மௌரியர் மேற்கொண்ட தமிழகப்
படையெடுப்பு வெற்றியடையாதது ஏன்?
தமிழ்நாட்டில் சங்ககாலம் தழைத்துச் செழித்திருந்த நேரத்தில்
வடக்கே கங்கைச் சமவெளியில் மகதநாடு(இன்றைய பீகார், வங்காளம்
முதலான பகுதிகளை உள்ளடக்கிய நாடு) சிறந்தோங்கித் திகழ்ந்தது.
நந்த வமிசத்தின் கடைசி மன்னன் தனநந்தன் ஆட்சியைத் தோற்கடித்துச்
சந்திரகுப்த மௌரியர் கி.மு.322இல் மௌரிய ஆட்சியை நிறுவினார்.
மகத நாடு கிழக்கில் அஸ்ஸாம் வரையிலும் மேற்கில் ஈரான் வரையிலும்
விரிந்து பரந்திருந்தது. அசோகரின் தந்தையான பிம்பிசாரர் காலத்தில்
தமிழ்நாடு(அந்த நாளில் கேரளா சேரநாடு என்ற பெயரில் தமிழ்நாடாகத்தான்
கருதப்பட்டது) நீங்கலாக ஏனைய பாரதப் பகுதி முழுவதையும் தம் ஆட்சிக்குக்கீழ்
வைத்திருந்தார். தமிழ்நாட்டையும் மௌரியப் பேரரசின் கீழ் கொண்டுவர
எண்ணிப் பெரும் படையுடன் தமிழ்நாட்டின் மீது படையெடுத்தார். அந்நாளில்
தமிழ்நாட்டைச் சேர, சோழ, பாண்டியர் என்ற மூவேந்தர்களும் முதிரமலைத்
தலைவனான பிட்டங்கொற்றன், வாட்டாறு மற்றும் செல்லூரை ஆண்ட
எழினி ஆதன், சோழநாட்டின் அழுந்தூர்ப் பகுதியை ஆண்ட அழுந்தூர் வேளான
திதியன், கொங்கு நாட்டுப் பகுதியை ஆண்ட மோகூர்ப் பழையன் போன்ற
சிற்றரசர்களும் ஆட்சி புரிந்து வந்தனர்.
படையெடுத்து வந்தவர்கள் வேங்கடத்துக்கு அப்பாலுள்ள மொழிபெயர் தேயங்களான
(கொச்சைத் தமிழும் பிராகிருதம் என்ற மொழியும் கலந்த கலப்பு மொழி பேசிய பகுதிகள்)
ஆந்திரா, கருநாடகப் பகுதிகளில் வாழ்ந்த தெலுங்கர் மற்றும் கன்னடர்(இரு பிரிவினரும்
வடுகர் என்ற பெயரில் அழைக்கப்பட்டனர்), விந்திய மலைக்கு அப்பால் வாழ்ந்த கோசர்
(வட வடுகர் என்று அழைக்கப்பட்டனர்), மகத நாட்டு மக்கள்(இன்றைய பீகார் மற்றும்
வங்காளப் பகுதிகளில் வாழ்ந்தவர்கள்) ஆவர். படை மிக மிகப் பெரியது.
மௌரியரின் படையில் தேர்கள் பல இருந்தன.
பாரதத்தில் உள்ள தென்திசை நாடுகளை வெற்றிகொள்ளப் பெரும் படையுடன்
வந்த மெளரியர்கள் ஆந்திர, கருநாடகப் பகுதிகளை வென்று கைப்பற்றிக்கொண்டு
தமிழ்நாட்டையும் வெல்ல எண்ணி வடுகரை(தெலுங்கர் மற்றும் கன்னடர்)யும் தம்
படையில் இணைத்துக் கொண்டு அவர்கள் வழிகாட்டி முன்னே செல்லத் தம் தேர்கள்
சிக்கலின்றி உருண்டுசெல்லத் தோதாகப் பாறைகளை உடைத்து வழியமைத்துக்கொண்டு
தமிழ்நாட்டுக்குள் நுழைய முயன்றனர்.
"முரண் மிகு வடுகர் முன்னுற மோரியர்
தென்திசை மாதிரம் முன்னிய வரவிற்கு
விண்ணுற ஓங்கிய பனியிருங் குன்றத்து
எண்கதிர்த் திகிரி உருளிய குறைத்த"
(அகநானூறு பாடல் எண்: 281--புலவர் மாமூலனார்)
மௌரியப் படையும் கோசர் படையும் இணைந்து கொண்கானத்தின் கடற்கரைப்
பகுதியான துளு நாட்டைத் தாக்கினர். துளு நாடு அந்நாளில் தமிழர் ஆட்சியின் கீழ்
இருந்தது. நன்னன் என்னும் தமிழ்மன்னனை வென்று நாட்டைவிட்டு விரட்டினர்.
பிறகு, முதிரமலைத் தலைவனும் சேரர்களின் தானைத் தலைவனும் ஆகிய பிட்டங்
கொற்றனுடன் போரிட்டனர். முடிவு என்ன? என்ற தகவல் இலக்கியத்தில் இல்லை.
பின்னர் வாட்டாறு என்ற ஊரையும் செல்லூர் என்ற ஊரையும் ஆண்ட எழினி ஆதன்
என்ற அரசனோடு போரிட்டு அவனைக் கொன்றனர். தொடக்கத்தில் சிற்றரசர்களோடு
நடந்த போர்களில் கிடைத்த வெற்றியினால் உற்சாகமடைந்த மௌரியர்கள் கொங்கு
நாட்டு மோகூரை ஆண்ட பழையன் என்ற பாண்டியவம்சத்து மன்னனைத் தாக்கினர்.
