாகராச நம்பிக்குத் தகுந்த தண்
டனை வழங்கிடுதல் வேண்டும் என்பது உட்பொருள்).
குறிப்பிட்ட நாளும் வந்தது. திட்டமிட்டபடியே கிருட்டிணதேவராயர் தமிழகச்
சுற்றுப் பயணம் மேற்கொண்டு திருவாரூர்ச் சிவபெருமானை வணங்கக்
கோவிலுக்குள் நுழைந்து தியாகராசர் சந்நிதிக்கு வந்தார். அப்பொழுது
இரண்டு கிளிகள் பறந்துவந்து இராயரின் தோள்களில் அமர்ந்து மேலே
குறிப்பிடப்பட்ட பாடலைச் சொல்லின. நல்ல பயிற்சி கொடுத்த காரணத்
தால் ஏறத்தாழ மனிதனைப் போலவே பாடலைக் கூறின. பெரும்பகுதி
இராயருக்குப் புரிந்தது. உடனடியாக அறுபத்து மூவர் சிலைகளை எண்ண
ஆணையிட்டார். எண்ணிக்கையில் இரண்டு குறைந்தன. வாங்கிய கன்
னானை வரவழைத்து விசாரணை மேற்கொண்டார். நாகராச நம்பியின்
திருட்டுத்தனம் வெளிப்பட்டது. உரிய தண்டனையை வழங்கிவிட்டுத் தன்
சுற்றுப் பயணத்தைத் தொடர்ந்தார். சிலைத் திருட்டை வெளிக்கொணர்ந்த
கிளிப்பிள்ளைகள் பாராட்டுக்கு உரியன என்பதில் ஐயமில்லை.
பார்வை: தமிழ் நாவலர் சரிதை மூலமும் உரையும்:
ஆசிரியர்: பேராசிரியர்/தமிழ் ஆராய்ச்சியாளர்
ஔவை சு.துரைசாமி பிள்ளை.
No comments:
Post a Comment