Wednesday, 22 March 2023

சங்க காலத்தில் நிலவிய பாதுகாப்பு அரண்கள்.

 சங்க காலத்தில் நிலவிய நாடு பாதுகாக்கும் முறைகள் (அரண்).


சங்க காலத்திலும், சங்கம் மருவிய காலத்திலும், ஏன், விடுதலை

பெறும் காலம் வரையிலும் நாட்டைப் பாதுகாத்துக் கொள்ள வலு

வான கோட்டை, கொத்தளங்கள்  உருவாக்கப்பட்டுப் பயன்பாட்டில்

இருந்தன. அதாவது வலுவான கோட்டை எழுப்பப்பட்டு அதைச் சுற்

றிலும் ஆழமான குழி தோண்டப்பட்டு அக்குழி நீரால் நிரப்பப்பட்டு

அதில் முதலைகள் வளர்க்கப்படும். அகழியை ஒட்டி வெட்டவெளியும்

(செண்டு வெளி என்றும் சொல்லப்படும்) அதனை ஒட்டிக் குளிர்ந்த

நிழல்தரும் மரங்கள் நெருங்கி வளர்ந்திருக்கும் அடர்த்தியான காட்டுப்

பகுதியும்  அதனை ஒட்டி  நீண்ட  மற்றும் உயர்ந்த மலைப் பகுதி

யும் அமைந்த வலுவான இயற்கை மதிலரண் உருவாக்கப் பட்டிருந்தது.

உலகத்தில் உள்ள எல்லா நாடுகளுமே தத்தமக்கு இம்மாதிரியான

பாதுகாப்பு அரணை வைத்துக்கொண்டிருந்தன. சில நாடுகளுக்கு

இயற்கையாகவே வலுவான அரண் அமைந்துவிடும்.

"மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்

காடும் உடைய(து) அரண்".(திருக்குறள் பாடல் எண்:742). சில நாடுகளுக்கு

இயற்கை அரண் அமைந்து விடாது. அத்தகைய நாடுகள் செயற்கையாக

அரண் ஏற்படுத்திக் கொண்டன. நூலேணி கொண்டு ஏறமுடியாத உயரமும்

துளைக்க இயலாத அகலமும் செம்பை உருக்கிச் சாந்தாக  இட்டுக் கருங்

கல்லால் கட்டிய திண்மையும் பகைவர் நெருங்குவதற்கு அருமையும் ஆகிய

இந்நான்கு சிறப்புகளூம் கொண்டு வலுவான மதிலரண் அமைப்பது நன்று

என்று அரசியல் நூல்கள் பேசும்.

"உயர்(வு)அகலம் திண்மை அருமைஇந் நான்கின்

அமை(வு)அரண் என்றுரைக்கும் நூல்"(கு.எ.:743).

சரி, அரண் அமைந்து விட்டது. பாதுகாப்புக் கருவிகள்(ஆயுதங்கள்) யாவை?

சிலப்பதிகாரத்தில் நாட்டைப் பாதுகாக்கக் கோட்டைக்குள்  வைக்கப்பட்டிருந்த

ஆயுதங்கள் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன. மற்றச் சங்க இலக்கியங்களில்

அக்கால ஆயுதங்களைப் பற்றி ஆங்காங்கே சொல்லப்பட்டிருந்தாலும் சிலப்பதி

காரம் போல விரிவாகச் சொல்லப்படவில்லை. ஏனென்றால் மற்ற நூல்களை

இயற்றியோர் வெறும் புலவர்கள் தாம். சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோ

சேரநாட்டு இளவரசர். கோட்டையையும் அவற்றில் வைக்கப்படும் ஆயுதங்களை

யும் பலமுறை பார்த்துப் பயன்படுத்திப் பயிற்சியும் பெற்றவர் அன்றோ? சிலப்பதி

கார மதுரைக் காண்டத்தில்  பதினைந்தாவது காதையாகிய அடைக்கலக் காதையில்

வரிகள் 207 முதல் 217 முடிய உள்ள வரிகளில் குறிப்பிடப் பட்டுள்ளன. அவை பின்வருமாறு:

