Friday, 6 May 2022

இருசிறை வாரணப் போர்.

 இருசிறை வாரணப் போர்(கோழிப் போர்)


வாரணம் என்ற சொல் யானையையும் கோழியையும் குறிக்கும்.

கோழி என்பதைத் தெளிவாகச் சுட்டிக் காட்டுவதற்காக இரண்டு

சிறகுகளையுடைய வாரணம்(இருசிறை வாரணம்) என்று குறிக்

கப்படுகிறது. கோழிப் போர், கோழிச் சண்டை, சேவல் சண்டை

என்பது பண்டைக் காலந்தொட்டு மக்களிடையே நிலவி வரும்

விளையாட்டு. "உறைக்கிணற்றுப் புறச்சேரி மேழகத்தகரோடு

சிவல் விளையாட" என்ற வரிகள் பட்டினப் பாலையில் பயின்று

வருகின்றன. போரில்லாத அமைதி  தவழும் காலத்தில் மக்கள்

ஆட்டுக் கடா(மேழகத் தகர்), சேவற் கோழி(வாரணம்), கவுதாரி(சிவல்),

காடை(குறும்பூழ்), காளை(ஏறு) முதலான வளர்ப்பு விலங்குகளை

மோதவிட்டு விளையாடி மகிழ்வர். கலிங்கத்துப் பரணியில் முதலாம்

குலோத்துங்கச் சோழ வேந்தன் போரில்லாத அமைதிச் சூழலில்

மற்போர், புலவர்களுக்குள் நிகழும் சொற்போர், சேவற்கோழிப் போர்,

யானைப் போர் முதலியவற்றை நிகழ்த்தச் செய்து கண்டு/கேட்டுக்

களித்ததாகக் கலிங்கத்துப் பரணி தெரிவிக்கிறது.

"வருசெருவொன் றின்மையினால்

மற்போரும் சொற்புலவோர்

வாதப் போரும்

இருசிறைவா ரணப்போரும்

இகல்மதவா ரணப்போரும்

இனைய கண்டே) கண்ணி எண்:276.


கோழிப் போர் நியதிகளை விவரிக்கும் நூல் உள்ளதாகப் பேசப்

படுகிறது. கோழிப் போர் விதிமுறைகளில் வித்தகர்கள் உள்ளனர்.

பண்டைய தமிழகத்தில் கீழைச்சேரி, மேலைச்சேரி போன்ற இடங்

களில் கோழிப் போர் சிறப்பாக நிகழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது.

இக் காலத்தில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சிப் பகுதியில் பூலாம்

வலசு கிராமத்திலும், கோவிலூரிலும் சிறப்பாக நிகழ்கிறது.


கோழிப் போரில் இருதரப்பினர் தத்தம் சேவல்களை எதிர்எதிரே

நிறுத்தி மோதவிடுவர். இதனை 'நேர்விடுதல்' என் அழைப்பர்.

இரு சேவல்களும் முரட்டுத்தனமாக மோதிப் போர் உச்சம் பெறும்

நிலையில் கோழிவிடுவோர் தத்தம் சேவல்களை மோதலிலிருந்து

பிரித்து விடுவர். கோழி விடுவோர் தக்க நேரத்தில் சேவல்களைப்

பிரித்துவிடத் தவறினால் சேவல்களின் சண்டை கட்டுப்படுத்த

முடியாத நிலைக்குச் செல்லும். விளைவு, ஏதாவது ஒரு சேவல்

உயிரிழக்கும் வாய்ப்பு உருவாகும். குறுந்தொகைப் பாடல் 305இல்

"உய்த்தனர் விடாஅர்; பிரித்திடை களையார்;

குப்பைக் கோழித் தனிப்போர் போல

விளிவாங்கு விளியின் அல்லது

களைவோர் இலையான் உற்ற நோயே"

தலைவனைப் பிரிந்த தலைவி காம உணர்வின் உச்சத்தில்

புலம்பும் பாடல் இஃது. "கோழிப் போரில் சண்டை உச்சத்தை

எட்டும் வேளையில் பிரித்துவிடுதல் மிகத் தேவையானதாகும்.

குப்பைக் தோழிகளுக்குள் நடக்கும் சண்டையில் பிரித்துவிட யாரும்

இல்லாமல் அவை தமக்குள் மோதி அழிந்துவிடும். குப்பைக் கோழியின்

நிலைமையில் யான் உள்ளேன். அரவணைக்கும் தலைவன் இன்றிக்

காமத்தின் உச்சநிலையில் வாடுகிறேன்" என்பது பொருள். இந்தக்

குறுந்தொகைப் பாடலில் கோழிகளுக்குள் நடைபெறும் சண்டையில்

அவைகளைப் பிரித்து விட்டுக் காக்கவேண்டிய தேவை வலியுறுத்தப்

படுகிறது.


கோழிப் போரில் இரு வகைகள் நிலவுகின்றன. கத்திக்கால் சண்டை

மற்றும் வெற்றுக்கால் சண்டை என்பன அவ்வகைகள். கத்திக்கால்

சண்டைக்கு அசில் வகைச் சேவல்கள் பயன்படுத்தப்படுகின்றன.

ஏனெனில் இவ்வகைச் சேவல்களுக்கு இயல்பாகவே கால்களுக்கிடையே

முள்போன்ற அமைப்பு உண்டு என்பர். வெற்றுக்கால் சண்டை,

வெற்போர் அல்லது வெப்போர் என்ற பெயரிலும் அழைப்பர்.


கி.பி.ஐந்தாம் நூற்றாண்டில் சேவல் சண்டையில் இறந்த சேவலுக்கு நடுகல்

எழுப்பிப் போற்றியதாக வரலாற்று அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். விழுப்புரம்

அருகிலுள்ள அரசலாபுரம் என்ற ஊரில் சேவல் நடுகல் கிடைத்துள்ளது. அது

முகையூர் என்ற பகுதியில் மேலைச்சேரி சார்பாகப் போட்டியிட்டு மாண்ட

சேவலுக்கு எழுப்பப்பட்டதாகும். கீழைச்சேரிச் சேவல் 'பொற் கொற்றி' என்று

போற்றப்பட்டது.


புறப்பொருள் வெண்பாமாலை: பாடல் எண்: 348 கோழி வென்றி:

"பாய்ந்தும்  எறிந்தும்  படிந்தும்  பலகாலும்

காய்ந்தும் வாய்க்  கொண்டும்  கடுஞ்சேவல்---ஆய்ந்து

நிறங்கண்டு  வித்தகர்  நேர்விட்ட  கோழிப்

புறங்கண்டும்  தான்வருமே  போர்க்கு"

பொருள்:

எழப்  பாய்ந்தும்  காலின் முள்ளை யிட்டிடித்தும் தாழ்ந்தும் பலகாலும் சினங்

காட்டியும் கூவியும் கடிய சேவற்கோழி  போர்புரிந்து, கோழி நூல் வல்லவர்

எதிரில் விட்ட  பகைக்கோழியை வெற்றிகொண்டாலும், பின்னரும் 

போருக்குவரும்.(உ.வே.சாமிநாதையர் உரை).

No comments:

Post a Comment