Saturday, 23 April 2022

ஓரில் பிச்சை பெறுக.

 செந்நெல் அமலை  வெண்மை வெள்ளிழுது ஓரில் பிச்சை பெறுக!


ஒரு தலைவன் பொருளீட்டுவதற்காகத் தலைவியைப் பிரிந்து

சென்றான். அப்பொழுது "நீவிர் எப்பொழுது திரும்பி வருவீர்?"

என்று வினவிய தலைவியிடம் வாடை வீசும் பருவத்தில்  திரும்பி

வருவதாகச் சூள்(உறுதி) உரைத்துச் சென்றான். தலைவனைப்

பிரிந்துள்ள தலைவிக்கு ஒவ்வொரு நாள் கழிவதும் ஒரு யுகம் கழிவது

போலத் தோன்றியது. நெடுந்தொலைவு சென்ற தலைவனைப் 

பிரிந்து ஏங்கும் தலைவிக்கு ஒருநாள் கழிவது  ஒரு வாரம் போல

நீண்டு கழியும் என்று வள்ளுவப் பெருமானும்  பாடியிருக்கிறார்.

"ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்

வருநாள்வைத்(து) ஏங்கு பவர்க்கு".(குறள்:1269)

எனவே,  பிரிவுத் துயரைத் தாள இயலாத தலைவி, தலைவன் சென்ற

ஓரிரண்டு நாட்களிலேயே வாடை வீசும் பருவம்(கார்காலம்) எப்பொழுது

வரும் என்று அறிந்து கொள்ளத் துடியாய்த் துடித்தாள். அவளிருக்கும்

பகுதியில் பிச்சை கேட்டுவரும் அறிவரிடம் கேட்கலாம் என்று முடிவெடுத்தாள்.


அறிவர் என்போர் துறவுள்ளமும் முக்காலத்தையும் அறியும் ஆற்றலும் கொண்ட

பெரியோர் எனக் கருதப்பட்டனர். "மறுவில் செய்தி மூவகைக் காலமும்

நெறியின் ஆற்றிய அறிவர்" என்று தொல்காப்பியர் சிறப்பித்துள்ளார்.

பொதுமக்களிடத்தில் அறிவர்க்கு நல்ல செல்வாக்கிருந்தது. அறிவர்கள்

துறவுள்ளம் உடையவராய் இருந்தமையால், துறவியரைப் போலவே பிச்சை

பெற்று வாழ்ந்தனர் என்பது கீழ்வரும் பாடல் மூலம் அறியமுடிகிறது.


தலைவியின் உள்ளக்கிடக்கையை அறிந்த தோழி ஒருநாள் பிச்சை கேட்டு

வந்த அறிவரிடம் தலைவியின் சார்பாகப் பேசினாள்:

"அறிவரே! மின்னலைப் போன்ற இடையையுடைய தலைவி நடுங்குவதற்குக்

காரணமான, இறுதியில் மழையையுடைய வாடைக் காலம் எப்பொழுது வரும்

என்று தெரிவிப்பீர்; அப்பொழுது தலைவியின் தலைவர் வருதல் உறுதி.

எனவே, அந்த நல்ல செய்தியைச் சொல்வீராக. நீர் யாம் கோரியதுபோலத்

தெரிவித்தால் குற்றமற்ற இத்தெருவிலுள்ள நாயில்லாத அகன்ற எம் இல்ல

வாயிலில் செந்நெல் சோற்று உருண்டையும் அதன்மேல் சொரிந்த மிக

வெள்ளிய நெய்யும் கலந்த" ஒரு வீட்டுப் பிச்சையுணவை"ப் பெற்று வயிறு நிரம்ப

உண்டு பசியாறலாம். நீவிர் வேறு இல்லங்களுக்குப் பிச்சை கேட்டு அலையத்

தேவையில்லை. உணவுண்டபின்னர் இக் குளிர் காலத்துக்கேற்ற வெந்நீரைச்

சேமச் செம்பில் பெற்று அருந்தலாம். எனவே வாடைப் பருவம் எப்பொழுது வரும்

என்ற செய்தியைச் சொல்வீராக. பாடல் பின்வருமாறு:

குறுந்தொகை:பாடல் எண்:277; புலவர்: ஓரில் பிச்சையார்.

புலவரின் உண்மைப் பெயர் கிடைக்கவில்லை. எனவே, இந்தப் பாடலில் பயின்று வரும்

"ஓரில் பிச்சை" என்னும் சொற்றொடரால் அவர் குறிப்பிடப்படுதல் மரபு.

"ஆசில்  தெருவில், நாயில்  வியன்கடைச்

செந்நெல்  அமலை  வெண்மை  வெள்ளிஇழு(து)

ஓரில்  பிச்சை  ஆர  மாந்தி

அற்சிர  வெய்ய  வெப்பத்  தண்ணீர்

சேமச்  செப்பில்  பெறீஇயரோ  நீயே

மின்னிடை  நடுங்கும்  கடைப்பெயல்  வாடை

எக்கால்  வருவ(து)  என்றி

அக்கால்  வருவரெம்  காத  லோரே."


அக்காலக் கட்டத்தில் அறிவர்களுக்குச் சமூகத்தில்  அளவுகடந்த  மதிப்பும் செல்

வாக்கும் போற்றுதலும் பேணுதலும் நிலவின. துறவியரைப் போன்று வாழ்ந்த

காரணத்தால் பொதுமக்களிடம் பிச்சைபெற்றுண்டு வாழ்க்கை நடத்தினர்.

(சமண, புத்தசமயத் துறவிகளும் பிச்சை பெற்று வாழ்வு நடத்தினர்).

ஆனால், அறிவர்கள் குறிப்பிட்ட சமயத்தைச் சேர்ந்தவர் அல்லர். பொதுவான

நன்னெறிகளை மக்களிடம் எடுத்துச்  சொல்லி வந்தனர். காதலர்களுக்குள்

நிகழும் ஊடல் தணிப்பதற்குப் பன்னிரண்டு வகை மனிதர்கள் உதவலாம் எனத்

தொல்காப்பியர் பட்டியலிடும் மனிதர்களுள் அறிவர்கள் ஒரு வகையினர்.

இவர்களை "ஊடல் தணிக்கும் வாயில்கள்" என்று தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார்.

இவர்கள் வீடு வீடாகச் சென்று பிச்சை பெற்று வாழ்ந்துவரும் வழக்கம் உடையவர்கள்.

இந்தப் பாடலில் குறிப்பிடப்படும் தலைவிக்காகத் தம் வழக்கத்தை மாற்றி

"ஒருவீட்டுப் பிச்சையுணவு" மட்டும் போதும் என்று நிறுத்திக்கொண்டாரா? என்பது

தெரியவில்லை. இல்லை, வழக்கம்போல் பலவீடுகளுக்கும் சென்று கொஞ்சம் கொஞ்சம்

பிச்சை பெற்று உண்டாரா?  ஒன்று மட்டும் நிச்சயம். தலைவி கோரியது போல் வாடைப்

பருவம் எப்பொழுது வரும் என்பதைத் தெரிவித்திருப்பார்.

அருஞ்சொற் பொருள்:

அமலை=சோற்றுத் திரளை; இழுது=வெண்ணெய், நெய்.

அற்சிரம்=முன்பனிக் காலம்.

No comments:

Post a Comment