"மிளையும் கிடங்கும் வளைவிற் பொறியும்

கருவிரல் ஊகமும் கல்லுமிழ் கவணும்

பரிவுறு வெந்நெயும் பாகடு குழிசியும்

காய் பொன் உலையும் கல்லிடு கூடையும்

தூண்டிலும் தொடக்கும் ஆண்டலை அடுப்பும்

கவையும் கழுவும் புதையும் புழையும்

ஐயவித் துலாமும் கைபெயர் ஊசியும்

சென்றெறி சிரலும் பன்றியும் பணையும்

எழுவும் சீப்பும் முழுவிறற்கணையமும்

கோலும் குந்தமும்  வேலும் பிறவும்

ஞாயிலும் சிறந்து .............."


பொருள்:

காவல் அரணான காடும்(மிளையும்) ,அகழியும்(கிடங்கும்) ,வரும் எதிரிகளைக் கண்டவுடன்

வளைந்து தானே தாக்கும் இயந்திர வில்லும், கருத்த விரல்களைக் கொண்ட கருங்குரங்கு

உருவிலான பொறியும், கல்லெறிந்து தாக்குகின்ற கவண்பொறியும், மதிலருகே வருபவர்

மீது கொட்டுவதற்காகக் கொதிக்க வைத்த எண்ணெய்க் குண்டமும், சாணம் கரைத்துக்

காய்கின்ற மிடாவும், இரும்பு உருக்கி வைத்த உலைக்கூடமும், கற்கள் நிரப்பி வைக்கப்

பட்ட கூடைகளும், தூண்டில் வடிவிலான கருவியும், கழுத்தில் மாட்டி இழுக்கும் சங்கிலியும்,

ஆண்டலைப்  பறவை வடிவாகச் செய்யப்பட்ட நெருப்படுப்பும், அகழியிலிருந்து மதில் ஏற

முயல்பவர்களை நெட்டித்  தள்ளும்  கவைவடிவான கருவியும், கூரிய இரும்புக் கோலும்,

அம்புக் கட்டும், மறைந்திருந்து தாக்கும் இடுக்கு வழிகளும், நெருங்கி வருபவர் தலையை

நசுக்குகின்ற மரங்களும், மதில் மேல் ஏறுபவர் கையைக் குத்தித் தாக்கும் ஊசிப் பொறி

களும்,, பகைவர் மேல் பாய்ந்து தாக்கும் சிச்சிலி என்ற எந்திரமும், மதில் மேல்  ஏறுபவர்

களைக் குத்திக் கிழிக்கும் பன்றி வடிவில் அமைந்த பொறியும், மூங்கில்தடிகளும், கோட்டைக்

கதவுகளுக்குப் பாதுகாப்பாக அடுக்கி வைக்கப்பட்ட பெரிய மரங்களும், வலிமை வாய்ந்த

கணைய மரங்களும், எறிகோலும், குத்துக் கோலும், ஈட்டியும் நிறைந்து  மதுரை மூதூரில்

காவல் மதில் சிறந்து விளங்கியது.


தற்பொழுது நிலவும் காலச் சூழலுக்கு ஏற்பப் புதுப்புதுப்பாதுகாப்பு  உத்திகளும்  முன்பின்

கேள்விப்பட்டிராத ஆயுதங்களும் நடைமுறைக்கு வந்துவிட்டன. ஒவ்வொரு நாடும் காலத்

துக்கு ஏற்பப் புதிய தொழில் நுட்பத்தைக் கற்றுக் கொண்டு  நவீன ஆயுதங்களைக் கொள்

முதல் செய்து தத்தமது நாட்டைப் பாதுகாத்துக் கொள்வது கடமையாகும்.

No comments:

Post a Comment