பழையன் பணியாமல் போரிட்டான். கூடுதலான மௌரியப் படைகள் குன்றுகளையும்
பாறைகளையும் தகர்த்துக் கொண்டு தேர்களில் வந்தும் பழையனைப் பணியவைக்க
முடியவில்லை. கோசரும் மௌரியரும் அங்கிருந்து விரட்டப்பட்டனர். பிற்பாடு அவர்கள்
சோழ நாட்டுக்குள் நுழைந்து அழந்தூர்ச் சிற்றரசன் அழுந்தூர்வேளான திதியனைத்
தாக்கினர். அவன் மிகக் கடுமையாகப் போராடி அவர்களை விரட்டிவிட்டான். மோகூர்ப்
பழையனாலும் அழுந்தூர்த் திதியனாலும் விரட்டப்பட்ட மௌரியப் படை தொடக்கத்தில்
தாம் வென்ற துளு நாட்டுக்குத் திரும்ப எண்ணி அதனை நோக்கிப் பயணித்தனர்.
அப்பொழுது இளஞ்சேட்சென்னி என்னும் சோழ வேந்தன் மிகப்பெரும் படையுடன்
அவர்களை எதிர்த்தான். கடுமையான போர்முடிவில் மௌரியர் தோற்றுப்பின்வாங்கினர்.
சோழன் அவர்களைத் துளுநாடுவரை துரத்திச் சென்று துளுநாட்டின் தலைநகரான பாழி
நகரைத் தாக்கினான். அங்கும் கடும்போர் நிகழ்ந்தது. இறுதியில் பாழிநகரை அழித்து
மௌரியரை அங்கிருந்தும் விரட்டியடித்தான். இதனால் "செருப்பாழி எறிந்த இளஞ்சேட்
சென்னி" என்ற பட்டம் பெற்றான். அகநானூறு
375இல் புலவர் இடையன்சேந்தங்கொற்றனார் பாடியது:
"எழாஅத் திணிதோள் சோழர் பெருமகன்
விளங்குபுகழ் நிறுத்த இளம்பெரும் சென்னி
குடிக்கடன் ஆகலின் குறைவினை முடிமார்
செம்புறழ் புரிசைப் பாழி நூறி
வம்ப வடுகர் பைந்தலை சவட்டி"
பொருள்:
போர்த்திறமையும் கணையமரம் போன்ற
தோள்வலிமையும் கொண்ட சோழர் பெருமகன் இளம்பெருஞ் சென்னி, தன்புகழை நிலைநாட்டுவதற்காகப் பாழி
நகரில் இருந்த செம்பிட்டுச் செய்த கோட்டையை அழித்தான். அந்தக் கோட்டை
யில் தன்னை எதிர்த்த வம்பவடுகக் குடி
மக்களின் தலைகளை யானைகளை ஏவி
மிதிக்கச் செய்து சவட்டினான்.
இந்த இளஞ்சேட்சென்னிக்கு மகனாகப்
பிறந்தவர் புகழ்பெற்ற கரிகாற் பெருவளத்தான் என்ற திருமாவளவன்.
மௌரியப் படையெடுப்பு தோல்வியில் முடிந்த காரணத்தால் தமிழ்நாடு வடநாட்டவரால்
ஆளப்படாமல் தப்பித்தது. பாரதம் முழுவதையும் ஒருகுடைக்கீழ் கொண்டுவந்த மௌரிய
ரால் தமிழ்நாட்டை வெற்றிகொள்ள இயலவில்லை. இதற்கு என்ன காரணம் என விளங்க
வில்லை. கி.மு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவனான கலிங்கவேந்தன் காரவேலன்
தன் ஹதிகும்பா கல்வெட்டில் தான் 113 ஆண்டுக்காலம் நீடித்திருந்த தமிழர்கள்
கூட்டமைப்பை மிகவும் சாமர்த்தியமாகவும் வெற்றிகரமாகவும்
முறியடித்ததாகக் கூறிக் கொள்கிறான். சங்க இலக்கியத்தில் அப்படியொரு அமைப்பைப்
பற்றிய செய்தி ஏதும் இல்லை. சங்க இலக்கியங்கள் மூவேந்தரின் ஒற்றுமையைப்
பற்றிய செய்தியையும் குறிக்கவில்லை. ஆனால் மௌரியப் படையெடுப்பைப் பற்றியும்
அதனைச் சோழ வேந்தன் இளஞ்சேட்சென்னி முறியடித்ததைப் பற்றியும் பல புலவர்கள்
பாடியுள்ளனர். இது நாடறிந்த செய்தியாக அக்காலத்தில் விளக்கியிருக்கலாம். ஏனென்
றால் மௌரியப் படையெடுப்பு முதல் அந்நியப் படையெடுப்பாக இருந்திருக்கும்.
அதனாலேதான் "வம்ப மோரியர்"(புதிதாக வந்த மௌரியர்) என்று சங்க நூல்கள்
குறித்தன. மௌரியப் படையெடுப்பு தோல்வியடைந்தமையால், பிம்பிசாரருக்குப் பின்
ஆட்சிக்கு வந்த அசோகர் தமிழ் வேந்தர்களை நண்பர்களாகக் குறிப்பிட்டார். மௌரியப்
பேரரசு கி.மு.185இல் முடிவுக்கு வந்தது.
No comments:
Post a Comment